19) என் தேசம் தூயதேசம்…

ரு தேச வளர்ச்சி என்பது ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பதாய் இருக்கவேண்டும். ஒரு பாமரன் படித்து மேதையான கதை அந்த தேச வளர்ச்சியின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கவேண்டும். அரசியல் சட்டங்களும் அரசியல் வாதிகளின் போக்கும் மக்களின் நலன் கருதி அமைந்திருக்கவேண்டும். அப்படியிருக்கிறதா நம் தேசம்? எனும் கேள்விதாங்கிய கவிதையிது.

தலைப்பு ‘என்’ தேசம் தூயதேசம்..

ம் அப்போதெல்லாம் என் தேசம் தூயதேசம்..

மனிதர்கள் அன்றெல்லாம் மழைபெய்யும்
ஈரத்தின் வாசம்போல் மனதிற்கு
ஈர்ப்பாக வாழ்ந்திருக்கின்றனர்;

பிறருக்குக் கொடுப்பதும் பிறரை மதிப்பதும்
உயிர்விடும் செயலிற்கரிய –
மனிதரின் மாண்பாக விளங்கியிருக்கிறது;

விலங்குகளுக்கு மட்டுமே பயந்து
வேலியமைத்தோம், மானம் மறைக்கவே ஆடையுடுத்தினோம்
தேவைக்குட்பட்டே வாழ்தலிருந்தது;

வேற்றுமொழி திணித்துப் பேசத்
தெரிந்திருக்கவில்லை, வேற்று மனிதராய் யாரையும் பிரிக்க
அவசியப்படவுமில்லை;

விவசாயம் சுயமாக நடந்ததில்
வாரி மறைக்கவோ, உழைப்பின்றி உயிர்கொள்ளும் நோயுறவோ வாய்ப்பேற்பட்டிருக்கவில்லை;

தானம் பரிவு ஒழுக்கம் உண்மை
தைரியம் தெளிவு வேகம் வரலாறெல்லாம்
உணவு மறுக்கப்பட்டாலும் பாடத்தில் போதிக்கப் பட்டது;

இப்போது நாங்கள் கால்வைத்த தேசம்
களங்கப் பட்டுப் போனது.
ஒரு வயிற்றிற்கு சோறுகிடைத்தால் போதும்
வாயடைத்து ஒடுங்கிப் போகிறோம்;

வேலையில் திட்டினாலும் பயம்
வெளியில் திட்டினாலும் பயம்
வெள்ளைக் காரனை விடுத்து,
பெற்றக் குழந்தை முறைத்தால் கூட பயம்
பயம் விழுங்கிய மிச்சத்தை
உயிர்போனபின் மட்டும் அசட்டையாகப் பிணமென்கிறோம்;

யார் உண்டார் உறங்கினார் உயிர்விட்டார் எதற்கும் வருத்தப் படாத
நாங்கள் வாழும்தேசம் மட்டும்
எப்படியோ வல்லரசு தேசமாகிறது;

இதலாமென்ன –
சுதந்திரம் அன்று எம் மூச்சாக இருந்தது
விடுதலையை மட்டுமேப் பேச்சாகப் பேசினோம்
அந்நியன் அவமதித்த இடத்திலெல்லாம்
ரத்தத்தை வாரியிரைத்தோம்;

ஆனால் உயிர்பல விட்டுப் பெற்ற தேசத்தில்
இன்றும் முழு விடுதலையில்லை
சுதந்திர எம் பேச்சிற்கே இல்லை
ரத்தத்தை வாரியிரைக்கிறோம் உலகத்தின் கண்களில், ஆனால் அடிபட்டவன் அவன்; நாங்களல்ல!

நாங்கள் இதோ ஜனநாயகக் கொடியேத்தி
மதம் கலந்த மிட்டாய் தின்போம்,வாங்கிய லஞ்சப் பணத்தில்
சேலை வேட்டி இனாமளிப்போம், எதைக் கட்டியும் எதை இடித்தும்
வரலாற்றில் எம் பெயரைத் தினிப்போம், எவந் தாளியறுத்தாவது
எங்கள் ஊரின் மிராசென்று பேரெடுப்போம், இருட்டை மதுவில் கலந்து
எம் இனத்தையே குடிப்போம்!!

என்  தேசம் அன்று தூய தேசம்..
—————————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to 19) என் தேசம் தூயதேசம்…

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி அய்யா. நான் எழுதாத நாட்கள் என் வாழாத நாளென்பேன் அதுபோல், நீங்கள் இங்கு எழுதும் நாட்கள் எனை அங்கீகரிக்கும்’ அந்த நான் கேட்ட, ஒற்றை இதயமென்று எண்ணத் தோன்றுகிறது…

      நன்றியும் வணக்கமும்!

      Like

  1. Latharani's avatar Latharani சொல்கிறார்:

    அருமையான கவிதை வித்யா .

    //விலங்குகளுக்கு மட்டுமே பயந்து
    வேலியமைத்தோம், மானம் மறைக்கவே ஆடையுடுத்தினோம்
    தேவைக்குட்பட்டே வாழ்தலிருந்தது;//

    உண்மைதான் இப்போதெல்லாம் விலங்குகள் நம்மை மனிதனிடமிருந்து காத்துக்கொண்டிருக்கிறது…. மனிதனுக்கு பயந்தே இப்போதெல்லாம் தாழ்ப்பாள் இடுகிறோம்… பூட்டு பூட்டுகிறோம்…. காட்டுமிரண்டியாயிருந்த காலத்தில் மனிதன் தேவை உணவும் துணையும் மட்டுமே வாக இருந்தது. இப்போதோ … கண்ணில் படும் பொருளெல்லாம் தனதாக்கிக்கொள்ளும் பேராசை பெற்ற பேய்த்தனம் குடிகொண்டுவிட்டது மனிதனிடத்தில்…அதனால் …. விலங்குகளை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு மனிதனிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்கிறோம் .

    //யார் உண்டார் உறங்கினார் உயிர்விட்டார் எதற்கும் வருத்தப் படாத
    நாங்கள் வாழும்தேசம் மட்டும்
    எப்படியோ வல்லரசு தேசமாகிறது;//

    இது அடுத்த வீடு பக்கத்து வீட்டு மனிதர்களுக்கு மட்டுமல்ல…. நம்மைக் காக்க வேண்டிய அரசாங்கமே இப்படித்தான் இருக்கிறது… பசியோ பஞ்சமோ…. யாருக்குக் கவலை? எனக்கு மட்டும் பதவியிருந்தால் போதுமென்று பதவி வெறிபிடித்த மனித மிருகங்கள் மட்டுமே நம் தேசத்தில் … தலைமைப்பதவியில்… i

    //பெற்றக் குழந்தை முறைத்தால் கூட பயம் //-

    ஆசை எப்போது மனிதனிடத்தில் துளிர்விட்டதோ அப்போதே பயமும் கூடவே சேர்ந்து வளர்ந்துதானே விட்டது…. அருமையாகச் சொல்லியுள்ளீர்….குழந்தை முறைத்தால் கூட பயம்

    //எதைக் கட்டியும் எதை இடித்தும்
    வரலாற்றில் எம் பெயரைத் தினிப்போம், //

    அருமையான கவிதை….அர்த்தம் மிகுந்த கவிதை… !

    கவியரங்கில் வாசித்த கவிதை… பாராட்டுக்கள்….
    மீண்டும் படிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி !

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      எழுதியவை புரியாவிட்டாலது என் குற்றமென்று எண்ணி நோகையில்; எழுதியதன் அர்த்தம் அல்லது காரணம் அல்லது தேவையை அதிகரிக்கிறது தங்களின் புரிதலும் வார்த்தையும்;

      நன்றிக்குரியவைத் தோழி!

      Like

  2. Latharani's avatar Latharani சொல்கிறார்:

    எல்லாமும் எல்லோருக்கும் புரிந்துவிடாது வித்யா. தங்கள் வருத்தம் வீணானது. படிப்பவர்களின் அறிவு முதிர்ச்சியும் மனமுதிர்ச்சியும் பொறுத்தது. தங்கள் கவிதைகளில் கருத்தாழம் மிக அதிகம். படிக்கப் படிக்க புரிந்து கொள்வார்கள்.

    Like

  3. sangili's avatar sangili சொல்கிறார்:

    en ullam ninaitha thellam un kaviil ullathu nandrikal pala

    Like

பின்னூட்டமொன்றை இடுக