காலம் சில நேரம்
இப்படித்தான் தனது தலையில்
தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது..
ஆம்
காலத்தை நோவாது
வேறு யாரை நோவேன்.. ?
பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை
மனிதரின் தீமைகளே பெருகிநின்று
காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில்
நாற்றம் நாற்றமே எங்குமெனில்
நான் யாரை நோவேன்..?
யார் யாருக்கோ வரும் மரணம்
எனக்கு வந்தால் சரி
என்று வலிக்கிறது மனசு.,
எல்லாம் பொய்யிங்கே;
அன்பு பொய்
அறம் என்று கத்துவது பொய்
அழகு கூட மெய்யில்லை,
எல்லாமே
அப்படித் தெரிவதாக இருக்கிறது,
இல்லையேல்
ஒரு சிறுபிள்ளை அவர்களுக்கு
அழகாய் தெரிவாளா?
ஒரு கிழட்டிற்கு ஆசை எழுமா ?
வயதாக வயதாக
வாழாதவர்களாகவே நம்மை நாம்
அறிவதால்தான் ஆசைகளும்
உள்ளே பச்சைப் பச்சையாய்
பச்சைப் பச்சையாய் இருக்கிறது..
பிறந்தபோது மேலூரிய
கவிச்சி வாசத்தை மனம் கொண்டு
கழுவுவதேயில்லை
நம்முள் சில முற்றிய மனிதர்கள்..
அவர்களால் தான்
இந்தக் காற்றும் நமை கொல்கிறது
இந்த மழையும் நமை கொல்கிறது
வெளியே அமைதியாக நிற்கும்
மரம் செடி கொடிகளெல்லாம்
நமை அப்படி இழிவாகப் பார்க்கிறது..
நாம் தான்
நரகமென்பதைக் கேட்டுக் கேட்டு
வீடுகளுக்குள்
அமைத்துக்கொள்கிறோம்..
கொஞ்ச கொஞ்சமாய்
மாறி மாறி
மரணத்திற்கு எட்டும் வாழ்வை
மரணத்திலிருந்து துவங்குவதாகவே
அன்றன்றையப் பொழுதுகளை தரிசிக்கிறோம்..
அரசியலே சூதாகி போனப்பின்
அறிவியலே கேடாக ஆனப்பின்
ஆசைகள் பணமாகி
பணம் மருந்தாகவும்
தொழில் படிப்பாகவும்
சில்லரைகளே கோவிலையும் சிலைகளையும்
விலைபேச இடம் கொடுத்தப்பின்
மண்ணில்
மாண்பெங்கே ? மறமெங்கே ?
எல்லாம் பொய்
பொய்
உண்மைகளை விழுங்கிக்கொள்ளும்
பொய்யுலகு இது,
பொய் முளைத்து; பொருள் சேர்த்து
ஆள் கொன்று; ஆசை பெருத்து
ஒரு சமத்துவ எண்ணமே இல்லாமல்
சார்ந்து சார்ந்து சாகும் இழிபிறப்புகளாகிப்
போனோமே..
எப்போது கைநீட்டி
பிறர் உழைப்பை வாங்கத் துணிந்தோமோ
எப்போது கால்மடக்கி அமர்ந்து
பிறர் வியர்வையில் உண்ணத் துவங்கினோமோ
எப்போது அறம் மறந்து
விடியலை விலைக்குப் பெற்றோமோ
எப்போது தனக்கு தான் பெரிதானதோ
அப்போதே விலைபோய்விட்ட
மரணக் குப்பைகளாகிப் போனோம்..
நமக்கு மிச்சமிருப்பது
நேரடியாக
நம்மை நாம் வெட்டி
நம் வீட்டில் சமைக்காமல் இருப்பதொன்றே..
—————————————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: மன்னித்துக்கொள் மானுடமே.. – TamilBlogs
என்னங்க வித்யாசாகர்? இவ்வளவு விரக்தியா … அதல பாதாலத்தில் விழுந்துட்டீங்களா? இந்த மண்ணில் ஒரு சில நல்லவங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல பல விடயங்களும் இருக்கின்றன.
என்னை பொருத்தவரை, வாழ்க்கை என்பது ஒரு வகையான தீரச்செயல். அது ஒரு விளையாட்டும் அல்ல, போராட்டமும் அல்ல. தீரச்செயல் எனும்போது கெட்டவைகளை எதிர்த்து சண்டையிட்டு சாமளித்து சாமர்த்தியமாக வாழ்க்கையை தொடர்ந்து நடத்திக்கொண்டு போக வேண்டியதுதான்.
மனம் தளராதீர் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
LikeLiked by 1 person
நீங்கள் வேறு ஏதோ நல்ல ஊரில் வசிக்கிறீர்கள் போல். மிக அழகான உலகை கண்டு எழுதிய ஆயிரம் படைப்புகள் நம்மிடையே உண்டு, அதலாம் வேறு. இன்றைய வாழ்க்கைமுறை நடந்தேறும் அதர்மங்கள், இழைக்கப்படும் நீதி, மனிதர்களின் கொடூர சிந்தனைகள் தவிர முரண்பட்ட வாழ்வுமுறை நட்பு அன்பு எதிர்பார்ப்பு சுயநலமென நீண்ட ஒரு சரிசெய்யப்படவேண்டிய பட்டியலொன்று உண்டு, அதைப்பற்றியது இப்படைப்பு. சமகாலத்தை இருப்பதை இருப்பதாக பதிவதே ஒரு நல்ல படைப்பாளியின் கடமையென எண்ணுகிறேன். இது எனது அறிவிற்கு எட்டியது; அவ்வளவே!
தங்களின் ஊக்கத்திற்கும் வருகைக்கும் நன்றி. வணக்கம்.
LikeLike