வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 9

9. சாதியை இன்றைய அரசியல் கட்சிகள் வளர்தெடுப்பதாகத் தோன்றுகிறது… சாதியின் நன்மை, தீமை என்ன?

சாதியின் நன்மை என்று பெரிதாக சொல்வதற்கில்லை. இந்தத் தொழிலைச் சார்ந்தவர் இவரென்பதைத் தான் இந்தச் சாதி குறிப்பிட முற்படுகிறது எனில், அதாவது இவர் இந்த வகையினர், இவரை இங்ஙனம் அணுகலாம், இவர்கள் வாழ்க்கைமுறை பெசுமுறை நடத்தைகள் இங்ஙனம் அவர்களின் வழக்கம் சார்ந்து தொழில்முறை சார்ந்து இருக்கும் என்பதைத் தான் சாதி குறிக்குமெனில், அது மீண்டும் பின்னாளில் அவரவர் திறமைக்கொப்ப மற்றும் வாழ்வாதார மாற்றத்திற்கிணங்க மாறியும் போகுமெனில் அதில் ஒருவரைப் புரிந்து அவரின் நன்மைக்கு ஏற்பவோ அதோடு அவரின் மனம் கோணாது அவருடன் புழங்கவோ மட்டும் இந்தப் பிரிவுமுறை அதாவது ஜாதிமுறை உதவலாம்.

மற்றபடி, இதன் புரிந்துணர்வைக் கூட சரிவர கொள்ளாது, மாட்டுத் தொட்டியில் புண்ணாக்கை வைத்தாலும் ஓடி, கழிவுநீரை கொட்டினாலும் ஓடி எது நமக்குக் கொடுக்கப் படுகிறதேன்றே தெளிவுகொள்ள இயலாமல் முண்டியடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டுப் போகும் கால்நடைகளைப் போல நடந்துக் கொண்டு, தொட்டிக்கு அருகே சென்றதுமே, ச்சே இவண் வேறென்னவோ கொடுத்துள்ளானே என்று மூக்கைக் கூட நுழைக்காமல் வந்தவேகத்திலேயே தூரம் விலகி நிற்கும் மாடுகளுக்கு இணைத்த திறன் கூட இல்லாது அரசியல்வாதி கைகாட்டும் இடமெல்லாம் விழுந்து வீணாய்ப் போகும் பள்ளங்களாகவே ஜாதி இருப்பதும். நம் கண்களை தனது வெட்டி கௌரவம் கொண்டு மூட சாதிகளைப் பயன்படுத்திக் கொள்வதும், ஒரு இயலாமைக் கடந்து எங்களால் இனைந்து அனுசரித்து வாழ்ந்துக்கொள்ள முடியும் என்று கெஞ்சும் மனங்களைக் கூட சாதிக் கத்தி வைத்து அறுப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக, அன்று இந்த சாதி எனில் அவர் இதைச் செய்பவராகத் தான் இருந்தார், அன்று மனிதரை கீழுள்ளோர் மேலுல்லோர் என்று மனிதம் மழுங்கி கத்தி கொண்டு அறுத்து வைத்திருந்தோம் மனிதர்களை, இன்று அதையெல்லாம் கடந்துவிட்டோம், இன்று சாதி வெறும் சொல்லிக்கொள்ளவும், மறக்கையில் நினைவுபடுத்திக் கொள்ளவுமே இருக்கிறது. பின்னர் அதைக் கொண்டு நம்மால் மனங்களையோ மனிதர்களையோ துளைக்க முடியுமெனில் சாதியை தொலைத்துவிட்டுப் போ; அது ஒரு வெறி, அதொரு கண்மூடித் தனம்.

குலமறிந்து பிச்சையெடு; கோத்திரமறிந்துப் பெண் கட்டு” என்பார்கள் அதை நான் ஏற்கிறேன். எனக்கு கடவுளில் பாகுபாடில்லை. கடவுள் பற்றிய எல்லாம் தேடலும் ஒரேயிடத்திற்கான பாதைகள் தான். ஆனால் என்னைப் போல் என் குடும்பமோ எனது சுற்றமோ இந்த உலகோ முற்றிலுமாய் அந்நேர மாற்றத்தை ஏற்றோ மாற்றத்தின் அவசியத்தைப் புரிந்தோ இருப்பதில் யார் மனமும் நோகாது இன்பமடையத் தயாராகயில்லை. இன்றைய வாழ்க்கை முறையில் மகிழ்ச்சி என்பதே உறவுகளின் கூடல் தான், உறவுகளின் அரவணைப்பு, அவர்களின் ஆம் இல்லை தான். ஆக அந்த உறவுகளின் கூடு இருக்கிறதில்லையா அதில் மகிழ்ச்சி என்பதே மிக சாதாரண சின்ன சின்ன விஷயங்களாகவேயுள்ளன. உன்னைப் பார்த்து அழகு என்பதும், எனக்கு உன்னை மிகப் பிடிக்கும் என்பது, உனக்காக வாங்கினேன் என்பது உனக்காக வாழ்கிறேன் என்பதும், ஆக கூட்டாகப் பகிர்ந்து புரிந்து விட்டுக்கொடுத்து விட்டு விலகி வாழ்வதில் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு விடுகிறது. அன்பு மனதிற்குள் ஆழமாக முளைவிட்டுப் பதிகிறது. அப்படி இங்குமங்குமாய் விட்டுக்கொடுத்து இணங்கி நெருங்கியிருக்க அந்த பிடித்தல்கள், எதிர்பார்ப்புகள், நாக்கு ருசி, உடுத்தும் முறை, புழங்கும் வகை கொஞ்சமேனும் ஒத்துப் போக வேண்டியுள்ளது. எங்கனா வெளிநாட்டிற்கு போறோம், ஒரு இந்தியனைக் கண்டால், ஒ என் நாட்டுக் காரனென்று எண்ணவில்லையா ? ஒரு அவசர வேலை சம்மந்தமாக வடநாட்டிற்குச் செல்கிறோம், அங்கு பேசும் மொழி புரியவில்லை, வாழும் முறையில் ஏற்பில்லை, உண்ணும உணவில் உடன்படவே முடியவில்லை அப்போது அங்கே நம் முறைகளோடு வாழுமொரு தமிழரைக் கண்டால் ஒரு பெருமூச்சு வெளிவருகிறது இல்லையா அப்படி, என் ஊரில் இருந்து அடுத்த ஊர் செல்கையில் அங்கே தன்னுடைய ஊர் காறனைக் கண்டதும் கைகுலுக்கும் மனதின் சந்தோசத்தைப் போல, ஒரு எங்கோ பிறக்கும் இருவர் சேர்ந்து வாழ இணை பொருத்தம் பார்க்கையில் பார்க்கலாம், இவர் எந்த வழிபாட்டினைக் கொண்டவர், எந்த வாழ்க்கைமுறையக் கொண்டவர், எந்த மொழியைச் சார்ந்தவர் என்று சிலதை வாழ்க்கைக்கு உதவுமெனில் பார்க்கலாம். அதுபோல் உன்னுகையில் பார்க்கலாம்; எது நமக்குப் பொருந்தும் வெறும் தேங்காய் போட்டால் பிடிக்குமா? அல்லது மிளகாய் மட்டும் வைத்து அரைத்தால் ஆச்சா? எண்ணெயில் கடுகெண்ணெய் ஊற்றி சமைத்தால் உள்ளிறங்குமா? இறங்காதெனில் இதுபோன்ற உண்ணுமிடத்தில் வகைகளைப் பார்க்கலாம்.

குலமறிந்து பிச்சையெடு; கோத்திரமறிந்துப் பெண் கட்டு” என்பதை நான் இந்தளவில் போதுமானதகப் பார்க்கிறேன். அந்தளவில் மட்டுமே அந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன். அதே நேரம் நாளை என் மகன் வந்து ‘அப்பா நான் ஒரு இஸ்லாமியப் பெண்ணை விரும்புகிறேன், அவள் அரபு மொழியைச் சார்ந்தவள், வேறு நாட்டுப் பெண், ஆனால் புரிந்து வாழ்வோம், இங்ஙனம் எங்கள் வாழ்க்கையை நலமாக அமைத்துக் கொள்வோம். இதனால் எதிர்காலத்தில் எங்கள் குடும்பம் தளர்ந்துப் போகாது நம்பிக்கையோடு கைகோர்கிறோம் என்று சொல்வானெனில்; அதில் இடைமறித்து நெஞ்சு நிமிர்தவும் எனக்கு எந்த சாதி வெறியும் அவசியமும் கூட இல்லை.

எனது அண்ணன் காதலித்தார், திருமணம் செய்து வைத்தோம், எனது இரண்டு தம்பிகள் காதலித்தனர் வீட்டார் பேசி நாங்களே திருமணம் செய்து வைத்தோம், இதுவரை எங்களுக்கு எங்களின் வீட்டு குலவிலக்குகள் பிறந்த சாதி என்னவென்று சரிவரத் தெரியாது. காரணம் அது கேட்கும் பொருளாக எங்களுக்கு மத்தியில் இல்லை.

ஆக, இப்படியொரு வெகு சாதாரண புரிந்துணர்வைக் கொள்ளவேண்டிய இடத்தில் சாதியை, நஞ்சாக ஊற்றுவதும், அமிலகமாகக் கொட்டி எரிப்பதும், கத்திகளாகக் கூர்தீட்டுவதும் முட்டாள்களின் வேலையேயொழிய தெளிந்தவர்களின் தெரிவு அல்ல சாதிவெறி.

குறிப்பாக, இன்றைய நம் நாட்டின் அரசியல் போக்கைப் பார்த்தால், நாமெல்லாம் தன் கையாலேயே தன் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிடலாம். ஆம் அத்தனைக் கேவலமாக நமது அரசியல் வாதிகளை செயல்படுத்துகிறோம் நாம். அரசியல்வாதி எனில் யார் ? நாம் உருவாக்கியவர்கள், நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். பிறகு நாமே அவர்களைச் சரியில்லை என்று சொல்லி பயனில்லை, அதனால் தான் நம்மைநாமே அருத்துக்கொள்ள வேண்டும் என்றேன்.

அல்லது அவர்களின் கொட்டத்தை அறுக்கவேண்டும். அதற்கு அரசியல் அறிவு வேண்டும். அரசியலை ஒரு நாட்டின் அதிமுக்கியப் பொறுப்பாகக் கருதி இளைஞர்களுக்குப் போதிக்கவேண்டும். குழந்தை வளரும்போதே கொஞ்சம் மருத்துவம், கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் எந்திரவியல், கொஞ்சம் கலைகள், கொஞ்சம் தற்காப்புக் கலைகள், கொஞ்சம் வீரம், கொஞ்சம் காதல், இவைகளோடு கொஞ்சம் அரசியல் அறிவையும் புகட்டவேண்டும்.

அரசியல் தெரியாததனால் தான் ஆளக் கேட்பவனின் கையிலெல்லாம் கோடாரியைக் கொடுத்துவிட்டு வெட்டுவதற்குத் கழுத்தையையும் காட்டிநிற்கிறோம். ஒரு நாடு வளம்பெற வேண்டும் எனில் அந்நாட்டில் காவலாளிகள் சரியாக இருக்கவேண்டும். காவலாளிகள் பொறுப்பாக இருக்க அரசியல் சட்டம் அத்தனை முனைப்பாக இருத்தல் வேண்டும். அரசியல்சட்டம் திருத்தமாக இயற்றப் பட்டிருக்குமெனில் அதைவைத்து ஆளும் அரசியல்வாதிகளும் மனிதம் மிக்கவர்களாக, நாடு பற்றிய அக்கறை உள்ளவர்களாக, மக்களின் நன்மை குறித்து ஆலோசிப்பவர்களாக, சுயநல போதையறுக்கப் பட்டவர்களாக இருத்தல் எவ்ண்டும். அப்படி இருக்கிறார்களா? நம் அரசியல் வாதிகள்? பிறகு அவர்களுக்கு சாதி அக்கறை மட்டும் வருகிறது எனில் அது எங்கிருந்து வரும்? பிறகு அவர்களின் சுயநல வெறிக்கு கடித்துத் துப்ப நமது தலைகளும், தலையைக் கிள்ளியெறிய வளர்க்கும் அழுக்குபிடித்த நகங்களாக சாதியும் இருக்குமெனில் அதை உடனே வெட்டியெறிய வேண்டியது நம் தலையாயாக் கடமைகளில் ஒன்று என்று புரிவோம்.

சாதியால் வீடு சிரிக்கும் எனில் அதை பேருக்குப் பின்னல்ல முன்னரே கூடப் போட்டுக் கொள்வோம். அதே வீடு சாதியால் ரெண்டு படுமெனில் சாதியொழிப்போம் வீடு சிரிக்கட்டும்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 10

10. முதிர்கன்னிகள் குறித்து தாங்கள் அதிகம் சிந்திக்கக் காரணங்கள் என்ன? அவர்களுக்கான மறுவாழ்வு குறித்து தங்கள் கருத்து என்ன?

வீட்டுக்கூரை விரிசல் கண்டுள்ளதெனில் அதை மாற்றி வீட்டைக் காப்பது எனது கடமையில்லையா? பசி குறித்து எழுத முடிகையில், ருசி குறித்துப் பேச முடிகையில், உடல் குறித்து அழுமொரு முகத்தைக் காண அச்சப்பட வேண்டியுள்ளதும் அவசியமில்லையா? வளைய வளைய வளைக்குமொரு சமுதாயத்தால் கண்முன்னே பல இதயங்கள் தனது பிறப்பை எண்ணி அழுகிறதெனில் அதனால் பெருகும் கண்ணீரைத் துடைக்கும் கரமாக எனது எழுத்து நீள்வது அவசியமெனில்; அவர்களைப் பற்றி எழுதுவதையும் எனது கடமைகளில் ஒன்றென்றேக் கருதுகிறேன்.

வாசல்பிடித்து ஏங்கி நிற்கும் பார்வையின் வலியினுடைய கனத்தை காலம் கடந்தும் தாங்க மறுக்கிறேன். பார்த்து பார்த்து வளர்த்த மகள் தனது பாரமாக இளமையைத் தாங்கி நிற்கிறாள் எனில் அதை எண்ணிப் பதறவேண்டியக் கடமை எனக்கும் முதலாவதாக இருப்பதில் பெருங்கருணை யொன்றும் தென்பட்டுவிடவில்லை. அதற்குமாறாக நாம் நம் சமுதாயத்தை இத்தனை இழிவாக மனிதமற்று சமைத்துவைத்துள்ளோமே எனும் கவலையே பெருகி நிற்கிறது. அப்படிப் பெருகிய இடங்களில் முதிர்க்கன்னிகளுக்கான கவிதைகளும் பிறந்திருக்கலாம்..

அப்படிப்பட்ட முதிர்கன்னிகளின் நல்வாழ்விற்க்கான மனமாற்றத்தை இளைஞர்களிடமிருந்தே எதிர்ப்பார்க்கிறேன். இன்றிருக்கும் முதிர்கன்னிகளை இளைஞர்களே மணந்துக் கொள்ளுங்கள் அல்லது இளைஞர்களே வரதட்சணை வாங்காதீர்கள் என்று சொல்லிப் பயனில்லை. அவர்களின் வாழ்வின் தீர்வுகள் நேற்றைய இளைஞர்களின் கைக்குள் அடக்கமகிவிட்டது. அவர்களை வலைக்கிறேன் என்று சொல்லி உடைத்துவிடுவதைக் காட்டிலும் நாளையப் பெற்றோரை மாற்றிவிடுவதன் மூலம் எதிர்காலம் முதிர்கன்னிகளை மறந்துப்போய்விடக் கூடும் என்று எண்ணுகிறேன்.

அதுதவிர, மீண்டும் மீண்டும் எங்கு சுற்றினாலும் மருந்து அன்பிடமிருந்தே கிடைக்கத் துவங்குகிறது. அன்பிருப்பின் கருணை வரும் கருணையுள்ளம் காசு பார்க்காது காசுபணம் பெரிதில்லை மனசு பெரிது, மனது வலிக்காமலிருத்தல் பெரிது என்றுப் புரிந்துவிட்டால் இக்காலத்திலும் சரி எக்காலத்திலும்; திருமணமாகாமல் வலிக்கும் பெண் மனதும் புரிந்துப் போகும் அதைத் தாங்கமுடியாமல் தவிக்கும் பெறோரின் வலியும் புரிந்துப் போகும். எனவே எங்கும் நிறைந்த சம அன்பினை மனிதர்கள் மனதுள் தேக்கி வைத்திருத்தல் ஒரு மறைமுக நர்சூழலை எவ்விடத்தும் ஏற்படுத்தும் என்பதும் எனது நம்பிக்கை..

தவிர, முதிர்கன்னிகள் பெருகுவதற்கு, வரதட்சணை, திருமணம் கட்டித் தர வசதியின்மை, பிற குலம் பற்றிய இழிவானப் பார்வை, தன் மகள் வாழாவிட்டாலென்ன என் கௌரவம் முக்கியம் எனும் மனப்போக்கு, இதெல்லாம் கடந்து வீட்டில் பெண் மரம்போல வளர்ந்திருக்க ஊர்சுற்றும் மாடுபோல பலர் குடித்துக்கொண்டும் வெட்டிக் கதை பேசிக்கொண்டும் ஊர்வாயைப் பார்த்து நடந்தும் தெரிகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தனது மகள் பற்றிய கவலையும் ஒரு பொதுவான பெண்மகள் குறித்த அவஸ்தையும் மனதுருத்த வேண்டும்.

சில வீடுகளில் ஆண்களும் சரி பெண்களும் சரி ஏதோ ஒரு குறிக்கோளினைக் கையிலெடுத்துக் கொண்டு அதை செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன், திருமணமெல்லாம் எனது லட்சியம் நிறைவேறியப் பின்புதான், நான் ஒரு தகுதிக்கு வந்தப்பிறகே எனக்கு திருமணம் நடக்கும் என்றெல்லாம் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் திருமணம் என்பது ஒரு சாபம்மெனும் எண்ணம் முதலில் மாறவேண்டும்.

திருமணம் என்பது’ தெருவில் செருப்பின்றி நடக்கும் ஒருவனுக்கு செருப்பாக நடக்க தனது கைகளை நீட்டும் ஒருத்தியை, ஒரு துணையை ஒரு பலத்தை அடைவதற்கு சமமென்றுப் புரியவேண்டும்.

வாழ்க்கைத்துணை என்பது சாதாரண உறவல்ல. கொஞ்சம் தாய்மை இன்னும் கொஞ்சம் தந்தையின் பற்று, சகோதரர்களின் பலம், சகோதரிகளின் அன்பு, தோழியின் சினுங்கள், காதலியின் கோபம், குழந்தையின் சிநேகம், மூத்தோரின் அரவணைப்பு, கோவிலின் பக்தி, கொஞ்சம் மிருகம், நிறைய மனிதமென கேட்கக்கேட்க கிடைக்கத்தகும் வாழ்வின்’ வெற்றியின்’ மகிழ்ச்சியின்’ ஆரவாரத்தின்’ அடிநாதமும் உச்சமும் ஆகும். அதை தவிர்த்தலில் லாபமென்ன? எங்கோ திருமணம் முடிந்து வாழவேண்டிய ஒரு பெண்ணோ ஆணோ தனித்து தாகத்தில் கிடப்பதைத் தவிர வேறு பெரிய நிகழ்வொன்றும் நிகழப் போவதில்லை. ஆனால் –

பிரம்மச்சரியம் என்பது வேறு. அது தோட்டத்திலிருந்துக் கொண்டு கணியுண்ணாதவருக்கின்னும் எளிதாகக் கைவசப் பட்டுவிடுகிறது..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 11

11. மரணம் குறித்த தங்களின் அகவயப் பார்வையை விளங்குங்களேன்?

மரணத்தோடு பிறப்பவர்கள் நாம். மரணத்தை மறுப்பதற்கில்லை. ஏற்பதற்கும் ஆனதில்லை. இறக்க தயாராக இருத்தல் என்பது ஒரு நிறைவு. அந்த நிறைவை அடைய வாழ்வை சீராக்கிக் கொள்ளுதல் அவசியம். வாழும் தருணத்தை சுயநலமின்றி வாழ்பவருக்கு வாழப் பழகிக் கொள்வோருக்கு மரணம் ஒரு இடைநிறுத்தம் என்பதே என் எண்ணம். எனவே பொதுநல வாதிகள் யாரும் முழுமையாக இறப்பதில்லை மீண்டும் பிறப்பார்கள் என்பதல்ல இதனர்த்தம்.

சுயநலம் பாராதோரின் வாழ்க்கையும் கனவுகளும் அவரோடு முடிவதில்லை, அது இன்னொரு விதையாகவும் முளைத்து விடுகிறது. நல்லதை விதைத்துச் செல்பவருக்கான மரணம் அவரின் உடலை மட்டுமே எரிக்கவோ புதைக்கவோ செய்கிறதேயொழிய அவரின் எண்ணங்களையோ அவரெடுத்த முயற்சிகளையோ அழிப்பதில்லை.

மரணத்தின் பூரணத்துவம் என்பது மீண்டும் பிறப்பது. மீண்டும் மீண்டும் இருப்பது. எக்காலத்தும் நிலைப்பது. அப்படி நிலைக்க வாழுங்காலத்தில் நன்மையை விதைப்போர் மரணத்தை வெல்லத் தக்கோராவர்.

இதலாம் கடந்து மரணம் இன்னொரு முகத்தைக் கொண்டுள்ளது, அது நினைவுகளுள் முற்களாய்ப் பிறக்கும் முகம். ஒரு தட்டில் உண்டு ஒரு படுக்கையில் உறங்கி ஒரு இதயத்துள் ஒன்றாய் நிறைந்து வாழ்வோர் பிரியும் வலி மரணத்தைக் காட்டிலும் கொடிது. அதை மறுப்பதற்கில்லை. எங்கு வந்தோம் எப்படிச் செல்கிறோம் என்றேதுமே அறியாமல் உயிரின்றிப் பிணமாய் கிடக்கும் ஒரு உறவு நட்பானாலென்ன, உடன்பிறந்தாலென்ன, உடன்வாழத்தான் வந்தாலென்ன எதுவாயினும் மரணமென்பது எத்தனை தனக்கான நிறைவோ அத்தனை பிறருக்கான தீரா வலியும்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 12

12. தங்களின் அகவயம் குடும்பப் பாசத்தையும் அன்பையும் சார்ந்து இயங்குவதாகக் கவிதைகளின் வழியே அறிய முடிகிறது. அயல்நாட்டில் வேலை செய்வதின் பாதிப்பு என்று எடுத்துக்கொள்ளலாமா?

முள்மேல் படுத்திருப்பவனுக்கு உடல்வலி இல்லாமலா இருக்கும்? பிரிவின் கொடுமையை அணுவணுவாய் தாயிலிருந்து அனுபவித்து, தந்தை தமக்கை தங்கையென்று தொடர்ந்து, அண்ணன் தம்பி நண்பர்களிடமும் முடியாமல், மனைவி குழந்தைகள் சுற்றமென ஊரின் உறவுகளின் மொத்த அன்பையும் அரவணைப்பையும் சந்தோசங்களையும் வாழ்வின் நன்மைதீமைகளையும் கடிதங்களின் வழியேவும்’ மின்னஞ்சல்களின் ஊடாகவும்’ தொலைபேசியழைப்பின் மூலமும்’ திரைப்படங்களைக்கொண்டும் பார்த்து ஏங்கி தவித்து தலையணை நனைந்த ஈரத்தில் வாழ்க்கையை அனுபவித்துக்கொள்ளும் பலரில் நானும் ஒருவனாக வாழ்ந்து வருகையில் அதன் ஏக்க முட்கள் இதயத்தைத் தைக்காமல் இருக்காது; அது வேறு..

வெறும் அது மட்டுமே காரணமென்றும் சொல்வதற்கில்லை. காரணம் எனது எழுத்துகள் வெறும் மனதின் நிறைவேறா ஆசைக்கு பதிலாகப் பொங்கும் ஈர உணர்வுகக்ளைக் கொட்டித் தீர்க்கும் வடிகால்தனைத் தேடி வந்தவையல்ல, பிறரின் நல்வாழ்விற்கு வழிகாட்ட தவம் கிடப்பவை.

அங்ஙனம் ஒருவருக்கு நல்ல வழிகாட்ட முற்படுவதெனில்; முதலில் அவருக்கு உயிர்களிடத்தில் பொதுவான அன்பு செய்தலைப் போதித்து விடுதல் என்பது ஞானத்தைக் கொடுக்க ஒரு துளியிலிருந்து ஆரம்பித்துவிட்டதற்குச் சமமாக; உணர்வுகளை சமன்செய்து எண்ணங்களை நல்வழியில் தூண்டி வெற்றியின் வழியில் பயணிக்க ஒவ்வொரு மனிதரையும் பண்படுத்துகிறது அன்பென்னும் பெருமந்திரம்..

அதோடு நில்லாமல், பரிசுத்தமான அன்பு என்பது தன்னலம் மறந்து பிறர்னலத்தின்கண் சிந்திக்கவள்ளது. இன்றைய அரும்பெருங் கொடுமைகள் நிகழ்வதற்கான அத்தனைக் காரணமுமே சுயநலத்துள் புழுத்துக் கிடந்து வந்தவைகள் தான். தனக்கே கிடைக்கவேண்டும், தான் வாழவேண்டும், தனக்கானதை மட்டுமே பாதுகாக்க வேண்டும், தனக்கென்றே போராட வேண்டும், தன்னாசை பெரிது, தன்னால் மட்டுமே எதுவும் முடியும், தனக்கே உரியது அது, தன் வயிற்றைத் தான் முதலில் நிரப்பவேண்டும், தன் ஜாதி பெரிதாக நிற்றல் வேண்டும், தன் குடும்பம் தனது ஊர் தனது நாடு என அத்தனையிலும் தனது எனும் நான் என் தான் முதலில் இருக்கிறது. அதை அகற்றவேண்டும் எனில் பிறரைப் பற்றியும் நினைக்கவேண்டும் எனில் பிறர் மீதும் பிற உயிர்களின் மீதும் அன்பு செய்தல்வேண்டும். அன்பினால் இவ்வுலகமே வெல்லக் கிடைக்கும் என்பது எனது இதயம் பதிந்த நம்பிக்கை. பதிந்தப் பெருமை எனது தாயன்பையும் தந்தையின் நன்னடத்தையையுமேச் சேரும்..,
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 13

13. பொதுவாக… வாழ்க்கை தத்துவமாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள்?

உண்மையே நமக்கான ஒளிவட்டம். ஒருவன் உண்மையாக இருப்பதை கடைபிடிக்கத் துவங்கிவிட்டால் எவ்விடத்தும் பொய் கூறவோ தவறை மறைக்கவோ இயலாது. உண்மைப் பேசுபவன் தவறிற்கும் பிற உயிர்களை வருத்தும் செயலுக்கும் அஞ்சி முறையாக இருக்கும் இடத்தின் மேன்மைக்குத் தக சிறந்தே வாழ முற்படுவான்.

ஒருவேளை அவனையும் மீறி சூழ்நிலைக் குறித்து தவறே நேர்ந்தாலும் அதை மறைக்காமல் ஒப்புக் கொள்ளும் மனநிலை உண்மையாக வாழ்பவருக்கு ஏற்படும். அங்ஙனம் தன் தவறை மறைக்காமையால் அடுத்து அந்த தவறு நிகழாமல் நடக்கப் பக்குவப்படுவதோடு நடந்த தவறுக்கு ஏற்ப நன்மையை செய்தாற்றுவது பற்றியும் ஆலோசிக்க எண்ணம் ஏதுவாகும். ஆக நாள்பட நாள்பட கண்ணியமும் நேர்மையும் ஒழுக்கமும் உண்மையின் கண் ஒருவருக்கு வாய்க்க ஞானவொளி கண்களில் பரவும். உண்மை ஒளிவட்டமாக இருந்து எங்கு செல்லினும் அவரைக் காக்கும்..

அவர் காக்கப்படுதல் கண்டு அங்ஙனம் வாழ பிறருக்கும் ஆசை வரும். ஒருவரால் நான்குப் பேர் மாற, நால்வரால் நூறுபேர் மாறுவர், நூறு ஆயிரம் ஆகும் ஆயிரம் கோடியில் கூடி உண்மையின் கண்ணியத்தை உலகெங்கும் பரப்பி நாளையை நல்வழிபடுத்த இன்றிலிருந்தே இப்போதிலிருந்தே உண்மையாக வாழப் பக்குவப் படுங்கள். உண்மையாக இருத்தலே நம் வாழ்வினைச் சிறப்பிக்கும் எளிய தத்துவமாகும்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக