அன்புள்ளங்களுக்கு வணக்கம்,
உதவி என்பது தன்னால் இயன்றதை மட்டுமே செய்வதல்ல, இயன்றவரை செய்வது. அதை நிரூபிக்கும்வண்ணம் ‘இன்று குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தது போல் ‘ரத்த தான முகாம் மிக சிறப்பாக நடந்தேறியது.
குவைத்தின் நிறைய அமைப்புகள் ‘மன்றவேற்றுமையோ, தூரம் எனும் சிரமமோ இன்றி காலை எட்டு மணிக்கே வரத் துவங்கி மதியம் ஒரு மணியளவில் நிறைவுறும் வரை இருந்து பெருமை சேர்த்தது மகிழ்விற்குரியது.
தூரத்திலிருந்து வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்துகொடுத்து, வந்தவர்களுக்கு சுவை மிகு காலை உணவும் வழங்கி, ரத்தம் கொடுத்து செல்கையில் பழமுடிப்பும், சான்றிதழ்களும் அளித்து பெருமகிழ்வு கொண்டன முத்தமிழ்மன்றமும் உதவும் கைகள் அமைப்பும்.
தமிழன் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்திருக்கவே முற்படுகிறான். இனி, இணைந்தே இருப்பான் எனும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் ‘இம் முகாமினை மிக சிறப்பாக நடத்தி காட்டியது இந்த இரு நல்ல அமைப்புகளும்.
நன்றிகளால் கனத்து இனி இன்னும் வேறு என்னவெல்லாம் செய்யலாமென்று துடிப்போடிருந்த அம்மன்றத்தின் தலைவர்கள் திரு.ஜெயபாலன், திரு.ராஜேந்திரன் மற்றும் பொறுப்பாளர்களுக்கு என் பெருத்த அன்பின் வணக்கத்தையும் நம் நன்றிகளையும் தெரிவிப்போம்.
ஒரு மனிதன் என்னவேண்டுமாயினும் செய்து போகட்டும் ‘ஒரு உயிர் துடிக்கையில் தாங்க இயலாதவனாய் தன்னை மாற்றிக் கொள்வானெனில்’ அவனால் தீயதை செய்யவே இயலாது. இனியாவது நம் பூமியை இது போன்ற தொடர் நற்செயல்களால் ‘மனிதர்கள் வாழும் பூமியாய் மாற்றுவோம்.
நம் வாழ்தலில்; வளர்தலில்; இனியேனும் தழைக்கட்டும் மனிதம்!
வித்யாசாகர்


























