உலகே உலகே காது கொடு
ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு
மனமே மனமே பாடுபடு – படிப்பால்
வாழ்வை வென்று எடு;
படிக்கப் படிக்க வளர்ந்துவிடு
எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு
ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்
கண்ணைத் திறந்தே யொழித்துவிடு;
படிப்பு கொடுக்கும் தைரியத்தில்
பட்டம் சுமந்துக் காட்டிவிடு
படிப்பால் நாளை உலகத்தின்
பசுமைப் போற்ற முயற்சி யெடு;
சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்
வீடு போனால் போனதுதான்
படித்து உழைத்துப் பெற்றக் கல்வி
ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;
மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை
கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –
என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்
எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே;
பாடம் சுமக்கும் மாணவரே
காலம் சுமக்க வாழ்பவரே
உடம்பை சுமக்கும் நத்தைப்போல்
எம் தேசம் சுமந்து நடப்பவரே;
உறங்கா கடலின் அலைபோலே
உழைத்து உயரும் மழலைகளே
விரிந்த வானக் குடைபோலே
மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;
மாறும் மாறும் உலகமெலாம்
மாற்றிப் போடப் படித்திடுவோம்
மாறுதல் காணும் ஒருதினத்தில்
நல்லோர் வாழக் கற்றிடுவோம்!
———————————————
வித்யாசாகர்
கிட்டத்தட்ட நூற்றி முப்பத்தாறு குழந்தைகளின் கல்விப் பொறுப்பை ஏற்று, அவர்களின் எதிர்காலப் பிரகாசத்தின் மூலம் நாளைய தலைமுறையின் வரலாற்றையே கல்விப் பாதையில் மாற்ற முயன்றுவரும் நட்பு நிறை அன்பர் திரு. ஜான் பெஞ்சமின் என்பவர் அக்குழந்தைகளுக்கு வேண்டி ஒரு பாட்டமைக்க வேண்டுமென்றும் அதற்கு ஒரு பாடல் எழுதித் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டமைக்கிணங்க எழுதிடியது. பெருமதிப்பிற்குரிய அம்மா ஜானகி பாடவுள்ளார் என்பது சிறப்பிற்குரியது.
இப்பாடல் அவருக்கும், அக்குழந்தைச் செல்வங்களுக்குமே சமர்ப்பணம்!
LikeLike
ஓ அப்படியா..மிகவும் அறிய செயல்.
மாணவர்களுக்கு உரிய மிக அருமையான பாடல் இது.
நல் வாழ்துக்கள்!
LikeLike
நன்றி உமா இதை மெச்ச ஒரு ஆசிரியையான உங்களுக்கே முதலிடம் உண்டு. முடிந்தால் மாணவர்களுக்கு படித்துக் காட்டவும். அவர்கள் உணர்கிறார்களோ. எத்தனை உள்வாங்குகிறார்கள் என்று பார்க்கவும். மிக்க அன்பும் வணக்கமும்!!
LikeLike
குழந்தைகளுக்கான படைப்புகள் குறைந்துவரும் நாளில்
அழ. வள்ளியப்பாபோல் ஆகும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்..!
LikeLike
நன்றி ஐயா. வெறும் மண்ணாகவே இருக்கிறேன். சிற்பிகளே நம்மைச் சிலையாக்கிப் போகின்றனர்.
நன்றியனைத்தும் அத்தகையோரையேச்சாரும்..
LikeLike
இது ஒரு குழந்தை பாடிய தாலாட்டு
நன்றாக இருக்கிறது.அண்ணனின்
பரந்த மனசு இன்னும் பெரிசா படரனும்
அதற்கு கோடி ஆண்டுகள் வாழ இறைவனை
வேண்டுகிறேன்.
LikeLike
//கோடி ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்//
தாயின் நிகரன்பு தங்கையினதும் எனும் நம்பிக்கையே என் எழுத்துப் பயணத்தின் முதல் புள்ளியும் மூலப்பொருளுமானது சுகந்தினி. மனிதனாக வாழவே நினைவு தெரிந்த நாளிலிருந்து முயற்சித்தும் கற்றுமே வருகிறோம். முழு மனிதனாய் வாழ்வதொன்றே மரணத்தின் முன்னான பெருலட்சியம். அதற்கிடையில் இதுபோன்ற என் அன்புத் தங்கையின் அன்பில் திளைப்பேனெனில் அதென் வாழ்வின் கூடுதல் பேறு.
மிக்க அன்பும் நன்றியும்மா…
LikeLike