காற்றின் ஓசை (2) உதவிக்கு ஒரு விரலாவது கொடு

இதற்கு முன் நடந்தது..

(கருணையின் பேரின்பம்)

நாட்டின் மொத்த ஒரு சதவிகிதத்தில், சில இந்துக் குடி மக்களும் வாழும் ஒரு சிறிய அரபு தேசம் ஏமன்!

பதினேழு சதவிகித குடிமக்கள் நாளொன்றிற்கு 1.25-க்கு குறைந்த அமெரிக்க டாலரை மட்டுமே தனிநபர் வருமானமாக கொண்ட ஏழ்மை தேசம்.

அதற்கிடையே, 6500 வீடுகள் நூறு மசூதிகளை கொண்ட ஏமனின் தலைநகர் “சன’அ” நோக்கி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தரை இறங்கவிருக்கும் மாலனின் விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையில் ஒன்று வெறுமனே இருக்க, அவர் தூக்கத்தை கெடுக்க ‘இதோ வந்தமர்கிறாள் ஒரு தேவதை!

ஒரு பளபளக்கும் கருப்பங்கியை முகத்திலிருந்து கால் வரை அணிந்து ஏதோ ஒரு தேசத்தின் ராஜகுமாரியை போல ஒரு கம்பீர தோற்றம் கொண்டிருந்தாள் அவள்.

யாருக்கும் தலை வணங்குபவளல்ல நானென்பது போல் ‘நிமிர்ந்த மார்பும் நாசி துளைக்கும் அவளுடைய மனமும் மாலனை சற்று விலகி தூரமாக உட்கார வைத்தது.

அவள் திரும்பி மாலனை பார்க்கிறாள், எடுத்து வீசிய வாளினை போல் ஆண்களை வெட்டி வீழ்த்தும் காந்த பார்வை அவளுக்கு. மாறனும் சற்று திரும்பி அவளை பார்க்கிறார். மூடிய அவளுடம்பின் அத்தனை அழகையும் அவளுடைய கண்களிரட்டும் பளிச்சென காட்டியது.

சற்றும் எதிர் பாராத குரலில் அவள் –

“ஹாய்…” என்கிறாள்.

“வணக்கம்” என்றார் மாறன்.

“மன்னியுங்கள். விமானத்தில் பலமுறை வாழ்வின் மிகமுக்கியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, எனவே விமான பயணத்தில் நான் உறங்குவதில்லை.”

“அப்படியா. நல்லதம்மா..”

“அங்கு அருகில் இருப்பவர் நன்றாக உறங்குகிறார், அதனால் இங்கு வந்தேன். உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே?”

“இல்லை.. இல்லை..”

“நீங்கள் இந்தியர் தானே”

“நிச்சயமாக”

“பிறரை மதித்து வணங்கும் குணம் மிக உயர்வானது, எனக்கு இந்தியரை மிக பிடிக்கும்”

“நல்லதம்மா..”

“நான் அம்மா அல்ல, என் பெயர் மெஹல். பெயர் சொல்லியே அழைக்கலாம்”

“என்னது.. மெஹல்?!!”

“ஆம்! மெஹல் மோனஹ்

“மிக அழகான பெயர். அரேபியர் எப்போதும் தன் பெயரை மிக நீளமாய் வைத்துக் கொள்வார்களே?”

“உண்மை தான், எங்களின் பரம்பரை பெயர் அதாவது முப்பாட்டனார் பெயர், தகப்பனார் பெயர் எல்லாம் சேந்து வரும். என் முழு பெயர் ‘மொஹம்மத் இத்தநென் அப்தல்லா மெஹல் மோனஹ்”

அவள் தன் முழு பெயரையும் நீட்டி முழக்கி இழுத்து சொல்லி முடிக்க மாலன் சிரித்தே விட்டார்.

“பார்த்தீர்களா? சிரிக்கிறீர்களே”

“மன்னிக்கவும். மெஹல் என்பதே அழகான பெயர். நான் அப்படியே அழைக்கலாம் இல்லையா?”

“தாராளமாக. சரி, உங்கள் பெயரென்ன?”

“என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்.”

“தாண்டா….??? மலன்…???”

“இல்லை இல்லை.., மீண்டும் சிரித்தார் மாலன். என் பெயரையே மாற்றி விடுவீர்கள் போலிருக்கே! வெறும் மாலன் என்று அழையுங்கள் போதும்”

அவள் மாலனின் ரசிக்கத் தூண்டும் அழகிய முகத்தையே பார்கிறாள்.

“ஏன்..மெஹல்?”

“ஒன்றுமில்லை, உங்களின் சிரிப்பு வசீகரமானது மாலன்”

“நிஜமாகவா?”

“ஆம். அதுசரி, நீங்கள் ஜோர்டானிலிருந்து வருகிறீர்களே; அங்கே என்ன, வேலை செய்கிறீர்களா?”

மாலன் ஜோர்டான் சென்றதற்கும், ஏமன் வருவதற்குமான அத்தனை காரணங்களையும் விரிவாக சொல்லி முடிக்கிறார். விமானம் சற்றேறக்குறைய தரை இறங்கும் நிலையில் உள்ளது.

“மாலன் இத்தனை சொல்கிறீர்கள் ஆனால் உங்களை பார்த்தால் என்னால் நம்பவே முடிய வில்லை”

“அத்தனை தகுதியற்றவன் போல் தெரிகிறேனா நான்?”

“அப்படியில்லை மாலன், மிக சாதாரண தோற்றமென்றும் உங்களை சொல்லிவிட முடியாது தான், ஆனால் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு ஒரு வயோதிகம் தெரியவில்லையே?”

“உண்மையை போதிப்பதற்கு உணர்தலே அவசியம் மெஹல், வயோதிகமல்ல”

“எனக்கு ஆச்சர்யம் வருகிறது மாலன், இத்தனை சின்ன வயதில் உங்களால் எப்படி இந்தளவிற்கு; தெரியவில்ல..”

அவள் முழுதாக வந்ததை பாதியாகவே நிறுத்தினாள்.

“ஒரு மனிதன் அழும்போது தான் அழுவதாய் ஒரு பதற்றம் வருமாயின்; எங்கோ ஒரு வீடு பற்றி எரிகையில் தன் வீடு எரிவதாய் ஒரு அவஸ்த்தை ஏற்படுமாயின்; மரம் செடி கொடிகள் அசைகையில் அந்த அசைவின் காரணமென்ன என உற்றுப் பார்த்து அவைகளின் மொழியறிய முயற்சித்திருபாய் எனில்; தண்ணீரில் விழுந்த ஒரு எறும்பை கூட காப்பாற்றி தரையில் விட பாடுபட்டிருப்பாயானால்; கடவுளை இந்துக்களின் கோவிலிலும், இஸ்லாமிய மசூதியிலும், கிருஸ்த்துவ தேவாலையத்திலும் வணங்க முடியுமானால்; மனிதரை கடவுள் வாழும் கோவிலென கண்டு மதித்திருப்பாயானால்….., இவைகளை பற்றிப் பேச வயது ஒரு பொருட்டில்லை மெஹல்.”

“மிக அருமை மாலன், ஆனால் எனக்கு இத்தனை நீள பதிலுக்கு அவசியமில்லை. நான் உங்களின் முதல் வரியிலேயே நீங்கள் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டேன்”

“வாய்ப்பு கிடைக்கும் போது சொல்லவேண்டியதை சற்று விரிவாகவே சொல்லி விடுவது என் பழக்கம், காரணம், நீயா நானா என்று ஜெயிப்பதற்கல்ல என் பேச்சு. நம் உரையாடலை இங்கு வேறு யாரும் கூட கேட்கலாமில்லையா, அப்படி ஒருவர் கேட்டால் கூட போதும் அவருக்கென நாளெல்லாம் பேசுவேன். காரணம் நம்மால் ஒருவரை உருவாக்க முடிந்தால் கூட போதும் அந்த ஒருவரால் நாளை நூறு ஆயிரமாகவும் ஆயிரம் கோடியாகவும் மாறலாம்”

“நீங்கள் பேசினால் நிச்சயமாக மாறும் மாலன், சரி.. ஜோர்டான் எப்படி இருந்தது”

“அருமை. அழகான தேசம்”

“ரசித்தீர்களா?”

“மிக ரசித்தேன்”

“எங்கள் தேசம் அழகான தேசம். அப்படி பாதுகாத்திருக்கிறோம் நாங்கள்.”

“அப்படியா!!!? உண்மையாகவா!!?” ஒரு ஏளனமான தொனியில் மாலன் கேட்டுவிட..

“ஏன் இப்படியொரு விகல்பமான சிரிப்பு மாலன்?”

“எத்தனை தவறுகளை கண்டேன் தெரியுமா உங்க நாட்டில்?”

“தவறா?!! என்ன பெரிய தரை அப்படி கண்டுவிட்டீர்கள்?”

“சரி, தாரில்லை.. குறை என்று வைத்துக் கொள்ளுங்கள்”

“இருக்கட்டும் இருக்கட்டும்.. என்ன குறை கண்டீர் எங்கள் தேசத்தில்?”

“ஏனித்தனை கோபம் மெஹல்? உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அதை பேசுவானேன். வேறு ஏதேனும் பேசுவோம், நீங்கள் சொல்லுங்கள் ஜோர்டானில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”

“பேச்சை மாற்றுவது எனக்கு பிடிக்காது மாலன், சொல்லுங்கள் என்ன குறை கண்டீர்கள் எங்கள் தேசத்தில்?”

“என் தேசத்தில் கண்ட அதே குறை”

“என்ன?”

“இந்தியாவிற்கு வந்திருக்கிறீர்களா?”

“பலமுறை வந்திருக்கிறேன், உங்கள் கிராம மக்கள் வரை சென்று பார்த்திருக்கிறேன்”

“சபாஷ், அங்கு என்ன கண்டீர்கள்?”

“விண்முட்டும் கட்டிடமும்; அருகே, ஒருவேளை சோற்றினை தேடி அலையும் ஓலை கொட்டகை வாசிகளையும் என்றால் ஒப்புக் கொள்வீர்களா மாலன்?”

“அது தான்.., அதுதான் குறை மெஹல். உலகம் நிறைந்த குறை அது தான்.

ஒரு ஊரில் நூறு வீடிருக்கும், அதில் குறைந்தது பத்து வீடுகளாவது ஐம்பது குடும்பத்திற்குரிய வசதிகளை தனித் தனியே கொண்டிருக்கும்; இன்னுமொரு இருபது வீடுகள் பத்து வீடுகளுக்குரிய சொத்துகளையாவது தனித் தனியே வைத்திருக்கும்; இன்னுமொரு முப்பது வீடுகள் நமக்கு போதுமான வசதிகள் தான் வந்து விட்டதே, இனி எவன் எக்கேடு கெட்டாலென்ன என மறந்து விட்டிருக்கும்; மீதமுள்ள நாற்பது வீடுகளின் கதி????????

பசி.. பட்டினி.. கொலை.. கொள்ளை.., உடுத்த ஒரு ஆடை கிடையாது.., உறங்க ஒரு இடம் கிடையாது.., பிள்ளைகளையாவது வேலைக்கு அனுப்பி, தெருவில் திரிந்து.. திரிந்து.. திரிந்து.. அன்றாடங்காய்ச்சிகளாய் அலைவது ஒரு நாட்டின் குறை இல்லையா மெஹல் மொனஹ்?”

“அந்த குறையை போக்க நீங்களென்ன செய்தீர்கள்?”

“நானென்ன செய்திட முடியும் அத்தனை பேருக்கும். அந்த பத்து வீட்டு பணக்காரனோ; இரண்டாவதான இருபது வீட்டு பணக்காரனோ தன் சொத்தில் அரை பாதியை கொடுத்து உதவினால் கூட போதும், ஏழ்மையை என்ன விலை என்று கேட்குமென் தேசம். செய்வார்களா அந்த ஜமீன்தார்கள்? செய்ய மாட்டார்கள். அது தான் நான் எங்குமே காணும் குறை மெஹல்.”

“என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே மாலன்”

“என்ன பதிலை எதிர் பார்கிறீர்கள்?”

“நீங்கள் என்ன செய்தீர்கள் அந்த குறையை போக்க? ஒரு அணுவை அசைத்து வைக்கும் அளவிற்காவது உங்களால் முடிந்ததை நீங்கள் செய்ய முயன்றீர்களா?”

“நானென்ன செய்துவிட முடியும் மெஹல், நானொன்றும் அந்த முதளிரண்டாம் வர்கமில்லையே”

“மூன்றாம் வர்கமென்பது போதாதா? நினைத்தால் எல்லாம் முடியும் மாலன்.”

அதற்கு மேல் விமானத்திற்கே பொறுக்கவில்லை. விமானம் தரை இறங்கியது.. இருவரும் சற்று களைந்து மனதிற்குள் ஆயிரம் கேள்விகளையும் பதில்களையும் சுமந்தவர்களாய் பிரிந்து சென்று அவரவர் பெட்டி பொருள்களை எடுத்துக் கொண்டு ஏமனின் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறார்கள்.

“நல்லது மாலன், நிறைய பேசினோம். ஆயினும் ஒரு முடிவிற்கு வர, நேரம் தான் போதவில்லை -சந்திப்போம். ஏதேனும் தவறெனில் மன்னியுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்கிறேன் மாலன், நினைத்தால் எதுவும் முடியும். இதுபோன்ற காரியங்களில் நாம் அதிக நாட்டம் கொள்வதில்லை. நமக்கென்ன பிறர் காரியம் தானே என சென்று விடுகிறோம். என்னால் அப்படி முடியவில்லை மாலன், எனக்கு வலிக்கிறது”

“எனக்கும் வலிக்கிறதென்று பதில் சொல்லி என்னாகும் மெஹல், சந்திப்போம். மன்னிக்க ஒன்றுமில்லை, சிந்திக்க தான் நிறைய இருக்கிறது”

“ஆம் மாலன் சிந்திப்பது மட்டுமல்ல, எப்படி நடைமுறைக்கு கொண்டு வரலாமென்பதற்காகவும், இந்த நம் சமூகத்திற்காய் நம்மை போன்றவர்கள் ஏதேனும் முயற்சி செய்தேயாக வேண்டுமென்பதற்காகவும் மாலன்”

“நினைத்தால் எல்லாம் முடியும் தான், ஆனால் இது மொத்த சமூகத்தின் குற்றம் மெஹல், நான் தனித்து என்ன செய்திட முடியும்? யோசிக்கிறேன்”

“முடியும். முடியும் மாலன். உங்களுக்காக காத்திருக்கிறார்கள். அதோ அவ்விடம் செல்லுங்கள், ஏமனின் வரவேற்பிடம் அது தான். இது என் விலாசம். எத்தனை நாளிங்கு தங்குவதாக உத்தேசம்?”

“ஐந்து நாட்கள் வரை இருப்பேன் மெஹல்”

“நேரம் கிடைத்தால் என்னை மீண்டும் சந்திக்க முடியுமா?”

“நாளைக்கும் மற்ற நாளும் ஓய்வு தான், மூன்றாம் நாளிலிருந்தே கூட்டம் தொடங்க திட்டம் என்றார்கள்”

“அப்படியானால் கண்டிப்பாக என்னை வந்து சந்திக்க முயற்சி செய்யுங்கள் மாலன். உங்களுக்கொரு அதிசியம் காத்துக் கிடக்கிறது. நான் ஏன் சொன்னேன், என்ன செய்திருக்கிறேன், நான் யாராக இருக்கும் மொத்தமும் விரைவில் அறிவீர்கள்.. விடைபெறுகிறேன் மாலன்..”

அவள் மிக மிடுக்காய் பேசி விட்டு அதோ போகிறாள் அவளுக்கென ஒரு ராஜ கூட்டம் வந்து அவளை சூழ்ந்துக் கொள்கிறது…

———————————————————————————————–

ரகசியம் நாளை தெரியும்; காற்று இன்னும் தொடர்ந்து வீசும்…

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

வட்டியும் கிட்டியும் (5)

ணம்
பணம்னு அலைந்ததுல
பொணம் தின்னும்
பொழப்பு பாரு;

கந்து வட்டி
கிந்து வட்டின்னு
ஏழை ரத்தம்
இனிக்கும் பாரு!

சுட்ட உடம்பில்
சூடு போடும் –
மிருக குணம்
தொழிலு பாரு;

வாரமானா
வந்து நிற்கும்
மாடி வீட்டு
மைனர் பாரு!

கூரை –
பிய்த்து பிய்த்து எறிந்ததுல –
வீட்ட;
உசத்தி கட்டி சிரிக்கிறாரு;

வாங்கும் வட்டி
பணமெல்லாம்
ஏழை; விட்ட சாபம்
புரிஞ்சிப்பாறு!

த்த வார்த்தை
பேசாம –
மெத்தனமா
உதவி பாரு;

வட்டிகடன்
விட்டெறிந்தா
பிறவி கடன்
இல்லை பாரு!

சி யெடுத்தா
ஈரத் துணி
துணி கிழிந்தா –
குவளை தண்ணி;

உயிரு உருகி
போகுதய்யா –
வட்டி கடன் வேணாமைய்யா;
வட்டி கொட்டி –
கொடுத்து வாழ்ந்தா
பாடை வரை; பாரந் தா(ன்)யா!
———————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

மிச்ச நாட்களின்; மீதி வாழ்க்கை!

வ்வொரு இடமாக நகர்கிறது
வாழ்க்கை;
கேட்டது கிடைத்ததோ இல்லையோ
தேவைகள் கூடி கூடி
குறைத்துக் கொண்டே வருகிறது –
நமக்கான உயிர்ப்பை!

ள்ளும் புறமும் உண்மை ஒழித்து
பொய்மையில் புழங்கிக் கிடக்கும் –
நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில்
தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம்!

னம் சொல் சிந்தனை செயலென
அத்தனையிலும் வீரியம் கொண்ட மனிதன்
மனிதத்தை இழந்ததில் தான் –
தன்னையும் இழந்து விட்டான் போல்!

காலம் செய்யும்; செய்யும் தான்,
ராகுகாலம் எமகண்டம் இன்னபிற
கெட்ட நேரமென நாமே காலத்தை
கொன்று குவிக்கையில் –
வெற்றிக்கான கால அளவு
எங்கோ நம் மூடத்தில்; முடங்கித் தானே போகிறது!

வெற்றியும் தோல்வியும் கூட வலிதில்லையே
வாழ்வின் குறைந்த தூரங்கள் வலிதில்லையா –
பேசிக் கழித்த பொழுதுகள் போகட்டும்,
நாட்காட்டி பார்த்து செயல்பட்ட –
மூடதனம் போகட்டும்,
மேல்சாதி கீழ்ஜாதி பிரித்துக் கொண்ட –
ஏகாந்தம் போகட்டும்,
மதம் இனமென நம் தோள்களில் சுமற்றிய
உறவுகளின் உயிரருத்த கொலைகளும் –
நமக்குள்ளே நாம் செய்துக் கொண்ட
கொள்ளைகளும் போகட்டும்,
மனிதன் தனக்காய் வாழாமல்
பிறர் சொல்லையே ஏற்று வாழ்ந்து மடிந்த
காலங்கள் போகட்டும் போகட்டும்…

வாஸ்த்தும் மந்திர கல்லும்
கடவுளின் ஈர்ப்பினால் –
எல்லாம் மாயையென போர்த்திய
கபடத் தனங்களும் ஒழியட்டும்;

ல்லாம் அநீதி தனமும் தின்று துப்பியத்தில்
நமக்கான மிச்சம் மரணம் மட்டுமே என்பதை
உயிருள்ள போதே கைவிடுவோம்!

மக்கான வாழ்க்கை –
இன்னும் மிச்ச்மில்லாமலில்லை!
——————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

சித்தனும் பித்தனும் இயற்கை (4)

பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

லகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து –
மனிதம் நிலைப்பதே இயற்கை;

ண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்கி; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

ல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து –
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!
——————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

பெண்சிசு கொலை;செய்யலாம் செய்யலாம்!

ன் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு – நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;

ஊர் தூற்றிய மலடிக்கு – உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் – என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;

என் இரவுபகல் வலி தின்று – என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் – அம்மா
அம்மாவென அழைப்பவளே;

கோவில்குளம் சுற்றிவர – என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;

அருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;

உனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;

பத்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த – கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;

என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;

எனைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
உன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????

பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????

ஏய்…………. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை –
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????

ஒன்று புரி –
நீ பெண்சிசு கொல்கையில் –
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
———————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக