வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)

சை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் வர்ணத்தைக் காணும் மனசு ஆசைக்குள் தான் அடங்கிக்கிடக்கிறது. நடந்தவனை ஓடவைத்ததும், உடம்பில் இலை கட்டி அலைந்தோரை கோர்ட் சூட்டிற்கு மாற்றியதும் ஆசைதான்.

ஆசையில்லையேல் அசைவிலொரு அழகிருக்காது. வாழ்வில் ரசனை கூடியிருக்காது. வெற்றியின் நெருப்பென்று ஒன்று மூளாமலேப் போயிருக்கும். வாழ்பவரை, வெறுமனே மூச்சு விட்டுக்கொண்டு தின்று உறங்கித் திரிந்தோரை வானத்திற்கும் பூமிற்குமாய் குதிக்கவைத்தது ஆசைதான். நினைப்பவனால் நகரமுடிகிறது எனில், முயற்சிப்பாவனால் பத்தடிக்கு மேல் தாண்டமுடியுமெனில்; ஆசைபட்டவனால்தான் முதலிடத்தை அடையமுடிகிறது.

ஆசையில்லையேல் வாழ்வில் வண்ணமேயில்லை, வெள்ளைத்தோலுக்கு வண்ண ஆடை மாட்டியதும், கருப்பு இருட்டிற்கு மிண்ணும் விளக்கை ஏற்றியதும் ஆசைதான். மனிதரை ஞானியாக்கவும், ஞானியைத் தேடி மனிதர் அலையவும் மனதிற்குள் தீ மூட்டுவது ஆசையொன்றே.

காதல் அரும்பியது, வாழ்வின் காட்சிகள் மாறியது, வருடத்திற்கு இத்தனை நாளென கண்டுபிடித்தது வரை அத்தனைக்குள்ளும் ஆசையின் ஒரு துளி தீயேனும் இல்லாமலில்லை. இரவுபகல் மாறி மாறி வருவதைப்போல் ஆசை அதுவாக மனதில் ஊறிக்கொண்டேயுள்ளது. அது நினைப்பதையெல்லாம் ஆசை நடத்திக் கொண்டேயுள்ளது.

ஆசையில்லாதவரை உலகம் ஒரு பென்சில் புள்ளிபோலெண்ணி அலைத்துவிடுகிறது. கைக்குட்டை மடிப்புபோல வாழ்க்கை மடிக்க மடிக்க இரண்டாகும் நிலையை ஆசையற்றோர் அறிவதேயில்லை. வீசும் காற்றைப் பிடித்து வீட்டில் சில்லென்று அடைக்கவும், பாயும் நதியை முடக்கி தடம் மாற்றி ஓடவிடவும் மனிதனுக்கு ஆசையே முதல் விதையாகிறது

இனிப்பென்றும் கசப்பென்றும் அறிய முடிந்த மனிதனுக்கு அதை எழுதிவைக்க ஆசை வேண்டும். அடியென்றும் மேலென்றும் அறிந்த மனிதன் அதைத் தொட்டுப்பார்க்க ஆசை வேண்டும். இருளென்றும் வெளிச்சமென்றும் சுழலும் பூமியை எதுவென்று அறிய ஆசைய வேண்டும்.

ஆசையில்லையேல் ரசமில்லை. துன்பாம் கொண்ட மனிதனை இன்பம் நோக்கி நகர்த்தும் சக்தி ஆசைக்கேயுண்டு. காடுகளை வீடுகளாக மாற்றியதும் வீட்டிற்குள் வெற்றியின் விதைகளைத் தூவியதும் ஆசையொன்றே.

ஆனால் அந்த ஆசைக்கு ஒரு அளவு வேண்டியுள்ளது.

பஞ்சில் எரியும் நெருப்பை இடம் நிறுத்தி வைக்காவிடில் எங்கும் பரவிப்போகும் அபாயம் ஆசைக்குள் உண்டு. எரியும் விளக்கை வீட்டிற்குள் வைப்பதும் கூரையின் மேல் எறிவதும் செய்பவரைப் பொருத்தது எனில் ஆசை நம்மை ஆக்குவதும் அழிப்பதும்கூட நாமதை ஆள்வதைப் பொருத்தேயுள்ளது.

ஆசை ஒரு தீ, பெருந்தீ. அதைக் கொளுத்திவிட்டால் அணைக்கும் ஆயுதம் போதுமெனும் மனசென்று நம்புங்கள். ஆசை வேண்டும் தான், ஆனால் ஆசையோடு ஒரு அளவும் வேண்டும். ஆசை பலாப்பழம் மாதிரி முள்ளும் இருக்கும் பிரித்துண்டால் இனிக்கவும் செய்யும். இனிப்பதை தின்றோமா அல்லது முள்ளின்மேல் விழுந்தோமா என்பது அதைப் பயன்படுத்துபவர் கையிலுண்டு.

புத்தர் என்ன சாதாரண ஆசையினைக் கொண்டவரா ? மகா ஞானத்தையடைய மரத்தடியில் காத்திருந்தவர். மனிதரின் வலியைக் கண்டு வாழ்வைத் துறந்தாலும், சாபம் கொண்டோர் படும் அவதியை மாற்ற ஞானம்கொள்ளும் ஆசையைக் கொண்டார் புத்தர். ஆனால் ஆசை கேட்டதைக் கொடுக்கும், தட்டுமிடத்தைத் திறக்குமென்பதால்தான் ஆசையை ஒழி என்றார். காற்றில் பறக்கவும் காடுகளை எரிக்கவும் முடிந்தவன் மனிதன் என்றறிந்ததால்தான் ஆசையை அடக்கு என்றார்.

“ஆசையே துன்பத்திற்குக் காரணம், ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம், மனம் சொல் செயல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும், எப்போதும் உண்மையே பேசவேண்டும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும், இவையே புத்தரின் போதனைகளாவன என்று மனப்பாடம் செய்தோமே யொழிய எத்தனைப் பேர் அதன்படி வாழ்ந்து பார்த்திருப்போம். வாழ்க்கையின் அணுகுமுறையை, நகர்தலை, வாழ்தலை இதைவிட அளவிட்டுச் சொல்லவேண்டிய அவசியமற்ற ஒரு நிலையை இந்தப் புத்தரின் போதனைகள் அடைந்துவிடுகிறது. அனால் தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கத் தெரிந்த நமக்கு புத்தர் கூட ஆசைக்கு எதிரியானது தான் மிச்சம்.

முதலில் அவர் சொன்ன மற்ற விசயங்களையெல்லாம் நாம் கடைபிடிக்கவேண்டும், அது முடியுமெனில் ஆசையை ஒழிப்பது பற்றி ஆசைப்படவேண்டும். வாழ்வதை இத்தனை எளிதாகச்சொன்ன மகான் ஆசையை ஒழி என்றால் எதற்குச் சொல்வாரென்று யோசிக்க வேண்டாமா?

ஆசையொரு பெருந்தீயில்லையா (?) அது மூள மூள மூளுமில்லையா? எரிய எரிய எரியுமில்லையா ? போக போக அழிக்குமில்லையா ? எனவே அதை அடக்கு என்றார். அழி என்பதன் அர்த்தம் நிறுத்து என்பது. நிறுத்து என்றதன் பொருள் போதுமென்பது. போதுமென்று நின்றால் அங்கே வேண்டுமென்று ஆசை வராது. வேண்டுமெனும் தேவை தீர்ந்தால் அங்கே ஈதல் எனும் தர்மம் பிறக்கும். ஈதல் எளிதாகிவிடின் சுயம் தானாக அழியும். சுயம் அகன்ற வெற்றிடம் ஞானத்தின் கொள்ளிடமில்லையா?

ஆக புத்தர் சொன்னது ஆசையை முற்றிலும் ஒழிப்பது பற்றியல்ல. அது முற்றிலும் ஒழிவதுமல்ல. ஆசையை அடக்குதல் வேண்டும். ஆசையை அணுக வேண்டும். கோபத்தைப் போல பொறாமையைப் போல ஆசையுமொரு உள்ளத்தில் எரியும் நெருப்பு. அதை ஆளத் தெரிந்தவர் ஆசையை தீபமாக்கிக் கொள்கிறார். வீடும் வாழ்க்கையும் ஆசையினால் வெளிச்சமாகிவிகிறது. சிலரதை நெருப்பாக மட்டுமே மனதிற்குள் கொளுத்திப் போடுகிறார், அது அவரையும் வீட்டையும் ஊரையும் இந்த உலகத்தையுமே கூட சேர்த்தெரிக்கிறது.

எனவே புத்தர் சொன்ன ஆசையை ஒழிப்பது என்பது நிர்வாணமாய் திரிவதல்ல, ஒரு சட்டையோடு நின்றுப் போவது. இரண்டு சட்டை கிடைத்தபின் பிறர் நிர்வாணம் பற்றியும் எண்ணம் கொள்வது. பத்து சட்டை பேராசை. நூறு சட்டை கொடிய ஆசை, எனில், ஒரு சட்டை வாழ்தலின் தேவை போல் ஆசையும் ஒரு வாழ்வை வெளிச்சமாக்கும் திரிநெருப்பென்றே உணர்வோம். ஆசையை அளவுபடுத்துவதை நாம் நமது வீட்டிலிருந்து துவங்குவோம். அதிலும் நல்லது நல்லதை’ நமக்கான மாற்றத்தை’ நம்மிடமிருந்தே துவங்குவோம்.

எதையும் முதலில் தன்னிடமிருந்தே துவங்கவேண்டியுள்ளது. வீட்டிற்கு அசையும் மனசு அண்டை வீட்டாருக்கும் அசைகிறது. செய் செய் என்பதை விட செய்து காண்பிப்பது உத்தமம். வாழ் வாழ் என்பதை விட வாழ்ந்துக் காண்பிப்பவனே சாதனையாளன்.

எனக்கு ஒரு கையளவு சோறு போதுமெனில் ஒரு சட்டியை மறைத்துவைத்துக் கொள்பவருக்கே புத்தர் ஆசையை அறு என்றார். அவருக்குத் தெரியும் ஆசை மனிதனை செய்தது. மனிதனைச் செய்வது ஆசைதான் என்று அவருக்குத் தெரியும். ஆசை சேர்ந்த கலவைதான் மனிதன் என்று தெரியும். அதனால்தான் ஆசையை அறுக்கச் சொன்னார். அறுக்கச்சொன்னால் தான் குறைத்தாவது கொள்வான் மனிதன் என்று நம்மைக் காலக்கண்ணாடியில் பார்த்தவர் புத்தர்.

நாமும் அவரை தாண்டி எங்கே போக? ஆசையை அறுங்கள். தனக்குப் போதுமான வரை, தான் வெல்லும்வரை, தன்னோடுள்ளவர் வெல்லும் வரை, அருகாமை மனிதர் அமைதியோடு வாழும்வரைக்கும் போதுமானது போக மீதமுள்ள ஆசையை அறுத்து மனதுள் அடக்கிக்கொள்ளுங்கள். ஆசையை நிறுத்தாதீர்கள். ஆசை வேண்டும். நிற்பதெனில் ஆசையை விட்டு விடலாம். நடப்பதெனில் ஆசை வேண்டும், பறப்பதெனில் ஆசை வேண்டும், வாழ்வது அனைவருக்கும் வசப்பட வேண்டுமெனில் அதற்கென ஆசைப் படுங்கள்.

பசியை அறிந்திருக்கும் அளவு உணவு, உணவு நம்மை எரிக்காத எல்லைக்குப் பணம், பணம் பிறருக்கும் உதவும் வகையில் சொத்து, சொத்து நாமில்லாதபோதும் நம்மொடுள்ளவரை காக்கும்பொருட்டு கல்வி, கல்வி பிறரின் சுதந்திரத்தைப் பிடுங்காதவாறு தொழில், தொழில் அடிமைத்தனத்தை அகற்றி அவரவர் திறமையால் அவரவரை முன்னேற்றும் கண்ணியத்தை பெறுமளவிற்கு ஆசையென ஆசைக்கு ஒரு அளவீடு வேண்டும்.

ஆசை நமக்கென்று இருக்குமெனில் அது நம்மையெரிக்கும் தீயாகவேயிருக்கும், அதுவே பிறருக்கென்றும் உள்ளேப் பூக்குமெனில் அது தீபமாகவும் ஒளிரும். அப்படி பிறரின் நன்மைக்கென ஒளிரும் தீபத்தை ஏந்தித் திரியுங்கள் உறவுகளே. எங்கும் தீப ஒளி புத்தரின் ஞானமெனப் பரவட்டும். ஞாலமெலாம் சுயநல நெருப்பணைந்து பிறர்நல வெளிச்சம் நிறையட்டும். வேகுமொரு நெல்லில் பாதியேனும் பிறருக்காகவும் வேகட்டும். போகுமொவ்வொரு உயிரும் இன்னொரு வாழும் உயிருக்கான எருமூட்டியேப் போகட்டும்..

சுற்றும் பூமிபோல, கொட்டும் மழைபோல, வீசும் காற்றுபோல, ஒளிரும் கதிர்போல, அண்டத்தைக் காத்துநிற்கும் வானத்தைப்போல அனைத்திற்குமாய் நாமும் வாழ்வோம். நமக்கான ஆசை நம்மோடுள்ளவருக்குள் நன்மையை பூப்பிக்கட்டும். நன்னிலமெங்கும் வழும் உயிர்கள் நலமோடு வாழட்டும். வாழ்க்கை வாழுவது இனிது; அதை வாழும்போதே மனிதர் உணர பொதுநல ஆசையைக் கொள்வோம். சுயநல ஆசையை யொழிப்போம்..

காலம் கையளவில் நிறையும் பொருளெனில், அதை பிறருக்காகவும் நிறைப்போம்.. கலங்கமற வாழ்வோம்..

வாழ்க வையகம், வளரட்டும் நல்லாசைகளின் பெருந்தீ..
——————————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

டம்பு சுடும் சூரியனை
விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம்
வியர்வையால நனைச்ச மண்ணு
உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு;

புலரும் காலைப் பொழுதை எமக்கு
ஒப்பாரியா கொடுத்த மண்ணு
படி அரிசி நெல்லு தேடி
தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு;

பாவிமக பொறந்த நேரம்
பச்சவயல் காயுந் தூரம்
வாழ்க்கையது விடியலை சாமி,
ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை சாமி;

வீட்டுக் கிணறு வற்றிப் போச்சி
நாட்டுநடப்பு நாசம் ஆச்சி
ஓடிப் பாயும் நதிக்குக் கூட
அணையைக் கட்டும் அற்ப ஆட்சி;

இனி ஏர் புடிச்சி யாரு உழ
ரத்தம் உறிஞ்சும் வயலில் அழ
பாவி சனம் புரியா மண்ணுல
ஜீவன் செத்துதொலையும் கேட்க ஆளில்ல;

வெள்ளைவேட்டி கிழித்து நனைத்து
வயித்துமேல கட்டியாச்சி
எம் புள்ள அழுதே பாலு வேணும்
அந்தப் பாழும்மழையும் தோத்துப் போச்சு;

யாரை நம்பி நாளை எழ
ஊரை நம்பி ஓடி விழ
அரசியல் சாயம் கரைந்த தண்ணில
கொஞ்சம் விஷம் முளைச்சா பிறப்பு தீரும்

இந்த வலிக்கும்உசிரு விட்டேப் போகும்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்..

தெரு தெருக்குச் சாராயம்
வழிநெடுக்கப் போராடும்
வறுமைக்குக் குழிதோண்டும்
வாழ்க்கைக்கு பாதாளம்!

இளமைக்கு இடராகும்
இயற்கைக்கு எதிராகும்
இன்பத்தின் எல்லையிலும்
போதை; துன்பத்தின் துளிராகும்!

கல்விக்கும் கால் சறுக்கும்
கடலில் உப்பாய்ச் செல்வங் கரையும்
சந்ததிக்கும் குடிகாரப் பழிசூட்டும்; சாகும்போது(ங்)கூட
ச்சீ இவனான்னு பிறர்வாயில் பிறப்பு நாறும்!

ஒருநாள்னு குடிப்பவனும்
ஓலைக் குடிசையில் அடிப்பவனும்
மாடிவீட்டில் காலாட்டி பெப்சியூத்தும் பெருமகனும்; போதைக்கு
விலைபோன புழுவுக் கீடென்று திருந்துகையில் தெரியவரும்!

ஓரறிவு மலரும் ஒருகாடு மணத்துதிரும்
நாலறிவு பறவை கூட நீர்விட்டு பாலருந்தும்
ஐந்தறிவு கால்நடையும் நாற்றமெனில் நகர்ந்துப்போகும்; பகுத்தறியும்
மனிதனுக்கு போதை குலமொழித்தாலும் குடிக்கப் பிடிக்கும்!

கல்லில் முளைக்கும் புற்கள் அழகு
மண்ணில் ஊறும் தங்கம் உயர்வு
சேற்றில் மலரும் செந்தாமரை சிறப்பு; போதையில் நாறும்
மனித நாற்றுக்களோ நாகரிகப் புரட்சியின் வெகுவேக வீழ்ச்சி!
—————————————————————
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)

னிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும்.

ஆனால் அந்தப் பொறாமையென்ன சும்மாவிடுமா? முதலில் பிறரை நோகடித்து, கடைசியில் தன்னையும் அழித்து, தனது சுற்றத்தையே ஒன்றுமில்லாதவாறு அழித்துவிட்டு வெறும் தோல்வி கரிந்துப்போன சாம்பளாகவோ அல்லது மனிதத்தை ஒழித்துவிட்ட ராட்சசப் பசியாகவோ மட்டுமே மிஞ்சிப்போகும்.

அத்தகைய பொறாமையால் அழிந்தோர் எண்ணற்றோர். அப்படி எரிந்துக் கருகிய மனதில் மரணம் முட்டி மிஞ்சியச் சாம்பலில்கூட பொறாமை நீருபூத்து சுடும் நெருப்பாகவே கனன்று பிறரின் நல்லெண்ணங்களைக்கூட எரிக்கத்தக்க கடுந் தீஞ்செயலாகவே மாறிவிடுகிறது.

அதேவேளை பொறாமையற்றோரைப் பாருங்களேன்; பொறாமையில்லா மனசு ஒரு பூஞ்சோலை மாதிரி. அங்கே அன்பின் காற்று சில்லென்று வீசும், பெருந்தன்மையின் கடலென அவரின் மனசு விரிந்திருக்கும், கேட்டதைக் கொடுக்க இயலாவிட்டாலும் அவரால் நினைத்ததை செய்து தரமுடிகிறது. அவருக்கென மரங்கள் தனியே அசைகின்றன. சுடும் சூரியன்கூட கொஞ்சம் ஒதுங்கி மேகத்துனுள் மறைந்துக்கொண்டு அத்தகையோரை சுடக்கூட அஞ்சுகிறது. தெளிந்த நீரோடையில் தெரியும் சிறுகல் மற்றும் மணலைப்போல, வெள்ளெந்தியாய், பார்ப்பவருக்க்கு அவரின் முகத்தைக் காட்டும் கண்ணாடியைப் போல சுத்தப்பட்டுவிடுகிறது பொறாமையில்லா மனசு.

உண்மையில் பொறாமையின்றி வாழ்வது எத்தனை இனிமை தெரியுமா? போகட்டுமே’ அவள்தானே என்று விட்டுத் தருதல் எத்தனைப் பெரிய சுகம் தெரியுமா? என் நண்பன் வாழ்ந்தால் நான் வாழ்ந்ததைப் போல மகிழ்வேன் என்று சொல்ல பொறாமையில்லா மனசு வேண்டியிருக்கு. என் தம்பி வாழனும்’ என் தங்கை வாழனும்’ என்னக்கா பூரித்து வாழனும்’ என்னோட அண்ணா பெரிய ஆளா வரணுமென்று நினைக்க மனதிற்குள் எவ்வளவு கூடுதல் அன்பு வேண்டுமோ அவ்வளவு அன்பினையும் மனதில் தேக்கிவைத்துக்கொள்ளுங்கள்; பிறகு பாருங்கள், பொறாமை தானே நமைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்.

சூழ்நிலையின் புரிதலொன்றே பொறாமையொழிக்கும் பேராயுதமாகும். ஒரு காரியத்தை தன்னால் செய்திட முடியாது என்றெண்ணுகையில் செய்பவர்மேல் ஆற்றாமையானது வெருப்பாகப் பொங்கியெழுகிறது. தன்னால் முடியாவிட்டாலென்ன பிறர் செய்துவிட்டனரே என்று ஆசுவாசப்பட்டுக்கொள்கையில் மனசு லேசாகிறது. அல்லாது திறமையைப் பாராட்ட மனமில்லாதபோது சாதித்துச் சிரிப்பவரைக் காண்கையில் கோபம் வைக்கோல் எரிக்கும் தீயென மூளுகிறது.

ஒரு செயலை நான் செய்ய எத்தனை பிரயாசைப் படுவேனோ அதைத் தானே அடுத்தவரும் செய்திருப்பார் என்று சற்று யோசிக்கத்தயங்கும் மனதில்மட்டுமே பொறாமை முள்குத்தி நம்மை மனிதத்தின் முடமாக்கிப் போடும்.

முதலில் தனை நம்பும் அளவு நாம் பிறரையும் நம்ப வேண்டும். எப்படி ஒரு காரியத்தை நாம் எல்லோரைவிட சிறந்ததாக செய்ய எண்ணுகிறோமோ அப்படி அவரும் எண்ணுவார் என்பதை மனதளவில் ஏற்றல் வேண்டும். வெறும் மனிதரை நம்பும் வாழ்க்கையில் நீயா நானா எனும் சிக்கல் இல்லாமலில்லை, அதேநேரம் நமையெல்லாம் இயக்குமொரு மூல சக்தி, எல்லாவற்றையும் கொல்லவும் வெல்லவும் முடிகிற இயற்கை சக்தியொன்று உயர்ந்துநிற்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சுட நினைத்தால் சுடும் சூரியனையும், பொங்கி வெளியேற நினைத்தால் பாய்ந்தோடும் கடலையும், பிளந்து விழுங்க நினைத்தால் வாய்மூடிடமுடியாத பூமியையும் மீறி எப்படி நாம் நம்மை அத்தனைப் பெரியவன் என்று மெச்சிக்கொள்ளமுடியும்? ஆக நம்மை மீறிய சக்தி கடலாக காற்றாக வானமாக பூமியாக நெருப்பாகவும் பல உள்ளதெனில் அந்த ஐம்பெரும் சக்தியை தனக்குள் அடக்கியுள்ள ஒவ்வொரு உயிரும் அதற்கு நிகரான சக்தியையும் ஒன்றைப்போல் மற்றொன்றும் கொண்டுள்ளதுதானே? அதை உணர்ந்தவர் நானாயினும் நீங்களாயினும் ஏன் எவராயினும் இன்னொருவரை அவர் வெல்லத் தக்கவர் தானே? ஒரு தாயின் வயிற்றில் பத்து பிள்ளைகள் பிறக்கிறது எனில் அது பத்துமே பத்து வரம் என்பது இயற்கையாய் நடப்பதொன்றே. பிறகு அதில் ஒன்றுக்கு வானம் போல பெரிதாகச் சிந்திக்கும் மூளை உண்டெனில், ஒன்றிற்கு பூமியைப் போல தாங்கும் பலமும் இருக்கத்தானே செய்யும்?

ஆக ஒரு தாயின் பிள்ளைகள் பலர் என்றாலும் அந்த பலரில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு இருப்பதை நாம் அறிந்தவர்களெனில் நாமெல்லோருமே பூமிப் பந்திலிருந்து பிரிந்ததிலிருந்துப் பிறந்த, உயிர்கொண்ட சிறு சிறு சில்லுகள்தானென்பதையும் ஏற்றல் வேண்டும்.

பிறகு, எல்லோருமே இந்த ஐம்பெரும் பூதங்களில் அடக்கமெனில் யாரிங்கு பெரியவர் யாரிங்கு சிறியவர்? நமக்குள் ஏற்றத் தாழ்வே அதை நாம் சரியாகப் புரியாதவரைத் தானே? அது புரிந்து நாமெல்லோரும் ஒன்றென அறிகையில் நமக்குள் பேதமெப்படி எழும்?

ஆனால் எழுகிறதே;

நமக்குள் பலவாறான பேதங்கள் எழுகிறது; காரணம் மனிதன் தன்னைத் தான் மட்டுமே பெரிதாக எண்ணுவதால் அங்ஙனம் நடக்கிறது. தனக்கருகில் உள்ள உயிர்க்கும் தனக்குமான பந்தம் யாதெனப் புரியாமையால் பேதங்கள் எழுகிறது. ஒரு விலங்கு நமை அடிக்கையில் அது நமக்கு எதிராவதைப்போல, ஒரு மனிதன் சில பொருளை எடுத்து தனதென அடக்கிவைத்துக்கொள்கையில் அவர் எதிர்த்திசையில் சென்று விழுகிறார். ஒரு வெற்றி தனை விட்டுப்பிரிகையில் அது இன்னொருவரின் சொந்தமாகிறது. அந்த தனக்குக் கிடைக்காத வெற்றியை அவன் மட்டும் வைத்துள்ளானே என்று எண்ணுகையில் அங்கே பொறாமை பொங்கிவிடுகிறது.

அப்படிப் பொங்கும் பொறாமையை வேரறுக்க இரண்டு வழியுண்டு. அதில் ஒன்று தன்னையும் நம்புவது. எல்லாம் ஒன்றெனில் அவனால் முடிவது நம்மாலும் முடியுமெனில் அந்த முடியுமெனும் நம்பிக்கையை இதயம் நிறைத்து வைத்துக்கொள்ளல் வேண்டும். அந்த நம்பிக்கைதான் நம்மை பலப்படுத்தும். வெல்லவைக்கும். வென்றவரின் வெற்றி பிறகு தன்னடக்கத்தையும் தரலாம். இரண்டாவது எல்லாம் ஒன்றெனில் பிறகு அவன் வென்றாலென்ன அல்லது நான் வென்றாலென்ன? முயன்றவன் வென்றான், முடிந்தவன் ஜெயித்தான். திறமையுள்ளவன் முன்வரட்டுமே என்று விலகி வென்றவனைப் பாராட்டுகையில், அந்தப் பாராட்டும் மனதைவிட்டு பொறாமை தானே விலகிக் கொள்கிறது.

உலகம் மிகப் பெரிது உறவுகளே, உலகில் நமக்கு வேண்டுமெனில் எல்லாமே கிடைக்கும். உலகில் அனுபவிக்க நமக்கென நெடுங்காலம் மிச்சப்பட்டுக் கிடக்கிறது என்பதை ஒரு பார்வையாக வைத்துக் கொள்ளுங்கள், அதேவேளை

உலகம் மிகச் சிறிது. உலகில் கிடைக்கும் ஒன்றுமே தன்னோடு நிலைக்கப் போவதில்லை. வாழ்க்கை என்பது நிற்குமொரு நொடி மூச்சிற்குள் அடங்கிப்போகும். ஒன்றுமே நிரந்தரமில்லை. பிறப்பும் இறப்பும் மாயை. எல்லாமே உண்மையற்றது. போலியானது. இந்தப் போலியான தோற்றத்தில் திரிந்து நமது ஆத்மாவை ஏமாற்றி அலையவிடுவதென நம் வாழ்நிலையைச் சுற்றி எண்ணற்ற சாத்தியக்கூறுகளுண்டு. எனவே எதன்மீதும் பற்று கொள்ளாதீர்கள் என்பதொரு இரண்டாவது பார்வை.

இந்த முரண்பட்ட இரண்டுப் பார்வையினகத்தும் பொறாமையில்லையென்பதை அறிவீர்கள். காரணம், ஒன்று நம்மை நாம் நம்பவேண்டும் அல்லது பிறரை நம்பவேண்டும். எல்லாவற்றிற்குமான எல்லாவற்றையும் மிஞ்சும் சக்தியொன்று உண்டென்று நம்புதல்வேண்டும். தனக்கு மேல் எவனுமில்லை என்று எண்ணியநொடியில் வீழ்ந்தோரை தான் நாம் நிறைய நம் கண்ணெதிரே காண்கிறோம்.

எனக்குக் கீழுள்ளோர் என்றென உலகில் எவருமிலர். எவருக்கும் என் இடம் இலகுவாய் வாய்க்கும். என்னை வெல்லுதலே எனக்கு உசுதமில்லையெனில் பிறகெங்கு நான் பிறரை வெல்ல? பிறகெங்கு நான் பிறரை அவமதிக்க?

பிறகு பிறர் எனும் அனைவரும் அவமதிக்க முடியாதோர் எனில் எல்லோருமே மதிக்கத் தக்கவருமில்லையா? ஆமெனில் பிறகு எவராலும் என்னை வெல்லயியலுமெனில் நம்மில் யார் வென்றாலென்ன?

வென்றவரை வாழ்த்துவதும், வெல்பவரை எண்ணி மகிழ்வதுமே என் முன்னோர் எமக்குக் காட்டிய வழியல்லவோ?

யதார்த்தத்தில், வெல்லாதவரைக் கூட ஒரு கைகொடுத்து மேலே தூக்கி என் அளவிற்கேனும் ஏற்றுவது மனிதனான என் கடமையென்றே எண்ணுகிறேன். வெல்பவர் எவராயினும் அது நமக்கான மகிழ்ச்சி. வீழ்ந்தவரே முழுதும் பரிதாபத்திற்குரியவர்.

எனவே எவரும் எனக்கு எதிரியிலரெனும் மனநிலையைக் கொண்டிருந்துப் பாருங்கள். பிறகொரு புது உலகமும் உங்களுக்காய் பிறப்பதையறிவீர்கள். ஒரு தனி வெளிச்சம் உங்களுக்காய் பீறிட்டு முகமெங்குமடித்து பிரகாசிக்கச்செய்வதை உணர்வீர்கள்.

வீழ்கையில் தூக்கிவிடும் கையினாலும், வாழ்கையில் கண்டு வாழ்த்த முனையும் மனதாலும் மட்டுமே பொறாமையையொழிக்க முடியும். அவரால் மட்டுமே நம்பிக்கையை எவர்மீதும் ஏற்படுத்திட இயலும். எவர்மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தத் தக்க நிலையும், எவரின் வெற்றியைக் கண்டு பொறாமையடையா குணமும் போன்றவையே நமை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்கும்.

நானிலம் சூழ மதிக்கும் நற்பேரென்பது சொட்டும் வியர்வையில் மட்டுமில்லை, விட்டொழிக்கும் தீயகுணங்களால் சுத்தமடைந்த பரிசுத்தமான மனதிலும் உண்டென்பதை மானசீகமாய் உணருங்கள்.

இது என்னாலும் முடியும் என்று நம்புமிடத்திலோ, அல்லது இதை அடைந்தவன் மகிழட்டுமே அதனாலென்ன என்று பெருந்தன்மை  பொங்க விட்டுக்கொடுக்குமிடத்திலோ பொறாமை பெரிதாக தலைநீட்டிக் கொள்வதில்லை.

தான் என்ற பெருத்த சுயநலம், தனக்கு கிடைக்கவில்லையே எனும் ஆற்றாமை, தானுண்ணாதபோது அவனுக்கு உண்ணக் கிடைத்துள்ளதே; நாமுண்ணா விட்டாலென்ன அவன் உண்பதையாவது பிடுங்கிவிடவேண்டாமா என்றெண்ணும் வக்கிரம் நிறைந்த மனோபாவம்தான் பொறாமையின் முதல் ஊற்றாகிவிடுகிறது.

புரியத்தெரிந்த மனிதருக்கு பொறாமையும் புரியும். அதை எப்படி அடக்கி ஆளுவது என்றும் புரியும். பொறாமையென்பது எலும்புப் போல, சதையைப் போல, இனிப்பு மற்றும் கசப்பையும் அறியத்தக்க இயல்பான உணர்வொன்றை மனிதன் பெற்றிருப்பதைப் போல பொறாமையும் மனிதனோடு இயல்பாய் உள்ளதொரு சாதாரண அருவறுத்து வெறுத்தொதுக்கக் கூடிய ஒரு ராட்சச குணம் அவ்வளவு தான். ஆனால் அதன் இருப்பின் அளவு அல்லது பொறாமை கொள்ளும் குணத்தை குறைத்துக் கொள்ளாததிலுள்ள வீரியத்தின் வேறுபாடு ஓரிடத்தில் சிறுத்தும் ஓரிடத்தில் பெருத்தும் போகுமிடத்தில் பொறாமையும் தலைவிரித்தாடுகிறது..

என் நண்பன் ஒரு அழகான சட்டை அணிந்திருப்பனெனில் அதைக் கண்டு முதலில் பெருமைப் படுபவன் நானாகத் தான் இருத்தல் வேண்டும். என் நண்பனுக்கு ஒரு பெரிய வேலையோ அல்லது பெரிய படிப்பில் தேர்வுற்று முதல் மதிப்பெண் கிடைக்குமெனில் அதற்கு முழுப் பெருமையடைபவனாக முதலில் நானிருப்பின் எனக்கெப்படி அவன்மேல் பொறாமை வரும்?

மக்கள் மதிக்கும் ஓரிடம், உயிர்கள் துதிக்கும் ஓரிடம் அந்த பொறாமை உணர்வில்லா நிலையில், பிறர் நலனைக் கருதி வாழும் நல்லுணர்வு நிறைந்த இடமொன்றேயென்பதைப் புரிகையில் நாமெல்லோருமே தானாக சுத்தப்பட்டுப்போவோம்.

அங்ஙனம் சுத்தப்பட பட உங்களுக்கான வாசல் ஒவ்வொன்றாய் வெகுசீக்கிரம் திறக்கும். அந்தத் திறந்த கதவுகளின் வெளிச்சத்தில் பிரகாசமாய் தெரியும் ஞானமுகங்கள் உங்களுக்குமானதாய் இருக்குமென்பதை பின்னாளில் அறிவீர்கள்.

பொறாமை அதிகாமாகிவிடாததொரு அரியப் பண்பு பெருந்தன்மையிலிருந்துதான் வருகிறது. எங்கெங்கெல்லாம் நாம் யார் யாரையெல்லாம் நமக்குக் கீழே வைக்க எண்ணுகிறோமோ அவர்களையெல்லாம் இயற்கையங்கே மேல்கொண்டுவரவே தவிக்கிறது. யாரை நாம் சிறிதாக்கி அசிங்கப்படுத்த நினைத்தோமோ அவர்களையெல்லாம் இயற்கையும் பெரிதாக்கியே காண்பிக்கிறது. எனவே பிறரை தனக்குக் கீழாக வைக்கநினைத்த இடத்திலிருந்தே நம் பொறாமையும் தீப்பற்றி எரிகிறது, அதோடு நமக்கானப் போறாத காலமும் கைகால் விரித்துக் கொண்டுவந்து வீட்டில் அமர்கிறது. எனவே பொறாமையை விட்டொழிப்போம், பெருந்தன்மையோடு வாழ்ந்துக் காமிப்போம்., வாழ்க உலகின் அத்தனை உயிர்களுமின் நன்னிலத்தில்..,

வளர்க்க நமக்கான அத்தனை நற்பண்புகளும் இந் நல்மனத்துள்!!

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..

ரு உடையும் சிறகில் உதிரும் இறகில்
முடையும் பொருளில்
தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது
வெற்றி அவசியமற்றும் போகிறது;

கூடைகளே வாருங்கள் –
கோழிகளின் இறப்பையும்
இறகுகளின் வெற்றியையும்
இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்!

மாட்டுவண்டி உருண்டோடுகையில்
அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி
பிள்ளைகள் கீழே விழ
முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று
ஓய்வெடுக்கத் துவங்கியது;

மாடுகளே ஓடிவாருங்கள்
நீங்கள் வாங்கிய சாட்டையடிகளைச் சேகரித்து வையுங்கள்
ஊர் அவனை அடிக்க வருகையில்
தப்பித்து ஓடினால் அந்த சாட்டையடிகள் அவனைப்
பிடித்துத் தர உதவும்!

தேர்வுகள் முடிகிறது
முதலும் இரண்டுமாய் மதிப்பெண்களும்
சில குழந்தைகளின்
மகிழ்ச்சிப் பூரிப்பும் குவிகின்றன,
ஆங்காங்கே சாக்கடையும்
சில முனைமடங்காத புத்தகங்களும்
மூச்சு திணறி சில பிள்ளைகளும் இறந்துக்கிடந்தன;

பிள்ளைகளே எழுந்து வாருங்கள்
சேற்றில் புதைந்த மரணத்தின் உயிரை
கண்ணீரில் சுமந்துச் சிவக்கும்
பெற்றோர்களின் ஈரவிழியைப் பாருங்கள் – உங்களின்
வெற்றி மீண்டும்
பெற்றோரின் முயற்சியால் மாற்றியெழதப் படலாம்!

தேயிலைத் தோட்டதிலும்
தீக்குச்சி மருந்துக்குள்ளும்
பட்டாசுகளோடு சேர்த்தெரித்த மனசுமாய்
மனிதம் கொன்று
பணத்தை அள்ளிக் கொள்கிறான் மனிதமூடன்,

ஒரு பணக்கட்டினை மிதித்துக் கொண்டு
நகர்ந்துச்செல்கிறதொரு ஆடு,

ஆட்டிறைச்சி தின்போரே; மனிதர்களே வாருங்கள்;
நம்மைச் சுற்றியொரு கூடாரம்
கட்டிக்கொள்ளுங்கள்
நாளை நம் பிள்ளைகள்
நமைக் கூட கொன்றிட நேரிடும்; இறைச்சிக்காய்!!
————————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக