1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)

சார் வணக்கம் சார்..”

“ம்ம்.. ம்ம்..”

“எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?”

“எந்தா வேணும் பர”

“சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…”

“அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் –

“சார்….”

“சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும், நான் பிசியா இருக்கேன்ல”

“அப்படியே என் சம்பளம் பத்தி..யும்..”

“சம்பளம்தான் போட்டாச்சே பேங்குக்குப் போய்க்காணும், அவ்வட சென்னு நோக்கு”

“வந்துச்சு சார் இரண்டு நாள் குறைவா வந்திருக்கு சார் அதான் என்னன்னுக் கேட்கலாம்னு..”

“அப்படியா, அங்க ஒங்க முதலாளி இருக்கார்ல போயி அவரைக் கேளு”

“என்ன சார்..?”

“சென்னு அவரை நோக்குன்னு..”

“சரி சார்..”

அவர் சரியென்று தலையாட்டிவிட்டு அந்த அறைவிட்டு வெளியேப் போனதும், அவன் துள்ளிக் குதித்துச் சிரித்தான், பக்கத்து அறையிலிருந்து நான் என்ன ரசூல் என்னாச்சு ஏன் இப்படி சிரிக்கிற என்றேன், அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. எழுந்து என் அறைக்கு வந்து என்னிடம் –

“சா…ர்.., சம்பளவு குறைவு சார்…” மீண்டும் காலை உதைத்துக்கொண்டு சிரித்தான். அவன் நாங்கள் பணிபுரியும் குவைத்து நாட்டின் தனியார் நிறுவனத்தில் உடன் வேலையாற்றுமொரு கணக்காளன், கேரள நாட்டைச் சேர்ந்தவன், தமிழரைக் கண்டால் தெரிந்தோரிடம் தமிழ்கலந்து மலையாளம் பேசுவான், புதிய தமிழர்கள் எனில் முற்றிலும் மலையாளத்தில் பேசி தன்னை தனித்த தேசத்திற்கு உரியவனாகக் காட்டிக் கொள்பவன்.

ஒரு அறையில் இரு பிரிவு செய்து ஒரு புறத்தை அவனுக்கும் மறுபுறத்தை எனக்கும் கொடுத்துள்ளது எங்கள் நிறுவனம். எனவே யார் இங்கு சம்பளவிவரம் குறித்து அவனிடம் ஏதேனும் கேட்க வந்தாலும் என்னைக் கடந்தே போயாகவேண்டும் என்பதால் இவன் செய்யும் இங்ஙனமான கீழ்த்தரமான செயல்கள் என்னையும் பாதிப்பதுண்டு. ஆனால் யாரைப்பற்றியும் அவனுக்குக் கவலையில்லை, அவனுக்கு இங்ஙனம் விவரம் கேட்க வரும் தொழிலாளிகளை இங்குமங்குமங்குமென அலையவிட்டு துன்புறுத்துவதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது.

நான் ‘பாவம் ரசூல் ஏன் இப்படி செய்கிறாய்’ என்று கேட்பதற்குள் அந்த அப்பாவிப் பெரியவர் மீண்டும் உள்ளே வந்தார்.

“சா..ர்..”

அவர் அழைத்ததும் இவன் முகத்தை இரும்பு போல் இறுக்கிக் கொண்டான். கால்மீது கால்போட்டுக் கொண்டு –

“ச்சொல்லுங்க டண்டா பாணி, மொதலாளி கிட்ட கேட்டாங்களா? என்ன சொன்னா(ன்) அவரு?”

“உங்க கிட்ட பேசச் சொன்னாரு சார்”

“பின்ன பர.. எந்தா ஆயி”

“ரெண்டு நாளு சம்பளம் குறைவா வந்திருக்கு சார்”

“ஆ..னோ, நான் நோக்கிக் கொள்ளாம், ஈ மாசம் சேர்த்து இட்டுகொடுக்கா(ம்) நீ போய்க்கோ.

“கண்டிப்பா வரும்ல சார்….’

“வரும்ப்பா.. நான் சொல்லியாச்சுல்ல வரும் போ…”

மீண்டும் அவர் வெளியேறிப் போனதும் காலை உதைத்துக்கொண்டு சிரித்தான். எனக்கு கோபம் மண்டை உடைய வந்தது, அதற்குள் அவனே எழுந்து என் பக்கம் வந்தான், வந்து –

“மதி..யே இவ்வட நோக்கு, ஆயாள கண்டா ? கேட்டு முடிப்பதற்குள் சிரித்தும், சிரித்துக்கொண்டே காலை உதைத்துங்கொண்டான்.., அதைத் தொடர்ந்து ‘சார் கண்டிப்பா வரும்ல சார்…’ என்று அவர் சொன்னதை வேறு மீண்டும் சொல்லிக் கிண்டலடித்தான்.

“நீ பண்றது நல்லதுக்கில்ல ரசூல் அவர் பாவம் பெரியவர், வறுமையின் வலி உனக்கு கேலியாகப் படுவது சரியல்ல”

“என்ன சரியல்ல???”

“உனக்கேன் இத்தனைச் சிரிப்பும் ஏளனமும்? விவரம் கேட்டால் அதற்கு பதில் சொல்லிவிட்டுப் போயேன்..”

“அதனைக்கொண்டு நினக்கெந்தா ஆயி, ஆயாளு எந்தா நிண்ட அச்சனானோ?”

“அவசியமில்லாம பேசாத ரசூல்…”

“பின்னே; நீ எந்தன உங்காளுக்கு வக்காலத்து வாங்குதா?”

“பெரியவரை நீ கிண்டல் பண்ணுவ கேட்டுக்குனு சும்மா இருக்கவா?”

“நான் என்ன சொல்லியாச்சு.. அவர் கேட்டதுக்கு பதில் சொல்லியாச்சி?”

“நீ எப்படி சொன்னன்னு எனக்குத் தெரியாதா, அவர் எவ்வளோ மரியாதையா கேட்கிறாரு? அதும் சம்பளம் பற்றிதானே கேட்கிறாரு? உன்னுதுல ரெண்டுநாளு சம்பளம் குறைஞ்சா உனக்கு எப்படி இருக்கும்?”

“அதுக்கெல்லாம் நா(ன்)ஒன்னும் செய்யாம்பற்றில்லா மோனே.., மோல் ல இருக்க ஆள் சொன்னா தரலாம், அதான் மொதலாலியப் போயி பாருன்னு சொன்னேன், ஞான் வேறெந்தா செய்யும், திஸ் இஸ் ஆபிஸ், நானொன்னும் இவ்வடத்து மொதலாளி அல்லல்லோ”

“நீ எதுவான்னா இரு, அவரின் பணிவை ஏன் கிண்டலடிக்கிறாய், நீயும் தொழிலாளி அவரும் தொழிலாளி’

“………………”

“அதும் டண்டா பானி என்று அவரின் பெயரைவேறு ஏளனமாய் அழைக்கிறாய்”

“பின்ன அவன்ட பேரன்தா ?”

டேய் அது தண்டபாணிக்கும் நீ சொல்ற டண்டா பானிக்கும் வித்தியாசமில்ல, அவர் எவ்வளோ பெரியவரு, எப்படி வணங்கி உன்னிடம் பேசுறாரு?”

“ச்சீ.. இதெந்தா டோ…, அவன் பேசினா நானும் பேசனும், அவனும் நானும் ஒன்னானோ ?”

“வேற ? உனக்கு தனியா தலையில என்ன கொம்பா முளைச்சிருக்கு?”

“அவன் ஆபிஸ் கிளின் பண்றவன், வெறும் வொர்கரல்லோ, ஆம் ய அக்கவுண்டன்ட், ஓபிஸ் ஸ்டாஃப், அறியோ?”

என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. கோபம் உச்சிக்கு ஏறியது. கையில் இருந்ததை இருந்தபடியே தூக்கி அவன் முகத்தில் விட்டெறிந்தேன்..

“லுக்.. நான் ஜி.எம் க்கு சொந்த அனியனானு(ம்), நின்னை இன்னு ஞான் கொண்ணுமுறிக்கும்”

“நீ எந்த மயிரான்னா இரு.. எதனா பண்ணிட்டுப் போ.. ஏண்டா என் தமிழன கிண்டல் பண்ற? நான்கன்னா என்ன உங்களுக்கு எளக்காரமா? தமிழன்னா என்ன காருதா? இல்லை தொட்டுக்க இனிக்குதா?” என்று கத்தி கோபத்தில் எழுந்து அவன் ஏதோ சொல்லிமுடிப்பதற்குள் சட்டைப் பிடித்து கத்தி பேச, பதிலுக்கு அவன் பேச, கோபத்தில் ஓங்கி ஒரு அரையே விட்டுவிட்டேன், பல் ஆடி ரத்தம் கொட்டிவிட்டது..

அவ்வளவுதான், அடுத்த நொடியே அலுவல் மொத்தமும் எழுந்து என் அறைக்கு ஓடிவந்து நின்றது. மேலாளர் வந்தார். அவுங்க அண்ணனும் வந்தார். இரண்டுபேரையும் ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் “நான் ஒன்றுமே செய்யவில்லை ‘தண்டபாணிக்கு சம்பளம் குறைவுன்னு வந்தான், உங்களைப் பார்க்கச்சொல்லி சொன்னேன், நீங்கள் சொன்னதும் இம்மாதம் சேர்த்து இட்டுத்தருவதாகவும் சொன்னேன். உங்கள் அனுமதி இன்றி நான் ஒரு பைசா கூட இங்கு யாருக்கும் தருவதில்லை. அதற்குள் என்னவோ இவனுக்கு இத்தனைக் கோபம் வந்து என்னை அடிக்கிறான். ஐ யாம் ஆனர் இன் மை டியூட்டி” என்று வேடமிட்டுப் பேசினான்.

என்னைக் கேட்டார் மேலாளர், என்ன செய்த என்றார், இங்ஙனம் இங்ஙனம் என்றேன்.

நீதான் முதலில் சட்டியை பிடித்தாயா என்றார் “சட்டையைப் பிடித்தது தப்புதான் சார்” என்றேன்

“அடிச்சிருக்க இது பெரிய தப்பு இல்ல?”

“ஆமா சார்..”

“அது ரத்தம் வர அளவு அடிச்சிருக்க, இது அரபு தேசம், காவல்நிலையத்துல புகார் சொன்னா உடனே உன்னை கைது செய்வாங்க, ம்ம்.. அவன்கிட்ட மன்னிப்பு கேளு” என்றார்.

தப்பு தான் சார், ஆனா இவன் ‘என் ஒட்டுமொத்த இனத்தையே அவதூறாகப் பேசுறான் என்று எப்படி அவரிடம் நான் எடுத்துச் சொல்ல? அதற்கு மாறாக ‘இல்லை இவன் தண்டபாணி போன்ற ஆட்களை கிண்டலடித்துப் பேசுகிறான்’ என்றேன்.

“அதற்கு.. நீ அவனை அடிப்பியா? இது என்ன உன் வீடு உன் வேலையாட்கள் என்று நினைத்தாயா? நீ நினைத்தால் எல்லாம் நடக்கவா நாங்கள் இங்கிருக்கோம்?”

“இல்ல சார்.. தப்பு தான் இனிமே அப்படி..”

“செய்றதை செய்திட்டு இனிமே என்ன இனிமே..”

“அவன்தான் சார் முதல்ல..”

“அவன் முதல்ல உன்னை அடிச்சானா? வாயிலதானே பேசினான்”

“ஆனா அவதூறு பேசினான் சார்”

“ச்ச.. நீ சாதுவானவன்னு நினைத்தேனே, இப்படி செய்திருக்கியே, எப்படி ரத்தம் வரமாதிரி அடிச்சிருக்க?”

“…………………” இனி பேசி பயனில்லை மௌனமாக நின்றேன் நான்.

“இதை சும்மாவிட முடியாது, இதற்கு நீ மன்னிப்பு கேட்டாலும் இல்லை என்றாலும் உனக்கு இது தான் கடைசி எச்சரிக்கை எழுந்து போ இங்கிருந்து” என்றார்.

நான் முகம் வாடி தலைகுனிந்து அங்கிருந்து வெளியேறி கீழறைக்கு வந்தேன். ‘உடனே டிசிப்ளினரி ஆக்சன் எடுங்க’ன்னு அவர் கத்தி சொல்லும் சப்தம் எனக்கு வெளியே வருகையில் கேட்டது.

அடுத்த சில மணித்துளிகளின் நகர்விற்குப் பின், ‘இரண்டு நாள் பணியிலிருந்து எனைத் தள்ளிவைத்திருப்பதாக மெமோ வந்தது. குமுறல் தாங்க முடியவில்லை எனக்கு. அவன் என்னிடம் பேசும்போது சொன்ன ‘டன்டா.. பானி’க்கும் அங்கே அவரிடம் பேசுகையில் சொன்ன தண்டபாணிக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

ஆனால் இது புதிதல்ல, இது இங்கே தொடர்ந்து நடக்கும் இவர்களின் அட்டூழியம். இப்படி பணியிடத்தில் இவர்கள் செய்யும் கேளிக்கையும் அரசியலும் ஏராளம், அரபு தேசத்தில் வேலை செய்ய வரும் தமிழர்கள் அரபியைவிட இவர்களால் துன்புறுவது கொஞ்சநஞ்சமல்ல. அலுவல் சூழல் என்பது கூட வேறு, அதை தவிர்த்து கட்டுமான பணி நடக்குமிடம் மற்றும் பணிமனைகளில் இவர்கள் ஆடும் ஆட்டம் உச்சம். ஆயினும், சில இடங்களில் இரண்டாம் பட்சமாய் நம்மை நடத்தினாலும் “டேய்.. அவன் நம்மாளுடே” என்று சொல்லி தமிழருக்கு உதவி செய்வதும் சில விதிவிலக்காய் இங்கே நிகழ்வதுண்டு.

என்றாலும், பிறரை மதிக்கவும் அன்பு காட்டவும் இயல்பிலேயே கற்ற தமிழினம் அவர்களின் அரசியலில் படும் அவதிக்கு நிறைய கதைகள் வளைகுடா நாடுகளில் தேடாமலே ஆங்காங்கே கிடைக்கும்.

ஆக, அப்படி அவனின் துள்ளல் நகைப்பினூடே, அவன் வென்றுவிட்ட களிப்பினூடே இதர நாட்களும் கழிந்துப் போக, ஒருவேளை பேசியும் ஒருவேளை பேசாமலும் மாதங்களும் கடந்துப் போக, அந்த பழைய நினைவுகள் எல்லாம் மனதிலிருந்து அழிந்துபோய் அவனின் புதிய சிரிப்பை மட்டுமே பார்த்துச் சிரிக்கும் புதிய மனதினனின் மனநிலையில் இருவரும் சற்று மாறியிருக்க, பின்னொரு நாளில் கடைத்தெரு சென்றிருக்கையில் எதேச்சையாக அவனைக் கண்டேன்.

காலம் எப்பொழுதுமே அப்படித்தான் ‘வடுக்களை இதயத்தில் பதித்துவிட்டு காயங்களை ஆற்றிவிடுகிறது. அப்படித்தான், அவனைப் பற்றிய காயங்களையும் மனது ஆற்றிக்கொண்டுதான் விட்டது. அதோடு; என்னவோ, திடீரென அவனைக் கண்டதும் பழைய கோபமெல்லாம் இல்லாத மனதில் இடைவெளி விட்டுப்பார்த்த ஒரு நட்புணர்வு பீறிட்டது. அருகருகே இரண்டு வருடமாய் அமர்ந்து பணியாற்றிய, ஒன்றாக பேசி சிரித்த, ஒன்றாக அமர்ந்து உணவுண்ட உணர்வு போலது;

‘ஏய் ரசூல்’ கைதூக்கிக் காட்டி எப்படி இருக்கிறாய், இங்கே என்ன குடும்பத்தொடுப் பயணமா’ என்று கேட்டுவிட, அவனும் அவன் மனைவி பிள்ளைகளை விட்டு ஓடி வந்து எனை கட்டிப்பிடித்துக் கொள்ள, ஒரு நொடி உடம்பெல்லாம் ஆடிப்போனது. அடுத்தடுத்து.. எப்படி இருக்க, இன்னைக்கு ஏன் வேலைக்கு வரலை, இங்க யாரிருக்கான்னு இரண்டொரு வார்த்தை பேசி இன்னபிற நலமெல்லாம் கேட்டுவிட்டு,

அவனுடைய மனைவி குழந்தைகளை அருகே அழைத்து ‘இதோ பாரு இதுதான் மதிமாறன், என் அலுவல் சிநேகிதன், என் பக்கத்துக்கு அறை, ரொம்ப நல்லவன், நான் கூட சொல்லுவனே, எனக்கு ரொம்ப பிடிக்கும்னு மதி’ன்னு அவன்தான்’ என்றான்.

உடனே அவனுடைய மனைவியும் “ஆம் அதுசரி ஆயாளானோ; உங்களைக் குறிச்சி ஒருபாடு பரஞ்சுக் கேட்டுட்டுண்டு, எங்ஙன சுகந்தன்னையானோ?’ என்றாள்.

என்ன சொல்ல, ம்ம்.. நலம், நலம்தான் என்று சிலாகித்தேன்.

மற்றபடி பெரிதாகச் சொல்ல வேறில்லை என்னிடம், சும்மா ஓரிரு நிமிட நலம் விசாரிப்புதான். பின் பார்ப்போம் என்று கை குலுக்கி விட்டு அவன் போனான், நானும் வந்தேன்.

ஆனால் மனசு எப்படியோ ஒரு கனமாவும் லேசாவும் இருக்கமாதிரி ரெண்டாங்கட்டானா இருந்தது. ச்ச.. இவனுக்கு என் மேல இவ்வளவு பாசமா என்று ஒரு ஆச்சர்யம் எழுந்தது. அதன்பின் கொஞ்ச நாளில் அவன் எங்கள் நிறுவனத்தை விட்டு நின்று விட்டான். வேறு எங்கோ நல்ல வேலை கிடைத்ததாகச் சொல்லி எங்களைவிட்டுப் போனான்.

பிறகு ஓரிரு வருடங்கள் கழிந்தது. அவனில்லாத அறையில் தமிழருக்கான மரியாதை நிறைந்து இருப்பதாக எனக்கொரு நிறைவு இருந்தது, என்றாலும் அவனின் தனிப்பட்ட நட்பிற்கென்றும் மனதின் ஓரத்தில் ஒரு தனியிடம் இல்லாமலில்லை. அடிக்கடி அவனின் நினைவுகளோடும் நாட்கள் கடந்தன..

சுற்றும் பூமி நிறைய மனிதர்களைப் பிறப்பித்துக் கொண்டும், இருந்த மனிதத்தை மக்கள் அழித்தும் மிச்சப்படுத்தியும் வைத்திருக்க, ஏதோ ஒரு திருப்பத்தில் வெகுண்ட பூமி வெப்பம் தகிக்க நகரும் காலத்தோடு மீண்டும் மீண்டுமாய்ச் சுற்றிக்கொண்டு வருடங்களை விழுங்கிவிட; எங்களுடைய சம்பள ரசீதில் பேச்சுக்குக் கூட ஒரு காசு பணம் ஏறாமல், இதர மலையாளி மேலாளர்களின் சதிக்குட்பட்ட விடுமுறை தொலைபேசி மற்றும் தாமத வருகைக்கான கட்டணம் மட்டும் சம்பளத்தில் பிடித்ததுபோக, ஒரு வஞ்சனையின் வலிகலந்த சொச்ச சம்பளம் மட்டும் எப்பொழுதும்போலென அளவு மாறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது.

நாங்களும் வேறு வழியின்றி, வளைகுடா நாடுகளில் எங்குப் போனாலும் அவர்களேயிருக்கும்பட்ச்சத்தில் பேயிடமிருந்து தப்பித்து இன்னொரு புதிய பேயிடம் சிக்குவானேனென, ஒரு செக்கில் பூட்டிய மாடுகளாக மலையாள ஆளுமையின் கீழ் கட்டுண்டுக் கிடந்தோம்.

அப்படிக் கிடந்த ஒரு நாளில் –

வேறு பல பணிகளுக்கிடையில் நான் ஆழ்ந்திருக்க திடீரென பக்கவாட்டில் யாரோ உள்நுழைவதாய் உணர்ந்து எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன் –

ரசூல்….

ரசூல் நின்றிருந்தான்.

பெரிய கோர்ட் சூட் டை என பாந்தமாக அழகாக வந்து என்னெதிரே திடுமென நின்றான்.

தமிழ் மலையாளம் இனம் அடையாளம் என எல்லாவற்றையும் மனது உதறிவிட்டு நட்பின் தொலேறி அமர்ந்துக் கொள்ள, எனக்கு அவனைக் கண்ட சந்தோஷம் பெரிதாக இருந்தது. அதும் இவ்வளவு அழகா அவன் வந்துநிற்க –

ஹேய்… ரசூல்….. என்ன இது ஸ்மார்ட்……….. எப்படி இருக்க என்றேன்.

அவன் ஓடி வந்து எனைக் கட்டிபிடித்து சலாம் சொல்லிவிட்டு ‘நல்லாருக்கேன் மதி..யே. நீ எப்படி இருக்க, நான் ஒரு பெரிய அக்கவுண்ட் ஆபிசரா ஆயிருக்கேன். நம்ம கம்பனி போல பல மடங்கு கூடுதல் சம்பளம் எனக்கிப்போ. இங்க ஒரு ஆடிட் இருந்தது அதான் வர வழியில அப்படியே உன்னையும் பார்க்கலாம்னு வந்தேன்’ என்றான்.

எனக்கு மனது மகிழ்வாள் நிறைந்தது. நம்மோடிருந்தவன் ஒருவன் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிப் பொங்கியது. என்னதான் தனக்கான பிடிசோற்றுக்கு பஞ்சம் என்றாலும் தன் நண்பனொருவன் இப்படி குறுகிய காலத்தில் ஒரு பெரிய நிலைக்கு வந்துள்ளான் என்று அறிகையில் அதைக் கண்டு பூரித்து வாழ்வது உயர்வெனப் பட்டது.

மனதார மேலும் வளர்ந்து பெரியாளாக வர வாழ்த்திவிட்டு பின் இருவரும் அருகிலிருந்த சிற்றுண்டி விடுதிக்குச் சென்றோம். அங்கேயே அமர்ந்து இருவரும் தேநீர் அருந்தினோம். வீட்டு விஷயங்கள் பேசினோம். அடுத்த நகர்வு குறித்து, இரு நிறுவனங்கள் குறித்தும் பேசி சில மணித்துளிகள் அரட்டையடித்து வேறு எல்லோரைப் பற்றியும் நலம் விசாரித்துவிட்டு மீண்டும் சந்திப்பதாய் சொல்லி பிரியாவிடை பெற்றோம்.

நான் இங்கு நல்ல பதவியில் இருப்பதாகவும், நிறைய உழைப்பதாகவும், இதை வேறு நிறுவனங்களில் செய்தால், இதே பதவிக்கு இன்னும் நிறைய சம்பாதிக்கலாமென்றும் அதற்கான முயற்சியினைச் உடனே செய்யென்றும் தகவல் சொல்லிவிட்டுப் போனான் ரசூல்.

மிக விலையுயர்ந்த மகிழுந்தில் ஏறி சாலைதிரும்பி மீண்டும் ஜன்னல்திறந்துப் பார்த்து எனக்கு கையசைத்துவிட்டுப் போன அவனின் நட்பு எனை நெகிழத் தான் செய்தது.

அவனை வழியனுப்பிவிட்டு வந்து நான் என் இருக்கையில் அமர்ந்தேன். அமர்ந்து பின்னால் சாய்ந்தேன். ஒரு பெரிய கேள்வி மனதிற்குள் எழுந்தது. என்ன மாதிரியான உலகமிது?

எப்படி இங்கே வாழ்வது?

எனக்குத் தெரிந்து அவனிடம் சொல்லிக் கொள்வது போல் அத்தனைச் சிறப்பென்று ஒன்றுமில்லை. அத்தனை பிறர் பற்றிய பொது நல்லெண்ணம் என்றெல்லாம் அதிகமாக அவனுக்கில்லை. பிறர் துன்புறுவதைக் கூட மகிழ்ச்சியாகப் பார்க்கக் கூடியவன். தோழமை ஏற்பட்டால் நன்றாக பேசுவான் நட்பாக இருப்பான். நட்பாக இருப்பான்.. ஆம் அதுதான், அங்கிருந்து தான் சற்று நூல் பிடித்தேன், அவன் நட்பாக இருந்தான். பழகியோர் உறவுற்றோர் என உற்றார் எல்லோரிடமும் அவன் நட்பாக இருந்தான். கிண்டலடித்தாலும், கோபம் கொண்டாலும் பின் அதை மறந்து புதிதாகப் பிறந்தவனைப் போல் பழகினான். பிடிக்காதவரிடமும் அன்பு பாராட்டினான். அன்பு செய்வது போல் நடிக்கவேனும் செய்தான். அதில் சிலருக்கான அலாதி இருந்தது.

அலுவல் என்றில்லை வீட்டிலும் அவன் மிக்க அன்பு செய்தான். பொதுவாக நாளெல்லாம் அவன் வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பதுண்டு. மனைவியைப் பற்றியும் குழந்தைகள் பற்றியும், அவனுடைய அண்ணன் தம்பிகள் அக்காத் தங்கைகள் பற்றியுமெல்லாம் மிக கவனம் செலுத்துவான். அங்குதான் அங்குதான் எனக்கு அந்த அவனுடைய சூழ்சுமம் புரிய வந்தது. ஒன்றுமேயில்லாத ஒருவன் அத்தனை எளிதில் உச்சியை அடைவதில்லை. இறைவன் எல்லோருக்குமே ஒரு சிறப்பைக் கொடுத்தே வைத்துள்ளான். அதைப் புரிபவர்கள் பெரியாளாய் ஆகிறார்கள். அவன் ஆனதன் ரகசியம் கூட அதுதான் குடும்பத்தை’ தனது சுற்றத்தை’ தனைச் சார்ந்தோரை அவன் நன்றாக வைத்திருந்தான். எத்தனைதான் அவன் சுயநலத் தனமாக இருந்தாலும், பிறர் பற்றிய கேளிக்கையான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் வீட்டில் அன்பும் அக்கறையோடுமிருந்தான்.

மனிதர்கள் பொதுவாக இரு வேறாக இருக்கிறார்கள்; ஒன்று, வீட்டைப் பார்த்துக் கொள்வது, அல்லது நாட்டைப் பார்த்துக் கொள்வது. இரண்டையும் பார்த்துக் கொள்வதற்குப் பக்குவப் பட்டவர்கள் மிகக் குறைவு. அதிலிருந்து நாம் மாறுபட வேண்டும். வீடும் பெரிது நாடும் பெரிதென்று இரண்டையும் இரு கண்ணினைப் போல் காக்க வேண்டும். நாட்டிற்கு செய்ய நினைக்கும் நல்லவைகளை வீட்டிலிருந்தேத் துவங்கிடல்வேண்டும். அப்படித் துவங்குபவர்களின் கையில்தான் நாளைய உலகின்’ சமதர்ம செழிப்பின்’ பொது அக்கறை நிறைந்த மனிதர்களின் விடிவிற்கான எதிர்காலம் தொக்கி நிற்கிறது. அவர்களில் ஒருவனாக நானிருக்க முயல்வேன், இவனின் வளர்ச்சியைக் கண்டெல்லாம் நாம் நம்மை மாற்றிக் கொள்ளக்கூடாது. நம் வெற்றி மட்டும் பெரிதென்று நம்புதல் நம் பண்பல்ல. எனை நம்பும் எஜமானனை வெறும் பணத்திற்காக விட்டுச் செல்பவனல்ல நான். நான் இருக்குமிடத்தில் நான் சரி. மனதால் எண்ணத்தால் நான் சரி. நமக்கான கதவு திறக்கும். நிச்சயம் திறக்குமென்று எண்ணிக் கொள்கையில் மேலே ஒரு அறையின் ஜன்னல் திறக்கப்பட்டது.

எங்களுக்கு தேநீர் மற்றும் குடிநீர் கொண்டுவரும் தம்பி அந்த ஜன்னலருகே வந்து ஒரு பிடி சோறள்ளி அந்த சுவற்றின் மீது எட்டி வைத்தான். சோற்றின் வாசம் காற்றில் கலக்கும் முன்னே காகங்கள் பறந்து வருவதுபோல்; இங்கே புறாக்கள் கூட்டமாக பறந்துவந்து அமர்ந்தன. ஒன்றின் முகம்பார்த்து ஒன்றென சோறு கொத்தித் தின்றன..

அந்த தம்பி வெறும் சொற்ப சம்பளம் வாங்குபன்தான் என்றாலும் அவன்மீது ஒரு தனி மதிப்பே வந்தது. அதற்குள் இன்னொரு தட்டில் சோறுகொண்டு படிவழியே இறங்கி என் அறையின் வாசல் கடந்து அலுவலுக்கு வெளியே போய் வாசலில் நின்றிருந்த நாயொன்றிற்கு தட்டோடு சோறு வைத்தான். அந்த நாய் எகுறிகுதித்து ஓடிவந்து வாளை ஆட்டிக்கொண்டு அவசர அவசரமாக பசியில் உணவை கவ்வி கவ்வி விழுங்கியது..

எனக்கு உள்ளூர ஒரு வெப்பம் பரவ சரசரவென மேஜைக்கு வந்து என் அலுவல் பைக்குள்ளிருந்த என் வங்கிக் கணக்கட்டையை எடுத்து அதிலிருந்த வங்கியின் தொலைபேசி எண்ணிற்கு அழுத்தி வங்கியில் எனதான பணம் எவ்வளவு இருக்கிறது என்றுக் கேட்டேன். கணிசமான தொகை இருப்பதாகச் சொல்ல, அதில் கொஞ்சம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, மீதியை நண்பர்களுக்கு அனுப்பி பசியில் அவதிப்படும் ஏழ்மைக் குடும்பங்களுக்கு ஏதேனும் வாழ்வாதாரம் அமைத்துத் தரச் சொல்லியும், எஞ்சினால் அதை ஏழை மாணவர்களுக்கு படிக்கவேண்டி கொடுத்து உதவவும், அதேநேரம் அனாதை குழந்தைகளுக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கும் தந்துதவுமாறு கேட்டு அதற்குத் தக்க ஏற்பாட்டினை உடனடியாகச் செய்தேன்.

அதற்குள் தண்டபாணி வந்து நின்றார், சார்.. என் சம்பளம் எட்டு வருஷமா ஏறவே இல்லை சார், என்றார். நான் எப்படிச் சொல்வேன் எனக்கும் தானென்று. இருந்தாலும் அது போகட்டும், அது ஒரு சதி, அது ஒரு இனத்தின் மீதுத் திணிக்கப்படும் நெடுநாளைய சதி; அதிலிருந்து வெளியேற இன்னும் நாம் எத்தனை இழப்போமா என்று வலிக்க, ஒரு பெருமூச்சினையிழுத்து விட்டுவிட்டு, சொல்லுங்கள் ஐயா, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன்.

என் பொண்ணுக்குக் கல்யாணம் வேற வெச்சிருக்கேன் சார், நீங்கதான் ஒரு தமிழ் ஆளு இங்க பெரிய பொறுப்புல இருக்கீங்க, நீங்க சொல்லி ஒரு ரெண்டு லட்சம் லோன் வாங்கி கொடுங்க சார், நான் மாசாமாசம் தவறாம கட்டுவேன் சார், நான் கண்ணியம் தவரமாட்டேன் சார் என்றார். அவர் பேச்சு என் அப்பா வந்து என்னிடம் என் தங்கைக்கு கல்யாணம் நடத்திக் கொடேண்டா என்று கேட்டதுபோலவேயிருந்தது. பேசும்போதே அவரின் முதுமை வேறு ஒரு புறம் வலிக்க’ ஏழ்மை கண்களின் ஓரம் கண்ணீரின் ஈரமாக அவருக்குப் படிந்துப் போயிருந்தது.

நான் ஒரு நொடி யோசித்துவிட்டு என் மேலாளரை அழைத்து என் தங்கைக்கு திருமணம் உடனே ஒரு இரண்டு லட்சம் கடனாக தர இயலுமா என்று கேட்டேன், அவர் தவிர்க்கமுடியாத அவசரமெனில் உதவலாம் வங்கிக் கணக்கினுடைய எண்ணினைத் தா என்றார். நான் பெரியவர் தண்டபாணியிடம் திரும்பி அவருடைய வங்கிக்கணக்கு எண்ணினை எழுதித் தரச்சொல்லி வாங்கி என் மேலாளருக்குக் கொடுத்தேன். அவர் கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார். அதற்குள் சுனாமி சுனாமி சுனாமியாம் ஊர்ல சுனாமியாம், நிறைய கடலோரப் பகுதிகள் பாதிப்பாம், மக்கள் குடிசை கூட இல்லாம பள்ளிக்கூடங்களில் தங்கியுள்ளார்களாம் என்று நண்பர்கள் பதறி ஓடிவந்தனர்.

பதறாதீர்கள், ஆளுக்கொரு கைபிடித்து சுனாமியை நம்மால் நிறுத்திவிட முடியுமா என்றேன். அதெப்படி முடியுமென்றார்கள். சரி, ஆளுக்கொரு பங்கிட்டு பணம் அனுப்பினால் அது அவர்களின் சொச்சக் கண்ணீரையேனும் துடைக்க உதவுமில்லையா என்றுகேட்க எல்லோரும் ஆமென்று சொல்லி வாரி வாரிக் கொடுத்தார்கள். தன்னால் இயன்றளவில் மதம் இனம் என ஒன்றும் பாராது இங்குமங்குமென வாங்கிச் சேகரித்துக் கொடுத்தனர். உடனே அதை ஊரில் ஒரு நண்பர்கள் குழு வைத்து பாதிக்கப்பட்டோருக்கு இயன்றளவில் உதவி செய்ய ஏற்பாடு செய்தோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வந்தது. சுனாமி இங்கும் வரும், பெரிய பாதிப்பு இருக்கலாம் எச்சரிக்கை என்றார்கள். நான் இனி எது வந்தாலென்ன என்று எண்ணிக்கொண்டு தொலைக்காட்சியை அணைத்துவிட்டு மல்லாக்கப் படுத்து கண்களை மூடிக்கொண்டேன். கண்களுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து ஒவ்வொரு மலரிலாய் அமர்ந்து அமர்ந்து தேன் குடித்தன.

ஒரு பட்டாம்பூச்சி ஒரு மலருக்கருகில் போக இன்னொரு பட்டாம்பூச்சி அந்த மலருக்கு அருகில் வர’ அந்த மலரை விட்டுவிட்டு அந்த பட்டாம்பூச்சி பறந்து நகர்ந்து வேறொரு மலரில் அமரப்போக’ அங்கே இன்னொரு பட்டாம்பூச்சி பறந்துவர, அது அந்த மலரையும் விட்டுவிட்டு நகர்ந்து அருகிலிருந்த வேறொரு புதிய மலரினைத் தேடிப் போனது. மலர்கள் வனமெங்கும் பூத்துக் கிடந்தன, அதை வாரி தனதென்று வைத்துக் கொள்ளத்தெரியாத பட்டாம்பூச்சிகளுக்கு எந்த மலரிலும் தனதான உரிமையே இருந்திருக்கவில்லை. எல்லாமே எல்லோருக்குமாய் உள்ளதென நம்பி அவைகள் இங்குமங்கும் மாறி மாறி பறந்து தனக்குக் கிடைத்த இடத்தில் தேன்குடித்தன… நானும் எனைமறந்த ஒரு நிம்மதி வானில் நிம்மதியாய் பறக்குமொரு நிறைவின் உச்சத்தில் உறங்கிபோனேன்!!

என் உறக்கம் என்னிடம் மட்டுமில்லை, பிறரின் கனவுகளுக்குள்ளும் கால்நீட்டிக் கொண்டிருப்பது காலையின் விடியலில் மெல்ல உணரப்பட்டது…

வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

5, நீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு!!

1
நான் உனைக் கடந்துப்
போகும்போதெல்லாம்
என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று
நீ எட்டி என்காலைத் தொட்டு
உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்;

இன்று நீ எனைக் கடந்துச்
செல்கிறாய் –
எதேச்சையாக உன் கால்
என்மீது பட்டுவிடுகிறது;

நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை
நானுன் கால்தொட்டு –
என் கண்களில் ஒற்றிக் கொண்டேன்

நீ உடனே பதறி விலகி நின்றதில்
நான் அதலாம் ஒன்றும் தவறில்லை போ’ என்று சிரித்ததில்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு
கொஞ்சமேனும் புரிந்திருக்கும் – நீயும்
நானும் ஒன்றுதான் என்று!!
————————————————————————————

2
வீ
ட்டில் அதிரசம் செய்தாய்
எடுத்து ஒரு துண்டு கடித்தேன்

ஐயோ  ‘சுகரு’ கூடும் வையுங்க என்று சொல்லி
வாயிலிருந்துப் பிடிங்கிக் கொண்டாய்;

தெருக் கடையில் குழந்தைகளுக்கு
இனிப்பு வாங்குகையில் ஒன்றெடுத்து
வாயில் வைத்தேன் வேண்டாம் வேண்டாமென்று
கெஞ்சினாய்;

பிறகு சர்க்கரையே இல்லாமல்
தேநீர் கொடுத்தாய்
கசப்பு முகத்தில் அறைய’

எனக்குத் தேநீரே வேண்டாம்
ஆளைவிடு என்றேன்
மன்னிக்கக்  கேட்டு வருத்தப்பட்டாய்
கசந்ததையும் கண்மூடிக் குடித்தேன்;

ஒரு திருமணத்திற்கு ஆசிகூற போனோம்
திருமணம் முடிந்து பந்தியிலமர
பாயாசத்தை முதலாக தட்டில் வைத்தார்கள்
நீ  என்னையேப் பார்த்தாய்
நான் பாயாசத்தை தொடக் கூட இல்லை;

இப்போதெல்லாம் இனிப்புகளை
எனக்காக இல்லையென்றாலும்
உனக்காக நான் தின்பதில்லை’ என்று நீ
புரிந்துக் கொண்டாய்ப் போலும் – உனக்கும் பாயாசம்
வேண்டாம் என்றாய்;

கொஞ்ச நாள் கழித்து ‘சுகர் டெஸ்ட்’ செய்தார்கள்
அத்தனை ஒன்றுமில்லை – கொஞ்சம் இனிப்பு
தின்னலாம் என்றார் மருத்துவர்

நானுன்னைப் பார்த்துச் சிரித்தேன்

நீ மருத்துவரையே பார்த்தாய்
இந்தப் பாவி மனுசன்
இப்படியா சொல்லிவைப்பான் இவரிடமென்று நீ
நினைத்திருப்பாய்  போலும்

உன் கண்களில் கடுகு பொறிய
உனைப் பார்த்து மகன் சிரித்துவிட
நானும் சிரிக்க அதற்குள் நீ

அதிக இனிப்பில்லாமல்
வேறு என்ன செய்துதரலாமென யோசித்துக்
கொண்டிருந்தாய்,

நான்  உனக்குக் கட்டிய தாலியை நீ பிரித்து
எனக்குக் கட்டிய ஒரு மரியாதையில்
கரைந்துப் போயிருந்தேன்;

மனதால் இருவரும் இருவேறு மாற்றங்களில்
சமமாகவே இருந்தோம்!
——————————————————————————–

3
ன்ன பார்க்கிறீர்கள் என்றாய்
உன் முகத்தில் பொட்டில்லாமலும்
அழகாகத் தான் இருக்கிறாய் என்றுசொல்லி
சிரித்தேன் நான்;

ஐயோ விழுந்துடுச்சான்னு சொல்லி நீ
விழுந்து ஓடி
சாந்தெடுத்து கண்ணாடி பார்த்து நெற்றியில்
வட்டமாய் வைக்க

உனக்குப் பின்புறமிருந்து
அதேக் கண்ணாடியில்
என் முகமும் தெரிய

நான் அந்த என் முகத்தினுள்ளே
உன் பொட்டில் திணித்துள்ள என் உயிர்ப்பின் நியாயத்தை
தேடிக் கொண்டிருந்தேன் –

நீ
இப்போ எப்படியிருக்கு என்று கேட்டு
பொட்டோடு என்பக்கம் திரும்பினாய்

நான் –
பொட்டு நல்லாருக்கு
அதிலிருக்கும் நாங்கள்தான்
நல்லாயிருந்திருக்கவில்லைப் போல் என்றேன்,

நீ உடனே ‘ஏன், அந்த உங்களில்
நாங்களும் தானே இருக்கிறோம்
அதனால் வருந்தாதீர்கள்
அதலாம்  அப்படித் தான்’ இனி மாற்றினாலும்
வலிக்குமென்றாய்;

வலிக்கும்தான்
இருவரும் இருக்கிறோம் தான்
நீயில்லாமலில்லை தான்…., ஆனாலும்

இருவரும் நடக்கும் சாலையில் நீ மட்டும்
சுமக்கிறாயே என்றேன்;

விதித்ததை சுமக்கிறோம்
விடையேது வாருங்கள்’ என்று நீ
கையிழுத்துவிட்டு உள்ளேப் போனாய்,

நான் அவ்வப்பொழுது
இதுபோன்ற இடங்களில் நின்றேப் போகிறேன்

காரணம் கேள்விகளின் ஓட்டையில்
பதில்கள் அத்தனை அடைவதேயில்லை!!
—————————————————————————————–

4
லையில் மல்லிகை வைத்து
அருகில் வந்தாய்

ஆ… நல்ல வாசம் என்றேன்

தலையை திருப்பிக் காட்டி
நல்லாருக்கா என்றாய்

பெண் நீ; எப்படியும் அழகுதானே
என்றேன்;

அதலாமில்லை பூ சரியாக இருக்கா
பாருங்கள் என்றாய்

ம்ம் சரிதான் என்றேன்

இன்னும் கொஞ்சம் ஒரு சுற்று
சுற்றவேண்டுமா
நீட்டனுமா
இல்லைப் போதுமா? என்றாய்

உனக்குப் போதுமெனில் விடு
வேண்டுமெனில் வை என்றேன்
எப்படியும் நீ அழகுதானே என்றேன் மீண்டும்;

நீ சிரித்துக் கொண்டே
தலைகுனிந்து உள்ளேப் போய்
நீளமாக பூ தொங்க இரண்டுமூன்றாக வைத்துக்கொண்டு
சிரித்தமுகமாக வெளியே வந்தாய்;

வந்ததும் என்னிடம்
சரி புடவைக் கட்டவா
இல்லை சுடிதார் அணியவா என்றாய்

உனக்கு  எது வசதியா இருக்குமோ
அதுபடி செய் என்றேன்

நீ மீண்டும் உள்ளே ஓடிபோய்
புடவை கட்டிக்கொண்டு
வாசல் வந்தாய்
போலாமா என்றாய்;

சரி என்று நானும் தலையாட்டி
கதவடைத்து
இருவரும் இறங்கி தெருவில் நடந்தோம்

நான் முன்னே தனியே நடந்தேன்
நீ சற்று வேகம் கூட்டி ஓடிவந்து
என் கைபிடித்துக் கொண்டாய்;

ஆக, எதையுமே நான்
உனக்குப் பிடித்தாற்போல் தான்
உனை வைத்திருக்க நினைப்பேன்; நீ
எனக்கு ஏற்றார் போலிருக்கவே எப்பொழுதும்
விரும்பினாய்,

உன் விருப்பத்தில் எனக்கும்
இணக்கமும் மகிழ்வும் உண்டு, காரணம்
அதையும் அது உன் உணர்வென்று மதித்தேன்;

என்றாலும்
நீ சார்ந்து இருப்பதற்குரிய
அவ்வப்பொழுதிற்கான என் கவலை
நம்மைப் பற்றியதல்ல –
அடுத்த தலைமுறையைப் பற்றியது!!
————————————————————————————–

5
வீ
டு பெருக்கி வாசல் பெருக்கி
கோலமிட்டாய்;

பெருஸ்ஸ்ஸ்ஸா பேசுறியே
நீ போய் இதலாம் செய்துக் கொடேன் என்றார்
என் நண்பர் ஒருவர்.

செய்வேனே, ஏன் செய்தாலென்ன
கொடு என்று கேட்டு வாங்கி ஒருநாள் முழுக்க
பெருக்குவது துடைப்பது கழுவுவது சமைப்பது என
அனைத்தையும்  நானே செய்தேன்,

சரியான பொண்டாட்டிதாசன் இவனென்று
என் வீட்டுத் தெருவின்
இந்த முனையிலிருந்து அந்தமுனை வரை
பெண்கள் பேசி கேலி செய்து சிரித்தார்கள்;

அவர்களுக்குப் புரியவேயில்லை
நான் பெருக்கியது –
அவர்களின் வீட்டுக் குப்பையையும் சேர்த்துதானென்று!!
——————————————————————
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45, கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!

கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!

நாங்கள் பிடித்த மண்வெட்டியும்
மண்கூடையும்
சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை,
சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன;

சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட
வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த
அப்பாவின் சாராயமும் –
அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது;

பசித்த வயிறும் செருப்பிடா கால்களும்
சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை
தெருவில் போகும் பள்ளிச் சீருடையின் வெண்மையில்
கருகித் தான் போனது;

ஏங்கிய மனசும், எட்டிநின்று பார்த்த
ஆசைப் பார்வையும் ஈரமே காயவில்லை; ஈரத்தின்
சதுப்பிலும், ஏறி அடுக்கிய செங்கற்களின் இடுக்கிலும்
வாழ்க்கை வெறுமனே புதைவது வலித்தது;

படித்து வராத அறிவும், பகுத்தறியக் கல்லா
கல்வியும் வெறும் தார்சாலையில் தீர்வது தீரட்டும்,
நாளை மரணித்துப் படுக்கும் பாடைக்கு, பார்ப்பவர்
‘மண்வெட்டியின் பிணமென்று’ பெயர்வைப்பர் வைக்கட்டும்;

தெருவோர தூளியின் ஓட்டையில் வரும் காற்றும்
எங்கோ தூர இடைவெளியில் கேட்கும் பிள்ளைகளின்
படிக்கும் சப்தமும், அம்மா சேலையின் வாசமும், அப்பா
என்றோ வங்கித்தரும் புதிய சட்டையின் பூரிப்பும்  போதும் போதும்;

பெரிய படிப்பு படித்து காதில் ஸ்டெதாஸ்கோப் மாட்ட
திடீரெனக் கனவெல்லாம் பூக்கவில்லை, அந்த புதிய புத்தகத்தின்
வாசம் நுகரத்தான் அன்றிலிருந்தே ஒரு ஆசை, ஆயுதம் பிடித்த கையுதறி
யாரேனும் புத்தகத்தை திணித்தால்; கெட்டியாகப் பிடித்துநடக்க ஆசை;

ஆசையென்ன ஆசை
அது தெருவோர சல்லியுடனோ
தீப்பெட்டியின் குச்சிகளோடோ
ஊதுபத்தியின் வாசத்திலோ கலந்து மணக்கும் மணக்கட்டும்;

நாங்கள் படித்தாலென்ன
எங்களின் கிழிந்த கால்சட்டைகள் ஒட்டித்
தைக்காவிட்டால்தானென்ன – உங்கள் மனது லேசாகும்
வேண்டுமெனில் ஒரு உச்சுக் கொட்டிவிட்டு கடந்துப் போங்கள்;

எங்களுக்கான வாழ்க்கை எப்பொழுதும் போல்
மண்வெட்டியிலும் மண் கூடையிலும்
படிக்கக்  கிடைக்காத பாடங்களாகவே நிறையும்
அல்லது உங்கள் தீபாவளியில் பட்டாசாய் நன்கு வெடிக்கும்;

காலத்திற்கும் ஒரு குறையாய் எங்களுக்குள் மட்டும்
இது வலிக்கும் வலிக்கட்டுமே; எங்களுக்கு வலித்தாலென்ன – நீங்கள் போய்
அந்த உழைப்பாளர் சிலையில் ஒன்றிற்கு கால்சட்டையும்
இன்னொன்றிற்கு குட்டைப் பாவாடையும் மாட்டிவிடுங்கள்,

அல்லது யாரேனும் சிபாரிசு செய்து – அந்த
உழைப்பாளி சிலைக்கருகே யிரண்டு
சிறுவர் சிலைகளையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்;
நாங்கள் படிக்காத கல்வியை கவிதையாக்க நாளையது உதவலாம்!!
——————————————————————————–
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

11, உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்!

முகமெல்லாம் கரி பூசி; பூசிய கரிக்கு உணர்வு கூட்டி; உணர்வின் உச்சத்தை படச்சுருளில் தோய்த்து என் முன்னோர் வாழ்ந்த கதையொன்றை திரைப்படமாக்கி, அதன் நெளிவுசுளிவு பிசகாமல் காட்ட எடுத்த பாராட்டத்தக்க திரையுலக பிரயத்தனம் இந்த ‘அரவான்’.

உண்மையில் ஒரு பிறவி முடிந்து இருநூறு வருடங்களுக்கு பின்னே போய் உடல்கட்டை விழ மீண்டும் திரையரங்கம் விட்டு வெளியே வருகையில் ஒரு தமிழராகவே மறுபிறவி எடுத்து நான் பிறந்துவந்ததொரு உணர்வு; படம் பார்த்து வந்து ஒரு நாள் ஆனபின்புமுண்டு எனில் அது இயக்குனரின் வெற்றியும் அப்படத்தில் நடித்த நடிகர்களின் உழைப்பிற்கான வெகுமதியுமன்றி வேறில்லை.

இதுபோன்ற படங்களுக்கெல்லாம் விருதெல்லாம் ஒரு பெரிய வரம்பு கிடையாது; நாம் நம்மை அறிய சற்றேனும் முற்படுவோமெனில், செய்வதிலிருந்து சற்று திரும்பிநின்று நம் பண்பு மாறாமல் பிறர் நன்மைக்கென நம் வாழ்தலை சிந்தித்து மாற்றியமைத்துக் கொள்வோமெனில் அதொன்றே இதுபோன்ற படத்தின் உழைப்பை ஈடுசெய்யும். அப்படியொரு மகத்தான திரைப்பொக்கிஷம் இந்த வசந்தபாலனின் அரவான்.

முக்கியமாக படத்தில் நமை ரசிக்கத் தூண்டிய முக்கியதொரு சிறப்பு என்னவெனில் அது படம் முழுக்க நீளும் தமிழ் உச்சரிப்பு, தமிழ்ப்படம் என்றுச் சொல்லத் தக்க மொழித் தரம், ஆங்காங்கே வந்துப்போகும் மிக நல்லத் தமிழ்பெயர்கள்… என வெகுவாய் படம் பல நன்மதிப்புகளோடு நீண்டாலும் “அன்றும் நீ இப்படி வெறும் ‘குடித்துக் கொண்டும், கேளிக்கையோடு கடந்துப்போயும், பெரியதொரு லட்சியமின்றி வாழ்ந்தும், வெறுமனே சாதிக்கும், மதத்திற்கும், ஊருக்கும் பகைக்குமிடையே தான் கடந்தாயடா வாழ்க்கையை’ என்பது போல ஒரு குறிப்பிட்ட சட்டத்திற்குள் அடங்குவது போல் தெரிந்தாலும்’ இது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குட்பட்டு, தனிப்பட்டதொரு கதைக்கு அகப்பட்டு, இரு ஊருக்கு மத்தியில் நின்று நம் உயிரின் மதிப்பை பேசத் துணிந்த திரைப்படம் தானே’ என்று எண்ணுகையில்; பின்னே ஆம் அதனூடையிலும் நம் கண்ணிய வாழ்க்கை இத்தனை நயமாகக் காட்டப்பட்டுள்ளதே என்று மனது நிறைந்துதான் போகிறது.

என்றாலும், இப்படியொரு படமா இந் நாட்களில் என்று பிரம்மித்து விடுமொரு பெருமூச்சிற்கிடையே, இப்படத்திற்குத் தகுந்தாற்போல் கதை வசனம் எழுதிய திரு.சு. வெங்கடேசன் அவர்களை பாராட்டாமல் இருப்பதற்கில்லை. திரும்பும் திசையெல்லாம் அதிர்வையும், அழகையும், அதிதீர மண்ணின் செழுமையையும், ஆட்டம்பாட்டத்தையும் கண்களுக்குள் விழித்திரை அதிர பார்க்கும் பார்வைகளையும் காட்சிகளையும் மிகத் திறமாக சிரமப்பட்டு அழகாக மிடுக்காக பதிந்துத் தந்த ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுக்கள். வாள் வேல் கத்திகளோடு சண்டை, மாடுகளின் மீது சவாரியில் சண்டை, மஞ்சுவிரட்டு என கடினமானதொரு சூழல்களை லாவகமாக சண்டைக்காட்சி படுத்திய சண்டைப் பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள். நம்மை கொஞ்சம் அந்த ஊருக்கே கொண்டுபோய் நம் பழைய நாட்களை கண்முன் நிறுத்திய கட்டிடக் கலைஞருக்கும் பாராட்டுக்கள். பற்களில் கரைபூசி ஒரு பழமை உணர்வை பார்ப்போருக்கு புகுத்த எண்ணிய இயக்குனரின் எண்ணத்திற்கு ஏற்ப பாத்திரங்களின் முகத் தோற்றங்களை மாற்றி புதிய கதாநாயகியைக் கூட பழைய பெண்மணியாகக் காட்டிய ஒப்பனைக் கலைஞருக்கும் பாராட்டுக்கள். இழை இழையாய் உள்ளே காட்சிகள் பதிய இசை இசையாய் உணர்வில் நிரம்பி “நிலா நிலா போகுதே என்றும், ஊரே ஊரே என்னப் பெத்த ஊரே..” என்றெல்லாமும் உணர்விலும் சிந்தனைகளிலும் நிறைந்துவழியும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையென தன் முதல் படத்தை வெற்றிப்படமாகத் தக்க வைத்துக் கொண்ட இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். சிங்கம் போல் கர்ஜித்தும், நட்பின் வழி நிறையும் சகோதரத்துவப் பாசம் காண்பிப்பதில் தத்ரூபம் காட்டியும் நடித்த பசுபதிக்கும், ஆதியை ஒளித்துக்கொண்டு சின்னாவை, வரிப்புலியை மட்டுமே அத்தனை ஆழமாக மனதுள் பதியவைத்த ஆதிக்கும், என் போன நாட்களின் தமிழச்சி முகங்களை வனப்பேச்சி மற்றும் வெள்ளெருக்கம் பூ வழியாகக் காட்டிப்போன இரு கதாநாயகிகளுக்கும், அம்மாவாக நடித்த நடிகைகளுக்கும், வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்தவருக்கும் மற்றும் வில்லன் போல வந்து கடைசி வரை பகையாளியாகவே நிற்கும் கரிகாலனுக்கும் இன்னபிற நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆக, வெறும் ஒரு திரைப்படம் என்பதை விட்டுத் தள்ளிநின்று இக்கதையின் காரணமென்ன, இது சொல்லவரும் கரு என்னவென்று பார்ப்போமே உறவுகளே;

ஒரு உயிர் என்பது எத்தனைப்பேரின் முடுச்சி? ஒரு குடும்பம் என்பது எத்தனை ஜென்மத்தின் பந்தம்? ஒரு காலதவத்தின் பேறுகளை பெறுவதற்கரிய ஒரு பிறப்பல்லவா இம்மானிடப் பிறப்பு? அதை அறுப்பவனின் கைகளை’ அறுப்பவனையும் கொலையாளி என்கிறது இந்த ‘அரவான்’ திரைப்படம்.

சதைபிசைய கலந்து, எலும்பு ஊடுருவி, நரம்பு பரவி, ஒரு உயிரை வார்ப்பதென்பது எத்தனைப் பெரிய தவம்; பத்துமாத வலி என்னவென்று பெற்றவளின் வலியுணரா மிருகத் தனமல்லவா கொலை ? அதை நீ செய்தால் வேறு, நான் செய்தால் வேறா என்று செவிட்டில் அறைந்து கொல்பவர் மொத்த பேரையும் கேள்வி கேட்கிறது இந்த அரவான் திரைப்படம்.

வீடு நட உயிர் பலி, கோயில் கட்ட உயிர் பலி, காவல் பார்க்க உயிர் பலி, களவு ஒழிக்க உயிர் பலி, கல்லுக்கு பூஜை செய்தாலும் பலி; கடவுளுக்கு நேந்திவிடக் கூட பலி பலி பலி என மொத்தத்தில் தன் கண்ணெதிரே துடிக்க துடிக்க இன்னொரு உயிரை மாய்க்க எவனொருவனுக்கு உரிமை பிறந்து எந்தக் கொம்பின்வழியே முளைத்துக்கொண்டது என கதற கதற அழவைத்து யோசிக்க வைக்கிறது இத்திரைப்படம்.

தவறு திருந்ததான் தண்டனையே தவிர; தவறை இன்னொரு கொலையால் மறைக்க இல்லையே என்பது; அக்கால வேகத்திலிருந்து வளர்ந்து’ செழித்து’ குழாய் மாட்டி’ கணினியில் வேலையும் செய்து பின் காலாட்டி சோறும் தின்று’ உறவுகளின் சிரிப்பில் இன்றும் உயிரை அடக்கிக் கொண்டிருக்கும் நமக்கெப்படி புரியாமல் போகிறதோ?

என் நண்பன் செத்தால்; நானும் சாகிறேன், என் அம்மா செத்தாள் நானும் சாகிறேன், என் அப்பா செத்தால் அண்ணன் செத்தால் தம்பி செத்தால் மகன் மகள் மனைவி செத்தால் துடிக்க துடிக்க சாகிறோமே, வாழ்விற்கும் வலிக்கிறதே, சிரிக்க சிரிக்க வாழ்ந்தாலும் இடையிடையே ஒரு சொட்டுக் கண்ணீரால் இதயம் உள்ளே அவர்களை எண்ணி நனைகிறதே; அது கொடுமையில்லையா? கொடுமை எனில் பிறகு மரணம் எப்படி ஒரு தண்டனையாகும்? மரணம் எப்படித் தீர்வாகும்? ஒரு அரசின் தீர்ப்பில் நுழைந்த தர்மமறுக்கும் கொடுஞ் செயலில்லையா மரணதண்டனை? என அங்காங்கே நிறுத்தி நம்மை யோசிக்கக் கேட்கிறது இத்திரைப்படம்.

ஊரை காக்கும் ஆதி என்றொரு நாயகன். களவிலிருந்து காவல் பிறக்கும் என்றொரு நம்பிக்கையை இன்னொரு ஊருக்கு மொத்தமும் தரவல்ல நாயகன் இறக்கிறான். தன்னை கொல்லும் மரணம் கூட இன்னொரு கையினை கரையாக்கி விடுமோ என்று அஞ்சி அந்த அரிவாள் வாங்கி தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு சாகிறான். அப்படி அவன் சாகும் காட்சி அங்கே நம் மனதையும் அறுத்தே முடிகிறது. அவனைப் போல எத்தனை ஆதிகள் நம் கண் முன் இறக்கப்பட்டு செய்தியில்; தூக்குப் போடப்பட்டது, மரணதண்டனைக் கொடுக்கப் பட்டது என்று இலகுவாய் சொல்லக் கேட்டு நகர்ந்து போய்விடுகிறோமே; அவர்களுக்கும் இப்படி ஒரு குடும்பமிருக்காதா? அவர்களின் தண்டனைக்கான நீதியும் சரியாகத் தான் வழங்கப்பட்டிருக்குமா? என்ற கேள்வியை மனிதாபிமானத்தோடு சிந்திக்கச் சொல்கிறது இந்தத் திரைப்படம்.

கொலைக்கு கொலை தான் நீதி, ஒருவர் மரணத்திற்கு இன்னொரு மரணம் தான் கதி என்பதை ஏற்பது எத்தனைப் பெரிய முட்டாள் தனம் பார்த்தீர்களா அறிவாளிகளே? என்று நையாண்டி செய்யும் இக்கதையின் நீதி புரியாதவர்கள் இருந்தால் அவர்களை உடனே தூக்கில் போட வேண்டும் என்றாலும் முதல் மனிதராய் நாமே அவர்களை மன்னித்து விடுவோம்.

“சாவுக்கு பயந்து ஓடலை ஆத்தா; தடயத்தைத் தேடி தான் போனேன், அங்கே உண்மை இருந்தது தடையமில்லை” எனும் வசனம் படத்தின் உச்சம். திருடப் போனாலும் களவு போன இடத்தில் ரத்தம் பார்க்க மாட்டோம், கன்னிப்பொண்ணு படுத்திருந்தாலும் உத்துப் பார்க்க மாட்டோம்” என்று பாட்டில் கூட ‘தமிழன் களவாளியாக இருந்தபோதும் தனக்கென்று தனியொரு நீதி வைத்துதான் நெறியோடு வாழ்ந்தான் என நம் கண்ணியத்தை பாடலாக்கிய பாடலாரிசிரியருக்கும் பாடல்களிலும் இத்தகைய கவனம் செலுத்திய இயக்குனருக்கும் ‘இத் தமிழனாகப் பிறந்த பிறப்பின் அத்தனை முழு நன்றிகளும் காணிக்கையாய் உரித்தாகும்.

படத்தின் இடம் ஒன்று, பாடல் ஒன்று, கதை ஒன்று என்றெல்லாம் எங்கும் எதிலும் சிதைந்துப் போகாமல் என் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண்ணின் கதையை ஒரு தூசு பிசராமல் காட்டிய முயற்சியும் உழைப்பும், எனை நம்பும் திரையுலக தமிழர்களுக்கு எதனையேனும் நான் கொடுத்தே தீருவேன் என்று எண்ணிய திரைத்துறை சார்ந்த அக்கறையும் இயக்குனரின் மீது மதிப்பை இலக்கின்றி கூட்டுகிறது.

ஊருக்கு கட்டுப்பட்ட மனிதர்கள், பெரியவர்கள் சொன்னதை படைத்தவன் சொன்ன வாக்காக எண்ணிய தமிழர்கள், கடவுளின் பக்தியை; தன் வாழ்தலின் கண்ணியத்தின் பேரில் கடைபிடித்த நம்பிக்கையைக் கொண்டு மனதின் அடியாழம் வரை ஈர்ப்பேற்படுத்திக் கொண்ட ஒரு இனத்தவரின் வரலாற்றில் ஒரு துண்டு எடுத்து அதில் ஒரு தூசளவு கதையில் கோர்த்து கதைக்குத் தக பாத்திரம்மைத்து, அந்த பாத்திரங்களினூடே மனதின் மொழிப்பற்றில்லா இடமெல்லாம், இனப்பற்றில்லா இடமெல்லாம் என் மொழியுணர்வையும் இனம் குறித்த அக்கறையையும் உரம் போல் இட்டு முடிகிறது இப் படம்.

சிரித்துக் கொண்டு, ஒய்யாரமாய் திரிந்துக் கொண்டிருப்பவனை அழைத்து நீ இந்த நாளில் இறந்து விடுவாய் என்று சொன்னால் அது அவனது மிச்சமுள்ள நாட்களை எத்தனை பாதிக்கும்? அவனைக் கடந்து அவனோடுள்ள யார் யாரை அது வலிக்கச் செய்யும்? அதனால் அவன் சென்று நிற்கும் கடைசி இடத்தின் நிலை என்ன என்பதையெல்லாம் சற்று கதையினூடே நியாயமாக யோசிக்கவைக்கிறது சின்னாவின் பாத்திரமும்; நண்பனின் கண்ணியத்தை நம்பி தன் உயிரை வீரமாக நின்று விடத் துணியும் வீரனின் கதாப் பாத்திரமும்.

அவர்களை விடக் கொடுமை அவர்களின் மனைவியின் கண்களில் தெரியும் விரக்தி? வாக்கப்பட்ட வாழ்வே சாபமான கொடூரம், விதி என்று சொல்லி வாழும் போதே இரக்கமின்றி தலைவெட்டிச் சாய்க்கும் மடத்தனம் என அத்தனையையும் உயிர்பார்வையில் வடிய வடிய காண்பிக்கிறார்கள் அந்த சின்னாவின் வீரனின் மனைவியிலிருந்து பரத்தின் பாத்திரத்திற்கு காதலியாக வரும் அஞ்சலியின் பாத்திரம் வரை.

பிறகென்ன; தவறிற்கு வேறு என்ன தான் தண்டனை? தப்பு செய்தவனையெல்லாம் கொள்ளாமல் விட்டால் நாளை கொடும் பாவிகளால் நாடு குட்டிச்சுவராகிப் போகாதா? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். நமக்குத் தெரிந்தே ஐம்பது ஆண்டுகளை கடந்து விட்டோம், இதுவரை எந்த பாவியை தூக்கில் ஏற்றி நம் தேசத்து தர்மத்தை நிலைநாட்டி விட்டது நம் அரசாங்கமும் (?) அரசியல்வாதிகளும் (?) அவர்களுக்கு பின் நின்று பெரிதாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களும்? தவறு செய்பவன் இன்னும் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறான், அதை அவர்கள் வேடிக்கைப் பார்க்கும் அளவிற்குதான் நமது கட்டமைப்பும் இருக்கிறது. ஒரு காவலாளி ஓரம் நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்க அவர் கண்முன்னே ஒரு கொலை நிகழ்ந்து கட்டை சரிய அவரால் அதிர்ச்சியில் அந்த தேனீரை கீழே போடவோ அல்லது குடிக்காமல் வைத்துவிட்டு தலையிலடித்துக் கொண்டுப் போகவோ தானே வளர்த்து வைத்திருக்கிறோம் நாம் நம் சமூகத்தை? அவர்கள் சரியாக இருந்தும் இருக்கவிடா பின்னனி யாரால் அமைக்கப் பட்டது? ஒரு காவலாளிக்கு தவறாக நடப்பதைவிட கண்ணியமாக நடப்பதற்குத் தக சூழலை வெகு கடினமாக்கிய அரசியலை யார் சமைத்துத் தந்தது இந்த மண்ணிற்கு? எல்லாம் நாம் தானே? பிறகு பழிக்கும் கேளிக்கைக்கும் ஆளாகும் காவலாளிகளையோ அவர்கள் பிடித்துக் கொன்றுபோடும் “என் கவுண்டர் எண்ணிக்கைகளுக்கோ” பொறுப்பு நாமும் இல்லையா? நமை சார்ந்த நாம் உருவாக்கிய கட்டமைப்பு இல்லையா? ஆம் எனில், முதலில் உயிர் வலிது என்று புரிவோம். தவறின் சுவடறியா பலர் கம்பிகளின் பின்னே தன் வாழ்நாட்களை கயவர்களாக தொலைத்துக் கொண்டுள்ளனர் அவர்களின் கறையை அகற்றும் முன்; தூக்கு கயிறுகளில் இருந்து தப்புவிப்போம், சரி தவறே புரியாமல் தலையை கிள்ளும் முறை மாற்றி விட்டு; தண்டனையை திருந்த மட்டும் அளிப்போம், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் வித்யாசம் புரிந்து மனிதர்களை காக்க முற்படுவோம் என்கிறது இப்படத்தின் மூலக் கருத்து.

இப்படத்தின் படி பார்த்தால், இதுபோன்று வரும் நிலையில் நமக்குத் தெரிந்த ஒரு நண்பனோ நமக்கு உடன் பிறந்த அண்ணனோ அக்காதம்பியோ தங்கையோ இப்படியொரு நிலைக்கு ஆளாகிப் போனால்மட்டுமே நமக்கு உடனே வலிக்கும் சுயநலவாதிகளாகியுள்ளோம் என்கிறது; ஆனால், அப்படி தினம் தினம் உலகின் ஏதேனும் ஒரு மூலையில் அதர்மத்தின் கயிறு தனில் தொங்கும் ஒரு உயிரைப்பற்றி நாம் அத்தனைக் கவலை பட்டிருப்போமா எனில் இல்லை என்பது நமக்கேத் தெரியும். ஆனால் இனி படுவோம் உறவுகளே, நம் மாண்புதனை மறப்பதற்கல்ல, ஒரு புல் பூண்டிற்காகக் கூட வருந்தியவன் தமிழன்; பின் உயிர் பலியிடுதல் என்பது வலிதில்லையா?

தவறுகள் தண்டிக்கப்படவேண்டும், திருத்தப்பட வேண்டும் என்பதற்கும், தவறிழைத்தோர் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கும் இடைப்பட்ட தூரம் என்பது ஒரு உயிரின் அளவு எனில், பல உயிர்களின் முடுச்சி எனில், பல குடும்பத்தின் பல ஜென்ம பந்தமெனில்; ஒரு காலதவத்தின் பேறினை வாழ்ந்துத் தீர்க்கவல்ல மனித பிறப்பின் சிறப்பு எனில் அதைப்பற்றி நாம் யோசிக்க வேண்டாமா?

அங்ஙனம், திருந்துவதற்கு தரும் தண்டனைக்கும், கொன்றுவிட்டால் தீரும் எனும் நீதிக்கும் இடைப்பட்ட வித்யாசம் என்ன என்று காட்டி அதற்குத் தகுந்த தீர்ப்பை நம்முள்ளிருந்து எப்படி எடுப்பதென்று நம்மையே யோசிக்கவைப்பதே இப்படத்தின் குறிக்கோளாகக் கருதுகிறேன். காரணம், இப்படத்தின் கதாநாயகனானவன் ஒரு பெண்ணின் கை பிடித்து, அதாவது தன் மனைவியின் கைபிடித்துக் கொண்டு ‘உன்னோடு நான் நூறு வருஷம் வாழ வேண்டும்’ என்று கேட்கும் ஒரு ஆன்மாவின் மனதில் எத்தனை ஆசை துடித்துக் கொண்டிருக்கும்? அவனின் கழுத்துத் துண்டிக்கப் படுகையில் அந்த உயிர் அவளுக்காக எத்தனை அழுதிருக்கும் ?

இப்படி, ஒவ்வொரு வீட்டில் ஒரு பிணம் விழுகையிலும் அந்த பிணத்தினை ஒரு குழந்தையாகப் பெற்றெடுத்த அந்த தாயின் வயிறு எப்படி நெருப்பென பற்றியெரியும் என்பதை பரத்திற்கு அம்மாவாக நடித்தவரின் கண்ணீர்காட்சி காட்டுகிறது. அந்த பிணத்தின் தாலிக்கு கழுத்தை நீட்டிய மனைவியின் வாழ்க்கை எப்படி நரகமாகும் என்பதை வீரனின் கழுத்து வெட்டப் படுகையில் நாக்குக் கடித்து கத்தும் அவனின் மனைவியின் உணர்ச்சி வெடிக்கும் கண்கள் அதிர அழும் முகம் காட்டுகிறது.

இப்படி படம் நெடுக நமை உறையவைக்கும் அளவிற்கு நடித்தோரை; நடித்தோர் என்பதைவிட வாழ்ந்தோரை வைத்து படமெடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர் திரு. வசந்தபாலன் என்பதே ஏற்கத் தகுந்ததாக உள்ளது. அதிலும் குறிப்பாக பசுபதி ஆதி என வரிசை நீண்டாலும், ஆதி எத்தனை நல்ல நடிகர் என்பதை ‘மிருகம்’ படத்தின் இரண்டாம் பாக கலைத் திறனை உற்று நோக்கியோருக்கு அறிந்திருக்கக் கூடும். அறியோதோருக்கும் இப்படம் அப்பட்டமாகக் காட்டுகிறது அவரின் உச்சியடைந்த நடிப்புத் திறனை.

உண்மையில் இப்படத்தில், வெறும் நடிப்பென்று இல்லை, கொஞ்ச கொஞ்ச கேட்கும் தமிழ் மொழியாகட்டும், காதுகளில் காட்சியின் உணர்வினை தகிக்கும் இசையாகட்டும், வீரம் தீரம் எனில் என்ன என்று, ‘வாழ்ந்த தமிழர் வாழ்வில் தேடினால் கிடைக்கும்’ என்று நம்புவதற்குச் சான்றாக அமைத்த சண்டைக் காட்சிகளாகட்டும், நடுகள் தெய்வவழிபாடு கோணாமல் காண்பித்த இலக்கிய முறையாகட்டும், எல்லாமே மிக கவனமாக தெளிவாக கையாண்ட சிரத்தை மிக துல்லியமாகத் காட்சிகளின் முழுதும் தெரிகிறது.

வெறி வஞ்சம் மெல்ல ஊடுருவி எதிராளியோடு சேர்த்து தன்னையும் அழிக்கிறது என்பது இப்படத்தின் இனொரு பொதுக் கரு. மனிதம் நிறைய நிறைய பிறந்து மனிதம் தழும்ப வாழ்ந்த ஒரு இனம் எங்கோ எதனோடோ சிக்கிக் கொண்டு தூக்கு தண்டனையின் பின்னே இன்றும் நின்று தனை கொன்று குவிக்கும் பாவத்தை இனியேனும் தீர்த்துக் கொள்ளாதா எனும் ஏக்கம் படம் முடிந்து வெளி வருகையில் மனதின் ஆழம் வரை இல்லாமலில்லை. மரணதண்டனையை மறுப்பதென்பது தீயோரை வளர்க்க வேண்டும் இலக்கின்றி அவரை விட்டுவிடல் வேண்டும் என்பதற்கல்ல. நீதி தவறிய பாண்டிய மன்னனிலிருந்து இந்தப்படத்தின் காட்சிகள் வரை நீதி பொய்த்தமைக்கு சாட்சியாகிறது. கோவலன் முதல் இந்த சின்னா கதைப்பாத்திரம் வரை எத்தனைப் பேர் இப்படி தான் செய்யாத தவறுக்கு மாண்டுபோயுள்ளனர். அவர்களை எல்லாம் நம்மால் திருப்பித் தர முடியுமா? மனிதனையும் மிருகத்தையும் ஆராய்ந்து மிருகத்தனமுள்ளவரை மனிதரைக் காக்கும்பொருட்டு கொன்றொழிக்கவே மரணதண்டனை முடிவுக்கு வரப் பட்டிருக்கும், ஆனால் இன்று மிருகங்கள் தெருவில் சுற்ற மனிதர்கள் நிறைய கொல்லப்படுகிறார்கள் என்பதை சிறைச்சாலை சென்று அங்குள்ளோரின் உண்மை நிலை கேட்டு அவர்களின் இன்ன பிற வாழ்வு நிலை அறிவோருக்கேப் புரியும்.

தவறு செய்வோரை தண்டித்தல் என்பதை யாரும் மறுக்கவில்லை, மறுக்கப் படவேண்டும் என்று மன்றாடுவது மீட்டுத் தர இயலா உயிரை துச்சமாகப் போக்கும் மரணத்தை மட்டுமே, மரணம் ஒரு தண்டனையாவதை மறுப்போம் என்றளவில் மட்டுமே. அதிலும் அதுபோன்று வழங்கப்படும் தீர்ப்புகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட சாட்சிகளில் எத்தனை எத்தனை அரசியல் நிகழ்கிறது? செய்தவனை விட்டு செய்யாதவனை தூக்கிலிட்டு அநீதி அழிவது மட்டுமின்றி அக்குடும்பத்தின் நிலை என்ன? என இப்படி சிந்திக்க நெடுந்தூரம் இன்னுமுள்ளது உறவுகளே. சட்டென்று உடனே முடிவுக்கு வர இயலா நிலையாயினும், மிக அவசரமாக’ ஒரு உயிர் போதலையேனும் தடுத்து நிறுத்தும் துரிதத்தில் நாம் இதுபற்றி கலந்து பேசி ஆராய்ந்து போராடியேனும் ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டும்’ என்பது பற்றி இப்படத்தின் வழியே சிந்திக்க ஒரு வாய்ப்பளித்த ‘அரவான்’ பட இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இப்படத்தில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளுக்கும், ஒளிப்பதிவு, இசை, கட்டிடக்கலை, சண்டைக்காட்சி அமைத்தோருக்கும், இன்ன பிற உழைப்பைத் தந்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றிகளும்!

_வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

44, தமிழின பேறுபோற்ற; நடைபோடுவோம்..

ழிப்பேரலை அழித்ததன் முடிவிலும்
அடங்கா பெருநெருப்பென
அகிலம் பரப்பி வெளிச்சமாய்
அகன்று வளர்ந்தது தமிழினம்;

அடிமைத் தனமகலும் போருக்கு
உயிரையும் உதிரத்தையும் –
ஆண்டாண்டுகாலமாய் சிந்தியும்
சற்றும் ஓயாது வளர்வது தமிழினம்;

கேட்டவர், பெற்றவர், பிடுங்கிக் கொண்டவரின்
நியாயத்திற்கெல்லாம் தலைசாய்த்தும் –
தன் நடை தளராமல் உலகத் தெருவெங்கும்
கனகம்பீரமாய் வீறுநடைப் போடுவது தமிழினம்;

வீரம் பெரிது மானம் பெரிது அறிவு பெரிது
உறவுகள் பெரிது உயிர்பருகும் அன்பும் நட்பும் பெரிது
அதற்குத் தகநடக்கும் பண்பு உயிரினும் மானப் பெரிதென
என்றோ மனிதருக்கு வாழ்வினைப் போதித்தது தமிழினம்;

குடும்பம் கலாச்சாரம் கடவுள் நம்பிக்கை சுய ஆய்வு
திறன் வளர்த்தல் தீரா நம்பிக்கை ஒழுக்கம் நல்குதல்
உணர்வு பகிர்ந்து உறவு பிணைந்து ஒற்றுமைத் தீக்குச்சியில்
ஒவ்வாமை கொளுத்தலென வரையறைகளோடு வாழுமினம் தமிழினம்;

இங்ஙனம், காலக் கணக்கில் பழையதாகி
புதுமை ஏடுகளில் புது பொலிவு சேர
அடியடியாய் நகர்ந்துள்ளோம்;இனி மிச்சத்தை –

இமைபோல் காத்து இவ்வினம்
தலைநிமிர்ந்து கடக்கவே நாமும் நடைபோடுவோம்..
————————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்