26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)

வா..
சிப்பி திற
முத்து எடு
உப்புக் குளி
முக்கி கடலில் மூழ்கு
உலகின் நீளத்தை நீருக்குள் தேடு
வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள
அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு
எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி
எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்..

முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி
விதவை’ கொடுமை; பொட்டும் பூவும் வை; பேராசை யழி
பெற்றோர் இல்லையெனினும் அவர் பெரியோரெனில் வணங்கு
பசி என்று நின்றால் பிழைக்க வழியை அமை
ஏழ்மையில் தவித்தால் எறும்பின் அளவேனும் உதவு
இயலாமையில் உயிரும் கொடு;
நினைத்தால் எதுவும் முடியும், எதையேனும் செய்..

உதவியோரை உயிருள்ளவரை நினை
நன்றியில் பிறப்பைக் காண்பி
உறவென்று ஒவ்வொரு உயிரையும் மதி
மனதை அன்பால் நிறை
அண்டம் முழுதும் உன் மனதை செலுத்து
அடிமைத்தனம் அறு
தீண்டாமையை பார்வையிலிருந்தும் விலக்கு
எல்லோருக்கும் எல்லாமும் வேண்டுமென புரி
விட்டுக் கொடு மனதை விசாலமாய் வை
எதையும் பிறர் நன்மைக்கென்று செய்
முயற்சித்தால் எல்லாம் முடியும்; எதற்கும் தயங்காதே’ எதையேனும் செய்..

நல்லதை எதுவென்று உணர்
பின் நல்லதையே எண்ணத்தில் நிறை
நல்லதைப் பற்றியே பேசு
நல்லதற்கே உன் அத்தனை நடத்தையையும் பழக்கு
நல்லோரிடத்தில் இருப்போரும் நல்லவராவர்
தீமை உலகை அழிக்கும், நன்மை தீமையிலும் நமை காக்கும்
எனில் நல்லோராக –

கொள்ளை விடு
கொலை குற்றமெனில்’ சிறு உயிரையும் மதி
பசிக்கு மட்டுமே உணவை உண்
பசி பொறு; வயிற்றை அளந்து வை
வார்த்தைக்கும் வரையறை தேடு
பேசுவதில் புரிதலும் புரிந்ததை பகிரவும் செய்
பலத்தை அவசியத்திற்கு மட்டுமேக் கொள்
வீரம் எதுவென உணர்’
தைரியம் உயிர்விடும் வரை கொள்
எதிரி உனக்குள்ளே அற்றுப் போக நட
யாரையும் மன்னி
மனிதன் மன்னிக்கத் தக்கவன்
உயிர்கள் மன்னிக்கவும் காக்கவும் தக்கது புரி
யாராகவும் பாவணைக் கொள்ள மறு
நீ நீயாக வாழ் உன் நாக்கை உணர்வை நம்பு
உடலின் தேவை மனதின் தேவை எதுவெதுவென அறி
எங்கும் எதிலும் மனிதன் நீக்கமற நிறைந்தவன் –
நிறையத் தக்கவன் –
அது எப்படி என்று உனக்குள் தேடிக் கண்டுபிடி;

உலகத்தை உன் எண்ணத்தோடு சேர்
காற்று மழை வானம் மண் நெருப்போடு நீயும் மனதால் சேர்ந்துகொள்
முடியும்

முடியும் என நினைத்தால் எல்லாம் முடியும்
முயற்சி செய்
நம்பு
தியானி
மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே நினை

ஒன்றை செய்துமுடியும் வரை –
சிந்திப்பது வேறினை வெறு;

உன்னால் எல்லாம் முடியும்; எதையேனும் செய்…
————————————————————————————-
வித்யாசாகர்

வாழ்த்துக்கள்: இனி வரும் காலம் எல்லோருக்கும் நன்மையைப் பயக்கட்டும். 2012 சிறந்து விளங்கட்டும்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to 26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)

  1. Umah thevi's avatar Umah thevi சொல்கிறார்:

    அருமை! அருமை! மிக அருமை!!…மிகவும் நம்பிக்கை, உற்சாகம் ஊட்டும், அருமையான வாழ்வியல் தத்துவங்கள்.
    உங்களுக்கும் எனது அன்பான 2012 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
    சகல ஐஸ்வரியங்களையும் பெற்று நீடுழி வாழ்க!!

    Like

  2. nathnaveln's avatar nathnaveln சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக