வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-8)

சி ஒரு பெருங்கொடுமை. பசியொரு உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம். ஜீவராசிகள் வாழ்வதன் காரணத்தை உடல்மையமாக சோதித்துப் பார்த்தால் கடைசியில் வயிற்றிற்காக மட்டுமே வாழ்வதாக ஒரு பதில்கூட கிடைப்பதுண்டு. மரணத்தின் வேர் எதுவென்று காட்ட ஒரு சொட்டுத் தண்ணீராலோ அல்லது ஒரு பிடி உணவாலோகூட முடிந்துவிடுகிறது. பசியின் கொடுமையால் மட்டுமே மிருகங்கள் மிருகத்தைக் கொல்கிறது. மனிதனும் தனது அறிவுத் தந்திரத்தால் மனிதனையே கொல்கிறான். பசி மனிதனை பகுத்தாராய விடுவதில்லை. வயிறு இழுத்துப் பிடித்துக்கொள்ளுமந்த வேதனையிலிருந்து தனை விடுவித்துக்கொள்ள கொலை கொள்ளை வழிப்பறி என எல்லாமே மனிதனுக்கு ஆயுதமாகிவிடுகிறது. பசியொன்றே மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் ஒருசேரக் கொடுத்த கடவுள்..

அப்படிப்பட்ட பசியை இன்று நாம் எப்படி மனிதத் தன்மையற்ற இடத்தில் வைத்திருக்கிறோம்? இருப்பவர் தின்பதும் இல்லாதவர் பட்டினியால் சாவதும் முறையென்று வகுக்க எப்படி நம் மனங்களில் ஈரம் வற்றிப்போனது? தர்மம் பற்றி சிந்திக்கத்தெரிந்த மனிதன் தண்டனை’ பாகுபாடு’ சுயனலமென உயிர் கொன்றுக் குவிக்க பசியை ஆயுதமாக்கிக் கொண்டது எத்தனைப் பெரிய குற்றம்?

தெருவில் ஒரு குழந்தை பசியென்று கையேந்தி நிற்பதைக் கண்டும் அதைக் கடந்துப்போகும் கல்மனதுசமூகத்தை உருவாக்கிய நாமொரு பழி சாட்டப்பட்ட மூதாதயராக நாளைக்கு நம் குழந்தைகளுக்கு விளங்கிடமாட்டோமா? நல்லதனைத்தையும் நாம் செய்தோம் நாம் செய்தோமென்று மார்தட்டிக் கொள்ளமுடிகிற நாம் நடக்கும் குற்றங்களுக்கும் காரணமென்று ஏற்று நமை; நம் சுற்றத்தை; நம் சமூகத்தை ஏன் நல்வழிபடுத்தக் கூடாது?

ஏன் செய்யலாமே என்று நெஞ்சு நிமிர்த்துவோர் வாருங்கள் முதலில் பட்டினியை ஒழித்துவிடுங்கள். பசியோடு பிறந்தவர்கள் நாம் பசியை ஒழிக்க முடியாது ஆனால் பட்டினி என்பதை ஏற்படுத்தியவர்கள் நாம்தானே அதை ஒழித்துவிடுவோம். உலகில் எண்ணற்ற இடங்களில் பசியால் மனித இனம் மடிகிறதாம். பசி தாளாமல் குழந்தைகள் கொள்ளையடிக்கிறதாம். பசியைப் போக்கிக்கொள்ள மனிதர்கள் விபச்சாரத்தை கைகொள்கின்றனராம். கேட்கக் கேட்க அசிங்கப்படவேண்டிய சமுதாயப் பொறுப்பில்லாத் தன்மை’ நாம் மீதமாக வைத்துச்செல்லும் ஒவ்வொருப் பருக்கை சோற்றிலும், கூடுதலாக உடுத்திக்கொள்ளும் ஒவ்வொரு ஆடையிலும், ஆடம்பரமாக அமைத்துக்கொண்ட நம் தெளிவில்லா கௌரவத்திலுமிருக்கிறது என்பதை உணர்ந்தால் நாளைக்கேனும் பசியால் துன்புற்று மடியும் நான்கு உயிர்களை ஒரு மனிதர் வீதம் காப்பாற்றி விடலாம்.

பசியால் ஒரு மனிதன் இறக்கிறான் எனில் அது உயிரோடிருக்கும் கோடானக் கோடி மக்களின் இறக்கமற்றத் தன்மையின் கொடூர சாட்சியன்றி வேறில்லை. நம் மனம் இறுகிப் போனதன் வெளிவடிவம் மட்டுமே இன்றையப் பசி. சுயநல கொப்புளங்கள் பெருகி தன் வயிற்றுக்கு மட்டும் சோறு பதுக்கி வைத்துக்கொண்டதன் விளைவு பசி. ஒரு குழந்தை தாய்ப் பாலிற்கு கதறியழும் அதே கொடுமைதான் ஒவ்வொரு மனிதரின் பசிக்குள்ளும் புதைந்துக்கொண்டு தெருத் தெருவாய் சோறு தேடியலைய வைக்கிறது.

ஆக; பசிக்கு ஒரு குவளை தேனீர் தர மனம் வைத்திராத இந்த நம் சமூகம்தான் பிறரின் வலிப் பற்றி மறக்கவும் வழிசெய்துவிடுகிறது. எதிரேயிருக்கும் ஒரு மிருகத்தை மற்றொரு மிருகம் அடித்து கண் நோண்டி காதுமடலறுத்து வயிறுகிழித்து ரத்தம் ருசிக்கும் கொடூரப் பசி தனக்கு வருகையில் மட்டுமே அது கொலையில் அடங்கிடாத இயற்கையின் கொடூர உணர்வென்று மனிதனுக்குப் புரிகிறது.

ஆனால் பாருங்கள் இன்றும் பசிதான் மனிதனை இயக்குகிறது. பசி இல்லயேல் மனிதன் என்றோ நின்ற இடத்திலேயே உயிர்விடத் துணிந்திருப்பான். அதை தவிர்த்து பசி மட்டுமே சோறென்றும் துணியென்றும் மானமென்றும் கெளரவமென்றும் அழகென்றும் ஆசையென்றும் ஆடம்பரமென்றும் நம் பயணத்தை மரணம் வந்து கொல்லும்வரை நமை மரணம் தேடி ஓடவைத்துவிட்ட சூழ்சுமம் என்பதை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. நடந்துச் சென்ற மனிதன் இன்று பறக்கவும் முடிவதற்குக் காரணம் முதலில் நம்மை ஓருருண்டைச் சோற்றிற்கென உந்தி ஒரு அடி எடுத்துவைக்கச் செய்த பசி மட்டுமாகத் தானேயிருக்கும்..

எனில் அது எல்லோருக்கும் பொது இல்லையா? எனக்கு வலிப்பது போலவே பசிக்கும் வயிறு பிறருக்கும் வலிக்குமில்லையா? எனக்கு வேண்டும் போலவே பிறருக்கும் ஒரு குவளை கஞ்சியேனும் வேண்டும்தானே? பிறகு பசிப்போரைப் பற்றிய அக்கறை துளியும் இல்லாமை எத்தனைப் பெரிய தவறு ? சோறு வேண்டும் சரி, ஆடை வேண்டும் சரி, வீடு வேண்டும் சரி, வண்டியும் வேண்டும் சரி, அந்தஸ்தும் வேண்டும் எல்லோரும் மதிக்கவேண்டும் எல்லாம் சரி சரி; அதேநேரம் இதலாம் கடந்து வீட்டில் முடங்கும் பணம் காட்டில் எரியும் பிணத்தின் பசிக்குக் காரணம் ஆகுமெனில் அது நமது மன்னிக்கவேண்டாதப் பெருங்குற்றமில்லையா?

இரண்டு தட்டில் சோறுண்பவர் ஒரு தட்டுச் சோற்றையெடுத்து யாருக்கேனும் தரவேண்டிய காலம்கூட மலைதாண்டிவிட்டது. என்றாலும் வயிறு புடைக்க உன்ன முடிந்தோர் கொஞ்சம் இல்லாதோர் பற்றியும் கவலைப் படுங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையேனும் பசிப்போர் தேடி பட்டினியொழிக்க நம்மால் இயன்றதைச் செய்ய ஒவ்வொரு சிந்திக்கத் தெரிந்த மனிதரும் தயாராகிக் கொள்ளுங்கள். ‘ஏமாற்றி ஒருவன் வாங்கித் தின்கிறான் எனில் தின்னட்டும் விடு, நீ ஏமாற்றாதே’ என்றெண்ணி தன்னை மட்டுமே சரிசெய்துக்கொள்ள ஒவ்வொரு மனிதரும் முனைவோம். கையேந்தி நிற்பவர் ஏமாற்றுகிறார் என்று எண்ணி எதையும் கொடுக்காமலே கொண்டுபோய் எத்தனைப் பெரிய வீட்டைக் கட்டி எதில் நாம் உடம்படக்கி புழுக்காமல் வாழ்ந்துவிடுவோம்?

ஒரு வேளைச் சோறு தானே போகட்டுமே, நான் இரண்டுவேளை உண்டுவிட்டால் அவன் ஒரு வேளைச் சோறேனும் உண்டால்தானே நாம் வாழுமிந்த நிலம் சமதர்மத்தோடு சுற்றத் துவங்கும். நாம் சாப்பிடும் பிரியாணியை விட இல்லாதோர்க்கு கொடுக்க இருக்கும் பழஞ்சோறு கிடைக்காதுகிடைத்தப் பொக்கிஷம் தானே? எனவே கண் திறந்துள்ளவர்கள் சற்று மனதையும் திறந்து வையுங்கள். பசிப்போர் பாவம் அவரை எங்கு கண்டாலும் மனித ஈரத்தை மட்டும் மனதில் கொண்டு உணவு வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் ஒரு நாள் உணவை விட அவருக்கு தொடர்ந்து உண்பதற்கான வழியை ஏற்படுத்துங்கள். ஆயிரம் ரூபாய் வைத்துள்ளவர்கள் பத்து ரூபாய் வீதம் கொடுக்கையில் நஷ்டமாகிவிடமாட்டோம், ஆனால் ஆயிரம் பேர் அங்ஙனம் கொடுக்க முன்வருகையில் நூறு ஏழைக்கு உண்ணச் சோறு கிடைக்கும்..

எனவே இருப்பதை பகிர்ந்துண்ணுவோம். எல்லோரும் இனிமையோடு வாழ்வோம். இந்த வாழ்க்கை உயிர்கள் அனைத்திற்கும் வரமாகவே அமையட்டும்…

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-7)

7)

சோர்வென்பது மனதின் வீழ்ச்சிதானன்றி வேறில்லை. உடைந்த சுவற்றில் வரையும் சித்திரம் முழுமையில்லாது போகலாம் ஆனால் அர்த்தமில்லாது போய்விடாது. முயற்சிப்பவருக்கு மூச்சுக்காற்று கூட ஆயுதம் தான். கத்தி இருந்தும் துப்பாக்கி இருந்தும் தோற்ற மனிதர்களின் எண்ணற்ற வரலாற்றுக் காகிதத்தில் சர்க்கரை மடித்து வாங்கிச்சென்றதை நாம் மறுப்பதற்கில்லை. வென்றவனுக்குச் சாட்சி கேட்பவர்கள் கண்ணாடியை உற்று நோக்குவதில்லை. காலங்காலமாகப் போராடும் அலைகள் சற்று மூச்சிரைத்துக் கொள்ளக் கூட ஓய்வு கொண்டதில்லை. பாவம் நமக்குத் தான் எட்டு பத்து மணிநேரத்து தூக்கத்தைக் கடந்தும் ஓய்வு தேவைப்படுகிறது. நடக்கத் துவங்கும் முன்பே மனதால் சோர்ந்துப்போகிறோம். உழைப்பதற்கு பதிலாக ஆசைகளைச் சேகரித்துக்கொண்டு கனவுகளால் மூச்சுவாங்கி நிற்கிறோம். சாதிப்பதற்கு உடல்பலத்தை விடவும் மனபலம் அதிகம் தேவைப்படுகிறது என்பதை உணருகையில் உற்சாகம் ஊற்றெனப் பிறக்கிறது. சாதிக்க வேறென்னவேண்டும்; காற்றடித்தப் பையிற்கிணங்க நம்பிக்கையடைத்த மனவுறுதி போதுமென்பதையுணர தலையில் தயிர்க்கூடைச் சுமந்துச்செல்லும் பாட்டியின் வீங்கியக் கால்களை கண்டால் புரிபவர்கள் மிகையாகக் குறைந்துப்போகிறோம்..

சற்று யோசித்துப் பாருங்கள்; அவசரமாகச் சிறுநீர் கழிக்க வரும். உடனே போகவேண்டும்போல உந்தித்தள்ளும். அதேநேரம் நடக்கும் ஏதேனும் வேறு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அது மறந்து வெகுநேரம் கடந்துவிடும். மீண்டும் நினைவு வருகையில் ஓ அப்போதே போக நினைத்தோமே என்று நினைத்துக் கொள்வோம். அதுபோல் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குப் போவோம், சாப்பிடக்கொடுத்த மருந்தைக்கூட குழந்தை சாப்பிட்டிருக்காது, ஆனால் மருத்துவமனை சென்றுவந்ததும் அதிகபட்ச குழந்தைகள் விளையாடத் துவங்கிவிட்டிருக்கும். காரணம் குழந்தைகள் நம்பிவிடுகிறது; நம்மை உடம்பு சரியாகவேண்டி பெற்றோர் எங்கோ கூட்டிப்போய் வந்தனரென்று. மனசும் அப்படித் தான், நம்பி விடுகையில் சோர்வைக் காரி வெளியே உமிழ்ந்துவிடுகிறது. உடம்பை உசுப்பேத்தி உசுப்பேத்தி வெல்ல தயார்செய்துவிடுகிறது. ஆறடி தாண்டவேப் போராடும் நமக்கு மத்தியில் இருபத்தியிரண்டடி தாண்டி உலக வெள்ளிக் கோப்பையை வென்ற அஞ்சுஜார்ச் நமக்கெல்லாம் உதாரணமாக வேண்டாமா? உண்மையில் எதையும் வென்றுதீர்க்க உடம்பு தேவைதான், அதேநேரம், உடம்பு இயங்க எண்ணமும்’ எண்ணத்தை சீர்படுத்தி தன்னை முன்செலுத்தும் அறிவும்’ அறிவு நம்பும் மனதும்கூட சோர்வைக் களைந்து வாழ்க்கையை நாம் விரும்பத் தக்க வகுத்துத் தருகிறது என்பதையும் புரிதல் வேண்டும்.

முதலில், செய்யவேண்டிய எதையும் செய்யமுடியுமென்று நம்புங்கள். மனதால் சோர்ந்துவிடும் முன் முயன்று ஒரு அடியையேனும் முன்னெடுத்து வையுங்கள். பிறகு பாருங்கள் பத்தடி நடக்கவும் உடம்பு தானே தன்னை தயாராக்கிக்கொள்ளும்; சோர்வு நூறடிக்கு நமைவிட்டு விலகிப் போகும்..

போக வாழ்த்துக்கள்..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-6)

6)

புகழ் என்பதொரு உச்சாணிக் கொம்பின் தேன் மாதிரி. எட்டியெடுக்க தேனடை விட்டு உதிரும் ஈக்கள் வந்து மனிதரைச் சுற்றிக் கொள்வதைப் போலவே; புகழ் கொண்டோரைச் சுற்றி தலைகொத்தும் மனிதர்கள் ஏராளமாய் திரிகின்றனர். தான் வென்றதைக்காட்டிலும் பிறர் தோற்ற வலி ஆழமான வடுவைக் கொண்டதென புரியாதோர் தலைகொத்தும் ஈக்களை தானே தேடிக்கொள்கின்றனர்.

தேடித் தேடிக் கொணர்ந்து சிறுகச் சிறுகச் சேகரித்த தேனியின் உழைப்பைப் போலவே தனது லட்சியத்தை வெல்லப் போராடும் மனிதர்களின் உழைப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி எனும் நடுநிலையிலா தராசையறுத்து தனது வெற்றியை பிறருக்கும் புரிய அல்லது பிறரும் மகிழத்தக்க அமைத்துக் கொள்வதென்பது ஒரு கலை. தான் வளரும்போதே தன்னோடுள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்தக் கலை கைகூடுகிறது.

ஓட்டப்பந்தயத்திற்கென ஓடும் தெருவில் உடன் நிகராக ஓடுபவன் வீழ்ந்துவிடுகையில் சிரிக்கமுடியாத மன நிலையைக் கொண்டவருக்கு அந்தக் கலையும் புரியும். ஒரு சக மனிதரை எதிரியாகப் பார்க்காததொரு உணர்வு மட்டுமே மனிதத்தையும் வளர்க்கப் பதைக்கும். வெற்றி ஒரு போதை, புகழுக்கான பாடு பொருள். ஆனால் நிலைத்தல் என்பது வாழ்தல். நாட்களை வருடங்களைக் கடந்து வாழ்தலே நிலைத்தல் ஆகும். நிலைப்பதற்கு வெற்றி வெறுமனே போதுமானதல்ல, உடனிருப்போரின் உணர்வை மதித்தலும் நிலைப்பின் பாடுபொருளாகும்.

சிந்தித்துப் பாருங்கள். வெற்றி நிலைப்புத் தன்மைக் கொண்டதல்ல; அது இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் மனிதம் நிலைக்கும். மனிதமுடையோரின் புகழ் வான்கடந்து நிற்கும். காலத்தைக் கடந்தும் பேசப்படும். மனிதம் நிலைப்பின் பாடுபொருள்.

எனவே வெற்றியை எண்ணுங்கள். தனது வெற்றியை மட்டுமே எண்ணாதீர்கள். தேன் என்பது இனிப்பு மட்டுமல்ல, அது இன்னொரு உயிரின் உழைப்பும். எனவே உழைப்பைக் களவாடி இன்பம் கொள்வதைக் காட்டிலும் இனிப்பை வேறெங்கேனும் தேடுங்கள். கடைசியில் அது மனிதம் புரியுமிடத்தில் கிடைப்பதை உணர்வீர்கள்.

வெற்றி புகழைத் தரும், புகழ் சுயநலப் போதையை ஏற்படுத்தும். தேன் கூட போதை கொண்டது. சுயநல போதையை அதிகமாகக் கொண்டது தேன். எனவே தேன் வேண்டாம். வெற்றி வேண்டாம். வெறுமனே புகழ் மீதான ஆசை மட்டும் வேண்டாம். மனிதர் மீதான ஈரம் அந்த வெற்றியைக் காட்டிலும் அடர்த்தியானது. புகழை திரியாக்கி பிறருக்கு வெளிச்சம் தரும் விளக்காய் தன்னை மாற்றிக்கொள்ள முடிபவர்களுக்கு புகழ் எனும் தேனைவிடவும், அதைச் சுற்றியிருக்கும் தேனீக்களின் பசி இன்றியமையாத ஒன்றென்பது புரியும்..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

ம்மா
இறப்பைப் பற்றியே
நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது???

அம்மா இறப்பாள் என்று
சொல்வதையே தாங்கமுடியாத உயிர்
அம்மாவைவிட்டுப் பிரிந்தும்
எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?)

அம்மா சுமந்த மடி
அவள் தாங்கிய கர்ப்பம்
அவள் ஊட்டிய சோறு
அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம்
அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று
அம்மா தெரிந்திருக்கமாட்டாள்,

அவள் மூடிப் படுத்திருந்த கண்களை
நினைக்கும்போதெல்லாம்
நெஞ்சு வெடிப்பதை
அம்மா அறிந்திருக்க வாய்ப்பில்லை,

அம்மா போகாதேம்மா என்று
தடுக்கமுடியாத என் உயிர்ப்பு’
அம்மா எழுந்திரும்மா என்று எழுப்பமுடியாத என் பிறப்பு
எத்தனைக் கொடுமையானது ?

அம்மா இல்லாது நான்
இருப்பேனென்று
எப்படி நம்பிவிட்டாள் அம்மா (?)

அம்மாவிற்கு என்னைப் புரியவேயில்லை
வெறும் சாப்பிட்டால் தூங்கினால் ஆச்சா
அவளில்லாமல் வாழ்வது
வதையில்லையா?

அம்மா இல்லாத தெரு
சுடுகாடுபோல
மனப்பினங்களை எரித்துக் கொண்டிருக்கிறதே,

அவள் இல்லாத இடந்தோறும்
கால்குத்தும் முள்ளாய்
அவளின் நினைவுகள் மட்டுமே நிரம்பிக்கிடக்கிறதே,

அம்மாவைப் பார்க்க ஒரு தவிப்பு
அம்மாவிடம் பேச ஒரு தவிப்பு
அம்மாவை தொட்டுப்பார்க்க ஒரு தவிப்பு என
எல்லாமே உயிர்கொல்லும் வதை, வதை,

அம்மாவைத் தேடி தேடி
குழந்தையில் அழுததெல்லாம் ஒரு அழையா?
இதோ அவளில்லாத வருடங்கள்
கண்ணீரால் நிரம்பிக் கடக்கிறதே; அதைத் துடைக்க ஒரு
மரணம் வந்தாலும் அது கொடிதில்லை,

உண்மையில் –
அம்மாவைத்
தேடும் மனசு வலிப்பதைவிட
உலகில் வேறு வலியில்லை,

அம்மா
அம்மா
அம்மாவென அழும் மனிதர்க்கு
அழுவதைவிட இறப்பது வெகுசுலபம்,

இறப்பொன்று
மூச்சை அடைத்துக் கொண்டு
தெருவில் விழும் பூக்களோடு விழுந்துச்
சிதறுமெனில் –
அது அம்மாவைப் பிரிந்தப்போதாக மட்டுமேயிருக்கும்,

அம்மா எப்படி நடப்பாள்
எப்படி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்
தீராத தீராத அன்பைத் தந்த
அம்மா எங்கே.. ?

அவளில்லாமல் நான் இருந்ததேயில்லை
அதிலும் அப்போதெல்லாம்
அம்மா இல்லாத ஒரு நொடிகூட
நான்கு சுவர்களுக்கு மத்தியில் – என்னோடு
நிரமற்றுக் கிடக்கும்

இப்போதும் அப்படித் தான்
எங்கும் அந்த நிறமற்ற நொடிகள்
கண்பட்ட இடமெல்லாம்
அவளின் நிறமற்ற நொடிகள்,

இருந்தும் அவைகளைச் சுமந்துக்கொண்டு
மரணத்தைக் கண்டு அஞ்சி நிற்கிறேன்;

என் பிள்ளைகள் பாவமில்லையா…. ?
——————————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-5)

4)
கோபம் ஒருவகை விஷம். கோபத்தின் ஒவ்வொரு துளியும் விஷம். உயிர்கொல்லும் நஞ்சு. ஒரு பரம்பரையின் காடழிக்கும் கத்தியைப் போலது. அது ஒரு தீயும். மனதெரிக்கும் தீ. எடுத்து வீசினால் வார்த்தைகளையும் சேர்த்து வாரிக்கொண்டு ஒரு குடும்பத்தையே கொளுத்திவிடும் தீ. ஆனால் தீ ஒரு ஆயுதம். தீயினால் வீடு வெளிச்சம் பெரும். விளக்கினுள் ஜோதியாகும் தீ. அதுபோல் கத்தியும் ஒரு ஆயுதம். கத்தியை வைத்து நஞ்சையறுக்கலாம். கொடிய மரத்தை வெட்டலாம். மரத்தை செதுக்கி சிலை வடிக்கலாம். கோபமும் ஆயுதமே. கோபத்தைப் பயன்படுத்தி நியாயத்தை மீட்டுங்கள். தர்மத்தை நிலைநிறுத்தவேண்டி கோபம் கொள்ளுங்கள். கோபத்தினால் மனிதரைக் கொல்லாதீர்கள். உறவை கோபத்தினூடாக வெறுக்காதீர்கள். மனிதர் அற்று போனால் வாழ்க்கை சாபமாகும். உடன் யாருமிருக்க விரும்பாத் தனிமை கொடியது. கோபத்தினும் பெரிய நஞ்சு அது..

5)
டன், பிரிவு, ஏக்கம், இயலாமை, தோல்வி, துக்கமென என்னதான் ஆயிரம் பிரச்சனைக்கான கரங்கள் வந்து நம் முகத்தில் குத்தினாலும், அவைகளையெல்லாம் தாங்கிக்கொண்டு சிரிக்குமொரு மனசையும் நாம் வைத்துக் கொண்டிராமலில்லை.

அப்படி வைத்துள்ளீர்கள் எனில், மனிதரைக் கண்டதும் மனிதர் அன்பொழுக சிரித்துப் பாருங்கள். சிரிப்பு; அதிலும் அன்பொழுகும் சிரிப்பு நமக்குத் தெரியாமலேயே நமக்கு நிறைய தரும். குறைந்தபட்சம் வரும் துன்பங்களைக் கண்டு உடைந்துப் போகாதிருக்கவேனும் துணிவு தரும்..

சிரிக்கப் பழகுங்கள் உறவுகளே; நிறைவோடு சிரிக்க எனது வாழ்த்துக்களும்..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக