ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்.. (வாழ்வியல் கட்டுரை)

ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல்; ஒரு சின்ன சிரிப்போ, உயிர்மீதானோ கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் மனஇருளும் ஒருசேர அகன்றுபோகாதா? எவ்வளோ முகங் கருக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கைதான் நாமின்று வாழ்வதில்லையா..? இதலாம் நீங்கி இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி நாமெல்லோரும் ஒருவரையொருவர் அன்பு வழியவழிய ஆரத் தழுவிக்கொள்ளமாட்டோமே…?!!

உயிர்தானே ? எல்லாம் ஈரமுள்ள இதயம் தானே ? கொஞ்சம் இரக்கமோ மானுட அன்போ எல்லோருக்கும் பொதுவாய் சுரப்பின் மனிதரை மனிதரிப்படி சாதியென்றும் மதமென்றும் மேலோரென்றும் கீழோரென்றும் பிரித்து மேல்கீழ் வகுத்து ஒருவரை ஒருவரிப்படி வருத்தப்பட வைப்போமா?

தண்ணிக்குச் சண்டை, மண்ணுக்குச் சண்டை, சாதிக்குச் சண்டை, சாமிக்கும் சண்டை; மொத்தத்தில் மடிவது யார்? மனிதரில்லையா? மனிதர் மடிந்து மனிதன் யாருக்காகப் போராடுகிறான்? இன்னும் எத்தனை பேருந்து எரித்து’ எவ்வளவு மனிதர்களைக் கொன்று எவரொருவர் சிரித்துகொண்டே வாழ்ந்தோ செத்தோப் போய்விட முடியும்?

யாருக்கு நாம் துன்பம் இழைக்கிறோம்? எவரை நாம் கொல்கிறோம்? எது என் விருப்பம்? எதற்கானது எனது போராட்டம்? கேள்விகளை சுமந்து சுமந்து ஓடாது சற்று நின்றுச் சிந்திப்போமே..?!!

சமநிலையை விட ஒரு பெரிய எரிச்சல், சமநிலையை விட ஒரு கோழைத்தனம், சமநிலையை விட ஒரு சார்பு நில்லல், ஒருவன் செத்துக்கொண்டிருக்கும்போது பேசும் சமநிலையை விட வேறு பெருங்கொடுமை இல்லை தான். ஆனால் இயல்பாக எல்லோருக்கும் ஏற்படும் உள்ளச் சமநிலையால் மட்டுமே நீயும் நானும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து அடுத்தவேளைச் சோற்றை நிம்மதியாய் உண்ணவும், உள்ளச் சிரிப்பால் நாம் வாழ்க்கையை மகிழ்வோடு நகர்த்திடவும் இயலும்.

மனதின் ரணம், அழுத்தம், வெறி, கோபம் எல்லாவற்றையும் எடுத்ததும் போட்டு உடைத்திடவோ அல்லது வீரியம் பொங்குமளவிற்கு உடனேக் காட்டிடவோ மனிதப்பண்பு அனுமதிப்பதேயில்லை. மனதை அமைதியாக்கிப் பார்த்தால் மட்டுமே அடுத்தவரின் கோபத்தைக் கூட கருணையால் அணுகிட முடிகிறது. கொதிக்கும் நீரில் நீரள்ளி ஊற்றினால் அந்த நீர் கூட சுடவேச் செய்யும். சற்று நிதானித்தால் இரண்டுமே ஆறிப்போகும். காரணம் காலம் ஒரு அருமருந்து. அனைத்தையும் காலம் ஆற்றித் தருகிறது. அதற்கு பொறுக்கும் மனப்பக்குவம் நமக்குத் தேவை. ஒருவனின் நிதானமற்ற இடத்தில மீண்டும் அவனே விழுவதை நம் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இங்கே எவர் விழுவதும் பிறருக்கு வலிப்பதுவுமல்ல நமது ஆய்வு. தீங்கு விளைவிப்பவர் தீங்கையே அறுப்பர். எனவே தீங்கினைவிட்டு விட்டு விலகு என்றுக் கேட்கிறேன். விதைப்பதே விளைகிறது எனில், நாம் நன்மையையே விதைப்போம் என்கிறேன். நாம் நல்லதை நோக்கி நடப்போம், நாளை உலகம் நம் பின்னால் வந்தே தீரும், வரட்டுமே என்கிறேன். அதற்காக பிறர் நமை அடிக்கும்போது நாம் நம் கன்னத்தையெல்லம் காட்டவேண்டாம், அடிக்க நினைக்கும் முன்னரே நாம் எத்தனை வலிமையுள்ளவர் என்பதை அடிப்பவர் முன்அறிய நம் வாழ்வுதனை நெறிபடுத்தி வைப்போம்.

உண்மை நெருப்புப் போன்றது. எடுத்து வீட்டினை கொளுத்துபவர் கொளுத்தட்டும். நாமெடுத்து நம் வீட்டு விளக்குகளில் அடைப்போம். வாழ்க்கைக்குள் திணிப்போம். மொத்த உலகமும் நம்மால் வெளிச்சம் பெறட்டும். உண்மையும் நேர்மையும் கண்ணியமும் வழுவாத அறம் சார்ந்த வாழ்க்கை தமிழரது வாழ்க்கை என்பதற்கு நம் பாட்டன் திருவள்ளுவரின் திருக்குறள்கள் சான்றாக நிற்கிறதே, அதை மறந்து எப்போது வாழத் துணிந்தோமோ அங்கேதான் நாம் நம் வாழ்க்கையையும் தொலைக்கத் துவங்கினோம்.

நடந்தது போகட்டும். மீண்டும் எழுங்கள். அன்பிலிருந்து நேர்மையிலிருந்து உண்மையின் வழியே கண்ணியத்தோடு பயணப்படுங்கள். அறம் நமது உயிருக்கு இணை இல்லை, அறத்தோடு வாழ்வது தான் நாம் உயிரோடு வாழ்வது என்பதை உணருங்கள். ஒரு செயல் தீதெனில் செய்ய மறுங்கள். தீத் தொட்டு கையுதறும் வலிபோல, ஒவ்வொரு சிறு தவற்றின்போதும் அச்சப் படுங்கள். இயல்பு தடுமாறி எந்தக் கோட்டையை எழுப்பினாலும் அதனுள் இயல்பின் நன்மையும் சாபமும் ஒருங்கே இருக்கும் என்பதை உணருங்கள்.

வாழ்க்கையை வள்ளுவம் போதிப்பது போல் வேறொன்றும் போதிப்பதில்லை. ஆனால் நம்மில் எத்தனைப் பேருக்கு திருக்குறள் விளக்கத்தோடு புரியும்? இருக்கும் திருக்குறளை விட்டுவிட்டு எங்கெங்கோ அறிவு தேடி அலைவதே ஒரு அறிவீனமில்லையா? எனவே திருக்குறள்களை வாசிக்கப் பழகுங்கள். அதன்வழி வாழ முற்படுங்கள். குழந்தைகளுக்கு திருக்குறள் புரியட்டும். திருக்குறள் புரிகையில் அன்பு புரியும், பண்பு புரியும், வீரம் எதுவென்று தெரியவரும், வெற்றி தோல்வி கடந்து வாழ்க்கை அறத்தோடானதாக அமையும்.

இனி எல்லாம் மறக்கட்டும். துன்பம் மறக்கட்டும். எல்லாம் மாறும், நல்லதாய் மாறட்டும். விடுதலை’ அமைதி’ அன்பு’ மானிட இன்பம்’ அனைத்து உயிர்களுக்குமானது என்பதை எல்லோரும் ஒரே நேரத்தில் உணர்ந்திட முடியாதுதான். ஆயினும், ஒவ்வொருவராய் அதை உணர ஆரம்பித்தால் போதும் எங்கேனும் ஓரிடத்தில் மெல்ல மெல்ல நாமெல்லோருமே அதை முழுமையாய் உணர்ந்திருப்போம். மாற்றங்கள் நிகழவே நிகழும். இனி அது எல்லோருக்குமானதாக நிகழட்டும்.

எதிரியைக் கூட ஒரு மனிதராய்க் காண்போம். போ வாழ்ந்து போ.. என்று விட்டுவிட்டு மனிதத்தோடு நாம் நடப்போம். எவரும் இந்த மண்ணின் மீது யாருக்கும் எதிரியில்லை. இடைவெளி அகன்றால்; இயல்பது புரிந்தால்; பேசி யுணர்ந்தால்; எல்லோருமே நாம் நண்பர்கள் தான். எல்லோருக்கும் அன்பு. எல்லோருக்கும் வணக்கம்.

நண்பர்கள் வாழ்க..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

ரு பூ உரசும் தொடுதலைவிட
உனை மென்மையாகவே உணருகிறேன்,
உன் இதயத்துக் கதகதப்பில் தானென்
இத்தனை வருட கர்வமுடைக்கிறேன்.,

உன் பெயர்தான் எனக்கு
வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல
உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர்
மூச்சுபோல துடிப்பது.,

உனக்கு அன்று புரியாத – அதே
கணக்குப்பாடம் போலத்தான் இன்றும் நான்,
எனக்கு நீ வேறு; புரிந்தாலும் புரியாவிட்டாலும்
நினைவுள் பிரியாதிருப்பவள் நீ.,

உனை யெண்ணுவதை
எண்ணுவதற்கேற்ற நட்சத்திரங்கள்கூட வானிலில்லை,
எனது சிரிப்பிற்குப் பின்னிருக்கும்
ஒரு துளிக் கண்ணீரைத் தொட்டுப்பார், உன் இதயம் சுடும்.,

உனக்கும் எனக்கும் தூரம் வெகுநீளம்
உனக்கும் எனக்கும் காலம் பெரு சாபம்
உனக்கும் எனக்கும் கண்கள் காற்றுவெளியெங்கும்
உனக்கும் எனக்கும் ஒன்றே பொருள்; நடைபிணம்.,

இவ்வளவு ஏன் –
உன்னுயிர்க்கும் என்னுயிர்க்கும்
பார்வையின் அளவில்லை, நினைக்குமளவில் மட்டுமே
உயிர்க்கும் நெருக்கமுண்டு.,

கனவுகளுக்கு கூட தெரியாது
யார் நீ யார் நானென்று;
கைக்குள் முகம் பொத்தி ஒரு பாடலை
ரசிக்கும் அந்த ஈரத்தில் மிதப்பவர்கள் நீயும் நானும்.,

சரிசரி, யாரோ நாம் புலம்புவதைக்
கேட்கிறார்கள் போல்,
காற்றுள் காது புகுத்தி நம் கண்களை
யாரால் பார்த்திட இயலும்?

போகட்டும் நீயொன்று செய் –
உன் கையில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளெடு
அதன்மீது என் பெயரெழுது, அல்லது
ஒருமுறை என்னை நினை,

மீண்டும் –

அதே நீ நினைக்குமென் நினைவிலிருந்தும்
நான் நினைக்குமுன் நினைவிலிருந்தும்
மரணம் வரை –
மௌனத்துள் கனத்திருக்கட்டும் நம் காதல்!!
———————————————————————-
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனிதப் போராட்டத்தின் வெளிறியச் சொற்கள்.. (அணிந்துரை)

தம்பி சேவகன் பரத் எழுதியுள்ள புத்தகத்திற்கான அணிந்துரை

ரு துளி மையிட்டு அதிலிருந்து நீளும் தொடர்கதையாய்; ஒரு சின்ன இதயத்துள் காற்றடைத்து உயிர்க்கும் வாழ்வில்தான் எத்தனை எத்தனைப் போராட்டங்கள்(?). அறுக்கும் நெல்லிலிருந்து அறுத்து புடைத்து உண்டு உண்டவனை எரிக்கும் சுடுகாட்டுத் தீ மூளும் சுடு-நாற்றத்தினோடு அமர்ந்திருக்கும் வெட்டியான் வரை, அவனுடைய வாழ்வியல் குறித்த சிந்தனையையும் கருத்தில் கொள்ளவேண்டிய நம் தலைவர்கள் வரை, முதல்வரிலிருந்து பிரதமர் வரை யாருக்கில்லை போராட்டம்?

ஆக போராட்டம் என்ற ஒன்று பிறப்பதே போதாமை எனும் புள்ளியிலிருந்து எனில், எனக்கு இது போதுமென ஆசைகளை சுறுக்கிக்கொண்டு ஆடம்பரத்தை விட்டொழித்து வாழ்க்கையில் விளம்பரத்தை தேடாதவர்களை என்ன சொல்லலாம் (?) ஞானி என்று அழைக்கலாமா? பிறகேன் இவ்வுலகம் பைத்தியம் என்கிறது அவர்களை? பிறகு உலகின் சூழ்ச்சுமம் புரியாதவர்கள் யார் ? அவர்களா அல்லது நாம்தானா? ஆக எங்கோ சிறு தவறிருக்கிறது. அதை நாம் கடந்துவிடுகிறோம். கடக்க முடியாதவர்கள் சேவை ஆற்றுகிறார்கள். கடக்க முடியாதவன் கவிஞனாகிறான். கவிஞன் என்பதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு பலரின் உயிர்ப்பை வாழ்தலை படைப்பாக்கியிருக்கிறார் வாழ்வியல் நேசர் திரு. சேவகன் பரத் அவர்கள். அவருக்கு எனது பணிவான நன்றி.

மரமது காய்ப்பதும் பூப்பதும் இயல்பு. எங்கோ காய்ப்பதையும் பூப்பதையும் ஒருவர் சீர்செய்து பிறர் ருசிக்க தருவாரெனில் அவருடைய தாய்மையும் போற்றத் தக்கதில்லையா ? அத்தகு முயற்சியோடு இந்த அருமை மனிதரின் மனிதாபிமானத்தை, ஈரமான எண்ணங்களை முழு புத்தகமாக்கித் தர முன்வந்திருக்கும் எனது அன்புச் சகோதரர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும், மணிமேகலை பிரசுரத்த்தின் மொத்த உழைப்பாளிகளுக்கும் எனது பாத வணக்கம்.

ஆடையில்லை என்று ஏங்குவது வேறு, உண்ண உணவில்லையென வருந்துவது வேறு, ஈதிரண்டும் இருந்தும் அதை புரியாத வாழ்க்கை எத்தகு கொடிது? தெருவில் சிலர் யாருமற்று திரிகையில் அவர்களை அழைத்துபோய் ஏதேனும் செய்துவிட எனக்கும் இதயம் துடிக்கும். ஒரு நூறோ இருநூறோ கொடுத்தால் ஜென்மம் தீருமா? தீராதென தவிக்கும். என்றேனும் ஒருநாள் நான் இவர்களுக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்க முடியுமளவிற்கு வளர்ந்துவிட்டால் இவர்களையெல்லாம் முறையே அழைத்து சீர்செய்து விடவேண்டுமென ஒரு பெரிய ஆசையையும் கனவையும் மனது சுமந்தே திரியும். அந்த கனவின் கனத்திற்கு ஒரு நிரந்தர சாட்சியை முன்வைக்கிறது இந்த “புனிதம் தேடும் மனிதம்” எனும் அரிய படைப்பு.

ஆரம்பிக்கும் போதே ஆசிரியர் சொல்கிறார், இதயம் பலவீனமானவர்கள் இதைப் பார்க்காதீர்கள் என்று. உண்மையில் அவரிதை என்னிடமிருந்து தான் முதலில் மறைத்திருக்கவேண்டும், காரணம் தூக்கம் என்பதெற்கெல்லாம் முன் எனது நிம்மதியை தட்டிவிடுகிறது இப்புத்தகத்தில் புரளும் ஒவ்வொருப் பக்கமும். நான் உடுத்தியிருக்கும் எனது ஆடையும், வகிடெடுத்து வாரிய தலைமயிரும் எனையே மாறி மாறி பரிகசிக்கிறது. இவர்கள் வாழும் சமுதாயத்தில் தானே நீயும் வாழ்கிறாய் ? இவர்களைக் கொல்லும் பசியை மறந்து தானே நீ இலகுவாய் கடந்துபோகிறாய் ? உனை சமூக அக்கறைக் கொண்ட கவிஞன் என்று சொல்லிக்கொள்வது உனக்கே எத்தனை ஆழ உண்மை, யோசித்தாயா? அதலாம் சிந்தித்தால் உனக்கு மட்டுமல்ல, இந்த சீர்கெட்ட சமுதாயத்திற்கே நாணக்கேடென ஒரு சமநிலைப்பாடின்மையின் பெரிய கோபத்தை வாரியிறைக்கிறது இப்படைப்பு.

காரணம், நான் சம்பாதித்துக்கொண்டு பிறகு சேவை செய்வேன் என்றெண்ணுவது மடத்தனம். இருப்பதை கொடுப்பதில் தான் சேவை இயல்பாய் நிகழ்கிறது. உதவ நினைப்பவர் வெறுங்கை வீசிச்சென்று உதவியை துவங்கவேண்டும். அப்போது தான் நாளை பணம் நம் கையில் வருகையிலும் அது தக்க உதவிக்குப் போகுமென்பது எனது நம்பிக்கை. அதே போல, நம் எல்லோருமே நமக்கேற்றாற்போல் ஒவ்வொரு வட்டத்தை போட்டுக்கொண்டு, அதனுள் நின்றவாறு என்னிடம் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தனது “ஒன்றுமில்லா கைவிரித்துக் காட்டும் முன், சற்று ‘அறிவுக்கண் திறந்து பார்த்தால் மனக்கண் வழியே தெரியும்’ இந்த உலகிற்கு உதவ நம்மிடம் எண்ணற்றவைகள் உண்டென. அதைத்தான் இந்த படைப்பின் நாயகர் திரு. பரத் அதை புரிந்துக்கொண்டு தனது கவிதைப் பயணத்தை இவர்களிடமிருந்து துவங்கியுள்ளார். இன்னும் கூட கொஞ்சம் செதுக்கியிருக்கலாம் கவிதைகளை. ஆயினும் அங்கே கண்ணீர் ஆறாக ஓடும் உணர்வுகள் மெத்த கரைந்திருப்பதால் புத்தகம் கனத்துவிட்டது போல் கவிஞருக்கு.

ஒருமுறை நான் கண்டுள்ளேன், இதுபோன்றோரை ஒரு மாமனிதர் அழைத்துபோய், அவர்களை கழுவி, சுத்தம் செய்து, முடிவெட்டி, உடை மாற்றி, மருத்துவமும் பார்க்கும் காணொளி ஒன்றை ‘ஐயா வை.கோ. அவர்கள் தனது வாட்சப் மூலம் குரல் பதிவோடு பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்துவிட்டு நான் பலநாட்கள் எனது உறக்கத்தை தொலைத்திருக்கிறேன். ஆயினும் அங்ஙனம் செய்ய விழைந்தவரின் மனதையும் ஆற்றலையும் எண்ணி எண்ணி ‘இவர்தான் முழு இறைப்பணியைச் செய்கிறாரென’ பெரிதாய் நிறைவுற்றேன். அந்த நிறைவின் துளிக்குள்ளிருந்தே எனை வெளியே விட மறுக்கிறது இப்படைப்பும்.

ஆக, அவர்களை மட்டுமல்ல, இந்த சமுதாயத்தால் கைவிடப்பட்ட அநேகருக்காகவும் தனது சிந்தனைச் சாட்டையைச் சொடுக்குகிறார் இப்படைப்பின் ஆசிரியர். ஓரிடத்தில்; வேசி என்று நாம் நாக்கூசாது ஒதுக்கும் பெண்டிரின் ஆழ்மனத்தையும் அழகியல் படுத்த முனைகிறது இவரது கவிதையொன்று. சோவென ஒரு மழைப்பெய்து நின்றதும் ஓடிவந்து கால்களைக் கட்டிக்கொள்ளும் ஒரு சிறுபிள்ளையைப் போல, ஒரு நீண்ட ஒப்பாரிக்குப் பின் எழும் ஒரு கொடூர அமைதியினைப் போல, ஒரு விலைமகளைப் பற்றிய கவிதைக்குள் அவளுடைய கண்ணீர் கதைக்குப் பின் இப்படி எட்டி முளைக்கிறது இறுதி வரிகள் –

“எப்படிப்பட்ட வேசி யானாலும்
  இப்படியொரு கதையிருக்கும்
  அவளுக்கும் மனதிருக்கும்
  அந்த மனதை யாசி” அவளையும் சமவுணர்வோடு நேசி, அவளை அவளாக மாற்றியப் பங்காளன் இந்தச் சமூகமாகிய நீயும் தானென கொடுவிரல் ஒன்றைக் காட்டி நமை மனிதத்தால் மிரட்டுகிறது.

இன்னொரிடத்தில், ‘யாருக்கோ உழைக்க இங்கென்ன உனக்கு படிப்பு வேண்டி கிடக்கு, போ, வேறெங்கேனும் போவென எச்சரிக்கிறார் வெளிநாட்டு பணியாளர்களை இப்படைப்பின் ஆசிரியர் திரு. பரத். கல்லுக்குள் ஈரம்பார்க்கும் மாமனசு எங்களை நோவதா? வெளிநாட்டு வாழ்வென்பது தேடிப் போனதல்ல, கிடைத்ததுள் மகிழும் மனதாகத்தான் நாங்கள் இருட்டுள் புகுந்துக்கொண்டு வெளிச்சத்தை தேடியே இந்நாள் வரைக்கும் அலைந்துக்கொண்டிருக்கிறம். அதனால் இழந்துவிட்டது ஏராளம், பெற்றது வெறும் பணத்தை மட்டுமே.

ஆக, இப்படி அடுத்தடுத்து புரட்டுகையில் நம் மண்ணின் வாசனையை மட்டுமே அறிந்தோர் அத்தனைப் பேரையும் அழைத்து, ‘பார்.. நன்றாகப் பார், இதுவும்தான் நமது மண், இவர்களும் தான் நமது மைந்தர்கள், வா.. வந்து என்னோடு நட, இவர்களுக்கான பதிலைத் தா என்கிறது, நீளும் ஒவ்வொரு கவிதையின் பக்ககங்களும்.

எனவே அவைகளை நீட்டிக்கொண்டே போகாமல் ஒரு முற்றுப்புள்ளியாக இங்கே முடிகிறேன். நீங்கள் கவிதைகளுக்குள் பயணியுங்கள், உங்களின் காதுகளுக்கு அருகே வந்து கதறியழ உள்ளே நிறைய இதயங்கள் கண்ணீர் சிந்தியும், வாழ்க்கையை தொலைத்தும் காத்துக் கிடக்கிறது. என்றாலும் எச்சரிக்கிறேன், சற்று கவனமாகவும் செல்லுங்கள், சிலவேளை, நாம் வகுத்து வைத்துள்ள அழகியலின் இலக்கணம் கண்டு அந்த இதயங்கள் நமை பைத்தியம் எனலாம். அது உண்மையானதாகவும் இருக்கலாம். படித்துணருங்கள். புதுமை பிறக்கட்டும். அது புரட்சியாய் வெடிக்கட்டும். நாளையந்த புரட்சியிலிருந்து நமக்கான விடியலும் கிடைக்கட்டும்.

நன்றி..

வித்யாசாகர்

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேலைக்காரன் (திரைவிமர்சனம்) வித்யாசாகர்!

முதன்முறையாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுத எனது கைகள் நடுங்குகிறது. சரியாக சொல்வேனா, இத்திரைப்படத்தின் மூலக்கருத்தை எனைப் படிப்போருக்கு புரியவைக்க இயலுமா, முழுமையாக நீங்கள் படிப்பீர்களா, படிக்கவைக்க வேண்டுமே, அதற்குத்தக எழுதவேண்டுமே.., எனும் பல பதபதைப்புதனை உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு தான் இவ்விமர்சனத்தை துவங்குகிறேன். இங்கே நான் கதைச் சொல்ல வரவில்லை, இந்தப் படம் நமக்கு என்னச்செய்ய விழைகிறது எனும் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

கம்யுனிசம் என்றால் என்ன ? தந்தைப் பெரியார், டாக்டர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் எழுதிய நள்ளிரவில் சுந்தந்திரத்தின் போதனை, மக்கள் அதிகாரம் என்பதன் சாரம் என இவ்வாறான இவையனைத்தையும் அதன் நிர்வாணத்தோடு வெளியெடுத்து எந்த ஒரு சார்பும் ஒட்டுதலுமின்றி அவர்கள் சமூக நோக்கமாக என்ன சொல்ல வந்தார்களோ அதை மட்டுமே நாம் புரிந்துக் கொள்ளவேண்டுமெனில்; உடனே சென்று இந்த “வேலைக்காரன்” திரைப்படத்தைப் பாருங்கள்.

ஒரு கிராமம் என்பது போல் ஒரு வெள்ளந்தியான பேட்டை, உள்ளே நுழைகையிலேயே மேலெழும் மண்வாசம் போன்றதொரு ஏழைகளின் வாசம், ஆங்காங்கே பொத்துப்போன ஓட்டு வீடுகளும், தளர்ந்து விழுந்த கூரையும், உடைந்துவிழுந்த சுவரும், மேலே சில நெகிழி யுரைப் போர்த்திய வீடுகளுமாய் குறுஞ்சந்துகளோடு வளைந்து வளைந்துப் போனால் ஒரு ஒதுக்குப்புறத்திலோ, அல்லது கூவம் ஆற்றிலோ, அல்லது கடற்கரை மணலிலோ அல்லது சென்னையின் மைய வீதிகளிலோ முடிவடையுமொரு குப்பமெனும் சிறுபகுதி. நம்முடைய ஒரு முதலாளியின் ஒற்றை பங்களா வீட்டின் மொத்த அளவு. அதில் பல குடும்பங்கள் இடுக்களோடும் பலச் சிக்கல்களோடும் வெறும் கூடாரங்களாக சிதறிக்கிடக்கும். அப்படிக் கிடக்கும் குப்பத்தைக் கண்டு, குடிசைகளைக் கண்டு என்றேனும் உங்களுக்கு வலித்ததுண்டா?

அவர்களுக்கான வாழ்வியலை, அங்கே மூக்கொழுகி சட்டையில்லாமல் இரட்டைக் குடுமி தலை களைந்து பழைய ரிப்பனைக் கட்டிக்கொண்டு அடிவயிற்றைக் காட்டியவாறு நிற்கும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி எப்பொழுதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?

அவர்கள் யார்? யாருக்காக அவர்கள் உழைக்கிறார்கள்? அவர்கள் மட்டும் அப்படி வாழ்வதன் குற்றம் யார்யாரைச் சாரும்? ஒருவர் பாஸ்புட் பிரியாணியையும், ஒருவர் பைவ்ஸ்டார் ஓட்டலிலும், உண்ணமுடிகையில் ஒருசிலர் மட்டும் பசியை சுகித்து தான் வாழவேண்டுமெனில் நாம் வாழ்க்கை சரியா? அதில் அறமுண்டா ?

அவர்களுக்கான கரிசனம் வேண்டாம் ஒரு சிறு அக்கறை மனதினுள்ளே இருந்ததுண்டா? இல்லையெனில் சென்று உடனே இந்த வேலைக்காரன் திரைப்படத்தைப் பாருங்கள். கெட்டியாக உரைக்கும். மனதை ஏழ்மை தைக்கும்.

படித்து படித்துச் சொல்கிறோம்; அரசியல் தவறு அரசியல்வாதிகள் சரியில்லை மக்களிடம் மாற்றம் வேண்டுமென்று. அந்த மாற்றமென்ன வனத்திலிருந்து விழுமா? நாம் மாறவேண்டாமா? குறைந்தபட்சம் நாம் மாறுவோம், மாறினால் என்னாகுமென்றாவது அவர்களுக்குக் காட்ட வேண்டாமா? அரசியல் வாதி என்றால் பயம், அதிகாரி என்றால் பயம், ரவுடி என்றால் பயம் எல்லாவற்றிற்கும் பயம் ஆனால் இவர்கள் எல்லோரின் ஒரேயொரு எதிர்பார்ப்பென்பது வெறும் பணம் மட்டுந்தானில்லையா? அதை நம்மிடம் நயவஞ்சகமாகப் பிடுங்கும், நம்மையே விற்பவராகவும் நம்மையே வாங்குபவராகவும் உருவாக்கி வைத்திருக்கும் இந்த முதலாளிகள் அதாவது கார்பரேட் எனும் கொடுங்கோலன் ஏற்படுத்தியுள்ள “லாபம் மட்டுமே நோக்கு” எனும் வியூகம் எல்லோரையும்விட, எல்லா பயங்கரவாதத்தையும் விட மிக பயங்கரமானதில்லையா?

அவனைத் தண்டித்தால் அவனால் குளிர்காயும் அரசியல் வாதிகளிலிருந்து கொலைகாரகள் அதிகாரிகள் என எல்லோருமே தன்னைத்தானே சரியாக்கிக்கொள்ள மாட்டார்களா?

இது தான் நான், இது தான் நாம் எனும் நமது நேர்த்தி யாரையும் எப்படிப்பட்டோரையும் அசைத்துப் பார்த்துவிடக்கூடிய வல்லமை மிக்கதெனில்; அதை வைத்து ஏன் முதலில் முதலாளித்துவத்தை சரிசெய்யக் கூடாது? மக்கள்சக்தியால் ஏற்படுமொரு புரட்சி ஏன் மக்களுக்கே உரிய நீதியை நிலைநாட்டக் கூடாது? நமக்கான அறத்தை ஏன் நாம் ஒவ்வொருவருமாக முதலில் கையிலெடுத்துகொண்டு நமக்காய் நாம் வாழப்பழகக் கூடாது? சக்கரத்தை முன்னால் சுழற்றினாலும் வண்டி ஓடும், பின்னால் சுழற்றினாலும் வண்டி ஓடுமென்று நாம் இதுவரை முதலாளிகளுக்கு புரியவைத்தே இல்லை.

அரிசயல் வாதி ஒரு போதைக்கு அடிமையைபோல. அவர்களுக்கு வெறும் பதவி வேண்டும், பணம் வேண்டும், புகழ் வேண்டும், அதற்காகத்தான் அவர்கள் எதையும் செய்ய துணிகின்றனர். ஆனால் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டிய ஆசை தான் இந்த முதலாளிகளின் முதலீடு. முதலீட்டை நாம் முதலில் உடைப்போம், அரசியல் வாதிகளின் ஆசையை நேர்வழியில் மாற்றுவோம், அதற்கு முதலில் இந்த கார்பரேட் கவர்ச்சியை அழிக்கவேண்டும்.

இது வாங்கினால் அது இலவசம், இதை தந்தால் அதை தருவேன் எனும் எண்ணத்தை நமக்குள் விதைத்தவனை நாம் இவனென்று அடையலாம் காணவேண்டும். எழுபது சதவிகிதம் தள்ளுபடி, ஐம்பது விழுக்காடு தள்ளுபடி, கழிவே இல்லாது தங்கம், சேவைக் கட்டணம் இலவசம் போன்ற ஜீவல்லரியில் துவங்கி, உணவகம், வீதி கடைகள், துணி கடை, ஷோ ரூம், சூப்பர் மார்கெட்,என எல்லா வியாபாரிகளின் கவர்ச்சி சொற்களை நாம் தூக்கி குப்பையில் எரிய வேண்டும். யாருமே இங்கு தர்ம ஸ்தாபனம் நடத்தவில்லை, லாபத்திற்குத்தான் உழைக்கிறார்கள் பிறகெப்படி இலவசமாய் ஒரு பொருள் கிடைக்கும் யோசிக்கவேண்டாமா? அப்படி தருவோர் ஒருவர் சென்று மாடிக்கு அருகில் இருக்கும் குடிசைக்கு கொடுங்கள், நாளை குடிசைகளும் கோபுரமாகும்.

ஒன்றைச் சொல்லவா, பசியையும் பட்டினியையும் எத்தனைப் பேர் அறிவீர்கள்? ஒன்றுமில்லா வீட்டில் வெறுமனே படுத்திருப்பது அல்ல பட்டினி, அது வறுமையின் ஆழப் பிரச்னை. பலகாரங்கள் சூழ்ந்த உலகிற்கு மத்தியில், வாசனை மிக்க உலகத்தாரோடு, அக்கம்பக்கத்து வீடுகளை தாண்டி மணக்கும் உணவுவிடுதிகளுக்கு மத்தியில் உலவும் பசியான வாழ்வாதாரம் இருக்கே அதை உணர்ந்ததுண்டா? சுண்டல் முறுக்கு கிழங்கு என்பதெல்லாம் போய் சிக்கன் பிங்கர் பக்கோடா, ஃபிக் ப்ரை, ஃபிஸ் நைன்ட்டி ஃபைவ் போடும் உலகம் தானில்லையா இது. இப்படிப்பட்ட உலகத்திற்கு மத்தியில் ஒரு நாள் ஒரு முழு நாள் யாரேனும் பட்டினி கிடந்து பாருங்கள், பசியின் வேதனை புரியும். அப்படிப்பட்ட பசியை ஒருவனால் டார்கெட் எனும் விசக்கோடு கிழித்து ஏழைகளின் ஆசையினை உழைப்பை வியர்வையை, நடுத்தர வர்க்கத்தாரின் கனவுகளை வியாபாரமாக மாற்றுவானெனில் அப்படிப்பட்ட சுரண்டலை, தந்திரத்தை வேசிதனம் என்போமா? அப்போதிங்கே அப்படிப்பட்டவர்களை அனுமதித்தது யார் குற்றம்? யாரின் குற்றமுமல்ல, நமது ஒட்டுமொத்த தொழிலாளர்களின் விசுவாசம் என்கிறதிந்த வேலைக்காரன் திரைப்படம்.

ஆம், விசுவாசம் தான் ஒரு கொலைகாரனை மீண்டும் கொலைச்செய்ய வைக்கிறது. விசுவாசம் தான் நயவஞ்சகத்தை மார்கெட்டிங் என்றுச் சொல்லி மக்களிடையே புகுத்துகிறது. விசுவாசம் தான் பத்தாயிரம் இருபதாயிரமென எலும்புத்துண்டைப் போல் பணத்தை தூக்கியெறியும் அரசியல்வாதிகளை தெரிந்தும், அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட தலைவரிடமிருந்து பணத்தைப் பெற்று அதை தனது ஊர்மக்களுக்கு கொடுத்து ஓட்டாக மாற்றி ஒரு நயவஞ்சகனை தலைவனாக்க வைக்கிறது. விசுவாசத்தால் தான் நாமெல்லோரும் மயங்குகிறோம். விசுவாசத்தால் தான் உடன்படுகிறோம் நாம்.

“நன்றி” என்ற ஒற்றை உயர்ந்த சொல்லை அறத்தின் வழியே ஆழ நம் மனதுள் பதித்துப்போன திருவள்ளுவரிடமிருந்து இந்த முதலாளிகள் திருடி அதன் மீது பூசிய சாயம் தான் இந்த விசுவாசம். அதை உடைதெரியுங்கள் என்கிறது இந்த “வேலைக்காரன்” திரைப்படம்.

ஐயா அப்துல்கலாம் சொன்னார், நீ உன் வேலையை விரும்பு அதற்கு விசுவாசமாய் இரு, நிறுவனத்தை விரும்பாதே என்றார், அது மாறிக்கொண்டே இருக்கும் என்றார். அதுதான் அந்த ஒற்றை வாக்கின் மூலமந்திரம் தான் நமை மாற்றிப்போடுமென நம்பிய ஒரு திறமை மிக்க இயக்குனரின் சமுதாய அக்கறையின் உண்மை வெளிப்பாடு இந்த வேலைக்காரன்.

காரணம் வெறும் முதலாளியின், மேலாளர்களின், அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் விசுவாசத்தைக் கொண்டுத்தானே அத்தனை முட்டாள்தனத்தையும் நாம் செய்கிறோம்? உணவு விசமெனில் அதை செய்பவன் யார் ? விற்பவன் யார்? மருந்துகள் நோய்களை உருவாக்குவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மருத்துவமனை போனாலே ஒரு பயம் வருவதை உணர்கிறோம். உடலுக்கு சரியில்லை என்றால் மருந்து வேண்டும், அந்த மருந்து முறையேயொரு மருத்துவமனையில் கிடைக்கும்ன்றால் அங்கேச் செல்ல நமக்கு பயம் எதற்கு? குழந்தை பிறப்பு என்றாலே உயிர்பயம் வருகிறதே ஏன் ? ஆபரேசன் என்றாலே அடிவயிறு கலக்குகிறதே எப்படி ? யாரோ சரியில்லை, எங்கோ தவறு நடக்கிறது, யார் யாரோ ஏமாற்றுகிறார்கள், யாரை நம்புவதென்றே தெரியவில்லை, ஏனெனில் நாமே முதலில் சரியில்லையே, நான் யாரையோ ஏமாற்றுகிறேன் எனவே யாரேனும் ஏமாற்றி விடுவார்களோ என பயந்தும் போகிறேன். ஆனால் யோசித்துப் பாருங்கள் மகாசனங்களே யாருமே நமை ஏமாற்றவில்லை, ஒரு விசுவாசமெனும் மறைதுணியை கண்முன்னே கட்டிக்கொண்டு நாம் தான் நமை பெரிதாக ஏமாற்றிக் கொள்கிறோம்.

யோசித்துப்பாருங்கள், அரிசியில் கலப்படம் விற்பது யார் வாங்குவது யார்? மருந்து போலி விற்பது யார் வாங்குவது யார்? உணவுப் பொருட்களில் நஞ்சு விற்பது யார், வாங்குவது யார் அதை தயாரிப்பது யார்? யாரோ ஒன்றிரண்டை இலவசமென்றுச் சொன்னால் ஓடிப்போய் வாங்கும்முன் சற்று யோசித்தோமா அதற்குள் என்ன தந்திரம் உண்டென? ஒடேன்றால் ஓடுவது, விற்கச் சொன்னால் விற்பது, கொடு என்றால் விசத்தைக் கூட புட்டியில் ஊற்றி குழந்தைக்கும் கொடுப்பது எவர்செய்யும் குற்றம்?

எனக்கு வேலை கிடைக்கணும், நான் டார்கெட் முடிக்கணும், எவனோ போடும் ஒரு பிச்சை போனஸ் காசு எப்படின்னா எனக்கு கிடைக்கணுமென்று நினைத்தால் அது பச்சை துரோகமில்லையா? அதைத் தானே இன்று வியாபாரமாக்கி வைத்துள்ளார்கள் நமைச் சுற்றி எல்லோருமே. நம் பசியையும், நம் ஆசையினையும், நமது ஏழ்மையை உடைக்கும் முன்னேற்றத்தையும் தானே ஆயுதமாக கையிலெடுத்துக் கொண்டுள்ளது இந்த அதிகார உலகம்?

எங்கோ ஆடையின்றி கிடந்தோம் ஆனால் அனாதையாக இல்லை, கூட்டாக தானே வாழ்ந்தோம்? இன்று ஆடைக் கட்டி அலங்காரங் கூட்டி மாளிகை யெழுப்பி உள்ளே யார் யாரோடு வாழ்கிறோம்? கடனோடும், மருந்தோடும், கட்டளைகளுக்கு பின்னே ஓடும் அவசரத்தோடும் தானே நமது வாழ்க்கை இன்றுள்ளது? எதற்காகவேனும் நின்று சிந்திக்கவாவது நம்மிடம் நேரமுண்டா ? எல்லாவற்றையும் காசாக்கி யாரோ ஒரு சில நிறுவனங்களும் அதன் போதையில் மயங்கி அணைத்து தலைவர்களும் தலைக் குப்புற விழுந்துக் கிடந்தால் நாளைய நம் பிள்ளைகளின் கதியென்ன ? சோற்றை மாத்திரையாக்கி கொடுத்துவிட்டதுதான் நாம் அவர்களுக்கு கொடுத்த விஞ்ஞானமா? அல்லது அது அவர்களுக்கு நாம் அளித்த சாபமா?

ஓடி விளையாட இடமின்றி கணினியில் மூழ்கி கைப்பேசியில் விழுந்துக் கிடப்பது தானே நாம் அவர்களுக்கு கற்றுத்தந்த முன்னேற்றம்? உண்மையிலேயே இதையெல்லாம் எண்ணி எண்ணி நான் பலமுறை மனதிற்குள் வேதனையில் நோவதுண்டு. இந்த மக்களை எந்த சாமி வந்து திருத்துமோ என்று தினம் தினம் தவம் கிடப்பதுண்டு. அதத்தனைக்கும் ஒரேயொரு மூலக்காரணம் நமது தவறான விசுவாசம் தானென எத்தனயோ நமது இளைஞர்களுக்கு புரியவைத்த நன்றி இந்த “வேலைக்காரன்” திரைப்படத்தைச் சாரும்.

தன்னுடைய வேலை சரியா, தான் தயாரிக்கும் மருந்து சரியா, நான் விற்கும் பொருட்கள் சரியா என எல்லோருமே யோசிப்போம். எப்படி இதையெல்லாம் மாற்றுவதென ஒட்டுமொத்தமாய் சிந்திப்போம். சிந்திக்க சிந்திக்க உண்மையை உணர உணர நமக்குள்ளும் இப்படத்தின் கதாநாயகன் அறிவைப் போல பல நல்ல குழந்தைகள் நல்ல இளைஞர்கள் உருவாவார்கள்.

செய்யும் தொழில் அறத்தோடு இருக்கவேண்டுமென்பது மட்டுமே முதலாளிகளின் முதல் குணமாக அமையவேண்டும். அறத்தை தாண்டி செல்லும் எவரும் மனிதத்தை தொலைத்தவர்களாகவே எஞ்சி நிற்கிறார்கள். ‘அறம் என்பதுதான் நம் அரண்’ என நம் ஒவ்வொருவருக்கும் புரியவேண்டும். அது புரிந்தால் அந்த அறத்தின் வழியான விசுவாசம் நமை தவறு செய்ய விடாது. அப்படி தவறு செய்ய தயங்கி நன்மையை செய்ய முனைவோமானால், நாம் அத்தனைப் பேரும் ஒட்டுமொத்தமாக முனைவோமானால் நம் வாழ்வில் வெளிச்சம் நிச்சயம் வருமென்று மிக அழகாகச் சொல்லி முடிகிறது இந்த “வேலைக்காரன்” திரைப்படம்.

இவன் சரியில்லை, அவன் சரியில்லை, அவன் இப்படி இவன் இப்படி என பலவாறு பலரைத் தூற்றுவதும், காக்கை பிய்த்தெடுக்கும் எருதின் புண் போல பிறரது வலியில் குளிர்காய்வதும், அல்லது இது இன்னாருடைய குற்றமெனச் சொல்லி ஒருசாராரை ஒதுக்குவதுமெல்லாம் பொதுவாக எல்லோரும் செய்வது. அப்படி ஒருவர் இன்னொருவரை ஒதுக்கிவைத்து. தாழ்வாகக் கண்டு, தனை உயர்வாக எண்ணி எண்ணியே இந்த மரபு மிக்க தமிழ் மண் இன்று பிளவுபட்டு அண்டை மாநிலத்தார்முன் தாழ்வாகவே கிடக்கிறது. அரசியலுள் பாருங்கள் அத்தனை நாற்றம் அடிக்கிறது. அதிகபட்சம் எல்லோருமே தவறு, யாருமே சரியில்லை, இவரிவர் குற்றவாளிகள் என்று தெரிந்தும் அவர்களை சார்ந்துள்ளோம். முதலில் அவர்களை விட்டுவைதுள்ளோம் என்பதே தவறு, பிறகு பாருங்கள் சார்ந்திருத்தல் எத்தகைய குற்றம்? நம்மொடுள்ள நல்லோரை சரியாக அடையாளம் காணாதது எத்தகைய இடர்?

ஆக அப்படியெல்லாம் நீளும் கேள்விகளை விட்டுவிட்டு இன்னொரு உத்தியைக் கையாண்டுள்ளார் இப்படத்து இயக்குனர். அது எல்லோரையும் அணைத்து ஒரு உலகளாவிய வெற்றிச் சுடரை தன்மூலம் ஏந்திக் கொள்வது. எல்லோரையும் சேர்ப்பது என்கையில் யாரையும் மன்னிப்பதெல்லாம் இல்லையது, தனது பலத்தை பன்மடங்காகக் கூட்டிக் கொள்ள் எல்லோருமே அறம் சார்ந்து நகரும் ஒற்றைப் புள்ளியது. அங்ஙனம் எல்லோரையும் ஒருத்தர் விடாது கூட்டி; உண்மையிலேயே உள்ளவொரு பிரச்சனையை எல்லோரின் பிரச்னை இதுவெனக் காட்டி தனக்கு வேண்டிய ஒரு வெற்றியை எல்லோரீன் முன்பாகவும் எல்லோரின் சம்மதத்தோடும் மிக இலகுவாய் தான் ஏந்திக் கொள்ளுமாறு சாதுர்யத்தை இயக்குனர் குழு இப்படத்தில் கையாண்டுள்ளது என்பதை இப்படத்தை முழுமையாகப் புரிந்தோர் உணர இயலும்.

சொல்லப்போனால், இதுவும் ஒரு மார்கெட்டிங் தான். அதையும் அழகாக இப்படமே இறுதியில் ஒப்புக்கொள்கிறது. என்றாலும், இத்திரைப்படம் முடிகையில் திரையரங்கில் அமர்ந்துள்ள நூற்றுக்கு நூறு பேற்றையும் இது என் பிரச்னை இது என் பிரச்னை, இது நம் ஒட்டுமொத்தப் பேரின் பிரச்னை என்று உணரவைத்தது, இயக்குனரின் திறமையும், நல்ல திரைக்கதையும், தம்பி சிவகார்த்திகேயனின் மகோன்னத நடிப்பும், மிரினாளினியாக வரும் நயன்தாராவிலிருந்து காசியாக வரும் பிரகாஷ் ராஜ் வரை, சினேகா வரை, அந்த அம்மாவாக நடித்த ரோகினி, அப்பாவாக நடித்த சார்லி வரை செம அசத்தலான போதுமான நடிப்பும், அதோடு மிகச் சரியான ஆள் தேர்ந்தெடுப்புமென எல்லாமே மொத்தத்தில் கலக்கியிருக்காங்க. கலை இயக்குனர் குறிப்பாக அனிருத் இசை என எல்லாமே அசத்தல்.

சரியா சொன்னா, பெருசா ரசிக்கவோ, இனிமையா உணரவோ, ஒரு கதை உள்ளிறங்கி நம் கனவினை தரவோவெல்லாம் ஒண்ணுமேயில்லை. ஒரு டாக்குமெண்டரி போல ஒரு படம் தான் இது. ஆனால், எல்லோராலும் அத்தனை அசாத்தியமாக தொட்டுவிட முடியாதளவிற்கு மிக திறமாக அதற்குள் நம் பிரச்சனையை உள்வைத்திருக்கிறது இந்த “வேலைக்காரன்” திரைப்படம். இன்னைக்கு வர நோய், பிள்ளைங்க மழுங்கடிப்பு, வளர்ச்சி வளர்ச்சின்னு நாம சுரண்டப்படும் மோசடியென அத்தனைக்கும் மொத்தமாக நீதிக் கேட்டு நமைத் தூண்டும் ஒரு சின்ன; அதேவேளை தீப்பொறியின் முதல் முத்தாக இந்தப்படம் அமைந்துள்ளது என்பது சத்தியமான உண்மை.

என் அண்ணன் ஒருவர் வீட்டிற்கு வந்தார். படம் எப்படிண்ணே என்றேன், அவர் சொன்னார் “நீ வேறப்பா, நான் இந்த முறை சூப்பர்மார்கெட் கடைக்குள்ள போனப்ப ஒரு பக்கெட்டையோ அல்லது ட்ராலியையோ எடுக்கவேயில்லையே, கையை வீசிக்குனு போனேன் எது வேணுமோ அதை எடுத்தேன்.., வந்துக்குனே இருந்தேன் பாரு..” என்றார். அது தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு சாட்சி.

உலகிலேயே தலைசிறந்த சொல் “செயல்” என்று ஒரு வசனத்தை இரண்டிடத்தில் கதாநாயகன் திரு. சிவகார்த்திகேயன் மிக அழகாகச் சொல்வார். வாருங்கள் நாமும் அதேபோன்ற வலிமை மிக்கதொரு சொல்லின் ஆழத்துள் இறங்குவோம். நமக்கு வேண்டியதை நாம் இன்றிலிருந்தே செயல்படுத்துவோம்.

எல்லோருக்கும் விசுவாசம் அவரவரது வெற்றியில், அவரவரது செய்யும் வேலையில் மட்டுமிருக்கட்டும். நாம் ஒவ்வொருவரும் உண்மையிலேயே நம் வேலையை நம் மனசாட்சிக்கு ஏற்ப சரியாய் செய்ய அவரவர் பங்கிற்கு அவரவர் முயற்சிப்போம், முடிவில் எல்லோரின் ஒட்டுமொத்த விடையுமாக நமக்கான விடியல் நமக்கு இனியதாக கிடைக்கட்டும்.

எல்லோரும் இதுவரை பல கேள்வியை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு ஆண்டையும் கடந்தோம், இனி நாம் நமது வேள்வியாக நமக்கான களத்தை, வாழ்வை அமைக்கும் தீர்வினை வேண்டி, அதற்கான முழு எண்ணத்தை மனதிலேந்தி பயணப்படுவோம். வருங்காலம் நமக்கு அனைவருக்கும் அறம் காலமாய் வெற்றியின் இனிப்போடு வரட்டும். பிறக்கும் நமது ஒவ்வொரு புது வருடமும் மகிழ்வோடு பிறக்கட்டும்.

இப்படத்தின் நாயகன் திரு. சிவகார்த்திகேயனுக்கும், இயக்குனருக்கும், இத்திரைப்படக் குழு அனைவருக்குமே “இப்படியொரு அறிவைத் தூண்டும் சிறந்த திரைப்படத்தை தந்தமைக்கு” மனம் கனக்கும் நன்றிகளை எல்லோரின் சார்பாகவும் சொல்லி அன்பூறும் மனதோடு விடைபெறுகிறேன்..

எல்லோருக்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளும்! வணக்கமும்!!
——————————————————–
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அந்தச் சன்னலும் அதே நிலாவும்..

1)
கொ
லுசு அணி
தாவணி உடுத்து
மலர்களைச் சூடிக்கொள்
மை பூசு
கூந்தலை அழகு செய்
முகத்தை பொலிவாக்கு
வண்ண ஆடைகளை மாற்றிக் கொண்டேயிரு
அல்லது மாற்றாதே, எது வேண்டுமோ செய்
அதற்கெல்லாம் முன் –
ஒரேயொரு முறை சிரித்துவிடு..
———————————

2)
வ்வொருமுறை
உனக்காக நான் வந்து
உனைப்பார்க்க நிற்கையிலும்
எனக்காக நீ காத்திருந்துவிட்டுச் சென்ற
கண்ணீர்த்துளியின் ஈரம்
நீ நின்ற இடத்தில்
உனது பெயரையும் எழுதிவிட்டே செல்கிறது..
—————————————

3
ன் அழகு
என்னைப் பெரிதாய்ச் சீண்டுவதில்லை
ஆனால்
உண்மையைச் சொல்லவா ?
அதுதான்
உன்னழகே..
—————————————-

4
நீ
 சிரித்தால் தான்
பனி விழுகிறது
நீ சிரித்தால் தான்
நிலா காய்கிறது
நீ சிரித்தால் தான்
தென்றல் வீசுகிறது..
உண்மையில் –
நீ சிரித்தால் தான்
எனக்கிந்த உலகமே விடிகிறது..
—————————————-

5
வள் மழையெனப்
பெய்பவள்
உயிர்வரை நனைக்கிறாள்..

நட்சத்திரங்களைத்
தின்றவள்
தூரத்திலேயே நிற்கிறாள்..

இருட்டில் அலைபவள்
இதயத்துள்
ஒளிர்கிறாள்..

மந்திரம் கற்றவள்
மௌனத்துள்
வாழ்கிறாள்..

சலங்கைகள் அணிந்தவள்
நினைவுகளால்
சப்தமிடுகிறாள்..

கண் நீருக்குள் திரிபவள்
நிழலை
உடுத்திக் கொள்கிறாள்..

நெருப்பில் சுடுகிறேன் அவளை
இப்படியொரு
கவிதையாக மட்டுமே முடிகிறாள்!!
—————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக