“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..

இணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும்

இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ்

இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை

நேர்காணல் கீழுள்ளவாறு..

1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன?

இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு இச்சமூகத்தின் உள்ளடக்கமான நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவேனும் பொறுப்பென்பது என் குற்ற உணர்வு.  இதன் வழி; ஒரு படைப்பாளி ஏழ்மை குடும்பத்தில் பிறந்து மெல்ல மெல்ல உயர்நிலையை அடைகையில் அவனின் பார்வை என்றும் இச்சமுதாயத்தின் வளர்க்கப்படவேண்டியவர்களின் மீதிருக்கும் என்பதால், இக்கதையில் வரும் வெண்மதியையும் ஏழ்மைக் குடியில் பிறந்தவனாகச்  சித்தரித்து, அதன் வழி பல சிக்கல்களை ஏற்படுத்தி, உலகின் மாற்றங்களை செய்ய எண்ணுவோர் அதை தன் வீட்டிலிருந்து துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும், நாட்டை நீ தவறு என்பதைவிட இந்த நாட்டில் அடங்கிய நான் தவறு’ எனவே நான் சரியானால் எல்லாம் சரியாகும் என்பதால் எல்லோருமே முதலில் தன்னை சரிபடுத்திக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக சொல்லும்விதமாகவும் குடும்பச் சிக்கல்களுக்கான நிறைய வழிகளையமைத்து, பின் அவைகளை சரிசெய்து சுபமாக முடியுமாறு இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் சிக்கல்கள் குடும்பத்தில் எவ்வாறு உண்டாகிறது, பின் அவைகளை நாம் எவ்வாறு சீர் செய்யலாம், ஒரு குடும்பம் என்பது எத்தனை நுட்பமானது, பின் அதை எவ்வாறு சிறப்பாக நாம் நடத்துகையில் அது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்குகிறது என்பதை படிக்கும் வாசகர்கள் விளங்கிக் கொள்ளவே குடும்பச் சிக்கல்கள் நிறைய இந்நாவலில் கையாளப்பட்டது.

பொதுவாக என் நம்பிக்கை அதுதான் ‘ஒவ்வொருவரும் தன் திருத்தத்தை வீட்டிலிருந்து துவங்கவேண்டும், வீடுகள் ஒவ்வொன்றாக சரியாகுமெனில்  பின் நாடும் மெல்ல சரியாகும்’.

2)   நடையின் உத்தியில் சில இடங்களில் கவிதைகள் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரிகிறதே? கவிஞர் என்பதால் 19 கவிதைகள் இடம் பெற்றுவிட்டதா?

கவிதை என்பது மனதை ஈர்க்கும் விதை. நல்ல கவிதைகள் நல்லெண்ணங்களின் விதைகள் என்பது எனது நம்பிக்கை. பொதுவாக இக்கால இளைஞர்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் அதிகம் என்றுணர்கிறேன். எனவே புத்தகத்தைப் புரட்டுகையில் அக்கவிதையினால் உள்ளீர்க்கப் படலாம், அல்லது நாவல் படிக்க விரும்பாதோர் நேரமற்றோர் கூட குறைந்தது அக்கவிதைகளை மட்டுமே படித்தாலும் எனது எண்ணத்தின் ஒரு பாதியையேனும் அவர்கள் தன் மனதில் பதியப்பட்டுக் கொள்வார்களென்று நம்பினேன்.

இன்னொரு முக்கியத்துவ உண்மை என்னவெனில், முதலில் எழுதியவை இக்கவிதைகளே. இக்கவிதைகளை மக்களிடம் கொண்டுசேர்த்தால் நல்லெண்ணம் பரவும் என்று நம்பி அதற்காக எழுப்பப்பட்ட அடுத்தடுத்த பல எழுத்துச் சுவர்களே நாவலின் அடுத்த பல பக்கங்களாக நீண்டன என்பதும் மறைக்கவேன்டாத உண்மை.

3)   காதல் – காதலர்கள் கனவு உத்தியாக அமைத்துக்கொண்டதின் காரணம் என்ன?

காதல் ஒரு ரசம். நாவலின் நரம்பை விரைவு படுத்த எடுத்துக் கொண்ட இன்னொரு ஆயுதம். குடும்பம் எனில் வாழ்க்கை எனில் மனிதர் எனில் காதலும் இருக்குமென்பதன் இயல்பினை இங்கும் கையாண்டுள்ளேன். அதிலும் காதலும் வீரமும் செறிந்தவர் தமிழர் எனும் மரபுவாக்கிற்கு விதிவிலக்கல்ல நானும் என்பதையும் இங்கு எடுத்துக் கொள்ளலாம்.

பின்பு கனவு என்று எடுத்துக் கொண்டால், அதுவும் இந்நாவலின் ஒரு ஆயுதமே. நம் வெளியில் தெரியாத இன்னொரு முகத்தின் அகத்தின் வெளிப்பாடு அது. நிறைய உலக விகாரங்களை நல்லவை தீயவைகளைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு பின் வெகு சுருக்கமாக ஆனால் அவன் இப்படிப்பட்டவனென்று சொல்லிவிட்டுப் போக கனவுகள் இலகுவாக கைகொடுத்தன.

அதுபோல் படிப்போருக்குத் தெரிந்து, அந்த பாத்திரத்திற்கு தெரியாமல் சில சம்பவங்கள் கதையில் நடந்துவருகையில் படிப்போருக்கு பதைப்பு கூடுகிறது, அங்ஙனம் பதைபதைத்து, தவித்து, ரசனை கூடி இக்கதையின் பாத்திரங்களைப் பார்க்கையில் இயல்பு அழுந்தப் பற்றிக் கொள்கின்றன மனதில்.

உதாரணத்திற்கு கனவில் பார்த்தவள் போலவே கதாநாயகியும் இருந்தது. ராணியைப் போலவே ரயில் தண்டவாளம் கடந்த அக்குழந்தையின்  தாய் முகம் அமைந்திருப்பது போன்றவைகள்’ கதையின் பாத்திரத்திற்கு வலிமை சேர்த்து கதையை மனதில் அழுத்தமாக பதியச் செய்வதாக அப்போது அந்நாவலை எழுதுகையில் நம்பியிருந்தேன்.

4)   இன்றைய காதல் – காதலர்களின் செயல்பாடுகள் எதிர்கால சமுதாயத்தைச் செம்மைப்படுத்துமா?

முழுதாக நம்புவதற்கில்லை. ஆயினும் காதலால் எத்தகைய மாற்றத்தையும் நிகழ்த்தும் இளைஞர்களை நாம் கொண்டுள்ளோம். முதலில் காதலை ஒரு உணர்வாகப் புரியும் புரிதல் இளைஞர்களிடத்திலும் பெற்றோரிடத்திலும் வேண்டும். அது ஒரு மனதில் ஊரும் உணர்வு. அது பின் எத்தகைய வடிவங்களில் மாற்றம்கொள்ளும், எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்துமெனும் தெளிவை நோக்கிச் சிந்திக்கக் கூடிய பக்குவத்தை நாம் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கொடுத்தல் வேண்டும். காதலால் சாதிமத பாகுபாடு ஒழியும், காதலால் பிறந்த நாகரீகம்போல் சில வெற்றிகள் கிட்டும், அதேநேரம் பெரிய இழப்புக்களும் நேரிடத் தக்க சமுதாயத்தைத்தான் நாம் சமைத்து வைத்துள்ளோம் என்பது புரியவேண்டிய ஒன்று.

எனவே காதல் என்பது யாதெனில் என ஆரம்பத்திலிருந்து நாமெல்லோருமே சற்று இலக்கிய மற்றும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிவிட்டு, நடைமுறை ஆராய்ந்துக் கொண்டு, எதிர்கால நன்மைக் கருதி இடத்திற்கு ஏற்றார்போல் முடிவெடுக்கத் தக்கதாகவே காதல் மற்றும் காதலர்கள் இருக்கையில் முழுமையாக இச்சமுதாயத்தை காதல் செம்மைப் படுத்தும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் செம்மைப் படுத்தும் வலிமைக் காதலுக்குண்டு.

5)   இன்றைய அறிவியல் யுகத்தில் கடவுள் பக்தி என்பது மூடநம்பிக்கை யில்லையா?

இல்லை. அறிவியல் என்பது நம் அவசியத்திற்கு நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு தேடுதல், அல்லது நம் தேவையாக நாம் வலிந்து ஆக்கிக்கொன்டதன் விளைவு. கடவுள் என்பது நமையறியாது நமக்குள் ஏற்படுமொரு தேடுதல். அதில் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள ‘அலசிப் பார்க்கும் சரி தவறு ஆதாரங்களாகவே’ இன்றைய பக்தியும் பக்திசார் இன்ன பிறவும் இருக்கின்றன.

இன்னும் யதார்த்தமாக சொல்வதெனில், அறிவியல் நமக்கு உதவியாக இருக்கும் குழப்பத்தை நீக்கும் அமைதியைத் தருமா எனும் கேள்வியையும், கடவுள் விசயத்தில் புரிதல் ஏற்படுமெனில் உள்ளே அது மனித மாண்பினை சுரப்பிக்கும், நல்லோர் அல்லாரையும் பகுத்தறியச் செய்யும், உள்ளே கருணை சொட்ட சொட்ட அன்பூறிய ஒரு மனதை ஈரமாக்கியே வைத்திருக்கும் எனும் நம்பிக்கையையும்’ ஏற்குமாறே நமக்கான சுற்றங்களும் கற்பிதமும் அதிகபட்ச வாழ்பனுபவமும் உலக ஆதாரங்களும் உள்ளன.

6)   கடவுள் பக்தியை இந்த நாவலில் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரிகிறதே?

ஒரு இளைஞன் அல்லது இளைஞி வளர்ந்து வரும் பதின் பருவத்தில் ஒன்று காதல் குழப்புகிறது, அல்லது கடவுள் குழப்புகிறார். இரண்டிலும் தெளிவை ஏற்படுத்துவது ஒரு படைப்பாளியான என் கடமையாக எண்ணியதன் மூலம், அன்று எனக்குப் புரிந்துள்ள அளவில் கடவுளின் இருக்கு இல்லை பற்றி பேசி, ஒரு நடுநிலை சிந்தனையை நிலைநிறுத்த எண்ணியதன் கசிவு அது.

கடவுள் பற்றி நான் சிந்தித்த பல கோணங்களை எனை வாசிப்போருக்கும் தெரியப்படுத்தி தீர்ப்பினை இது சரியென்று அவரவர் எடுத்துக்கொள்ளத் தக்க அமைக்க எடுத்த முயற்சி அது, வெறும் திணிப்பு அல்ல.

7)   கடவுள் பக்தியைச் சிலர் தவறாக – தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விலக்க வேண்டியதை முற்றும் மிகையாக அனுபவித்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே?

கொடுந்தவறு. கடவுளை நம்பும் மனிதன் மனிதரை வெறுக்கத் துவங்கிய இடத்திலிருந்தே மனிதன் கடவுளாக ஆசைப்படவும் துவங்கியிருப்பானென்று எண்ணுகிறேன். இதுபோன்ற கோளாறுகள் எல்லாமே நாம் உருவாக்கியுள்ள ஏற்றத் தாழ்வுள்ள சமுதாயத்தின் பின்விளைவுகள் மட்டுமேயன்றி வேறில்லை. தின்பதற்கு சோறில்லாதவன் திருடிப் பிழைக்க பயந்து காவியுடை தரித்துக் கொண்டது நம் மேல் நாமேயிட்டுக் கொண்ட சாபமன்றி வேறில்லை.

எல்லோரும் சமமென்று மனிதரை மனிதர் மதிக்கத் துவங்கும் நாளில் இதுபோன்ற அவலங்கள் தானே நீங்கிப் போகும். என்றாலும், அதுவரை இதுபோன்ற தீய சக்திகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கடவுளை மனிதரிடம் தேடுவதை விட்டுவிட்டு தன் ஒழுக்கத்தின் மூலம் தேடுவது பயனளிக்கலாம்.

8)   படைப்புகளின் எழுத்தின் மூலம் விபச்சாரத்தை ஒழிக்க முடியும் என்று தாங்கள் கருதுகிறீர்களா?

ஒரு விதையில் நூறு பூ பூக்கும். நூறில் ஐம்பதேனும் மீண்டும் விதையாக மண்ணிலூன்றும். ஐம்பதில் ஐயாயிரமேனும் பூவாக மலரும், அவைகள் காய்த்து மீண்டும் விதைகளாகலாம், விதைகள் விருட்சமாகும் பட்சத்தில் கனக்குமொரு காடு ஒரு ஒரு விதைக்குள்ளும் அடங்கியுள்ளதைப் போன்று; ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் இச்காமுதயத்தின் மாற்றங்கள் அடங்கிக் கிடக்கின்றன. இவ்வுலகின் முடிவு ஒருவேளை நாளை எழுத்துக்களாலும் தீர்மானிக்கப் படலாம் என்பது என் தொலைதூரப் பார்வை.

பின் இதில் விபச்சாரத்தை ஒழிக்க வழியெங்கே எனில்; எரிவதிலிருந்து ஒன்று பஞ்சினை அகற்றவேண்டும் அல்லது தீயை அணைக்கவேண்டும். என் பணி இந்நாவலில் விபச்சாரத் தீயை அணைப்பதில் முக்கியத்துவம் கொண்டிருந்தது.  ஊசியை பிடுங்கினாலும் நூலைப் பிடுங்கினாலும் ஒரு கலாச்சாரம் தவறான பாதையில் தைக்கப்படுவதை நிறுத்திவிடலாம் என்று எண்ணினேன். விபசாரத்தை அணுகும் மனசொன்று வாசிக்க வருமாயின் தீயென சுட்டு விலகி கைவிரித்துப் பிடித்துக்கொள்ளும் பிறரையும் என்றெண்ணினேன். யாரோ எங்கோ ஒருவரேனும் படித்து பதறிப் போய் தன்னை சரிசெய்துக் கொள்ள எண்ணினால்; அந்த ஒரு விதையிலிருந்து நாளைய நல்லதொரு சமூக மாற்றத்திற்கான காடு பரந்து விரியாமலாப் போகும்?

9)   விபச்சாரம் தொழிலாக – பாதுகாப்பானத் தொழிலாக அங்கிகரிக்க வேண்டும் என்று போராடும் பெண்களையும் தாங்கள் சாடுவதற்கானக் காரணங்கள் யாவை?

அது முதலில் பெண்களுக்குப் பாதுகாப்பானதில்லை என்று அழுத்தமாக உணர்வுப்பூர்வமாக நம்பியதால். நிறைய ‘விபச்சாரம் குறித்தும் அதை ஏற்றுக் கொள்ளல் குறித்தும் ஆழமாகச் சிந்தித்ததால். அங்ஙனம் தாம்பத்யம் ஒரு தொழிலானால், வாழ்வின் ரசம் குறையும், கட்டுப்பாடு தகர்க்கப்படும், விலங்கின் மூர்க்கம் அதிகமாக புத்தியிலேறும், காதல் மெல்ல ஒழிந்து காமம் விற்பனைப் பொருளாகும், குடும்பத்தின் அர்த்தம் ஏதுமற்றவையாகி வெறும் உண்ணல் உறங்கல் புனர்தலோடு வாழ்க்கை நின்று போகலாம். இதில் மிதிபடுபவை பெண்மையாகவே மிஞ்சுமொரு சூழல் நம் சமூகத்தில் பின்னிப் பிணையப்பட்டுள்ள பலதைப் பற்றி சிந்திக்கையில்’ கட்டுப்பாடான வாழ்க்கையே நம் தரத்தை உயர்த்துவதாகவும், பெண்களுக்கு நேரும் இழிசெயல்பாடுகளிலிருந்து  பெண்களை காக்கக்கூடுமென்றும் மரியாதைப் படுத்துமென்றும் எண்ணுகிறேன்.

அதேநேரம், உடல்மொழி குறித்த, உடல்கூறு சம்மந்தப்பட்ட, ஆண்பெண் எனும் இருவேறு பிறப்பின் மாற்றம் வேறுபாடு மற்றும் தேவைகள் குறித்த பாடங்கள் காலத்தின் அணுகுமுறையொத்து எல்லோருக்கும் புரிதலோடு அமையுமெனில்; வறுமை நீங்க வழிவகுக்கவோ அல்லது வறுமைக்கான தொழில் வேறு உடலுக்கான பசி வேறென்பதை நம்மால் எல்லோருக்கும் புரியப்படுத்த முடியுமெனில்; காமம் ‘விலைபோகுமிடத்து நிகழும் விபச்சாரமெனும் வியாபார நிலை அற்றுபோய், அது வாழ்வில் ருசிக்கும் காதலாக கணியலாம்..

10)           எளிமையாகச் சம்பாதிக்க விபச்சாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தொழில் செய்யும் பெண்கள் அதிகரிக்க யார் காரணம்?

அப்பெண்களை தெருவில் நிற்கவைத்த நாம் அனைவரும் காரணம். நம் சமுதாயம், நம் கலாச்சாரத் திரிபு, நம் நகர்தலின் ஊடையில் வந்துவிட்ட மூட பழக்கவழக்கங்கள், எளிய வழியில் மிடுக்காக வாழ எடுத்த பிரயத்தனம்,  தன் தேவையை தனக்குச் சாதகமாக அமைத்துக்கொள்ள மனிதன் பட்ட  வரம்புமீறிய ஆசைகள், பின் உழைக்க மறுத்தவை, பிறர் மனை நோக்கல், பொறாமை, சுயநலம் என எல்லாம் சேர்ந்து மொத்தமாக நாம் பண்பு தவறி வாழ்ந்துவிட்டதன் சாட்சியங்களே நம் பெண்கள் விபசாரத்தை கையிலெடுத்துக்கொண்டதும் அவர்களை நாம் அத்தொழிலுக்கு உந்தியதும்.

11)            எளிமையாகச் சம்பாதிக்க விபச்சாரம்தான் சிறந்த வழியென்று விலைமகளிரே பேட்டிகளில் துணிந்து சொல்கிறார்களே?

தெரியாதவை தானே புதிராக இருக்கமுடியும். எளிதில் காணக்கிடைக்காதவை தானே அதிசயமாகி விடுகிறது. தனக்குத் தெரிந்த ஒன்று இலகுவாக இருப்பதில் பெரிதாகப் படுவதில் ஆச்சர்யமொன்றுமில்லையே. ரோஜா மட்டுமே வாசனையாக இருக்கையில் மல்லியை நுகர்ந்தால் தானே ஆம் இதுவும் நல்ல வாசமென்று புரியும். ஒரு கிணற்றுக்கு உள்ளேயே இருக்கும் தவளை அந்த கிணற்றை உலகமாக நினைப்பதில் தவறென்ன உண்டு? அதை வெளிக்கொண்டுவந்து உலகத்தைக் காட்டி, இதனால் இது விளைவு, இதனால் இது வலிக்கிறது, இதனால் இது சிறப்பு, இதனால் இப்படி நல்வழி அமையுமென்று நல்வழியை காட்டும் பொறுப்பு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தைச் சார்ந்தது என்பதே என் வலி.

12)            விபச்சாரத்தை ஒழிக்க வேண்டியது யார் கடமை?

பூவில் முள் விழுந்தாலும், முள்ளில் பூ விழுந்தாலும் பூவின் இதழ்களே கிழியும் என்பர். அதுபோலொத்து பெண்கள் எங்கிருப்பினும் அவர்களுக்கே வலிக்குமொரு சமுதாயத்தை படைத்தவர் யார்? ஆணும் பெண்ணுமாக சேர்ந்த நாம் தானே? நம் சுற்றமும் நாம் உருவாக்கிய சமுதாயமும் தானே?

அப்படிப்பட்ட அந்த சமுதாயமும், அந்த சமுதாய பிரதிநிதிகளாக நியமிக்கப் பட்டுள்ள அரசியல் அமைப்புக்களும், அந்த அமைப்பினை சரியாக தேர்வுசெய்து அதன் பலத்தினால் மெல்ல யாருக்கும் வலிக்காமல் விபச்சாரத்தை அவசியமற்ற ஒன்றாக ஆக்கத் தக்க வலிமையான பண்புநிறைச் சூழலை நம் சமூகத்தில் மலரச் செய்யும் கடமை நம் செயல்பாடுகளுக்குரியதன்றி வேறில்லை.

13)             நாம் சார்ந்திருப்பது ஒன்று குடும்பம். மற்றொன்று சமூகம். இன்று இரண்டிலும் சகித்துக்கொண்டுதானே வாழ வேண்டியிருக்கிறது?

உப்பைத் தின்றவர் தண்ணீர் குடிக்கத் தானே வேண்டும்? இரண்டையுமே ஆள்வது நாம் தானே? சகித்துக் கொள்ளும் இந்த நிலைக்கு எப்படி உள்வந்தோமோ அப்படி கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நமை மாற்றி நல்லதொரு சமநிலைக்குப் போகவேண்டியதும் நம் பொறுப்புதான்.

14)             ஒரு படைப்பாளராகச் சொல்லுங்கள்… வருங்கால சமுதாயத்தில் விவாகரத்து அதிகரிக்குமா? குறையுமா?

காதல் மனங்கள் ஆங்காங்கே புரிதலோடு நடந்துவருகின்றன. இழுத்துக் கொண்டு ஓடுவது குறைந்து புரிந்து ஏற்றுக் கொள்ளும் மனசு நிறைய பேருக்கு வந்துள்ளது. ஆண்பெண் உறவுமுறை நட்பு ரீதியாக நெருக்கம் கொண்டுள்ளது. தொட்டால் காதல் பார்த்தால் காதல் கரையொதுங்க ஆரம்பித்துள்ளது.

அதுபோல், படிப்பு வேலை சம்பாத்தியம் சாதனையென உலகளவிற்கு விரிந்தும் அதேநேரம் நாடு மாநிலம் ஊர் குடும்பம் சுயம் என மனிதன் சுருங்கவும் ஆரம்பித்துவிட்டான். ஒரு வீட்டிற்குள் அம்மா மனைவி குழந்தை என்று சந்தோஷம் ஒரு கட்டுக்குள் ஒரு வட்டத்திற்குள் அடங்கிவிட்டது. எனவே எதையும் ஏற்கப் பழகிவருவதால் எதுவாயினும் சகிக்கமுடிவதால் மாமியார் மருமகள் மாறி அம்மா மகள் முறை வந்து அக்கம்பக்கத்து கவலை குறைந்து தன் வாழ்க்கை தன் வேலை என்று மட்டுமே நம் வாழ்தல் சுயநல வட்டத்திற்குள் அடங்கிவரும் இந்நிலையில் விவாகரத்திற்கான ஊக்கமும் அவசர அல்லது நிர்பந்தத் தனமான தேவையும் இனி வெகுவாகக் குறையலாம்

விவாகரத்து தேவைப்படாதளவிற்கு புரிதலை ஏற்படுத்தி, அவசியமெனில் விட்டுக்கொடுத்துக் கொள்ளத் தக்க மனநிலை பரவலாக உள்ளதால், நட்புரீதியாக உயர்ந்து இருபாலருக்குமுள்ள பாகுபாடு மனப்பான்மையை குறைத்துக்கொள்ள, பொறாமையெனும் தீவினையை அறுத்துக்கொள்ள முடிகிற இவ்விளைய சமுதாயத்திற்கு விவாகரத்தின் தேவையும்  இனி குறையும்.

அதேநேரம், அவசியப் பட்டால் சட்டென விலகிக் கொள்ள மனதைரியமும், அழுத்தமும், சாதுர்யமும், உடனே தூக்கியெறியும் மனதும் கூட இவர்களுக்கு உண்டு. அங்ஙனம் சட்டரீதியான ஏற்பாடுகளும் ஏற்பாடுகளை இலகுவாக அறிந்துகொள்ளும் வழிவகைகளும்  கைக்கெட்டும் தூரத்திலேயே உண்டென புரிந்துவிட்ட மனப்பாங்கு நம்மிடத்தில் நிலவுவதால் இனி விவாகரத்தும் குறையுமென்றே எண்ணுகிறேன்.

குறிப்பாக சுதந்திரமில்லா நிலை தான் வெளியே பறக்க ஆசையை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போதைக்கு ஓரளவு சுதந்திரமாக எதையும் சிந்திக்கும் தீர்மானிக்கும் நிலைக்கு நாம் சமபங்காக வந்துள்ளோம் என்பதால் விவாகரத்தின் பெரிய அவசியமெல்லாம் இனி பிற்காலத்தில் இருந்துவிடாது என்று எண்ணம்.

15)            விவாகரத்தால் ஒருவர் சாதிப்பது என்ன? இழப்பது என்ன?

விவாகரத்தின் தேவை குறித்தே சாதனையும் இழப்பும் எதுவெனக் கருதப்படுகிறது. பொதுவில், சாதிப்பது சுதந்திரம் அல்லது மனஉளைச்சல் எனில், இழப்பது நரக வாழ்க்கயை அல்லது மனிதத்தையாக யிருக்கலாம்!

16)            விபச்சாரிகள் பற்றிய கருத்தோட்டங்கள் கனவு உத்தியில் இடம் பெற காரணம் என்ன? விபச்சாரத்தை ஒழிக்க முடியாது என்பதாலா?

அது ஒரு களம். கனவு மூலம் சொல்வதை ஒரு உத்தியாகக் கருதிய மனப்போக்கு அது, மற்றபடி உள்நோக்கமெல்லாமில்லை. எழுத்தை கூர்மிகு ஆயுதமாக நம்புபவன் நான். கனவு அதற்கு மையாக விடப்பட்டது அவ்வளவே.

அதேநேரம், விபசாரத்தை மேன்மை படுத்துவதும் ஒழிப்பதும் இரண்டுமே ஒரு நாளைய திடீர் நிகழ்வு ஒன்றுமல்ல. அதேநேரம் எப்படி உள்ளே வந்தோமோ அப்படி வெளியில் போகவும் முடியுமென்பது எனது நம்பிக்கை.

17)            விலைமகளிரை இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுத் என்று முன்மொழிகிறீர்கள். அவ்வாறு திருமணம் செய்துகொண்டால் குடும்பமும் சமூகமும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்று கருதுகிறீர்களா?

நடிகர்களை முதல்வராக கொள்ளுமொரு மனநிலை நமக்கு எப்படி வந்தது? நாலு பேர் நம்பினால் நாமும் நம்புவோம். நான் அந்த நாலு பேரில் முதலாவதாக நிற்கும் நால்வரைத் தேடுகிறேன். ஒரு விபச்சாரப் பெண்ணை தன் பிள்ளைக்கு மனம் முடிக்க ஒரு தாயாக தயங்கினால், அதே ஒரு தாயாக தன் விபச்சார மகளுக்கு யாரையேனும் கட்டிவைத்து நல்வழி செய்யும் மனப்பாங்கும் நமக்கு வரவும் வேண்டுமில்லையா?

எத்தனை குளத்தில் தாமரை மலர்கிறது, எத்தனைக் குளத்தில் பாம்பு திரிகிறது, எங்கும் ஏதும் இருந்தும் முற்றிலுமில்லாமலும் இல்லையே. கரடுமுரடான பாதையில் நடந்தால் கால்கள் அப்பாதையினால் தைக்கப்படத் தானே செய்யும்? ஆனால் அந்த கரடு முரடான பாதைக்கு காரணம் நாமென்று உணரும் பட்சத்தில் வலியை ஏற்கும் மனதைரியமும் வரும். ஒரு கெட்டதை நோக்கி சட்டென திரும்பும் உலகம், நல்லதைநோக்கித் திரும்ப நாளாகிறது. அதற்காக உலகத்திற்கு பயந்து கசக்கும் மருந்தை குடிக்காமல் இருந்தால் நோயாளியாகவே இச்சமுதாயம் புழுத்துப் போகும்.

முதலில் அங்ஙனம் ஒரு பெண்ணை மனம் முடிப்பவர், அப்பெண்ணின் மனநிலை, அதனால் தனது வீட்டினில் நிகழும் மாற்றங்கள், அதை சமாளிக்கும் பக்குவம்,  எதையும் ஏற்கும் பெருந்தன்மை என எல்லாவற்றையும் கொண்டிருக்கவேண்டியதொரு இழிவு நிலையை நாம் தான் உருவாக்கியுள்ளோம், அதையும் நாம் தான் சரிசெய்ய வேண்டும்.

முதலில் வீட்டிற்கு வரும் பெண் ‘இவள்’ என்றுதான் உறுத்தும், பின் மெல்ல மெல்ல மாறி அந்த இவள் மறைந்து அவள் இத்தனை நல்லவளெனப் புரியவும் வாய்ப்பும் உண்டு.  பொதுவாக கெட்டவை விரைந்து நடந்துவிடும், நல்லவை நடக்க புரிய ஏற்க நாளாகும். சீர்திருத்தமானதும் அப்படித்தான்  சொன்னதும் நிகழ்ந்துவிடுவதல்ல,  மெல்ல மெல்லவேனும் நிகழ்த்தவேண்டியது.

18)            விவாகரத்து தற்காலிக அவசர முடிவாக எடுக்கப்படுகிறதா? நீண்ட சிந்தனைக்குப் பிறகு எடுக்கப்படுகிறதா?

நீண்ட அவஸ்தைக்குப் பிறகு தடாரென சொடுக்கும் நொடிப்பில் நிகழ்கிறது என்பது எனது கணிப்பு. உண்மையில் பிடிக்காத இருவரை விலக்கி அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ வழி அமைத்துத் தர விவாகரத்து நல்ல ஒரு ஆயுதமென்று நம்பிதான் விவாகரத்து முறை நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் நன்றாக வாழ்ந்த இரு மனசு ஏதோ ஒரு கோபத்தில், ஒரு புரிதலில்லா நிலையில், அல்லது யாரோ வேற்று மனிதரின் கற்பிதத்தில் விலகிக் கொள்ளுமெனில் அது பின் விடை கிடைத்திடாத பெரு அவஸ்த்தையோடு நில்லாமல், அவர்களைச் சார்ந்தோரையும் முக்கியமாக குழந்தைகளை எல்லாம் பாதிப்பது கொடுமையில்லையா? அதைக் காட்டிலும், புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, இணைந்து வாழ இயலுமெனில் அங்கு மீண்டும் அன்பு பூக்கவும் வாய்ப்புண்டு. மனசென்ன ‘ஒரு சின்ன சிரிப்பில் மன்னிப்பில் அணைப்பில் அன்பு பார்வையில் பூத்துவிடுமொரு உணர்வின் மாயத் திரள் தானே..?

19)             விவாகரத்தானவர்களை இன்றைய சமுதாயம் எவ்வாறு பார்க்கிறது?

அவர்கள் அதற்குப் பிறகு வாழும் நடத்தையைப் பொருத்தே அந்த சமுதாயத்தின் கொடிய அல்லது இணக்கமான பார்வையும் அமைகிறது.

என்றாலும், என்னதான் இருந்தாலும், இரண்டாவது புருஷன் அல்லது இரண்டாவது பொண்டாட்டி இரண்டாம்பட்ச மனிதர்கள் தானில்லையா? அல்லாதுபோனாலும் ஒற்றைத் தனிமரம் என்று வைத்துக் கொண்டாலும் வாழ்வு முதுழும் தனிமை வதையில்லையா?

எல்லாம் கடந்து சமுதாயம் பார்க்கும் பார்வையென்று எடுத்துக் கொண்டாலது இன்னும் கொடிது; சொல்லம்பு தாங்கியதென்றும் சொல்லலாம். உதாரணத்திற்கு: வாழாவெட்டி, அறுத்துகிட்டு வந்தவ, வந்தவன், வாழ வக்கற்றோன், முண்டச்சி என இன்ன பிற..,

இருப்பினும் சூழ்நிலைக் கைதியாக பிரிந்து ஒழுக்கம் குறையாது வாழ்வோரை இவ்வுலகம் என்றும் மதிப்பாகவும் மரியாதை கூட்டியுமே பார்கிறது.

எங்கிருப்பினும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கிணங்கவே நமை பார்க்கும் உலகமன்றோ யிது..

20)            விவாகரத்தில் பெற்றோர்களின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்து என்ன?

தான் பெற்ற மகன் மகள் என்றாலும் ஒரு சமுதாயப் பார்வையோடு அணுகுவதும், அவர்களின் உணர்வு புரிந்து செயல்படுவதும், எது அவர்களுக்கு நன்மையை நல்குமோ அதை அவர்களுக்குப் புரியும்வண்ணம் எடுத்துரைத்து நல்வழிபடுத்தி ‘மானுட சுகத்தை நல்ல பண்போடும் மதிப்போடும் அடைந்து வாழுமாறு எடுத்தியம்புவதும் நல்ல பெற்றோரின் கடமையாக எண்ணுகிறேன்.

ஆனால், பொதுவாக இவ்விசயத்தில் இன்றைய பெற்றோர்கள் அதிகபட்சமாக உணர்ச்சிவசப் படுபவர்களாகவும், சுயநலம் பூண்டும், தன் கருத்தை தன் எண்ணத்திற்கிணங்க  பிள்ளைகள்மீது திணிப்பவர்களாகவும், மகன் அல்லது மகள் வழி நின்று எது அவர்களக்கு சாத்தியமென சிந்திக்காமல் எதையோ எடுத்தோம் கவிழ்த்தோமென்று தன் விருப்பப்படி செய்பவர்களாகவே இருக்கிறார்கள் சிலர். அவர்களெல்லாம் தன் பிள்ளைகளின் நலத்திற்குத் தக மாறவேண்டும்.

21)            விவாகரத்தால் பிற்காலத்தில் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்?

தக்க விவாகரத்து என்பது விதிவிலக்ககுட்பட்டது. அல்லது சில உரித்த விதிகளுக்குரியது.

அதன்றி, பிடித்தால் வாழ்வோம், பிடிக்காவிட்டால் அறுத்துவிட்டுப் போவோம் எனும் விட்டேத்தியான மனநிலை மோசகரமனது. அதனால் நாளை குழந்தைகளிடத்தில் பெருத்த குழப்பமேற்படலாம். இங்குமங்கும் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு தான்தோன்றித் தனமாக பிள்ளைகள் நடந்துகொள்ளலாம். அதை தட்டிக் கேட்கும் உரிமை கூட பரஸ்பரம் பெற்றோரிடத்தில் இல்லாது போகலாம்.

குடும்பம், பாசம், விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை கருதல், உதவியாக இருத்தல், பிறர் நன்மைப் புரிந்து செயல்படல், அப்பா அம்மா உறவு, தியாக உணர்வு எல்லாம் மெல்ல மெல்ல மறுத்துபோய் அற்று போகவும் வாய்ப்புண்டு. சுயநலம் பெருத்து கட்டுப்பாடு தகர்ந்து பெற்றோரிடத்தில் பெருத்த வெறுப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமொரு நிலை குழந்தைகளுக்கு ஏற்பட சாத்தியமுண்டு.

அல்லாது பெற்றோரின் விவாகரத்து நியாயமானது என்று புரியத் தக்க பிள்ளைகள் நாளை அதையே தன் வாழ்விற்கான முன் அனுபவமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக செயல்பட முயற்சிக்கவும் வாய்ப்புண்டு.

22)            சமுதாயத்தின் தீமைகளில் விவாகரத்தும் இடம்பிடித்து விட்டது என்பது எதனைக் காட்டுகிறது?

நம் வாழ்வுமுறை நமக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ள புரிதலின் இடைவெளி  அதிகரித்துள்ளதையும், கலாச்சார சீரழிவு அல்லது வேறொரு கலாச்சார மாற்றத்தின் ஆரம்பத்திற்கு நாம் தயாராகி விட்டதையும், குறிப்பாக கிடைக்கும் வாய்ப்பை துஸ்பிரயோகம் செய்து வாழும் நம் இன்றைய வாழ்வின் சமகால பெருந்தவற்றின் கொடூரத்தையும் காட்டுகிறது. சுருக்கமாகச் சொன்னால் நம் பிழைகளின் சாட்சியமாக விளங்குமொரு வெளிப்பாடு அது.

23)             குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தலின் சிறப்புகளால் விளையும் நன்மைகளாகத் தாங்கள் கருதுவது என்னென்ன?

வீட்டின் பழக்கம்தான் வெளியிலிறங்கி தெருவிலும் நிற்கும். உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்களே. அதுபோல் ஒரு குடும்பம் வைத்து அக்கம் பக்கத்தாரின் நன்மை தீமையும் கூட தீர்மானிக்கப் படுகிறது. ஒரு நல்ல குடும்பம் வீட்டின் முற்றத்து துளசி போல, ‘ஒரு ஊரின் நன்மை தீமைக்கு தன்னை பொறுப்பாக்கிக் கொள்கிறது. என் அண்ணன் தானே என்று நினைப்பவனால் தான் என் நண்பன் தானே என்று விட்டுத் தரவும் முடியும். என் தங்கை இப்படி வாழவேண்டும் என்று தன் தங்கைக்கென தன் உணர்வுகளை கட்டுபப்டுத்தி ஒரு நல்லதைச் செய்ய முயல்பவனால் தான் தன் மனைவியையும் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள முடியும். தன் மனைவி மீது அக்கறை கொள்வோருக்கு பிறர் மனைவி மீது மதிப்பு கூடும். நல்ல ஆண்மகனைத் தான் சுற்றம் மதிக்கும். கண்ணியமான பெண்களைத் தான் மரியாதையுடன் பார்ப்பர் மக்கள். ஆக, சுற்றத்தால் மதிக்கத் தக்க குணங்கள் ஒரு ஆணிற்கும் சரி பெண்ணிற்கும் சரி அவர்கள் வாழும் வீட்டின் நற்பண்புகளாலேயே பிறக்கிறது. மீதம் அது வளர்வது வேண்டுமெனில் சமுதாயத்தின் கையிலிருக்கலாம்..

சுருக்கமாக சொல்வதெனில் வீடு சிறக்குமெனில் நாடும் சிறக்கும். ஒரு குடும்பத்தின் வெளிச்சம் என்பது ஒரு தேசத்தின் நன்மைக்கான முதற்புள்ளி..

24)             கூட்டுக் குடும்பம்தானே நாவலின் நாயகன் மதிவாணன் – நாயகி வைஷ்ணவியின் பிரிவுக்கும் விவாகரத்து கோருவதற்கும் காரணம்?

தனித்து வாழும் குடும்பங்களிலும் விவாகரத்துகள் நடக்காமலில்லை. நான் எடுத்துக் கொண்ட களம் கூட்டுக் குடும்பம் அவ்வளவே. அதோடு, கூட்டுக் குடும்பத்தில் விவாகரத்துப் பெற எவ்வளவு வழியுண்டோ அதே அளவு அந்த எண்ணத்தைக் களைந்து குடும்பம்னா இப்படித் தான், வாழ்க்கை என்றால் பல்வேறு சிக்கல்கள் இருக்கத் தான் செய்யும் என்றெல்லாம் பல்வேறுபட்ட நேர்மறை அனுபவ யோசனைகளை சொல்லி, மனங்கள் ஓடிந்துப் போகாத அளவிற்கு காத்திடவும் வாய்ப்புண்டு.

உதாரணம், வைஸ்ணவியின் அம்மா, வெண்மதிவாணனின் அப்பா அண்ணி மற்றும் குடும்பத்தார்..

25)            நவீன கலாச்சார நாகரிகத்தினால் குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

சாக்குபோக்குகள் நீங்கி, ஒருவருக்கொருவர் நேராக பேசி, உண்மையாக மதித்து, நட்பு பரிமாறி, வெளிப்படை விவாதங்கள் மூலம் புரிதலை மேற்கொண்டு விட்டுக்கொடுத்து பல நல்லது கெட்டதை பகிர்ந்துக் கொள்ளும் பாங்குகள் இயல்பாக இருந்தாலும் –

அன்றும் இன்றும் பெற்றோர் அவதிபடுவது மாறாமலே இருப்பது வருந்தத் தக்கது. கூட்டுக் குடும்பம் எத்தனை சௌகரியமனது என்பதெல்லாம் அக்குடும்பத்தாரைப் பொருத்ததே.

தனிக்குடும்பம் அதுபோல் பெருத்த ருசியென்றும் சொல்வதற்கில்லை. தனிக்குடும்பமாக வாழ்கையில், வெறுமனே ஆக்கி தின்று தூங்குவது மட்டுமே வாழ்வில்லை என்ற ஒரு அலுப்பும், தனித்துவிடப்பட்ட அயர்ச்சியும், அதேநேரம் நம் வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் எனும் ஒரு நிறைவும் ஏற்பட்டாலும் பெற்றோரைத் தாங்கி வாழும் வாழ்வே குறையற்றது.

26)  இன்றைய அறிவியல் யுகத்தில் பக்தியின் தேவை என்ன?

அறிவியல் வேறு, பக்தி வேறு. சாப்பிடுவதற்கும் சுவாசிப்பதற்கும் உள்ள இடைவெளி போல தேவைக்கும் ஆசைக்கும் நிறைய வேறுபாடுகள் இயற்கையாகவும் செயற்கையாகவும் உண்டு. அறிவியல் இதில் ஆசைக்குட்பட்டது. பக்தி அந்த ஆசையை அடக்கும் அளக்கும் ஆளும் அவசியத்திற்குட்பட்டது.

ஆயினும் பக்தி குறித்த புரிதலும் இடறிய இடத்திலிருந்தே இக்கேள்வியின் அவசியமும் பிறந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டியவர்களாகிப் போனோம்..

நன்றிகளுடனும் வணக்கதோடும்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஆய்வுகள், நாவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to “கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..

  1. Thennarasan.Sa. சொல்கிறார்:

    அருமை அருமை…..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றியும் அன்பும்பா. ஒருவரின் ஆற்றலைக் காட்டிலும், அதை வெளிக்கொண்டுவர போராடும் சிலரின் எண்ணம் மதிக்கத் தக்கது. அங்ஙனம் நம் எழுத்தின் மீது பற்றுக் கொண்டு அதை ஆய்விற்கு அனுப்பி இன்னொரு பேராசிரியரின் முனைவர் பட்டத்திற்கும் உதவி செய்து நம் உழைப்பையும் மேன்மையுற எண்ணிய அன்பு நண்பர் திரு. ரமிஷின் குணத்திற்கே பெருமிதமும் நன்றிகளும் உரித்தாகும்..

      Like

  2. Umah thevi சொல்கிறார்:

    மிக அற்புதமான விளக்கங்கள். அருமை!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு உமாவிற்கு, இது மட்டுமே இறுதியான பார்வையில்லை உமா. இது நம் ‘கனவுத் தொட்டில்’ நாவலின் ஆய்விற்குரிய கேள்விகளுக்கான பதில். இன்னும் வாழ்வின் பாடம் மிகுகையில் நிறைய புரியலாம். இருப்பினும் அதுவரை காத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை, புரிந்ததை புரிந்த இடம்வரை சிந்திக்கத் தக்க பகிர்ந்துக் கொள்வது மட்டுமே என் எண்ணமாக இருந்தது. இக்கருத்துக்கள் எல்லாம் ஒரு கேள்விக்கான பதில் சொல்பவருக்கு மட்டுமே சொந்தம். அது எல்லோருக்கும் பொருந்தும் என்றில்லை. பொருந்தாதோர் நிறையப் பேர் இருந்திருக்கலாம், அது அவர்களின் புரிந்துணர்வு சுதந்திரம் பொருத்தது. எனவே இதை பெரிய வெற்றியாக எடுத்துக் கொள்ளல் அத்தனை சிறப்பன்று எனினும் உங்களின் பாராட்டு உங்களின் ஈர்ப்பு மகிழ்வையும் மேலுமான நம்பிக்கையையும் தருகிறது. நன்றியும் அன்பும் வணக்கமும்!!

      Like

  3. உங்களின் இந்த நேர்காணலை, பொறுமையாக நிதானமாக நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு வாசகங்களையும் கரைத்து உள்வாங்கி ரசித்து மகிழ்ந்தேன். ஒவ்வொரு பதிலிலும், தேவையற்றதைத்தேடினால் துவண்டுபோவது நிச்சயம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். அனைத்தும் சமூதாய அக்கறை கருதி சொல்லப்பட்ட அற்புதமான பதில்கள். வியந்தேன் வித்யா. வாழ்த்துகள், பாராட்டுகள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி சகோதரி. எல்லாம் உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பின் பேரில்தான் நம்பிக்கயை திடமாகக் கொள்கிறது என் எழுத்தும். கேட்கும் கேள்விகளுக்கு நாவலுக்குள் அடங்கி பதிலுரைக்கவேண்டியதொரு கட்டாயமும் இருந்தால் சற்று பின்னோக்கிச் சென்று நாவலின் படியும் அதேநேரம் தற்சமய தேவைகளைப் பொருத்தும் பதில்கூற வேண்டியிருந்தது. எனினும் சமுதாயம் சார்ந்த கருத்துக்களாகச் சொல்ல எண்ணி முயன்றேன்!

      Like

  4. kovaimusarala சொல்கிறார்:

    அன்பு நிறை வித்யாவிற்கு ………

    ஆய்விற்கான கோப்புகளை எனக்கு அனுப்பியதில் மகிழ்ச்சி எனக்கு

    ஒவ்வொரு கேள்விகளுக்கும் நீங்கள் கொடுத்த பதில்கள் சமூகத்தின் மீது உங்களின் ஆய்வை பறை சாற்றும் விதமாக இருக்கிறது .

    மறைவில் ஒழுகும் மகளிரை பற்றி இதுவரை யாரும் கூறிடாத கருத்துகள் ஆரோக்கியமான கருத்துகளை ஆழமாக யோசிக்க வைக்கும் கருத்துகளை முன்னிறுத்தி இருக்கிறீர்கள் …….உங்கள் படைப்புகள் அனைத்தும் ஆய்விற்குரியவை என்பதில் ஐயம் இல்லை .

    சமூகத்தின் மீது அக்கறை கொண்டு வார்த்தைகளில் சாடவும் ,சமாதனம் செய்யவும் உங்களால் முடிகிறது .உங்கள் எழுத்துகளுக்கு நான் தலை வணங்குகிறேன் .

    விரிவாக எழுத நேரம் இல்லை உடனே சொல்ல வேண்டும் என்ற துடிப்பில் எழுதுகிறேன்

    இன்னும் சமூகத்திற்கு சொல்ல நிறைய இருகிறது வித்யாவிற்கு உங்களோடு சேர்ந்து நானும் பயணிப்பதில் பெருமைதான் எனக்கு ………வாழ்த்துக்கள் நண்பா இன்னும் பல வெற்றிகளை சூட

    கீழே கோடிட்ட வார்த்தைகள் மனிதனின் அகம் ஆழம் என்னை பாதித்த உங்களின் வரிகளவை:-

    //ஒரு கெட்டதை நோக்கி சட்டென திரும்பும் உலகம், நல்லதைநோக்கித் திரும்ப நாளாகிறது. அதற்காக உலகத்திற்கு பயந்து கசக்கும் மருந்தை குடிக்காமல் இருந்தால் நோயாளியாகவே இச்சமுதாயம் புழுத்துப் போகும்//

    //மனசென்ன ‘ஒரு சின்ன சிரிப்பில் மன்னிப்பில் அணைப்பில் அன்பு பார்வையில் பூத்துவிடுமொரு உணர்வின் மாயத் திரள் தானே..?//

    //என் தங்கை இப்படி வாழவேண்டும் என்று தன் தங்கைக்கென தன் உணர்வுகளை கட்டுபப்டுத்தி ஒரு நல்லதைச் செய்ய முயல்பவனால் தான் தன் மனைவியையும் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள முடியும். தன் மனைவி மீது அக்கறை கொள்வோருக்கு பிறர் மனைவி மீது மதிப்பு கூடும்//

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      //இன்னும் சமூகத்திற்கு சொல்ல நிறைய இருகிறது வித்யாவிற்கு// சரியாகச் சொன்னீர்கள் தோழி. உண்மைதான். வெறும் ஆடையாக நீங்களெல்லாம் கொடுக்கும் மரியாதையை நீங்களெல்லாம் காட்டும் மதிப்பை வித்யாசாகர் எனும் நிறத்தில் அணிந்துக் கொண்டுள்ளோமோ எனும் பயம் எனக்குண்டு. அதை உடைத்து உந்தி ஓடி எனை நம்பும் என் உறவுகளுக்காய் ஏதேனும் செய்யும் முயற்சியிலேயே தொடர்கிறது என் எழுத்துப் பயணமும்..

      அதற்கு முழு பலமாக இருக்கும் உங்களைப் போன்றோரின் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகளாவேன் சரளா!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s