வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-3)

1) ணினியின் வருகையால் மிச்சப்படுத்தப்பட்ட மரங்களின் வளத்தை குளிரூட்டி எந்திரங்கள் குலைத்துவிட்டதைப்போல; மனிதன் தனது தேவைகளை நிறைவுசெய்துக் கொள்வதற்கென செய்த கத்தியும் இன்று மனிதனைக் கொல்லவே தேடியலைகிறது. கத்திகளுக்கு வேண்டுமாயின்’ பெயர் வேறு முகம் வேறாயிருக்கலாம்’ ஆனால் மனிதர்களே ஜாக்கிரதை!

2) வ்வொரு இடர் வருகையிலும் வாழ்வின் சிறகு ஒன்று நமக்குத் தெரிந்தே உதிர்கிறது, ஆனால் நமக்குத் தெரியாமல் முளைத்திருக்கும் மற்ற இரண்டு சிறகைப்பற்றி நாம் அறிந்துக்கொள்ளமுடிவதே திறமையின் சாதுர்யமெனலாம். அந்தச் சிறகில் ஒன்றின் பெயர் நம்பிக்கையெனில்; மற்றொன்றின் பெயரும் நம்பிக்கையே!

ஆம், நம்பிக்கை மட்டுமே நம் வாழ்வின் அடுத்தகட்ட நகர்வினை வெற்றியை நோக்கி நகர்த்துகிறது. அந்த நம்பிக்கை மட்டுமே நமக்கான மறுபிறப்பையும் நமக்கே வாழத் தருகிறது. அந்த நம்பிக்கை வேறெங்குமில்லை’ உங்களுக்குள் இருக்கிறது; எனவே உங்களை முதலில் நம்புங்கள்..

3) சாலையோரத்து மரங்களில் எல்லாமே எல்லோரின் பார்வையிலும் பட்டுவிடுவதில்லை. அதன் இலைகள் காய் கனி மலர் எல்லாமே ஒரு நோக்கில் தென்பட்டுவிடுவதுமில்லை. ஆனால் மலர்கள் யார் பார்வைக்கும் காத்திராது அதுவாக மலர்ந்து வாசம் அண்டவெளியெங்கும் பரவப் பரவ உதிர்ந்துகொண்டேப் போகிறது; மனிதர்களும் உதிர்கின்றனர், மணக்கின்றனர், மணக்கும்போதே அறிந்துக் கொள்ளுங்கள்’ மடிவது வெறும் உடலாக மட்டுமிருக்கட்டும்; வலிக்கும் மனதாகயிருக்க வேண்டாம்..

வித்யாசாகர்
Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“மேதின சாபமும்; தீக்குச்சி ஏற்றும் தீபங்களும்”

வ்வொரு எரியும் தீக்குச்சியாய்
விளக்கேற்றி விட்டு
அணைந்துவிடுகின்றனர்
உழைப்பாளிகள்;

எடுக்கும் பணத்தின் நன்றிகளையும்
வட்டிக்கு விட்டுவிட்டு
உழைப்பவர்களின் ரத்தத்தில் நீந்தி
தலைமுறைகளைக் கடந்துவிடுகிறார்கள்
முதலாளித்துவ அட்டைகள்;

மூக்கடையும் சாக்கடையில்
உயிர்மிதக்கும் கனவுகளுக்கு
பொறுப்பில்லா கயமைதனத்தை
எண்ணவும் மறுக்கிறது
சமுதாயம்;

குடித்துமிழும் சாராயத்தின்
எச்சில் நோண்டி
நாற்றமென்று
முகம்பொத்திக் கொள்கிறது
மனிதம் தொலைக்கும் மக்கள் கூட்டம்;

வியர்வையில் நிலம் நனைத்து
பயிர்வளர்க்கும் விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்கயியலாச் சிம்மாசனத்திலமர
தேர்தல் போட்டிநடத்தி வென்றவரின் திசைநோக்கியே
சாய்ந்துகிடக்கிறது அரசியல் தராசுகள்;

ரவுடிகளின் கத்தியில்
அறுக்கப்படும் கழுத்தையும்
அதிகாரிகளின் தோட்டாக்களால்
துளையிடப்படும் அநீதியையும்
பணமாக்குகின்றன பல ஊடகங்கள்;

செருப்பு தைக்கும் மனிதனையும்
செருப்பு விற்கும் மனிதனையும்
செருப்பு வாங்கும் மனிதனையும்
இடம் மாற்றி இடம் மாற்றி; தீண்டாமையை
ஒழிக்கவிடாமலே நகைக்கிறது காலம்;

பக்தியை காசுக்கு ஆக்கி
படிப்பை வாசிக்க விற்று
மருத்துவத்தில் கட்டிடங்கள் எழும்பி
மனிதத்தை விலைபேசுகிறது நாகரிகம்,
மறுபடியும் மறுபடியும் சிந்துகிறது ஏழைகளின் வியர்வை;

இணையத்தில் இதயங்களை காட்டி
எதிர்படுகையில் முகம் திருப்பிக் கொண்டு
தட்டச்சு சப்தத்தில் உடல்வளர்க்கிறது
நட்பும் காதலும் –
தட்டிக்கொடுத்துப் பெருக்கின்றன பணக்கார முதலைகள்;

ஆக வானந்தொடும் வெற்றிகளுக்கடியில்
பூமி நனைக்கும் தொழிலாளிகளின்
உழைப்பைச் சுரண்டும் உலகமே’ உலகத்தீரே’
உமக்கென் மேதின சாபங்கள்
இவ்வருடமும் உரித்தாகட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயதானாலென்ன மருந்திருக்குச் சாப்பிடலாம்..

1
ருத்துவர் சொல்கிறார்
உப்பு சேர்க்கக்கூடாதாம்
சர்க்கரையை விஷம்போலெண்ணி
ஒதுக்கிவிடவேண்டுமாம்
காரம் கூடவேக் கூடாதாம் –

வேறென்ன சமைப்பாள் எனக்காக
என் மனைவி ?

ஒரு சொட்டுக் கண்ணீரை
விடுவாள்…

கண்ணீரின் ஈரத்தில்
கடக்கிறதென் காலம்..
——————————————————————-

2
பொ
துவாக
எல்லோரும் வாழ்த்தும்போது
நூறாயுசு என்று வாழ்த்துவார்கள்

இந்த மனித ஜென்மங்களோடு
நூறு வருடம் வேறு தேவையா என்று நினைப்பேன்

வெயிலில் வற்றிப்போன
குளம்போல –
இப்போதெல்லாம் உயிர்ப்பிற்கான நாட்களை
மாத்திரைகள் தின்று வருகின்றன

நானும்
மனிதர்களோடு நெருங்கி வாழும் ஆசையில்
மருத்துவர் சொல்லும்படியெல்லாம்
கேட்கிறேன்

மரணம் கடைசியில்
யார் சொல்வதைக் கேட்குமோ…
——————————————————————-

3
ந்த ஜன்னல் கம்பிகளின்
வழியேப் பார்த்தவாறு
சுவரருகில் நிற்கிறேன்

வெளியே பறக்கும் பறவைகளுக்கு
மாத்திரை மருந்துப் பற்றியெல்லாம்
கவலையிருக்கப் போவதில்லை

எனக்குண்டு
மாத்திரைகளால் விடும் மூச்சு
என் மூச்சு

மின்சாரத்தில் எரியும்
விளக்கைப் போல
மாத்திரைகளில் ஒளிரும் நிலவு நான்;

ஒரு நாள்
மாத்திரையோ
மாத்திரைக்குப் பணமோ
அல்லது நானோ இல்லாமல் போகலாம்

அப்போதும் வெளியே
பறவைகள் பறக்கும்
ஜன்னலின் வழியே ஒளிரும் நிலவு தெரியும்
ஒரு விளக்கு எனக்காகவும் எரியும்!!
——————————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கழிவுநீரில் களவுபோன மனிதம்..

ந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம்
அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது
கால்களங்கே தானே நகர்கிறது
உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் – நாசியை
துளைக்கிறது,
குடல் புரண்டுவிடுமளவின் வாடையில்
மூக்கை
மோவாயய்
மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள்
பார்ப்பேன்;

தலைநனையக் குனிந்து
அலுமினியச் சட்டியில்
தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும்
உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த
வயதானவர்
இருக்கிறாராயென்று பார்ப்பேன்;

இன்று வேறொருவர் தெரிந்தார்
ஐயோ பாவம் ‘சிறுவனாயிற்றே!!’ என்று மனசுப் பதறியது
முகத்தை வெளிவாங்கிக் கொண்டு
தூரம் ஒதுங்கிக் கொண்டதும்
அந்த சிறுவன் எழுந்து வெளியே வந்தான்

நான் சற்று தூரம் ஒதுங்கிப் போக
அவன் என்னருகே வந்து “என்ன ஐயா என்றான்

அவர் எங்கே அந்த பெரியவரென்றேன்
அவர் போனமுறை
வேறொரு பழந் தொட்டியில்
இறங்கி அடைப்பெடுத்தபோது விஷவாயு அடித்து
இறந்துப் போனாரென்றான்

‘கடவுளே!!
அப்போ உனக்குப் பட்டால் என்னாகும் ?
நீயென்ன செய்வாய்.. ?’ என்றேன்

‘எங்கள் உயிருக்கு இந்நாட்டில் ஏதையா விலை,
பட்டாலென்ன இறந்துப்போவேன்
வேறென்ன’ என்றான்

எனக்குத் தலை சுற்றியது
நான் விருட்டென்று நடந்து
வீடுநோக்கி வந்தேன்
கால்கழுவிக்கொள்ள
முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது

என் மனைவி நான் சப்தமின்றி
வேகமாக உள்நுழைந்ததன்பொருட்டு
வெளியே ஓடிவந்து –
‘என்னங்க
ஏதேனும் பிரச்சனையா..’ என்றாள்

‘இல்லை இல்லை அ…’

‘என்னாச்சுங்க ஏன் முகமிப்படி… (?)’

‘இல்லைம்மா அவன் செத்துட்டானாம்’ என்றுசொல்ல
என்னால் முடியவில்லை

‘எவன் யார்
எத்தனைப் பேரோ (?) ஐயோ கடவுளே!!!!!!’

‘என்னங்க என்னாச்சுங்க சொல்லுங்க..’

‘அதலாம் ஒன்னுமில்லை
நீ போ போய் ஒரு குச்சி கொண்டுவா’ என்றேன்

அவள் நீள குச்சொன்றைக்
கொண்டுவந்தாள்
நான் வேட்டியைக் கழற்றி யெறிந்துவிட்டு
கால்சட்டையோடு தெருவிற்கு வந்தேன்
மனைவி கைப்பிடித்துத் தடுக்க
கையைத் தட்டிவிட்டேன்
சற்றுநேரத்தில் சாக்கடைக்குள் இறங்கி
அடைப்பையெடுக்க நானும்
என் மனைவியும் தயாரானோம்

மூக்கைப் பிடித்துக்கொண்டு
உள்ளே இறங்கினேன்
கழிவுநீருள் மூழ்கியதும்
தீண்டாமையின் பாவங்கள் பெருக்கெடுத்து
நாற்றமாக
நெஞ்சையடைத்தது

அடக்கிக் கொண்டு
அடைப்பைத் துழாவியதும்
சாக்கடையிலேயே மாய்ந்த தலைமுறையொன்றின்
உயிர்கள் வந்து
புழுக்களாக உடம்பைச் சீண்டின

அடைப்பினைக் குச்சிவைத்து குத்தி
இழுத்ததும்
பீறிட்டு வந்த சாக்கடையின் வேகத்திற்கு
நானும் மேலேறி
மேல்மூச்சு கீழ்மூச்சி விட

‘ஐயோ போதும் வாங்க’ என்று
மனைவி பதைபதைத்தாள்

‘எப்பையும் நீயே இறங்கி எடுப்பியா ?’
அருகிலிருந்த குரல்கள் பிறர் வாயிலிருந்து
வந்துவிழ,

‘உள்ளிறங்கும் பயத்தில்
அடைந்துப்போகாதவண்ணம்
பார்த்துக் கொள்வோமில்லையா’ என்றேன்

‘எத்தனைநாளைக்குன்னு பார்ப்போம்’ என்றனர்
நம் சனம் அந்த சாக்கடையிலிருந்து
வெளிவரும் வரையென நான் சொல்லிக்கொள்ளவில்லை

தலைவழியே கழிவுகள் வழிந்து
எச்சினுள் கலந்தது
காரி தூ தூ வென வெளியே உமிழ்ந்தேன்

ஒரு கறைபடிந்த
மனிதச் சாலை அந்த உளிழ்நீரில்
நனைந்து சுத்தப் பட்டுப் போகட்டுமென எண்ணி எண்ணி
உமிழ்ந்தேன்

‘யோவ் எதிர்க்க ஆள் வரது தெரியலையா
மூதேவி’ என்று திட்டிக் கொண்டுப் போனார்
ஒருவர்

‘ஆமாய்யா
இதுதான் மிச்சமா இருந்தது
இதிலும் கைவெச்சிட்டீங்களா (?)
நாங்கல்லாம் எப்படிய்யா பொழைக்கிறது?’ என்றார்
இன்னொருவர்

நான் மூடியிருந்த கண்களை
அழுந்த வழித்துப் போட்டுக்கொண்டு
என் மனைவியைப் பார்த்து ‘மனிதம்
எப்படி களவுபோயிருக்கிறது பார்த்தாயா’ என்றேன்

அவள் ‘வீட்டினுள் போகலாம் வாங்க’ என்று
கைபிடித்து இழுத்தாள்
நானும் நகர அவளும் நகர
இருவரும்
வீட்டினுள் போனோம்

‘உடம்பெல்லாம் பதறுதேங்க
ஏதேனும் ஆகப்போகுதோ தெரியலையே,
அவுங்கல்லாம் விஷயம் தெரிந்தவங்கங்க
நம்மளால..’

‘விடும்மா..
அவுங்களுக்குத் தெரியவேண்டிய விஷயமின்னும்
வேறென்னென்னவோ நிறையயிருக்கு,
அதை யவர்கள் தெரிந்துகொள்ளட்டும்,

நீ வா.. வந்து தண்ணியெடுத்து ஊத்து
இந்த ஜென்மத்தின்
பலிகொடுத்த பாவத்தை எல்லாம் கழுவனும்’ என்றேன்

அவள் தண்ணீரெடுத்து
பித்தளை வாளியில் ஊற்றிக் கொண்டிருந்தாள்
உடம்பெல்லாம் ஒட்டியத் துணி உடம்புச் சூட்டில்
காய்ந்துகொண்டிருக்க
நான் அசையாமல்
மனிதவாடை பட்டும் இறவாது –
என் மீது நிண்டிக் கொண்டிருக்கும் சில
சாக்கடைப் பூச்சிகளை பார்த்துகொண்டிருந்தேன்

உடம்பெல்லாம் நடுநடுங்கியது
அவள் சுடுநீர் கொண்டுவந்து
வாளியில் மீண்டும் ஊற்ற
அதன் நீராவி மேலெழுந்து குளியலறையெங்கும் பரவியது

நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்

‘ஒருவேளை, அந்த பெரியவருடைய ஆத்மா
இனியாவது சாந்தி அடையலாம்,
அல்லது ஒருவேளை நாளையிந்த
கழிவுநீர்த் தொட்டியில்
மீண்டும் விஷவாயு சேருமெனில் அது
என்னை மட்டுமே கொல்லலாம்

அந்தச் சிறுவர்கள் இனி
மெல்ல  பிழைத்துக்கொள்வார்கள்..
—————————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்றும் சாகாத பிறப்பின் விடியல்..

ண்ணில் விழும் தூசிபோலல்ல
கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல்
நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்;

அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும்
திருப்பியடிக்க இயலாத என் கையில்தான்
எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்..

கையை வெட்டியெறிவதை ஏற்காது
உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள்
தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது..

வீட்டை எரிக்க இயலா வன்மத்தில்
பாரபட்ச நெருப்பு பற்றியெரிய
வீட்டிற்குள்ளேயே உயிர் புதைத்துக் கொள்கிறோம்,

வாசனைதிரவியங்களை மேலடித்துவிட்டு
எங்கே நாற்றம்’ எல்லாம் பொய்யென்று
நாடகமாடுகிறது அரசியல் நாற்காலிகள்..

இங்குமங்குமாய் கால்பரப்பி
கோடு தொடவே பயந்து
எல்லைமீறல் குற்றமென்று நம்பி
இன்னும் –
தூரநின்று கல்லெறிபவர்களாகவேயிருக்கிறோம் நாங்கள்;

இனி துணிந்து ஒரு தீர்மானம் எடுப்பதற்குள்
யாரிருப்போமோ இல்லையோ ஆனால்
எங்களின் உணர்வுகள் விதைகளாய் எமது
அடிநெஞ்சிலெங்கும் விதைக்கப்பட்டிருக்கும்..

நாளைய தலைமுறையின் கோபம்
அந்த விதைகளிலிருந்து
மீண்டும் மீண்டும் முளைக்கும்,

நாற்றமெடுத்த எங்களின்
பிணத்து மீதிருந்தேனும்
விடுதலைக்கான கிளர்ச்சி துளிர்த்தெழும்,

கூட்டு கூட்டாய்
விஷகுண்டுகளில் பொசுங்கிப்போன
எம்முறவுகளின் ஓலம் நினைவையரிக்கும்,

மானத்தில் சூரியனைச் சுடுமெம் பெண்களை
நிர்வாணப்படமெடுத்த கைகளையும்
நெஞ்சில் மிதித்த கால்களையும்
ஒடித்தெறியவேனும்
எம் மண்ணில் எமக்கான விடியல் பிறக்கும்..
—————————————————————-
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்