49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..

வியர்வை வாசத்தில்
மனம் ஈரமாகிப் போவதுண்டு.,

இன்றும் அப்படி
அவனின் வியர்வை வாசத்தில்
நனைந்துபோனேன் நான்..,

இரவுகள் கிடைக்காததொரு பகல்
எத்தனை ஈர்க்குமென்று
ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும்,

அவனின் வாசம்
அப்படியொரு வாசம்.., மனதை
அள்ளிக்கொள்ளுமொரு மனம்,

மோக முற்கள்
உடம்பெல்லாம் தைக்கத் தைக்க
சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில்
உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால்
அந்த வாசமும் அப்படிப் பிடித்துப்போனது போல..

மனதுள் ஒட்டியிருக்குமந்த வாசத்தை
தேடித் தேடி
வீடெங்கும் அலைகிறேன்
ஏதோவொரு சட்டையிலிருக்கும்
அவனின் வாசமென்று
ஒவ்வொரு சட்டையையாய் எடுத்துத் தேடி தவிக்கிறேன்,

குபீரென வீசுகிறது அவனின் மணம்
வீடெங்கும் பரவுகிறது அவனுடைய
மனம் மயக்கும் வாசம்,

அவசரமாய் துணி விலக்கி துணி விலக்கி
அங்குமிங்குமாய்ப் பார்க்கிறேன் –
ஒரு மலர் சட்டென மலர்ந்ததுபோல்
ஓரிடத்தில் வீசும் வாசம்கண்டு
மலைக்கிறேன்
துழாவிய கைகளை விட்டுவிட்டு
எதிரே நிமிர்ந்துப் பார்க்க; அவன்..
அவனேதான்..
மனதில் நிற்பதைப்போலவே வந்து
எதிரே நிற்கிறான்;
அன்பு –
பாயும் நதியெனப் பாய்கிறது அவனின்
பார்வையிலிருந்து,

அருகே வந்து
அருகே வந்து
நெருங்கி நிற்கிறான்
ஆஹா… உயிரை தொலைக்கிறேன்
உலகத்தையொரு கூட்டினுள் அடைக்கிறேன்
வாழ்க்கை ரசிக்குமிடத்தில் இனிக்கிறது
வெறுக்கையில் மட்டுமே கசக்கிறது!!
—————————————————————
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..

ரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன்,
கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன்
அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள்
முடமாய்க் கிடக்கிறேன்;

வாசலில் பூசணி உடைக்கிறேன்
உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன்,
காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன்
இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;

யாருக்கு யாரென்றுத் தெரியாமலே
காதலில் உலகை மறக்கிறேன்;
பின்பு கட்டிய மனைவின் தாலிவைத்து – ஒரு
குவாட்டரேனும் வாங்கிக் குடிக்கிறேன்;

யாருக்கு என்னானால் எனக்கென்ன
எதிர்வீட்டு மல்லிகையில் மணக்கிறேன்,
எல்லாவற்றிலும் நானே ஜெயிக்க
எவரின் கழுத்தையறுக்கவும் துணிகிறேன்;

சோற்றுக்கு தெருவெல்லாம் அலைகிறேன்
எவன் பாட்டுக்கோ கைதட்டி குதிக்கிறேன்;
சினிமா பார்த்து கட்டவுட்டு வைக்கிறேன் – பெற்றத் தாயை
மிதித்தேறி அவனுக்குப் பாலபிசேகம் செய்கிறேன்;

குழந்தைக்கு விரல்நசுங்கிச் சிரிக்கிறேன்
மருத்துவம் செய்யா மனைகளையும் பொருக்கிறேன்,
காசுக்கு ஆன தொழிலென எதையும் வெறுக்கிறேன்
உலக மாற்றத்தையே மனதிற்குள்ளிருந்துத் தொலைக்கிறேன்;

கரியாகிப் போகப்போக பணத்தைப்
பட்டாசாக்கி வெடிக்கிறேன்,
குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
கடன்பட்டேனும் புதைக்கிறேன்;

படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,
உலகம் இருட்டு இருட்டென்று சபிக்கிறேன்
சாபத்தினுள் முதலாயென்னையே எரிக்கிறேன்;

மீண்டுமொரு –
பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
மயான எல்லைக் கண்டு திகைக்கிறேன்
மாயும் உலகமே வாவென்று விழிக்கிறேன்
கனவுதானென்றறிந்ததும் –
கை விசமள்ளிக் குடிக்கிறேன்!!
———————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | 4 பின்னூட்டங்கள்

60, ஒரு சொல் போகும் நேரம்..

னக்கென்று பிறந்த ஒன்று
இன்று எனைவிட்டுப் போகப்போகிறது;

நான் சிரிக்கையில் சிரித்து
அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது;

நடக்கையில் நடக்கவும்
உறங்கையில் உறங்கவும்
சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று
போகப்போகிறது

வளரும்போதே உடன் வளர்ந்து
எனை வளர்த்த
தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது

அசிங்கம் பேசினாலும் சரி
அவதூறு பேசினாலும் சரி
செய்வது எதுவாயினும்
நான் சொல்வதை மட்டுமே செய்த ஒன்று
போகப்போகிறது;

எனைவிட்டு இம்மியளவு பிரிந்ததில்லை
வேறு யாருக்கென்றும் பிறக்கவில்லை
எனக்காகவே பிறந்ததின்று
போகப்போகிறது;

கல்லை நொருக்கவும்
காலத்தை அறுக்கவும் முடிந்த அதை
எப்படி என்னோடிருந்து அகற்ற
மனம் கொண்டேனென யோசிக்கிறேன்,

வேறென்ன செய்ய வலிக்கான மருந்தில்லை
வலியை பொறுக்கும் பலமுமில்லை
வேறு வழியின்றி
அகற்றியப் பல்லிற்கு விடைகொடுக்கிறேன்; போய் வா..

பல் போனால் சொல் போனதாய்
சொன்னவர்களை பயத்தோடிங்கு
நினைவு கூறுகிறேன், போ..

என்றாலும் எனது சொற்களை சொச்சப் பற்கள்
சேகரித்துக் கொள்ளும்
தமிழ் இனியுமதில் நன்றே மணக்கும்..

பிடிங்கி எரியுமளவிற்கான வலியை யொழித்த
விடுதலையை இனி
மற்ற பற்கள் கொண்டாடும்..

வாழ்க அந்த பல்பிடுங்கிய மருத்துவர்
ஒழிக சொத்தைப் பல்வலி..
———————————————————–
வித்யாசாகர்

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..

னதிற்குள் மறக்காத முகம்
அவளுடைய முகம்;

இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில்
சிரிக்கவும்
அழவும் வைப்பவள் அவள் மட்டுமே;

அவளுக்கும் எனக்கும் அன்று
அப்படி ஒரு காதல் இருந்தது..

நான் அழுதால் அவள் அழுவாள்
நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள்
ஏனிப்படியிலேறி
மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல
மனசு மேலேறி மேலேறி மீண்டும்
அவளின் காதலுள் விழுந்த அந்த கணங்களை
அவளுக்கும் நினைவிலிருக்கும்;

ஒருநாள் இரண்டு நாளல்ல
பதினாறு வருடங்கள் ஆகிறது நாங்கள் பார்த்து..

காலமும் தூரமும்
காணாமுகமும் எங்கள் காதலை
மறக்கடித்ததில்லை..

காத்திருந்து காத்திருந்து தவித்த நேரமெல்லாம்
மனதிற்குள் புகுந்து
உயிர்வரை நிறைந்துப் போனவர்கள் நாங்கள்..

எழுதிய டைரியை கிழித்துப் போட்டு
கிடைத்த வாழ்க்கைக்கு அகப்பட்டுக்கொண்டதைப் போல
மனத்தைக் கிழித்து
அழித்துக் கொள்ள முடியாத நினைவும்
வலியான நாட்களும்
வலியாகவே கடக்கிறது எங்களுக்குள்..

குழாயடியில் பார்த்ததில்லை
கடைத்தெருவில் நின்றுப் பேசியதில்லை
பள்ளிக்கூட புத்தகத்தில் –
காதல் கவிதையெழுதித் தந்ததில்லை
முகத்தோடு முகம் பார்த்து
மனதோடு மனது பேசி
ஒரே வீட்டில் வருடமிரண்டையும்
மௌனத்தில் கழித்துப்
பிரிகையில் –
கண்ணீரால் மனதை கசக்கி
உயிர்வரை வலித்துக் கொண்டு
வீட்டிற்கெனப் பிரிந்த ஒரு உன்னத காதலின்
வெளியில் தெரியா சாட்சிகள்தான் நானும் அவளும்..

அறியாத மொழியும்
புரியாத இடமும்
புதிதாக எல்லாமே முளைக்கின்ற தருணம்
பூ போல் உள்ளே பூக்க
காதலாய் காற்றென வீச
சிரித்துக்கொண்டே எதிர்வந்து நின்றவள்,

மணக்கின்ற மனசு இதுவென்று அறியும்
பார்வை பேசிய மொழியில்
உயிராழம்வரைத் தொட்டு
உடல் சிலிர்க்கப் பார்த்த
அவளை
இன்று வரை மறந்து மனசது துடித்ததேயில்லை..

பாட்டுகேட்டு வலிக்கையில்
படம் பார்த்து வலிக்கையில்
கனவில் அவளைக் கண்டு மனசு நோகையில்
ஐயோ இன்னொரு காதலரிப்படி இனி
பிரியவேக் கூடாதென்று எண்ணியழுவேன்

அவளும் அழுதிருப்பாள்
துடித்திருப்பாள்
பாவமவள், பார்வையில் மட்டுமே பேசத் தெரிந்தவள்
வலிக்கையில் அழமட்டுமே முடிந்தவள்
அழையையும் –
வலிக்க வலிக்க அடக்கிக் கொள்பவள்..

அவளை முதலில் கண்ட நாளும்
விட்டுப் பிரிந்த நாளும்
காதலைச் சொன்ன நாளும்
காதலித்த நாட்களெல்லாமும்
காலண்டரில் கண்டால் கூட வலிக்குமென்று
யாருக்கு இனி புரியப் போகிறது;

என்ன தான் காதலென்றாலும்
மனசு என்றாலும்
நோகும் என்றாலும்
உயிர் போகுமென்றாலும்
இந்த உலகத்திற்கென்ன (?)
அது பற்றியெல்லாம் யாருக்கிங்கு கவலை ?
சுத்தும் பூமி எங்களுக்காக நிற்கவாப் போகிறது ?
அதன் சுழற்சியில் வரும்
இரவையும் பகலையும் நிறுத்ததாத காதல்
மனதிற்குள் மட்டும் வலிக்க வலிக்க வாழ்வதை
தலையெழுத்தென்றுச் சொல்லும் உலகை
எங்களின் இருசாமி மதங் கொண்டு எப்படி மறுக்க (?)

எப்படியோ
ஒன்றுமே இயலாத நிலையில்
பிரிய மட்டுமே முடிந்தது எங்களுக்கு.

நிமிடம் மறக்காது
ஒருநாள் பார்க்காது உதிக்குமந்த
சூரியனைக் கூட
வெறுக்கவைக்கும் நெருக்கத்திலும்
விதியைப் பற்றி அறியாமலே பிரிந்தோம்
நிரந்தரமாய் பிரிந்தோம்
பிரிவோம் என்று அன்று எண்ணாததைப் போல
சேர்வோம் என்றும் எண்ணியதில்லை
ஆனால் சேர்ந்தேயிருப்பதாகவே எண்ணி
கடக்கிறதெங்கள் காலம்..
—————————————————–
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

னையாளும் ஐயனுக்கு
மடிதாங்கும் அன்னைக்கு
ஒளியாகி வளியாகி உயிராகி
உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்!

மொழியாகி பேச்சின் அழகாகி
முதலாகி எழுத்தின் மூலமாகி
விழுதாகி எங்கும் செறிவாகி
தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்!

நெருப்பின்றி நீளும் ஒளியாகி
மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி
இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி
எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; சந்தவசந்தமே வணக்கம்!

வியாலும் கற்றக் கல்வியாலும்
உழைப்பாலும் கலைத் திறனாலும்
திகட்டாத எம் தமிழுக்கு; சளைக்காது வார்த்தைச் சரம்கோர்த்து
மொழியாளுமெங்கள் தலைமைக்கு
இச் சிறியோனின் சிரந்தாழ்ந்திட்ட மரியாதை மிக்கதொரு வணக்கம்!!

கவியரங்கம் : 37
தலைமை : ஐயா தமிழ்த் திரு. வா.வே.சு.
தலைப்பு: “திசைமாற்றிய திருப்பங்கள்”
இடம் : சந்தவசந்தம் இணைய குழுமம்

மேலெறியப்பட்ட பந்தொன்று
கீழ்விழும்போன்ற சமையமது..
வாழ்வின் சறுக்கலில் சாய்ந்த குடும்பமொன்று
பசிப் பள்ளத்தில் விழுந்து
எழுந்திருக்கமுடியாமல்
குஞ்சுப் பறவைகளெல்லாம் தாயினலகைக் கொத்திய நாட்களது..

பழையச் சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஊற்றி
வயிறுகளை நிரப்புவோம்;
அம்மா
கண்ணீரைச் சிந்திச்சிந்தி வீடெங்கும் நனைப்பாள்;
வீடு
அப்பாயிருந்த நினைவுகளைச் சுமந்துக்கொண்டே
வறுமையில் மூழ்கும்..

வறுமை தனது வலிய கால்கொண்டு
மிதிக்கும்;
வாழ்க்கைச் சிறகுகளைப் பொருளாதாரம் உடைக்கும்
வீட்டாரின் சோற்றிற்கு வழி தேடியலைந்த நாட்களை
சித்திரம் வரைந்து வரைந்துப் புதைப்பேன்;
சில மீதநாட்களை
கராத்தே என்று தொலைப்பேன்..

கடைசியில் ஓவியம் ஒரு கையாகி
நம்பிக்கை மறு கையாகி
செல்வாக்கென்னும் துடுப்பின்றி
வெற்றியின் இலக்குநோக்கி
வறுமைக் கடலில் நீந்தியப் பயணமது..

வாழ்க்கையை
அன்னாந்து வாஞ்சையோடுப் பார்க்க
அதற்குமுன் வலித்த வலிகளெல்லாம்
வாசல்களாய் மெல்ல மெல்ல
திறந்துவந்த தருணமது..

தலைகொத்திய மீன்கள் பின் வருந்தி
திசைக்காட்டியதைப் போல;
உடல்சுட்ட வெல்டிங் வேலை
எழுத ஏடெடுத்தும் தந்ததெனக்கு,
மனஞ் சுடும் மிருகங்களுக்கிடையே
மனிதரை மதிக்கும் மேலுணர்வும்
கீறப்பட்ட இடமெங்கும் தழும்புகளாய்ப் பூத்தது..

சிறகுகளுக்குப் பறக்க கனவுகள்
கற்றுத் தருவதும்,
கனவில் விரிந்த வானம்
வாழ்க்கையை வெளுப்பதும் கவிதைகளாயின;

கதறிக் கதறியழுத அழைகளும்,
கல்லில் அடித்த
ஆணிபோன்ற பிடுங்கமுடியா வலிகளும்
கதைகளாயின..

இரவில் எழுத்தென்றும் பகலில்
பற்றவைப்பென்றும்,
பகலில் மேல்படிப்பென்றும் இரவில்
படைப்பென்றும்
உடம்பின் வலிகளை
வெற்றியின் நிலத்தில் புதைத்தேன்;
சிந்தும் வியர்வையையும்
சோர்ந்த சமையங்களையும் வாழ்வின் பாடத்தில் நிறைத்தேன் ..

வருடம் மாற மாற வாழ்க்கையும் இடம் மாறி
பசி தேடியலைந்த பாதை
பணம் தேடியலைய,
உழைப்பின் வலிமையில் நின்ற இடம் நகர்ந்து நகர்ந்து
உயர்ந்து உயர்ந்து
சற்றுத் திரும்பிப் பார்க்கையில் –

கண்ணீரின் தடம்..
காயங்கள் ஆறாத ஏமாற்றத்தின் வடு..
ம்ம் பார்க்காதே போ.. ஒடு.. ஓடு..
இன்னும் வேகமாக ஓடென்று கன்னத்தில்
மாறி மாறி அறைந்தது.

மீண்டும் மீண்டும் ஓடுகிறேன்
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
இடையிடையே திரும்பிப் பார்த்துக் கொள்கையில்
சிலரென்னை கைகாட்டி
பொறியாளனென்றும்
மேலாளரென்றும்
படைப்பாளியென்றும் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்கிறது..

எனது எழுத்துக்களையும் ஆய்ந்து சிலரை
முனைவராக்கியத் தகுதி மெல்ல
பாடல்களாய் பரிணாமமெடுக்கிறது
பாடல்கள் வெள்ளித்திரையை நோக்கியும் நகர்கிறது
இப்படி மதித்தும்
மதிக்கப்படாமலுமின்று
வெற்றிகளில் சில கண்ணெதிரே கனக்க,
அதைத் தலையிலேற்றிக் கொள்ளாமல் – அன்று
பழையச் சாதத்தில் ஊற்றி ஊற்றிக் குடித்தத் தண்ணீரை
அடிக்கடி நன்றியோடு நினைத்துக்கொண்டு –

‘திசைமாற்றியத் திருப்பங்கள்’ தலைப்பு பற்றி
சிந்திக்கிறேன்;
உண்மையும்
முயற்சியும்
உழைப்பும்
நம்பிக்கையும்
நம்பிய மனிதர்களும்
கடவுளும்
திறந்துவைத்த வெற்றியின் கதவுகள்
வாழ்வின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது;

மனிதம் மட்டுமே அதில் பெரிதாக மின்னுகிறது..
——————————————————————-
நன்றிகளுடன்…

வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்