ஞானமடா நீயெனக்கு (46)

ருத்துவமனைக்குப்
போகிறோம்
ஊசி போடவேண்டுமென்கிறார்
மருத்துவர்,

நீ என்னவென்று தெரியாமல்
சிரித்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறாய்

அவரும்சிரித்துக் கொண்டே
உன் புட்டத்தில் ஊசி வைத்து குத்தியெடுக்க
வீல்!!!!!!!!!!!!! என கத்துகிறாய்…

சரிப்பா.. சரியாகும் சரியாகும்
என்கிறேன்

நீ என் மார்பினை கட்டி இறுக்கி
வலியை தாளாமல்
கண்ணையிறுக்கி
அழுத்தியதில்
உன் கண்ணீர் முழுதும் நானாக
கரைந்தே போனேனடா..
———————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (45)

நான் உன் அம்மாவிடம் பேச
தொலைபேசியில்
அவளை அழைத்தேன்;

நீ தொலைபேசியை
அவளிடமிருந்து பிடுங்கி
அப்பா அப்பா என்று
கத்தினாய்;

முதல் முறையாக
கிரஹம்பெல்லினை
மனதார பாராட்டினேன்!!
——————————————

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (44)

நீ எனை அம்மா
என்பாய் –

அம்மாவை
அப்பா என்பாய்,

யாரை எப்படி
அழைக்கிறாய் என்பதில்
ஒன்றுமேயில்லை;

இருவரையுமே அழைக்கிறாய் என்பதில்
நிறைவானோம்
இரண்டு பேருமே!!
—————————–

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (43)

தின்பண்டங்களை வீடெல்லாம்
இரைத்தாய்,
அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’
அமைதியானாய்;

ஓயாமல் மேலும் கீழுமாய்
எகிறி எகிறி குதித்தாய்
ஏக சேட்டைகள் செய்தாய்
அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’
அமைதியானாய்;

அம்மாவின் முடி பிடித்து இழுத்தாய்
தலையிலேறி அமர்ந்தாய்
அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’
அமைதியானாய்;

எல்லாவற்றிலுமே அம்மா என்
பெயரை சொன்னதும் பயந்து அமைதியானாய்
மதிக்கிறாய் என்று நினைத்தேன்;

இரவில் விளக்கணைத்து
படுக்க சென்றதும்
எனை தாண்டி அவளுக்கருகில் சென்று
படுத்தாய்;

வா என்றழைத்ததற்கு
ஓவென கத்தி அழுதாய்
வரமாட்டேன் போ..’ என்றாய்,

நீ அடிக்காமலே –
வலித்ததெனக்கு!
——————————————

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை!

திக்க நெருப்பு தின்ற
அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற
நாள்காட்டியின் சாபமிந்த
மறக்கமுடியா – கருப்பு ஜூலை!

மனிதக் – கருப்பு மனத்தின்
கொலைவெறி முற்றி
முற்றும்; முடியாதோரையே அழித்த
வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை!

சுயநல வெறி சிகப்பாய் ஓடி
தாமிரபரணியின் உடம்பெல்லாம்
பிணங்களாய் மிதந்து –
மனிதமின்மையை மனிதனே நிரூபித்த;
கறுத்த பேரவலம் – கருப்பு ஜூலை!

காக்கிச் சட்டையில் போதையுற்று
கொலைகளில் மெடல் அணியத் துடித்து
கொண்று குவித்த உடல்களின் மீதேறி
வெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின்
நினைவொழியா –  சோகப் பதிவு; கருப்பு ஜூலை!

மாஞ்சோலைக்கு நீதி கேட்டு போய்
மரணத்தை மீதப் படுத்திக் கொண்ட
பாட்டாளிகளின் கதறல்களையும்
நிர்வாணமாய் சரிந்த உடற்கட்டைகளையும்
ஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை!

பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே
அடக்கிக் கொண்டிருந்த வன்மம் வெடித்து,
உலகின் காதுகளில் –
அதர்மத்தின் கொடையாளர்களாய்
தமிழனை; தமிழனே பதிந்துக் கொண்ட
சீர்கேடிந்த; கருப்பு ஜூலை!

தமிழன் தன் வரலாற்றில்
செம்மொழியை கொண்டதாகவும்
அந்நியரை வென்றதாகவும்
எண்ணியதை எல்லாம் பெற்றதாகவும்
உலகத்தை தன் உள்ளங்கையில் அடக்கிக் கொண்டதாகவும்
எதை வேண்டுமோ எழுதிக் கொள்ளலாம்;

தை சாதிப்பினும் –
இரக்கம் ஒழித்த இந்த கருப்பு ஜூலை மட்டும்
கருப்பாகவே பதிவு செய்யப் பட்டிருக்கும்
தமிழனின் கால ஏட்டில்!!
———————————————————————-

வித்யாசாகர்

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்