132 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

தெருக்களில் –
எத்தனையோ வாகனங்கள்
தரையை கிழிக்கும் விதமாய்
சீறிப் பறக்கிறது,

யாருக்கு என்ன அவசரமோ??

எந்த வண்டி
விமானத்தின் கடைசி நிமிட துளிகளின்
அவசரத்திற்காய் போகிறதோ,

எந்த வண்டியில்
ஒரு சகோதரி
பிரசவ வலியால் துடிக்கிறாரோ??

எந்த வண்டி
இண்டர்வியூ முடியும்
கடைசி தருவாய் நோக்கி விரைகிறதோ,

எந்த வண்டியில் மரணம் நெருங்கும்
யாரோவை –
உயிர் காக்கும் நேரம்
நிமிடங்களாய் கரைய
எப்படியேனும் விரைந்து சென்று காப்பாற்றலாமெனப்
போகிறதோ…

யாரறிவார்..
யாரறிவார்..

எல்லாம் கடந்தும்
எதிரே வேகமாய் வரும் வாகனம்
கண்டால் –
வழிவிடாமல் நின்றும் –

சின்ன சின்ன தவறுகளுக்குக் கூட
பெரிதாய் வருத்தப் பட்டு
கோபப் பட்டு
இரத்தம் சூடாகி –

போறவன் அப்படியே சாவறானாப் பாருன்னு
நிறைய பேர் மனசு
நினைக்காமலில்லையே!

நாலும் வாழும் காட்டின்
எட்டும் திரியும் தெருவில் தானே பயணிக்கிறோம்..,
எவர் இப்படி இருந்தால் என்ன
நம்மை நாம் சமாதனப் படுத்தி
கவனமாக ஓட்டும் நேர்த்தியில்
ஏதேனும் –
ஒரு விபத்தையாவது –
தவிர்க்காமலா போய்விடுவோம்?????

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

36 முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்!!

ழ விடிவு நோக்கி
இடையுறாத காத்திருப்பிற்க்கிடையே
விதி ஏற்று –
குடும்பம் சுமந்த சுயநல பிறப்பாய் வந்தேறிய
தமிழக தெருக்களில்
தள்ளாடுகிறது என் கால்கள்;

ஒரு –
மழை படராத சுவற்றில்
வர்ணப் பூச்சுகள் உதிர்ந்த
சுவடுகளுக்கிடையே ஏனோ
லயிக்கிறது மனசு;

என் உடைபடாத
வார்த்தைகளுக்கிடையே
சிக்கித் தவிக்கும்
கண்ணீர் குவியலில்
யார் யாரை நான்
குற்றவாளியாக்கவோ???

கத்தி ஓ’வென்றழ இயலாத
மனக் குமுறல்களோடு –
அந்த மழை படராத சுவற்றில் சாய்ந்து நிற்கிறேன்,
மழை கொல்லென்று வீழ்கிறது
பூமி நோக்கி;

என் தலை நனைத்து
உடல் நனைத்து
உயிர் நனைத்து
உள்ளம் மழையால் நிறைந்து
வெளியேறுகையில் –

யாரோ ஆட்கொண்ட உணர்வு
பீறிடுகையில் –

கண்ணீர் மழையென புரண்டோடி
அம்மா அம்மாயென்ற வார்த்தையும் அழையுமாய்
அடக்கவொனா நீண்டு –

மழை ஓய்ந்த ஈரம் போல்
தேங்கிய வேதனையில் –

மீறி அழ திராணியின்றி
தெருவில் அங்காங்கே திரியும்
மரணம் நோக்கி நடக்க முயல்கிறேன்……..

ஊரில் நடந்த –
முள்ளிவாய்க்காலின் சதி நிகழ்வு
செய்தியாய் தொலைகாட்சி எங்கும் தின்று
உலக சாலையெங்கும் துப்பப் படுகையில் –
அதில் காட்டும் இறந்தவர்களின் சடலங்களில்
எது என் தாய், எது என் தந்தை, எது மனைவி குழந்தையென்று
யார்வந்து அடையாளம் காட்டுவாரோ?????

என் கண்ணீர் சுமந்த
தமிழ் மண் –
தன் இன ரத்தம் ஊரும்
ஈழத்திற்கு –
என்ன பதில் வைத்திருக்கிறதோ???

அண்ணாந்து வானம் பார்க்கையில்
நகரும் மேகமெலாம் –
என் உறவுகளாய் தெரிகிறதே;

அசையும் காற்றிலெல்லாம்
என் உறவுகளின் –
அவலக் குரலாய் கேட்கிறதே;

வயிற்றுப் பிழைப்பிற்கு
தேசம் கடந்து வந்த நான் –
அவரோடு இருந்து
இறந்தாவது போயிருக்கக் கூடாதா??

எவர் வந்து சொல்லும் தீர்ப்பிற்கு
இன்னுமென் உயிர் மிட்சமோ; மிட்சமோ; உலகே??!!!!!!
————————————————————————————–
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

ன் வீட்டு எண்ணிக்கையில்
எங்களை எல்லாம் மீறி –
நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு;

அக்கா அண்ணன் கோபித்த போதும்
அம்மா திட்டிய போதும்
அப்பா அடித்த தருணங்களின் போதும்
வாலாட்டி, முகம் தடவி
குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு;

பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ
எதையேனும் உண்டோ இல்லாமலோ
கால் சுற்றி வந்த மிச்சத்தை –
இரவில் விழித்துத் தீர்த்த உண்ணத பிறவி;

ஒரு நிழல் அந்நியம் பேசினாலும்
விடாது துரத்தி
வாசல் வரை விட்டுவிட்டு
திண்ணையிலோ –
வீட்டின் வெளிப்புறத்திலோ உறங்கி
வாஞ்சையோடு வீட்டை காக்கும்
பொய்யில்லா அன்பு ஜீவன்;

வீட்டில் ஏதேனும் சண்டை என்றாலோ
மரணம் நிகழ்ந்தாலோ
தன் பங்கிற்கும் ஒருசொட்டு
கண்ணீர் விட்டு –
மனிதனை போல்
வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத; மெய்காப்பாளன்;

முழுக்க நீராட்டி
சந்தனம் தடவி
வீட்டிற்குள் இருத்தினாலும் –
வால் குழைத்து ஓடி
சேற்றினுள் விழுவதை சுதந்திரமாய் பாவிக்கும்
செல்லப் பிராணி;

வாழ்நாள் முழுக்க தன்னோடிருப்பதாகவே
அன்பு செலுத்தி
ஜூலி ஜூலி என்றோ
டைகர் டைகர் என்றோ
டாமி.. டோனி.. என்றோ
ஆங்கிலப் பெயர்களை மட்டும் நம்
நினைவிற்கு மிச்சம் வைத்துவிட்டு
வீட்டின் மரத்திற்கு உரமாகவோ
முனிசிபாலிடி வண்டியில் பிணமாகவோ
போடப்படும் நாய்;

காடுமேடு சுற்றி
நாலு வீடாவது ஓடித்திரியும் –
அக்கம்பக்க விசாரிப்புகள் ஏதுமின்றி
சங்கிலியால் கட்டப் பட்டு
குறைக்கும் போதெல்லாம் ஒரு அடியும் வாங்கி
எஜமானி அழைத்துச் சென்றால் மட்டுமே
இன்னபிற நடத்தி –
அப்பாவியாய் படுத்துக் கிடக்கும்
நம் செல்லப்பிராணியை பார்க்கையில்
பாவமென மனதில் –
பளிச்சென ஒட்டிக் கொள்ளாதார்க்கு
இக்கவிதை ஒருவேளை பிடிக்காமல் போகலாம்!
—————————————————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

வீட்டின் வாழும் அடையாளம் தலையணை (28)

ரவு நெருப்பின்
இன்னொரு காதலன்; காதலி;
மனசு பெறாத தூக்கத்தை
மெத்தெனக் கொடுக்கும் தலையணை!

வருடத்து வாசனைகளை
மிச்சம் வைத்திருக்கும்;
வந்தவர் போனவரையெல்லாம்
நினைவில் முடிந்திருக்கும்;
புதிய உறை மாற்றினாலும் –
பழசு மறக்காத தலையணை!

ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது;
ஆயிரங்களை கடந்து
பழைய கந்தைதுணியில் கனக்கிறது;
கனவும் தூக்கமும் வரவு என்பதால் – பணம்
தலையனையிடம் தோற்று இரவை வெளுக்கிறது!

எச்சிலில் நனைந்து; குறட்டை பாரம் சுமக்கிறது –
கண்ணீர் கதை கேட்டு கனவுகளை கொடுக்கிறது;
வெளியில் தெரியாத விசும்பலையெல்லாம்
யாரிடம் சொல்லவும் மறுக்கிறது;
கணவன் மனைவி சண்டையென்றால்
வலிக்காமல் அடிக்க கிடைக்கிறது!

அம்மாவின் புடவையோ – அப்பாவின்
பழைய லுங்கியோ உரையாகிவிடுகிறது;
இறந்து போன தாத்தா பாட்டியின் மிச்சச் துணிகள்
உள்ளே உயிர் பெற்றுக் கொள்கிறது;
வீட்டின் பழைய அடையாளப் பொருள்களில் ஒன்றாகி
தலையணையும் வாழ்கிறது!
———————————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பியூட்டரா? கொக்கா; (27)

நினைத்ததை செய்தும்
நேரத்தை விழுங்கும் போதை;
விஞ்ஞானம் பேசி அஞ்ஞானத்திலும்
ஆழ்த்தும் கண்டுபிடிப்பு; கணினி!

வளர்க்கவும் கெடுக்கவும் தெரிந்த
ஆசிரியன்;
மின் சக்தியில் உயிர் பெரும்
ஜடப்பொருள்;கணினி!

உலகம் பற்றி – ஒரு
சொடுக்கலில் காட்டும் வித்தகன்;
மனிதன் விதைத்ததில் – விலையும்
அறிவு ஜாலம்;கணினி!

சான்றிதழ் இன்றி
சர்வமும் கற்பிக்கும் கல்வியாலயம்;
சரித்திரம் பேசி, இலக்கியம் புனைய
மெத்தனமாய் போட்ட முதலீடு;கணினி!

நூறு பேர் வேலையை விழுங்கி
முதலாளிகளை வளர்த்த உத்தி;
மாத வருட வேலைகளை
ஒரு நாளில் முடிக்கும் தேச வளர்ச்சி;கணினி!

நாடு கடந்து வாழ்பவருக்கு
கடலை – தூரத்தை – வென்று
உறவுகளை வீட்டிற்குள் காட்டிய விந்தை;
தொலைபேசியில் சிறுக சிறுக தொலைத்ததை
ஒருநாளில் மொத்தமாய் வாங்கிய சந்தோஷம்;கணினி!

பட்டிதொட்டியெல்லாம்
பறந்து பரவிய அதிசயம்;
வீட்டுக்கு வீடு –
தொலைகாட்சியை விற்றாகவேணும்
வாங்கவேண்டிய அவசியம்;கணினி!

மொத்தத்தில், இருப்பவர் அனுபவிக்கும்
ஆதாயம்;
இல்லாதவன் இன்றும் ஏங்கி.. பயந்து.. பார்க்கும்
‘என்னவோ ஒரு டி.வி. மா(தி)ரி பெட்டி; கணினி!
———————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக