இப்படி எப்படி ஆனோம்.. ?

மேல்கிளையில் அமர்ந்துக்கொண்டு
கீழ் கிளையை வெட்டுகிறோம்.,
அச்சாணியைப் பிடுங்கிவிட்டு
மாடுகளை விரட்டுகிறோம்..,

ஓட்டுகளை விற்றுவிட்டு
வாங்கியவனை தலைவ னென்கிறோம்
முதல்வரையேக் கொன்றாலும்
மடையர்களை முதல்வ ரென்கிறோம்,

பார்ப்பவர் சிரிக்கையில்
உயிரிலே வலியடா,
நெடுஞ்சான் கிடையாய் வீழ்வது
மண்ணில் போகும் மானமடா.,

உலகை சுழற்றிய வாள்முனையில்
பயத்தின் இரத்தவாடையா ?
கடல்தாண்டி பிடித்தச் செங்கோல்
இலவசத்திற்கு தலைச் சாய்ப்பதா ?

ஊருக்கே பாதைப் போட்ட
வீட்டிலின்று இருள்மூட்டம்,
இரண்டே வரிக்குள் அறம் முடிந்த
வள்ளுவ மண்ணில் அநீதி யாட்டம்.,

மரப்பாச்சி பொம்மைப்போல
மனிதர்களைக் கொண்டா விளையாட்டு?
மருந்தும் மதமும் கல்வியும் – ஏன்
வழங்கும் நீதியில் கூடவா கையூட்டு ?

தந்தை இழந்த வீடு போல்
தவிக்கிறது எம்மக்கள்,
தாயிழந்த வாழ்வென்றெண்ணி
தவற்றுள் நோகிறது எம் பூமி.,

தலைவனைத் தேடி தேடி
அறந்தனை தொலைக்கிறோம்,
ஆயிரம் பொய்யோடுக் கூட்டி
அரசென்று மதிக்கிறோம்.,

இல்லாதப் பேயிற்கு ஆயிரம் படமெடுப்போம்
லஞ்சமென் றறிந்தாலும் அஞ்சாது வாரி கொடுப்போம்
கொலையென்றாலும் பகலில் புரிவோம்
கண்ணெதிரே எதுநடந்தும் கண்மூடி கடப்போம்.,

மொழியில்லை மரபில்லை
பேச்சில் கூட அந்நிய வாசம்,
பிறக்கும் பிள்ளைக்கு வைக்கும்
பெயரிலிருந்தே நாற்றம் நாற்றம்..,

அம்மா அப்பா கூட
மம்மி டாடியில் இனிக்கிறது,
மம்தா கும்தா   பெயரிட்டு
மணித்தமிழைக் கொல்கிறது..

அரிசி பருப்பு விற்கவெல்லாம்
குளிரறையும் குஷ்பு விளம்பரமும் வேண்டும்,
களையறுத்தவன் விதை விதைத்தவனெல்லாம்
கோமணமின்றி திரியவேண்டும்,

விளம்பரம் விளம்பரமொன்றே
யாம் மூழ்க வேகும் தீ இன்று,
அசிங்கத்தை அம்மணத்தை
நடுத்தெருவில் காட்டுதின்று,

விசத்தை அடைத்து
விதவிதமாய் வேடிக்கை ஜாலம்,
அதை குடிப்பதையும் கொடுப்பதையும்
காட்டுவதற்கு (கழக) டி.வி.கள் ஏராளம்,

கோமாளிகள் திரியும் மண்ணை
நாடென்று எப்படி யுரைப்பேன் ?
நமக்கான விடிவு கேட்டு
எத்தனை ஐந்தாண்டை இனியும் தொலைப்பேன் ?

அரிசி வித்த காசுக்கு
அடையாளம் மாறிப் போச்சு,
நேரே நடந்த தெருவெல்லாம்
பணம் பணம் பணமென்றே முழுப்பேச்சு.,

எங்கே எம் தமிழர் ?
எங்கே எம் வீரம் ?
எங்கே எம் மரபு ?
இப்படி எப்படி யானோம் நாம் ?

நீதிக்கு உயிர் மாய்த்த தமிழரில்லை
நெற்றிக்கண் சுட்டாலும் குற்றமென்ற வீரமில்லை
நெஞ்சு நிமிர்த்தி நாம் காத்த மரபில்லை
ஒரு தட்டுச்சோற்றில் பசியாறிய ஒற்றுமையில்லை,

வெறும் காற்றைஅடைத்து
ரத்தம் சுவைத்து
சோற்றிற்கும் பணத்திற்கும் பதவிக்கும்
புகழுக்கும் மட்டுமே வாழ்வதுதான் வாழ்வெனில்

ச்சீ அது வாழ்வில்லை; ச்சீ அது வாழ்வில்லை..
————————————————————————
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23, மணிக்குயில் இசைக்குதடி..

index

1
நீ
விரிக்கும்
சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான்
மகிழ்வோடு நடக்கிறேன்,
அங்கேமலர்வதெல்லாம்
கவிதையாகிறது,

உண்மையில் அவைகளெல்லாம்
உன் மீதான
அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே!
——————————————————-

2
ப்போதெல்லாம்
நீ நடக்கும் தெருவழியில்கூடநான்
அதிகம் வருவதில்லை,

காரணம்
என்னை நீ நினைப்பதில்கூட
உனக்கு
வலித்துவிட கூடாது!
——————————————————-

3
னக்குள் ஒரு
தவமிருக்கிறது,
நீ அழுது கண்ட நாளிலிருந்து
துவங்கிய தவமது,

‘இன்னொருமுறை நீ
அழுது கண்டால் அங்கே நான்
இறக்கும் வரம் கேட்டு’ தவமது!
——————————————————-

4
னக்கு
கனவுகளை கொடுத்துவிடக்
கூடாதென
அத்தனை கவனமெனக்கு,

நானென் காதலுக்குள்
கனவுகளைச் சேகரிப்பதேயில்லை
உனக்கான அன்பைத் தவிர!
——————————————————-

5
ண்களுளென்ன
விளக்குகள்
வைத்திருக்கிறாயா?

எத்தனை பிரகாசமந்தப்
பார்வையில்!
——————————————————-

6
னக்கானச்
சொற்களை
நீயே எடுத்துக் கொள்கிறாய்;

நான் எழுதுவதற்கு
நீ மட்டுமே இருக்கிறாய்,
மனசாக!
——————————————————-

7
தோ
நீ வந்துபோன
அதே இடத்தில்தான்
நானும் வந்துநிற்கிறேன்,

உன்போல்
மழையல்ல நான் வானம்!!
——————————————————-

8
தீ
க்குச்சி போல்
உரசுகிறாய்
வெளிச்சமெழுகிறது,

சுடவில்லை நீ..
——————————————————-

9
ன்றோ
தொலைத்த என்
கவிதையை
மீண்டுமெடுத்து வாசிக்கிறேன்,

அது
வசியமாகிறது!
——————————————————-

10
னக்காகக்
காத்திருக்கும்
நொடிகள் மகத்தானவை,

உண்மையில்
மகத்தான வாழ்க்கை தான்
எனது!
——————————————————-

11
னக்கும்
எனக்கும்
கடல் ஒன்றுதான்,

எனக்கு நீ பெண்ணலை
உனக்கு நான் ஆணலை!

மாறி மாறி நாம்
முத்தமிடும் கரையும் ஒன்றுதான்,

உனக்கது என் நினைவு
எனக்கது உன் நினைவு!

நஞ்சு போல நம்மை
கொல்லும் உப்பும் ஒன்று தான்,

நீயென்னை விரும்பியதும்
நானுன்னை விரும்புவதும்!
——————————————————-

12
தி
ரைப்படத்தில் வரும்
நாயகிகளும்
அழகுதான்,

ஆனால்
உன்னைப்போல் அவர்களிடத்தில்
காதலில்லை யெனக்கு;

எனவே நீயே பேரழகு!!
——————————————————-
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எப்போதினிக்குமிந்த குடியரசு நாள்..

நானென்ன இந்திய தேசத்தின் எதிரியா ?
அல்லது சுதந்திர தேசத்தைப் பற்றி தெரியாதவனா ? அல்லது என் போராளிகள் பலர் உயிர்விட்டு மீட்ட விடுதலையை மதிக்காதவனா? அல்லது இச்சமயத்தில் எமது இராணுவ வீரர்களை நன்றியோடு நினைவில் கொள்ளாதவனா ?
 
பிறகேன் தற்போதெல்லாம் குடியரசு நாளோ அல்லது சுதந்திர தினமோ வந்தால் ஒரு கொண்டாட்டத்தை, இந்த தேசத்திற்கான மகிழ்வை எனைப்போன்ற எண்ணற்றோருக்கு தருவதில்லையே ஏன்?
 
காரணம் இந்த எனது அருமை தேசத்தில் தான் எம் மீனவருக்கு ஆண்டாண்டு காலமாய் நீதி என்றவொன்று கிடைப்பதேயில்லை..
 
இந்த எனதருமை தேசத்தில் தான் என் தமிழ்மொழியும் பொதுவில் மதிக்கப்படுவதில்லை, எம் தமிழர் குறித்த வெற்றிகளும் கொண்டாடப் படுவதில்லை..
 
இந்த எனதருமை தேசத்தில் தான் எங்களது விவசாயிகளின் ஓலம் கூட அரசுக்கு எட்டவில்லை, அவர்கள் நிரவாணமாய் நின்றப்பின்னும் ஏனென்று எவனும் கேட்டிடவில்லை..
 
இந்த எனதருமை தேசத்தில் தான் ‘அன்றென் மக்கள் லட்ச லட்சமாய் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டபோது ஏனென்று கேட்டிட கூட’ எம்மால் இயன்றிடவில்லை, எவன் ஒருவனும் வந்து ஒரு உயிர் கரிசனத்தைக் கூட எம்மக்களுக்கு காட்டிடவில்லை..
 
இந்த எனதருமை தேசத்தில் தான் பணக்காரர்களின் கோடானகோடி கடன்களை ரத்து செய்யும் வங்கிகள் சாமானியனின் ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்க்கும் வட்டிகளைக் குட்டிபோட்டு குட்டிபோட்டு கூட்டிவிட்டு கடைசியில் வீட்டையே ஜப்தி செய்கிறது..
 
இந்த எனதருமை தேசத்தில் தான் பத்தாண்டு காலமாக மத்திய அரசு நதிநீரை வழங்கச்சொல்லியும் மாநில அரசுகள் செவிடாகவே வளைய வருகிறது..
 
இந்த எனதருமை 120 கோடி மக்களுள்ள தேசத்தில் தான் ஜி.எஸ்.டி எனும் பெயரில் 28% சதவீதத்திற்கு எளியோரின் உழைப்பை வரிப்பணமாய் அரசால் வாங்கிடமுடிகிறது..
 
இந்த என் தேசத்தில்தான் எமது முதலமைச்சரையே இரண்டு மாதத்திற்கு கூட மிக ரகசியமாக மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு கடைசியில் இறந்துவிட்டதாக எளிதாக அறிவித்துவிட்டு கடந்திட முடிகிறது..
 
இந்த என் தேசத்தில்தான் ஓட்டு போட்டுவிட்டோம் என்பதால் அடுத்த ஐந்து வருடத்திற்கு வரை எமது முதலமைச்சர் நாற்காலியில் யார் அவர்கள் விரும்புகிறார்களோ சென்று அமர்ந்திடவும் முடிகிறது, அதிரடியாக பேருந்துக் கட்டணத்தை அடுக்கடுக்காய் கூட்டிடவும் முடிகிறது..
 
இந்த என் தேசத்தில் தான் நித்தியா போன்ற போலிகளின் ஆபாச படத்தை மதத்தின் சாயம் பூசி வெட்டவெளியில் போட்டிடவும், வாய்க்கு வந்ததை ஆளுங்கட்சி என்பதால் எப்படிவேண்டுமோ அப்படியெல்லாம எவர் வேண்டுமோ பேசிடவும், பதஞ்சலி பச்சையெலி வெள்ளையெலி என்றெல்லாம் பெயர்சொல்லி யோகிகள் வியாபாரம் பெருக்கி ஒரு மெகா சீரியலையும் எடுத்திடவும் முடிகிறது அதற்கெல்லாம் அரசால் துணை நிற்கவும் முடிகிறது..
 
உண்மையிலேயே என்னால் இதற்குமேல் எழுதமுடியலில்லை, எம் தேசத்து நிலையை நினைத்தால் அழை வருகிறது. பயம் வருகிறது. எமது இளைஞர்கள் ஒட்டுமொத்தமாய் எழுந்துநின்றால் இவைகளை எதிர்காலத்தில் ஒவ்வொன்றாய் மாற்றிடமுடியும். அதற்குபிறகு இந்த நாட்களெல்லாம் மிகையாய் நமக்கு இனிக்கலாம் போல்..
 
என்றாலும் இந்நாளும் எந்நாளும் எம் மண்ணிற்காய் உழைத்த போராடிய இரத்தம் சிந்திய அனைவரையும் நன்றியோடு, நன்மதிப்போடிங்கே நினைவு கூறுகிறேன். வணங்கிக் கொள்கிறேன். வாழ்க பாரதம். ஓங்குக எம் தேசம். வளர்கயென் மணித்திரு நாடு..
 
வித்யாசாகர்
Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே..

 

 

 

 

 

 

சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு
மஞ்சள்வெயில் முகமழகு மழைவான மௌனமழகு.,
கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு
காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு!

சந்தனப் பூப் போல மெய்யழகுக் கொண்டவளே
செவ்விதழ்த் தீயள்ளி உச்சந்தலை சுட்டவளே
முழுகாதவ வயிறாட்டம் மனதிற்குள் நிறைந்தவளே
முழுமூச்சை அசைபோட்டு நெடுவானில் நின்னவளே!

எனக்கென சொற்களில்லை எல்லாமே நீயானாய்
மௌனத்தைச் சேகரித்தேன் முப்பொழுதின் மொழியானாய்
சுடரேந்திச் சித்திரமாய் முகமெல்லாம் இனிக்குதடி
நீ வந்து நின்றால்தான் நிசப் பொழுது மலருதடி!

தனிமையில் கொல்கிறாய் கவிதையுள் நெய்கிறாய்
கனவினுள் வருகிறாய் கனவாகவே முடிகிறாய்.,
உறக்கமும் தொலையுதே உனையெண்ணி உருகுதே
உயிர்வரை பூக்கிறதே உனைமட்டும் எண்ணுதே!

தீக்குச்சியாய் உரசினாய் தீச் சுடாமலே ஒளிர்கிறாய்
செந்தழல் பரப்பி செவ்வானில் சிவக்கிறாய்
சூரியக் கீற்றோ நீ? சிறுவிழி யசைவில் நகைக்கிறாய்
மின்னலிடுங் கண்ணாலே மைப்பூசி மிளிர்கிறாய்;

மொத்தத்தில், மொத்தத்தில் நீ உயிரள்ளிக் குடிக்கிறாய்
மறுசென்ம வரங் கேட்டு வரங்கேட்டு இனிக்கிறாய்
நஞ்சள்ளிக் குடிப்பதுபோலுன் பிரிவைத்தான் சுமக்கிறேன்
நீ சிரிக்காத பார்க்காத இடந்தன்னில் இறக்கிறேன்!!
—————————————————-
வித்யாசாகர்

 

 

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவளே சிவனும் சக்தியும்.. (திருநங்காள்)

 

பெண்ணென்றால் பூப்பூக்கும் காய் காய்க்கும்
வானத்து நட்சத்திரங்கள் பூமியிலே வந்துமின்னும்
கடலும்.. வனமும்..
காற்றிடையே அவளோடு காதலுறும்,
பிறகென்ன(?)
அவளும் பெண்ணென்கிறாள் எதிர்ப்பு எங்கிருந்து வந்தது?

பிறக்கையில்
மூன்றுக் கையோடு பிறந்தால்
இரண்டாக வெட்டிக்கொள்ளலாம்,
இரண்டு இதயத்தோடு பிறந்தாலும்
ஒன்றாக அறுத்து அளந்துவிடலாம்,
இரண்டு பிறப்பாக பிறந்தவளை என்னச்செய்ய ?

மனதால் நொந்தவளை
மனதால் அறுப்பதா?
பிறப்பால் பிசகியதை பாவமென்று சபிப்பதா ?
முதலில் இது பிசகில்லையே யாரறிவர் (?)
இதுவும் ஒரு பிறப்பென்று எவருரைப்பர் ?

தாயிற்கு பெண் பிறந்தாலும் சரி
ஆண் பிறந்தாலும் சரி
பெண் ஆணில் பிறந்தது குற்றமெனில்
பெற்றது யார்?
அங்ஙனம் பிறந்தது எவரது குற்றம் ?

உடம்பில்
புடைத்திருக்கும் மார்பகங்களுக்கு
உஸ்.. பூ.. சூ.. வென பெயர் சூட்டுவோரே
சற்று நில்லுங்கள்,
நீங்கள் எப்பொழுதேனும் – சப்தங்களால்
வலிசூழ்ந்த உலகை அறிந்ததுண்டா ?

உள்ளே அழும், வெட்கி நோகும்
வார்த்தைகளால் உடையும் இதயங்களின்
பச்சை நாற்றம் கண்டதுண்டா?
வளர வளர அழுபவர்கள் மனிதர்களெனில்
அவர்களின் அழுகைக்கு காரணமான நாம்
மனிதர்களா?

குரல் தடித்தால் நானென்ன செய்ய?
உடல் வளைந்தால் நானென்ன செய்ய?
குரலுக்கும்
உடலுக்கும் பெயர்வைக்கும் முன்
எனது பசிக்குங் கொஞ்சம்
நஞ்சள்ளித் தாயேன்..?

பிழைக்கபோனால் இடமில்லை
பழகக் கேட்டால் உறவில்லை
பிஞ்சு மனசொழுக பேசினாலும் நம்பிக்கையில்லை
ஏன், ஒரு கழிவறையில் கூட
ஒதுங்க இடமில்லை..,

கெஞ்சி கெஞ்சி வாழ்க்கையை
பெண்ணாய்த் தானே சுமக்கிறோம் ?
எம் முன்ஜென்ம பகையை
எம்முள் தானே விரிக்கிறோம் ?

சாதிக்க ஆயிரம் திறமைகளையும்
ஆசைகளையும்
வைத்துக்கொண்டு பிறந்தாலும்
அதற்கெல்லாம் முன்
தன்னை தான் இதுவென்று விளங்கிக் காட்டவே
மரணம் முட்டிவிடுகிறதெனில்;
எமைக் கொன்றுவிடு எம் மண்ணே!!

ஒன்பதென பெயர் வைத்தாய்
அரவாணி என்று அடித்து விரட்டினாய்
சினிமாக்களில் கேலி செய்தாய்
திரும்பும் திசையெல்லாம் எமக்குக்
காம கரைபுகுத்தினாய்,

மேலாக ஒன்று செய் –

உன் மகளிடத்தில் ஒரு துளி
உனது மனைவியைப் போல் ஒரு துளி
உனது அக்காத் தங்கையாக
தோழியாக ஒரு துளி
ஒரு துளி ஒரு துளியென –
ஒரு துளி இடத்தையேனும் எடுத்து
நம்பிக்கையோடு எமக்குத் தா –

இது நானென
நாங்கள் பிறந்ததை உணர்ந்ததும்
உருவம் கலைத்து உடைகளை மாற்றிக்கொண்டு
அதோ அது எனக்கான இடமென வாழ
இந்த உலகில் ஒரு துளி இடத்தைத் தா,

அந்த துளியை
உனது வீட்டிலிருந்து துவங்கு
அந்த ஒரு துளியிலிருந்து பெருகட்டும் உம்
மானுடத்தின் கரிசனமும் கருணையும் மனிதமும்
எங்களையும் ஏற்று மகிழ…
———————————————————-
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக