நெருப்புப் பிழம்பிற்கு நடுவே நின்று உடல் கருகாமல் எரிந்துக் கொண்டிருக்கும் வேள்வியை போன்றது ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்தில் எழுதுகோல் பிடித்து நிற்பது.
பரபரக்கும் உலக வாழ்க்கைக்கு நடுவே நின்றுகொண்டு, காணுமிடமெல்லாம் குற்றம் குற்றம் என்று கர்ஜிக்கையில்; கத்தியெடுத்து சீவ முடியாத தலைகளை எழுதுகோல் பிடித்து எச்சரிக்கையாவது செய்ய நினைத்து, எழுதித் தீர்க்கிறேன். என் எழுத்தின் வாசம் இதுவரை என் தெருமுனை தண்டனைக்குரியவனை தொடக் கூட பெரும்பாடு படுகிறது.
புதியவன் புதியவநென ஒதுக்கி ஒதுக்கியே வருடங்கள் பல கடந்து, எழுத்தில் புடம் போட்டேனோ இல்லையோ ‘என் அகல கண்திறந்து குற்றம் எங்கு காணினும் எழுதுகோல் எடுத்து குற்றத்தின் கன்னம் தொட்டு அறைய துணிவு பெறச் செய்தது என் எழுத்து.
ஆயிரம் ஜாம்பவான்கள், கோடான கொடி புத்தக வரவுகள்.., கணக்கிலடங்கா தமிழ்த்தாயின் வார்ப்புகளுக்குமிடையே ‘என்னையும் வித்யசாகரென எழுத்துப் போர் கொள்ள துணிவு தந்தது என் எழுத்து.
வாழ்வில் எதையோ நிச்சயம் சாதித்தே தீருவோமென்று நம்பி நம்பியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்த, எனக்குள்ளிருந்த, எழுத்தாளனை.. கவிஞனை.. இந்த உலகத்திற்குக் காட்டிய வெளிச்சம் என் எழுத்து.
கடவுள் இருக்கிறாரென்றும், குடிப்பழக்கம் தவறென்றும், காதல் மட்டுமே வாழ்வின் முடிவில்லையென்றும், நம்பிக்கை கொள் நட்சத்திரமாவாயென்றும், உண்மையாய் இரு ஒளிவட்டமாய் உன்னை காக்குமென்றும், ஒழுக்கம் கொள் உலகம் உன்னை வணங்குமென்றெல்லாமும் நண்பர்களுக்கும் தம்பி தங்கைகளுக்கும் கடிதமெழுதிக் கொண்டிருந்த வெங்கடாசலத்திற்கு உலகை உறவாக்கி ‘அசையும் தாவரத்திலிருந்து அசையா மலைகள் வரை; சில்லென்ற காற்றிலிருந்து சீரும் நேருப்பு வரை; அழகான நதியிலிருந்து அகன்ற கடல் வரை; மெல்லிய மனிதரிலிருந்து விரிந்து பரந்த வானம் வரை சொந்தமாக்கி, என் கடிதங்களை எல்லாம் கவிதைகளாகவும் கதைகளாகவும் நாவலாகவும் கட்டுரைகளாகவும் மாற்றித் தந்து வித்யசாகரென பெயர்சூட்டி ‘உலகமகா பொறுப்பு கொடுத்தது என் எழுத்து.
உறங்கிக் கொண்டே விழித்திருந்தும், விழி முழுதும் எழுத்துக்களை சுமந்துக் கொண்டும், உன்னும் போதும் உறங்கும் போதும், வேலைக்கு மத்தியிலும், குழந்தையின் அழுகையிலும், குளியலறை ஈரத்திலும் ‘காகிதம் நனைய ‘கொதித்தெழும் எண்ணங்களை எழுதுகோலுக்கும் சுடாமல் எழுதித் தீர்பதுமாகவே என் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பது என் எழுத்து.
கணினியின் ஜால வித்தைகளுக்கு நடுவே வாழும் மனிதர்களுக்கு நாவல் குறுநாவலாகி, குறுநாவல் சிறுகதையாகி, சிறுகதை நிமிடக் கதையாகி; நிமிடமும், அரை, காலென்றாகி விட்ட காலத்திலும், எழுதுவதை தவமாக நினைத்துக் கொண்டு, தன் தமிழ்தாயிற்கு எழுத்துக் காணிக்கை கொடுக்க வெற்றி எனும் சக்தி கேட்டு, ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண இளைஞனின் எழுத்து, என் எழுத்து.
அண்டசராசரம் வரை நீளும் பார்வையில் வீட்டை உலகமாகவும், உலகை வீடாகவும் பார்த்து பார்த்து..
1, சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய் (சிறுகதை)
2, விற்கப் படும் நிலாக்கள் (குறுநாவல்கள்)
3, வீழ்ந்தது போதும்; வாழ்ந்து காட்டு (கவிதை)
4, திறக்கப் பட்ட கதவு (குறுநாவல், சிறுகதை)
5, கனவுத் தொட்டில் (நாவல்)
6, வாயிருந்தும் ஊமை நான் (சிறுகதை)
7, இதோ என் வீர முழக்கம் (கவிதை)
8, சாமி வணக்கமுங்க (ஆண்மிக விளக்கக் கதைகள்)
9, கண்ணடிக்கும் கைதட்டும் ; ஆனால் கவிதையல்ல (கவிதை)
10, பிரிவுக்குப் பின் (கவிதை)
11, வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை (கவிதை)
12, மூன்றாம் உலகப் போர் (சிறுகதை)
13, காற்றின் ஓசை (நாவல்)
என என்னை இத்தனை தூரம் கொண்டு வந்தது என் எழுத்து.
என் உயிரை மையிலிட்டு எழுதத் துவங்கிய என் பயணத்திற்கு முதல் விலாசம் கொடுத்து என் முதல் கவிதையை பிரசுரித்தது “ராணி வார இதழ்.
இடையே நடிகர் குட்டிக்கு நானெழுதிய “நம்பிக்கையின் நலவேந்தன்” என்ற வாழ்த்துக் கவிதை குவைத்திய விழா மலரொன்றில் வெளி வந்து இப்படி ஒருவன் குவைத்தில் எழுத்துக்களை சுமந்து வாழ்கிறேன் என குவைத்திய தமிழர்களுக்கு அறிவித்த நேரம் அதே பட்டத்தை “குவைத் பாரதிக் கலை மன்ற முன்னாள் செயலாளர் திரு.கவிசேய் சேகர் அவர்கள் ‘நடிகர் குட்டிக்கு கொடுத்ததாய் தெரிவிக்க, குவைத்தின் தமிழுள்ளங்கள் என் எழுத்துக்கு பலமூட்ட என் கவிதைகள் ஒவ்வொன்றாய் மேடையேற துவங்கின.
இதற்க்கு இடை பட்டக் காலத்தில் என் எழுத்துக்கு மதிப்பளித்து அவைகளை புத்தகமாக்கி என்னை எழுத்தாளனாய் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ‘ஐயா திரு.ரவி தமிழ்வாணன்’ அவர்கள், அதேநேரம் என் கவிதைக்கு மேடை தந்து என்னை கவிஞனாக மேடையேற்றியது ஐயா திரு.செம்பொன் மாரி கா.சேது அவர்கள். இதற்கிடையே என்னை எழுதத் தூண்டி துணை இருந்தவர்களில் முதலாய் என் தம்பி வித்யாகரனும் இன்னும் பல தம்பிகளும் சக நண்பர்களும் ஏராளம்..
ஆயினும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் பணம் தேடி அலைகையில், பணமெதற்கு எங்களிடம் தாருங்கள் நாங்கள் இலவசமாகவே அச்சிட்டுத் தருகிறோமென கூறி என் எழுத்து பாலத்திற்கு மிக பெரிய பலம் சேர்த்தவர்கள் லியோ பதிப்பகத்தாரான சகோதரி. திருமதி.சந்திரமதி அவர்கள்.
ஆக, மொத்த கைதட்டல்களின் சபதங்களோடும், உதவ தோள் தந்த பலத்தோடும் உலகத்தின் அடையாளங்களில் என் பெயரையும் பதித்துக் கொள்ள புது ரத்தம் பாய்ந்து எழுதியவைகளை எல்லாம் அனைத்து வார இதழ்களுக்கும் அனுப்ப ஆரம்பித்தேன், இரண்டாவதாய்..”நான் வீடு பெசுகிறேனென்ற” கவிதையை வெளியிட்டது “பாக்யா வார இதழ்.
அந்நேரம் தான் நிகழ்ந்தது அது,
ஒரு சின்ன முல்லை கொடிக்கு தன் தங்க வைர வைடூரியத்தாலான தேர் தந்த பாரியை போல, இந்த சிறியவனை பாராட்டி, என் “இதுபோன்ற வரிகள் எல்லாம் மிக கவர்ந்துள்ளன” என மேதகு ‘மூத்தறிஞர் அப்துல் கலாமையா அவர்கள் அவரின் கைப்பட, கையொப்பமிட்டு கடிதம் அனுப்பினார்.
குருடாகவே இருந்து இறக்கப் போகும் ஒருவனுக்கு பார்வையும் கொடுத்து வாழச் சொன்னால் அவன் எத்தனை மகிழ்வானோ தெரியவில்லை, ஆண்டாள் தவத்திற்கு ஒரு கண்ணன் கிடைத்த பொது அவள் எப்படி மகிழ்ச்சியில் உருகி போயிருப்பாளோ தெரியவில்லை, என் இத்தனை காலம் இருந்த என் எழுத்து தவத்திற்கு ஒரு பெரிய அங்கிகாரமே கிடைத்ததென நான் வானத்திற்கும் பூமிக்குமாய் மனதிற்குள்ளேயே குதித்தேன் என்பது மட்டும் உண்மை.
இது என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியல்ல, அந்த மாமனிதர் ஐயா திரு.அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று என ஊரெல்லாம் சொன்னேன். பார்த்தவரெல்லாம் புகழ, குவைத் பத்திரிகை கூட அதை மெச்சுதலோடுசெய்தியில் வெளியிட, என் நிறுவனமெல்லாம் பாராட்ட, இத்தனை தகுதி நம் எழுத்திற்கு இருக்குமா என சிந்தித்து சிந்தித்து, விடவேண்டாம் எழுத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளென பிடித்துக் கொண்டு அதை கொண்டு சேர்க்க மீண்டும் வார பத்திரிகை ஒன்றே என் இலக்கென தேடி ஓடி அலைந்தேன். ஒவ்வொன்றாய் வெளிவர ஆரம்பித்தது.
இப்படி ஒரு சமயந்தானே வேண்டும் எழுதிக் குவிப்போம், உலகின் இயலாமையை தன் எழுத்தால் தீர்ப்போமென எழுதுவதும் தபால் தலை தேடி அலைந்து வார இதழ்களுக்கு அனுப்புவதுமாக இருந்த நேரம் ராணி வார இதழில் தொடர்ந்து சிறு சிறு கவிதைகளாக வர ஆரம்பித்த நேரம், பாக்யாவும் தொடர்ந்து என் சிறுகதைகளை வெளியிட்ட நேரம் “தேவி வார இதழிலும் ஒரு சிறு கவிதை வெளிவந்தது.
மடிந்து வீழும்மரம் கூட விறகாக வீழ, வாழ்ந்து வீழும் மனிதனேன் வெறும் மன்னாவதா? முடியாது. முடியாதெனில் மறுப்பை எப்படி மனிதனுக்கு தெரிவிப்பது? எழுதிக் கொண்டே இரு ‘எழுத்தின் வாசத்தில் ஒரு நாள் அதற்கான அடையாளத்தை மனிதர்களே கண்டு கொள்வார்களென என் இரவையும் பகலையும் எழுத்தாக்கினேன். அதில் ஒரு கவிதை “தினமலரின் வார மலரில் வந்தது.
விடுவேனா, வெறும் எழுதுகோலில் என்னுயிரை மையாய் விடுவேனா, உயிரையும் மையையும் ஒன்றென கலந்து எழுத்துக்களில் குவித்தேன். எழுதிய புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கடை கடையாய் அலைந்தேன். பணம் போட்டு அச்சடித்த பணத்தில் வந்த பணமத்தனையையும் பணமற்று தவிக்கும் “இல்லார்க்கு” கொடுத்தேன்.
என்ன செய்ய.. வேறென்ன செய்ய.. போதாது. இவர்கள் போதமாட்டார்கள். நான் எழுதும் தூரம் வரை ‘எனக்கென்று மட்டுமாய்’ எந்த வார இதழ்களும் துணை வர தயாரில்லை. பன்னிரண்டு புத்தகமெழுதி, படியுங்கள் படியுங்கள் என கெஞ்சி அலைந்துவிட்டு, என்னை மக்களிடத்தில் அடையாள படுத்திக் கொண்டால் மட்டுமே ‘என் எழுத்து உலக தமிழரங்கில் மேடையேருமென புரிந்த நேரம், வெறும் ஐந்தாறு கதைகளும் , எட்டொன்பது கவிதைகளும் மட்டுமே வெளிவந்திருக்க மீதமுள்ள என் உழைப்பு சுமந்த படைப்புகளை என்ன செய்ய? கேள்விகள் இதுவரை முழு பதிலாகவில்லை.
தேடல்களுக்கு பின்னேயே வாழ்க்கை நகர்த்தும் எறும்பிற்கு தான், இன்னொரு எறும்பைத் தெரியும். நானும் அப்படியே என் வாழ்க்கையை தேடலாக நகர்த்தினாலும் என் தேடலை புரிந்துக் கொள்வோரின்றி தவிக்கையில், தவிப்புகள் கூட எழுத்துகளானது.
அப்போது எனக்கெனவே துவங்கினாற் போல் குவைத்தின் சுடும் பாலை நிலத்தில் “தமிழ் டாட் கம்” மற்றும் “குவைத் நீதியின் குரல்” என இரு மாத இதழ்கள் ஒன்றன் பின் ஒன்றாய் துவங்கப் பட்டது. இருவரும் நம் கவிதைகளை வெளியிட்டாலும் நீதியின் குரலின் ஆசிரியர் திரு.விழுப்புரம் ஷாஜி அவர்கள் தோழமையோடு கைகோர்த்தார். என் பிரிவுக்குப் பின்-னென்னும் தொடர் கவிதை பத்து மாதங்களுக்கு தொடர்ந்து வந்து குவைத் தமிழர்களின் பிரிவின் வலியை தெரிவிக்க நானும் ஒருவன் இருப்பதாய் அவர்கள் முன் பறைசாற்றியது.
அதோடு மட்டுமல்லாமல் நம் கனவுத் தொட்டில் நாவல் விமர்சன விழாவில் “வெண்மனச் செம்மல் வித்யாசாகரென” ஒரு விருதையும் தந்து கவுரவித்தது குவைத் நீதியின் குரல்.
என் முதல் படைப்பான “சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்” போல கனவுத் தொட்டிலும் தமிழக நூலகத்திற்கென தேர்ந்தெடுக்கப் பட்டது. முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் வெளியிட்ட எண்பத்தைந்து புத்தகத்தில் கனவுத் தொட்டில் நாவலையும் தெரிவு செய்து.. வெளியிட்டு.. அத்தனை பாத்திரிகையிலும் மற்ற படைப்புகளோடு நம் கனவுத் தொட்டிலும் வண்ணமிகு ஜொலித்தது.
அதற்காக போதுமென ஓய்ந்து போவேனா???? இல்லை இல்லை.. என் இலக்கு இதோடு நிற்பதர்கானதில்லையே. ஆக, கொதிக்கும் ரத்தம் முழுதும் சமூகத்தில் காணும் அத்தனை ஒழுங்கீனங்களும் நெருப்பு ஈட்டிகளாய் வந்து புத்தியை சுட, நாட்கள் அப்படியே நீண்டு கொண்டிருந்த ஒரு தினத்தில், எதையோ எழுதினேன் என்று நினைத்திருந்த தினத்தில், எதற்காக எழுதுகிறோமோ என்றும் வருந்திய ஒரு தினத்தில், எப்படி இவைகளை எல்லாம் என் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என படாத பாடு பட்ட ஒரு தினத்தில், முதுமைக்கும் பெருமைக்கும் உரிய “கலைமகள் இலக்கிய மாத இதழ் கடந்த மே 2009 – ல் நடத்திய அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் நம் கதையான பாவ மன்னிப்பிற்கு முதல் பரிசு தந்து கவுரவித்தது.
மதம் பற்றி பேசுகிறோமே, கடவுள் பற்றி எழுதுகிறோமே உலகம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ, எப்படி எல்லோருக்கும் புரியும் வண்ணம் பாவ மன்னிப்பு குறு நாவலை கொண்டு சேர்பதோ என தவித்த ஒரு படைப்பு, ‘சில எதிர்ப்புகளையும் தாண்டி முதல் பரிசுக்கு தெரிவு பெற்றதற்கான நன்றியறிதல் ஆசிரியர் திரு.கீழாம்பூர் அவர்களுக்கும், தேர்வுக் குழுவிற்குமே உரித்தாகும்.
இதற்கு இடை பட்ட நாட்களில், மலேசிய நன்பனில் கவிதை, ஆங்காங்கே வெளிவரும் சிற்றிதழ்களில் கவிதை, வீட்டிற்கு வரும் கடிதங்களென என் இந்த பத்து வருடத்திற்குமான பலன்கள் ஒவ்வொன்றாய் வந்துக் கொண்டிருக்கையில், ஈகரை தமிழ் களஞ்சியமென்ற ஒரு அரிய சொல்லவொணா சிறப்பு பல மிக்க தமிழ் வலை பகுதி ஒன்றினை தம்பி தமிழன் மணியன் மூலம் அறிந்து, அதில் உறுப்பினராக சேர்ந்து, எனக்கென ஈகரை வலை பகுதியில் “வித்யாசாகரின் பக்கங்களென” ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டு, என்னை மிகையாய் ஊக்குவித்து.. விமர்சித்து.. பாராட்டி.. உலகளவில் என்னை அரிய வைத்த பெருமை ஈகரை குடுமபத்திற்கே சாரும். (ஈகரையை பற்றி முழுமையாய் சொல்ல ஒருநாள் நம் தமிழ் வரலாறே முற்படுமென்பது பாராட்டத் தக்க உண்மை).
இருப்பினும், எங்கு வாழ்கிறோம் நாம்? சுட்ட புண் பல ஆறாத சமூகத்திற்கு மத்தியிலல்லவா நம் வாழ்க்கை நடக்கிறது. பரிசுகள் மகுடமாகலாம் முடிவாகுமா? எழுதத் துடித்த கைகளும், உலகை எண்ணி எண்ணி வாழும் புத்தியும் அடங்கிப் போகுமா? எழுதித் தீர்க்க குருதியில் வீரம் சேர்த்துக் கொண்டது வெறும் பரிசிற்கும் விருதிற்குமா? இல்லையே. வேறென்ன செய்ய –
ஒரு பெரிய லட்சியத்தை வெல்ல சிறிய பல லட்சியம் கொள் என்பார்கள், அப்படி என் படைப்புகளை படிப்போர் மத்தியில் கொண்டு சேர்க்க அனைத்து வார இதழ்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்த நான், லட்சியம் ஒன்றாக இருப்பின் வெல்லும் என உறுதி கொண்டு ஆனந்த விகடனுக்கு மட்டுமே கவிதைகள் கதைகளை அனுப்புவது என முடிவு கொண்டேன்.
அடங்காத உணர்வுகள் அடக்கமுடியாத உணர்வுகள் அத்தனையையும் படைப்பாக்கி ஆனந்த விகடனுக்கு மட்டுமென அனுப்பினேன். இரவும் பகலும் எழுதியதையும் எழுதுவதையும் கணினியில் தமிழாக மாற்றி அலை அஞ்சலில் விகடனிடம் பதிவு செய்தேன். கடந்த வாரம் 07.10.2009 அன்று வெளியான “அம்மாவிற்கு தெரியாத ரகசியமென்ற” இந்த விகடப் பிரியனின் கவிதை ஆனந்தவிகடனிலும் முதன் முறையாய் வெளியானது.
என் வாழ்வின் அத்தனை வெற்றிகளையும் தூர எறிந்து விட்டு.. முன்னே முந்தி கொன்டு வந்துவிட்டது, ஆனந்தவிகடனில் வெளிவந்த என் கவிதை. அதை பார்த்த போது தரை தொட்ட என் ஒரு சொட்டு கண்ணீரில், ‘இந்த பூமியையே நனைக்கத் துணிந்த இம்முதல் வெற்றி என் எழுத்துப் பயணத்தை சற்று கூடுதல் வேகமாக நீட்டிக் கொண்டிருக்க –
எத்தனையோ வருடம் எழுதுகோல் தாங்கி, இதயங்களை உழுது பார்க்க, கொட்ட கொட்ட தூக்கம் தொலைத்து விழித்திருந்த.., புத்தகங்களை காகிதங்களாய் நிரப்பி – உலகின் தூரம் வரை கொண்டு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு சாமனியனை, தன் ஒரு சின்ன அரவணைப்பினால் உலகத்தின் முன்னே என்னையும் கவிஞனென பறைசாற்றிய விகடனுக்கு வார்த்தைகளால் சொல்ல இயலாத நன்றிகளே கண்ணீரின் ஈரமாக எழுத்துகளில் கரைகிறது.
முடிவாய், வணக்கம் சொல்ல கூட பொறுமையின்றி ஆரம்பித்த இந்தக் கட்டுரையை முடிக்கும் முன் ‘என் எழுத்துப் பயணத்திற்கு இன்னொரு துணையாகி என்னை இத்தனை தூரம் படித்துவந்த, என் அன்புள்ளங்களாகிய தமிழ் மக்கள் உங்களுக்கும் விகடனுக்கும், என்னை இத்தனை தூரம் சுமந்து வந்து தாயென வளர்த்த அனைத்து இதர இதழ்களுக்கும் ‘என் கடை வணக்கமும் முழு நன்றியும் உரித்தாகட்டும்.
எந்த நிலைக்கும், தன்னை முழுதாக இழந்திடாத போது இறைவனுக்குள் இருப்பதாகவே உணர்கிறேன். எவர் இழப்பையும் வருத்தத்தையும் தனதாய் உணரும் போது எல்லாம் நானாய் ஆகிறேன். எல்லாம் நானென்று கொண்டதில் எல்லோருக்குமாய் உடைகிறேன். எல்லாருக்குமாய் உடைந்த பாதி பாதிக்கு இடையேயுள்ள இடைவெளியில் தான் முளைக்கிறது என் எழுத்து.
உடைதலுக்கு விளக்கம் தேடியும்; உடையாதலுக்கு வழி தேடவே..
எழுத்தின் பயணமாக….
வித்யாசாகர்

























ஒவ்வொரு வரியிலும் உங்கள் அனுபத்தை பிரதிபலிக்க செய்திருக்கிறீர்கள். தாகம் தீராத அந்த எழுத்திற்கான தேடலே; உங்களை அனைவராலும் தேட வைத்திருகிறது.
கட்டுரையை படிக்கும்போது தன்னம்ப்பிகை எனக்குள் தானாக எழுகிறது. உங்களை போன்று உள்ள கடைகோடி எழுத்தாளனையும் எழுத தூண்டிவிட்டு, இன்று நீங்கள் இவ்வளவு பிரகாசமாய் இருக்க செய்த அந்த கரங்களுக்கும் என் மகிழ்ச்சியை வெளிபடுதுகிறேன்.
கடமையை செய்தாலே பலன் வந்தடையும் என்பது எவ்வளவு உண்மை என்று புரிந்துகொண்டேன். இத்தனை தூரம் கடந்து வந்தும் கர்வமில்லாத கனமில்லாத உங்களின் வார்த்தைகளை பார்த்து; மனது பூரித்து தான் போனது. உங்கள் கலைப்பணி சிறக்க தமிழ் தாய் உடனிருப்பாள்.
எங்கள் வாழ்த்துக்கள் எபோதுமே இருக்கும்…
LikeLike
கடவுள் மீது பாசம் இருப்பின் மனிதன் மீது பாசம் தானாக சுரக்கும், அல்லது, மனிதன் மீது அன்பு கொண்டால்; அது கடவுளிற்கும் ஏற்கப்படும். நீங்கள் இரண்டின் மீதும் அன்பு கொண்ட மனமே என்னை இத்தனை படிக்க வைக்கிறது போல் சரளா.
என் சுயசரிதையை திணிக்கும் எண்ணமல்ல, நான் வந்த பாதையை என்னோடு வருபவர்க்கும் சொல்ல வேண்டும், எனக்காக ஒரு சின்ன உழைப்பை தந்தவர்களை இயன்றளவு நினைவு கொள்ளல் வேண்டுமென்று எண்ணிய இடம்; பதிவிது.
ஒரு வருடம் தாண்டியே உங்களை மட்டும் எட்டித் தொட்டுள்ளது போல். மிக்க நன்றி சரளா, உங்களின் அக்கறைக்கும், அன்பிற்கும், ஆத்மார்த்தமான வாழ்த்திற்கும்.
அதோடு, எனை பார்க்கும் போது; நான் பார்க்கும் உங்களின் கண்களில் தெரியும் அந்த உங்களின் வெற்றியும் இயன்றவரை உங்களால் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது என்பதையும் நினைவில் கூறுகிறேன்.
நிறைய எழுதுங்கள். நிறைய மெச்சப் படுவீர்கள்!! இறைவன் துணை இருக்கட்டும். வாழ்த்துக்கள் சரளா!!
LikeLike