கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7)

இதற்குமுன்..

து ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு அவர்களின் தலைமேல் வைக்கப்பட்ட பணங்காய் போல் எண்ணி விருது வாங்கவந்த அநேகம் பேர் வருந்தியிருக்கலாம்.

ஜானகிராமனுக்கு உள்ளே ஒரு பயம், ஒரு பரவசம், உலகம் உற்றுநோக்கும் இந்திய தேசத்தின் முதல் குடிமகன் சிரித்தமுகத்தோடு நின்று கைகூப்பி படைப்பாளிகளை வணங்கி வரவேற்று ஒவ்வொரு துறை சார்ந்தவருக்குமாக விருதினை வழங்கிக் கொண்டிருப்பதை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தாலும், நினைவெல்லாம் தன் மனைவி ஜானகியிடமே இருந்தது.

புறப்பட்டதிலிருந்து ஒரு மினர் தண்ணீர் குடிக்கக் கூட மனமின்றி மனைவியின் கவலையாகவே இருந்தார். அவரின் நினைப்பெல்லாம் ‘எப்படியோ தான் நம்பியது போலவே வாழ்வெல்லாம் அமைந்து விட்டது, தான் எதிர்பார்த்த அத்தனையும் தன் கடைசி நாளிற்குள்ளேனும் நடக்கவிருக்கிறது; எனில் நம்பியதை நம்பியவாறு பெற்றேன் என்று தானே அர்த்தம்? இந்த என் ஆழமான நம்பிக்கையை தன் இளைஞர்களுக்குக் கொடுத்து தன்னை விட பல மடங்கு அவர்களை சிறந்தவர்களாக ஆக்கவேண்டும்’ என் இளைஞர்கள் அத்தனைப் பெரும் சாதிக்கவேண்டும்’ அவர்கள் தன் வாழ்க்கையில் வாழும்போதே ஜெயிக்கவேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே வாழ்நாள் சாதனையாளர்களின் விருது வரிசை ஆரம்பிக்கப் பட்டது.

ஒவ்வொருவரையாய் அழைக்க தன் பெயரும் வருமோ என்றொரு பதட்டம் ஜானகிராமனுக்கும் வர அவர் சற்று உணர்வு பூத்து அமர்ந்திருந்தார். தூக்கம் கடந்த உடல் சோர்வின் அயர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கொட்டாவி வந்து வந்து போனது. உணவுன்ணாமை, ஆழ்ந்த கவலை, இறுகிய மனநிலை என எல்லாம் சேர்ந்து அவரை சுகமின்மை படுத்தியிருந்தாலும் மனதின் விடா-திடம் அவரை தற்போதுவரை கெட்டியாகவே வைத்திருந்தது.

ஆனாலும் அவ்வப்பொழுது மனைவிக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ எனும் பயத்தில் அதை எண்ணி எண்ணி எச்சில் விழுங்கிக் கொண்டார். மகள் காலையிலேயே அழைத்துப் பேசியிருந்தாள். மனைவி ஜானகியிடம் பேசக் கேட்டதற்கு, அவர் நன்றாக பேசும் நிலையில் இல்லை, விவரத்தை விருது வாங்கியதும் அழையுங்கள் சொல்கிறேன் என்கிறாள். ஏதேனும் ஆனதோ என்று பதரியதும், விரைவில் அவசர சிகிச்சைக்கு தயார் செய்யவேண்டும் என்றும், வீட்டிற்கு வந்ததும் விருதோடு தருமந்த பணத்தில் நல்ல மருத்துவமனை சென்று மருத்துவம் பார்க்கலாம் என்றும், நான் அவரிடம் சொல்லி இங்கு வர சொல்லி இருக்கிறேன், நாளை அவர் வந்து விடுவார், நீங்கள் ஏதும் கவலைப் படாதீர்களப்பா” என்றும் சொல்லி மகள் தன் பேச்சை முடிப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப் பட்டது. அவளிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் வழிச் செலவிற்கு என்று ஜனகிராமனுக்கு கொடுத்துவிட்டிருந்தாள். எப்படியும் அதிகம் பேச பணம் இருந்திருக்காது, அதனால்தான் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது போலென்று எண்ணிக் கொண்டார் ஜானகிராமன்.

இருந்தாலும் ‘மனைவிதான் சொன்னாளே, ஏதேனும் ஆனால் உடனே அழைப்பேன் என்றாளே, எனவே ஏதேனும் ஆயிருப்பின் அழைத்திருப்பாளென்று எண்ணி, தொலைபேசி அழைப்பு வராதவரை தன் மனைவிக்கு ஒன்றும் நேராததாகவே மனதைத் தேற்றிக் கொண்டார்.

டிக் டிக்கென்று மணியடிக்கும் ஒவ்வொரு சொடுக்களின் சப்தத்திலும் விருதை விட ஜானகியின் நினைவே அவரை அதிகமாக கலவரப் படுத்திக் கொண்டிருந்தது. அந்நேரம் பார்த்து அவரின் பெயர் அறிவிக்கப்பட, அவரை தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களையும், இதுவரை அவர் எழுதியுள்ள புத்தகங்களின் பெயர்களையும் மேடையிலிருந்து வரிசையாய் சொல்ல ஆரம்பித்தனர்.

இதுவரை, அவர் எழுதிய படைப்புக்கள், அதன் சாரங்கள், அதன்மூலம் அவர் ஆற்றிய தொண்டுகள், தற்போது வாழும் எளிமை, ஏழ்மை நிலையிலும் கொண்ட எழுத்து பற்றிய அக்கறை, வெல்வோமெனும் திடமான நம்பிக்கை, விடாமல் தொடர்ந்த முயற்சியென இவ்வனைத்துமே அவரை நம் வருங்காலத்திற்கு உதாரண மனிதராக ஆக்கியிருப்பதாகவும், அதை பறைசாற்றும் பொருட்டே இவ்விருது அவருக்கு அளித்து கௌரவிக்கப் படுகிறது என்றும்’ ஒலிப்பெருக்கி அந்த வளாகம் முழுக்க அவரின் ஒவ்வொரு வெற்றிக்குமான வார்த்தைகளைக் கூறி நிறைக்க, அவருக்கு சற்று முகமெல்லாம் வியர்த்து போனது.

எழுந்து நின்று அங்கிருந்தே அவையினை நோக்கிக் கும்பிட்டார். மேடைக்கு வருமாறு அவர் அழைக்கப் பட, துண்டெடுத்து முகம் துடைத்துக் கொண்டு அவர் எழுந்திருப்பதற்குள் இருவர் அவரை நோக்கி அழைத்துப் போவதற்கென்று ஓடிவந்தனர். இதற்காக காத்திருந்த இத்தனை வருடத்துக் காத்திருப்பும் வேகமாய் உடைத்தெடுத்து அவரின் உடம்பெல்லாம் பாய, பதட்டம் கடந்த ஒரு கோபமும், யாரையோ சுட்டுத் தீர்க்கும் தீரா வஞ்சத்தின் நெருப்பும் உள்ளே சுடர்விட்டெறிந்தது ஜானகிராமனுக்கு.

அதை அடக்கிக் கொள்ளும் முயற்சியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு முன் பார்த்து காலை வைத்துத் திரும்ப, சற்று கால் இடறப் பட்டு கீழே விழப் போனார். உடனே மேடையின் ஓரமிருந்து அழைக்க வந்தவர்கள் விரைவாக ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். ஜானகிராமன் சற்று தன்னை சரிநிலைப் படுத்திக் கொண்டு, நிமிர்ந்து எல்லோரையும் பார்த்து ஒன்றுமில்லை ஒன்றுமாகவில்லையென தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, தன் வேட்டியை சரிசெய்து கட்டிக்கொண்டு மேடைக்குச் சென்றார்.

மேடையில் நின்றிருந்த மேன்மை மிகு ஜனாதிபதி ஒரு அடி அவரை நோக்கி முன்வந்து வணக்கமென்று அழகிய தமிழில் சொல்ல, ஜானகிராமனுக்கு உடல் சிலிர்த்துப் போனாலும், ஜனாதிபதியை பற்றியும் அவர் ஒரு தமிழ்மாமேதை என்றும், உலகலாவி பெயர்பெற்ற ‘இந்திய தேசத்தின் தலைசிறந்த முன்னாள் தலைமை விஞ்ஞானி அவரென்றும் முன்கூட்டியே அறிந்திருந்ததால், தன் முழு மதிப்பையும் ஒன்றுகூட்டி கையெடுத்து அவரை வணங்கினார்.

வணங்கியக் கையோடு ஜனாதிபதியின் அருகில் சென்று “கடவுளைப் பார்க்காத மனது பெரியவர்களை பார்க்கையில் குளிர்ந்து போகிறது ஐயா. மாலைவணக்கம் உரித்தாகட்டும். எனக்கு இந்த விருது பெரிதல்ல. விருதிற்காக நான் இத்தனை தூரம் வரவில்லை. ஆனால், நோயிலிருக்கும் என் மனைவியை விட்டுவிட்டு இந்த விருது நோக்கி நான் வந்ததன் காரணமே என் எழுத்து குடிகொண்டிக்கும் இந்த என் மக்களிடம் நான் சற்று பேசவேண்டுமென்று தான். சில மணித்துளிகள் பேச எனக்கு அவகாசம் கொடுப்பீர்களா? ” என்று கேட்க –

இல்லை இங்கு விருது பெற இன்னும் நிறையப் பேர் வந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் பேச அனுமதி கொடுக்குமளவிற்கு ஜனாதிபதிக்கு அவகாசமோ அல்லது விழாநேர அமைப்போ பொருந்தாது என்று சொல்லி விழாக் குழுவின் அதிகாரி இடைப்பட்டு மறுத்தார்.

என்றாலும் அவர் உருக்கமாய் தமிழில் கேட்டது தமிழராக இருந்த ஜனாதிபதிக்குப் புரிந்துவிட்டதால், அவரின் வயதும் முதிர்ச்சியும் மரியாதை மிக்க தோற்றமும் ஏதோ அர்த்தமுள்ளதாய் இருக்க, அவரின் படைப்புக்களின் நோக்கமும் சமூகம் சார்ந்ததாகவே இருப்பதையும் முன்னிட்டு’ விருது பெற்றப்பின் பேசட்டும் என்று உத்தரவிட்டார். அதனை ஏற்று அதிகாரிகள் அவருக்கான அந்த விருதினையும், ரூ பத்து லட்சம் மதிப்பிற்கான காசோலையையும் அவரிடம் கொடுக்கின்றனர்.

ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அங்கீகாரமான, தன் வாழ்நாள் காத்திருப்பிற்குரிய அந்த விருதினை எல்லோரின் கரவொலிக்கு மத்தியிலும் பல புகைப்படங்களின் மின்னலொளிகள் அவர் முகத்தில் பட்டுத் தெறிக்க, வளாகம் நிறைந்த கம்பீர இசையொலி முழங்க, புத்தகங்கள் சுமந்த கைகளில் எல்லோரின் ஆரவாரத்தோடும் அந்த விருதினை தான் எண்ணியிருந்தவாறே நம்பியவாறே பெற்றுக் கொண்டார் ஜானகிராமன்.

விருதினைப் பெற்ற கையேடு, ஒலிபெருக்கியின் முன் சென்று பேச நின்றுக் கொண்டார். மனைவியிடம் இருந்து அழைப்பேதும் வரவில்லையே என்று அலைபேசியினை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டார். ஒருவித கோபத்திலும், ஜானகி பற்றிய பயத்திலும் மனம் கலவரப் பட்டு கண்கள் ஈரமாகியிருந்தது.

அதை துடைத்துக் கொண்டு அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னார். எதிரே அமர்ந்திருந்த வேற்று மாநிலத்தவர்களையும் கவனத்தில் கொண்டு, அதோடு அங்கு நடந்த அத்தனை விசயங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே நடந்துக் கொண்டிருந்தமையால் ஜானகிரமானும் ஆங்கிலத்திலேயே பேசத் துவங்கினார்.

“அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்ப்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன தெரியுமா? இந்த விருது கிடைக்குமென்று எனக்கு என் பதின்மூன்று வயதிலேயே தெரிந்திருந்தது தான். அதெப்படி –

-—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)

இதற்கு முன்..

ரு கடிதம் தாமதமாய் கிடைத்ததால் முடிந்து போனோரின் கதையெல்லாம் ஏட்டிலும் வராமல், எட்டி தபால்நிலையத்தின் கழுத்தையும் பிடிக்காமல், பட்டமரம் போல நம்மால் கண்டுகொள்ளப் படாமலே விடப்பட்டுள்ளது.

காய்ந்த மரங்களின் அடிப்பச்சை தொலைந்தபின்னும் அதன் மீது எழுதப்பட்ட எத்தனையோ உயிர்களின் வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிந்துக் கொண்டாயிருக்கிறது? எரிக்க கட்டைக்காகும் எனும் வரையிலான ஒரு சுயநலம் மட்டுமே காய்ந்த மரத்திற்கும் நமக்கும் இடையே இருந்துக் கொண்டிருக்கும் புரிதலாகயிருக்க –

ஜானகிராமனுக்கு அனுப்பப் பட்ட அந்த கடிதம், சென்னையை விட்டு சற்று ஒதுங்கிய தூரத்துக் கிராமம் அவர் வசிக்கும் கிராமம் என்பதால் டில்லியிலிருந்து வர தாமதமானதாகவும், உடன் இன்றும் ஒரு தந்தி அஞ்சல் வந்துள்ளதாகவும் சொல்லி இரண்டையும் தபால் காரர் கொடுத்துச் சென்றார்.

அதை வாங்கிப் படிக்கப் படிக்க கண்களிலிருந்து தானாக ஆனந்தக்கண்ணீர் தாரைதாரையாய் வடிந்தது ஜானகிராமனுக்கு. ஆங்கிலத்தில் மிக நல்ல புலமை பெற்றவர்கள் ஜானகிராமனும் அவரின் மனைவியும். எனவே இருவரும் மாறி மாறி படித்துவிட்டு மகளிடம் தர, அவளும் படித்துவிட்டுத் தன் தந்தையை ஓடிவந்து பெருமையோடு கட்டிக் கொண்டு அழுதாள்.

அத்தகைய மகிழ்வஞ்சலாக இருந்தது அந்தக் கடிதம். வாழ்நாள் சாதனையாளனுக்குக் கொடுக்கும் ஜனாதிபதி விருதினை அவருக்குக் கொடுக்கயிருப்பதாகக் கூறி’ இந்தக் கூரை வீட்டு எழுத்தாளனுக்கு வந்த தந்தி அது.

தந்தி மற்றும் கடிதத்தின் படி, உடனே இன்றே புறப்பட வேண்டுமென்றும், சென்னையிலிருந்து டில்லி வந்து சேர இத்தனை மணி நேரம் ஆகுமென்றும், வந்து டில்லியில் எங்கு தங்கவேண்டும், விழா நேரம் இன்னது, விவரங்கள் இன்னது என்றெல்லாம் விவரமாக எழுதி, விழா அழைப்பிதழும் வைத்து, சென்னையிலிருந்து வர பயணச்சீட்டும் முறையாக அனுப்பியிருந்தனர், அரசு சார்ந்த அந்த விருதின் குழுவினர்.

ஆனால் காலசுழற்சியைப் பாருங்கள், ஒரு விருதென்பது ஒருவரை வளர்ப்பதுதானென்றாலும் அது இவரின் வாழ்வில்மட்டும் முரணாக அமைந்துபோனதை வேண்டுமெனில் விதியென்று சொல்லி தேற்றிக் கொள்ளலாம்.

ஆக, மடலின் துரிதப் படி, வேறு வழியின்றி – தன் நோயுற்ற மனைவிக்கு மருத்துவம் பார்க்கக் கூட இயலாதவர் ‘ஊரிலிருந்து வந்த மகளிடம் தன் மனைவியை ஒப்படைத்துவிட்டு விருது வாங்க புறப்படுகிறார்.

வாழ்வின் இன்ப-துன்பங்கள் எல்லாமே அவருக்கு அவள் மட்டுமாகவே இருந்தபோதும் இதை அவரால் மறுக்கமுடியவில்லை. காரணம், மனைவியும் அதற்கேற்றார்போல் தன்னை வலிமைப் படுத்திக் கொண்டு போய்வாருங்கள் என்று கெஞ்சத் துவங்கிவிட்டாள்.

கண்ணீர் மல்க அவரின் கையை பிடித்துக் கொண்டு ‘தனக்கொன்றும் ஆகாது போய்வாருங்களென்றும், இத்தனை வருடத்தின் காத்திருப்பு இதுவெனவும், உலகறியப் போகும் ஒரு தனி மனிதனின் உலகம்சார்ந்த கனவிது என்றும், ஒரு இறுக்கமான நம்பிக்கையை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்கும் தருணமிது விட்டுவிடாதீர்கள் என்றும் தைரியம் சொல்லி அனுப்பிவைக்கிறாள்.

“அப்படி ஒருவேளை ஏதேனும் எனக்கு நேரின் உடனே அழைக்கிறேன், ஆனால் ஒரு முறை அழைத்தால் கூட உடனே பேசுங்கள்” என்கிறாள்.

“நீயிருக்கும்வரை மட்டுமே நானிருப்பேன் ஜானகி, நீயில்லா உலகில் எனக்கு ஒரு நொடியும் வேலையில்லை, உன் உயிர்பிரிந்தால் என் உயிரும் பிரியும், நான் உன் ராமன், உன் உயிரோடு மட்டுமே ஒட்டியுள்ள ராமன் ஜானகி, இந்த ஜானகியின் ராமன் நீயின்றி ஒரு கணமும் இருக்க மறுப்பேன்’ இது இயற்கை என்றோ செய்திட்ட தீர்மானம் இல்லையா” கண்ணீர் பெருகி வார்த்தையுடைந்து அவர் அவளை நோக்கிக் கேட்க, அவரின் கைகளை எட்டி அவள் இறுகப் பிடித்துக்கொள்கிறாள். அந்த ராமனின் ஜானகிக்கு கண்களிலிருந்து இத்தனை வருடத்து வாழ்வும் கண்ணீராய் வடிகிறது.

என்னதான் ஆனாலும் இவர்களுக்கென்று அதை தட்டிக் கேட்கவோ நலம் விசாரிக்கவோ வேறு யார் இருக்கிறார்கள்? இதுபோன்ற ஏழ்மைக் குடிகளுக்கு உதவ எந்த பணக்காரக் கடவுளும், உடனே வாசல் திறந்துவந்து அழும் கண்ணீரை துடைத்துவிடுவதில்லைதானே..? அவர்களுக்குள்ளே அவர்களாகவே அவர்கள் எழுந்தோ விழுந்தோ பின் தனது வாழ்வை நேற்படுத்தியும் முரண்படுத்தியுமோ வாழ்ந்து கொள்கிறார்கள். அது பாவமாகவும் பிழைக்கான பலனென்றும் யாராலோ எதற்கோ பின்னாளில் கணக்கிட்டுக் கொள்ளப்படுகிறது. அப்படி ஜானகிராமனும் அவரின் குடும்பமும் கூட அவர்களுக்குள்ளாகவே அவர்களை ஒருவரை மாற்றியொருவரென ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர்.

மகளும் தாயும் தந்தையுமாய் அழுத அவர்களின் சப்தமெலாம்’ நிமிடங்களைக் கடந்தும் அந்தக் கூரைவீட்டின் அரை வெளிச்சத்தில் மீந்த இருட்டின் நெருக்கத்தோடு அடுத்தடுத்த கட்ட நகர்வாய் கலந்து போகிறது.

ஒரு கட்டப் பொழுதில், அவரவர் விலகி அவரவர் வேலையை பார்க்கின்றனர். மெல்ல மெல்ல நேரம் நகர்ந்து அவர்கள் அவரை வழியனுப்பிவைக்க தக்க ஏற்பாடுகளை செய்து, இதோ.. ஜானகிராமன் புறப்பட்டு, ரயில்நிலையம் வந்து, தனக்கான சீட்டினைப் பிடித்து வீட்டைப் பற்றி நினைத்தவாறே அமர்ந்து கொண்டுள்ளார்.

ரயில்  புறப்படயிருக்கும் பதைபதைப்பும், உடன் க்க்கூ….. எனும் சப்தத்தையும் முழங்கிக் கொண்டு ரயில் நிற்க, அதன் பக்கவாட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு அருகில் நிற்போர், சாய்ந்துநிற்போர் எல்லாம் அங்கிருந்து விலகி ஒதுங்கி தூரப் போயினர்.

சிலர் ஓடிவந்து எட்டி ரயில்கம்பி பிடித்து வாசலில் ஏறிநின்று தலைமுடி தடவி சரிசெய்துக்கொண்டனர். குருவிகள் ரயில் நிலையத்தின் நீண்ட வளாகத்தில் வேயப்பட்டிருந்த இரும்புக் கூரையிலிருந்து தொங்கும் மின்விளக்குகளிலிருந்து தாவி ரயிலின் ஜன்னலுக்கும், ஜன்னலிளிருந்துத் தாவி மின்விளக்குகளுக்குமென பறந்து கொண்டிருந்தன.

காகங்கள் சில வெளியே தரையில் விழுந்து கிடக்கும் உடைந்த அரையுணவுப் பொருட்களை பொறுக்கித் தின்றுகொண்டிருந்தன. ஜானகிரமனுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிந்து தன் கன்னத்தின்மீது வெற்றியின் வெப்பமென வடிகிறது.

அதைத் துடைக்கும் எண்ணம் கூட இன்றி தன் ஏதேதோ நினைவுகளில் மூழ்கிக் கொள்கிறார் அவர். வயோதிகம் ஆங்காங்கே அவருக்கு நிறையவே வலிக்கத் துவங்கியது. அவைகளை எல்லாம் பொருத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவரின் எண்ணமெல்லாம் விரிந்து அந்த விருது கொடுக்கும் இடத்தை நோக்கி செல்கிறது.

‘எனக்கு விருது கிடைக்கப்போகிறது. என் இத்தனை வருட உழைப்பிற்கான, என் நம்பிக்கைக்கான அங்கீகாரம் கிடக்கப் போகிறது. ஆனால் இது எனக்கான மதிப்பல்ல, என் எழுத்திற்கான மதிப்பு. கடவுள் என் படைப்பிற்கு அருளிய வரம். அதை பத்திரமாக கொண்டுசென்று தக்கோரிடம் சேர்த்துவிடவேண்டும். யார்யாருக்குக் கொடுக்க இயலுமோ அவருக்கெல்லாம் கொடுத்துவிடவேண்டும். அது என் பொறுப்பு, அதற்குத் தான் போகிறேன் நான், அதற்குத் தான் போகிறேன் நான், வேறு எந்த மாயைக்கும் மயங்கியல்ல’ என்று தனது எண்ணத்தை அழுத்தமாக தன் மனதிற்குள் இருத்திக்கொண்டிருக்கையில், இடையே மாப்பிள்ளையின் நினைவுகளும் திடீரென வந்து இடை புகுந்து கொள்கிறது. ஆம் அது ஒரு எதிர்பாராது நிகழ்ந்த ஒரு மனநிறைவு மிக்க செயல். ஜானகிராமனின் தற்போதைய வாழ்க்கைக்குக் கிடைத்த அவருக்கான ஒற்றை சந்தோசமது.

இங்ஙனம் விருது பற்றியும், டில்லிக்குப் போகவேண்டியுள்ளது என்பதும் மாப்பிள்ளைக்கு அறியவர, முதலில் இப்பேற்பட்ட ஒரு நிலையில் ஜானகியம்மாவை தனியே விட்டுவிட்டுப் போகும் நிலை வருகிறதே என்றொரு வருத்தம் மேவிட்டாலும், இது ஜானகிராமனின் உழைப்பிற்கு கிடைத்த ஒரு வெற்றியும் என்பதை மனதில் எண்ணி ஓடிவந்து அவரைக்கட்டியணைத்து, பாராட்டி, பாராட்டியதோடு நில்லாமல் ‘நீங்கள் ஒரு பெரிய படைப்பாளி, நீங்கள் வென்றுவிட்டீர்கள், உங்களின் வெற்றிக்கு என் மரியாதையிது’ என்றுச் சொல்லி அவரின் காலிலும் விழுந்து தொட்டு வணங்கிய மாப்பிள்ளையை எண்ணி எண்ணி பூரித்துப் போனார். நிறைவில் மீண்டுமொரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஜன்னல் கம்பியில் பட்டுத் தெறித்தது.

திடீரென ஐயோ இங்கே மாப்பிள்ளை நின்று கொண்டிருந்தாரே என்று நினைவில் வர, கண்களைத் துடைத்துக் கொண்டவராய் நிமிர்ந்து வெளியே சற்று தூரத்தில் பார்த்து மாப்பிள்ளையைத் தேடுகிறார். மாப்பிள்ளை சற்று தூரத்தில் இடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, அந்நேரம் பார்த்து ரயில் புறப்படுவதற்கான முன்அறிவிப்பாக க்க்கூ………………….. எனுமந்த நீண்டதொரு சப்தம் முழங்க எல்லோரும் உடனே முனைப்பாக அவரவர் இருக்கையில் அமர்ந்து ஜன்னல்பக்கம் பார்த்து வழியனுப்ப வந்தோருக்கு கையசைத்து பயணம் சொல்ல –

ஜானகிராமனும் சற்றுக் கலவரப் பட்டு மாப்பிள்ளையைப் பார்க்க, அவர் எழுந்துவந்து ஜன்னலின் அருகில் நிற்கிறார். தன்னை வழியனுப்ப வந்த மாப்பிள்ளைக்கு தனது எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாதவராய், கையை மட்டும் வெளியே நீட்டி போய்வருகிறேன், போய் விருது வாங்கியதும் அழைக்கிறேன், ஜானகியை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி உடைந்த வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள –

ரயில் தன் சக்கரங்களை கிர்.. கிர்..ரென்று சுழற்றிக் கொண்டே ஓடத் துவங்குகிறது. மாப்பிள்ளையை மகளை மனைவி ஜானகியை தான் வாழ்ந்த வீட்டை, ஊரின் வாசத்தையெல்லாம் விட்டு விலகிப் போகும் ஜானகிராமனைத் தூக்கிக் கொண்டு ரயில் எங்கோ தூரமாக வேகமாக ஓடத் துவங்குகிறது.

மேலே பரவும் ரயில்வண்டியின் புகை போல மனதெல்லாம் பரவும் சோகமும் வெற்றியின் அழுகையுமாய் ஜன்னலில் சாய்ந்து, கண்களை பாதியாய் மூடிக் கொள்கிறார் ஜானகிராமன். ரயில் அவரை சுமந்து செல்லும் நிறைவில் வெகு ஒய்யாரமாய் புதுடில்லியை நோக்கி விரைகிறது…

—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5)

இதற்கு முன்..

வாணி அந்த இருட்டிலும் ஓடிச்சென்று காய்கறிகள் அரிசி மண்ணெண்ணை எல்லாம் வாங்கிவந்து சமைத்து அப்பாம்மாவிற்கு உணவு பரிமாறி, அவர்கள் உண்டபின் தானும் உண்டுவிட்டு அப்பாவின் புதிய எழுத்துக்களை எல்லாம் சேகரித்து பத்திரமாக எடுத்துவைப்பதற்காக ஒவ்வொன்றினையாய் எடுத்து படித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜானகியம்மாள் உணவுண்டு மருந்தும் சாப்பிட்டுவிட்டு ஒருபக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டு வாசலுக்குவெளியே தெரியும் படர்ந்த இருட்டை அகலப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே உயிர்பிரியும் ஒரு வலியிருப்பதையோ இதயம் அழுந்த வலிப்பதையோ சொல்லி ஜானகிராமனை நோகடிக்க அவள் விரும்பவில்லை.

ஜீரணிக்க முடியாத சுமையை இதயத்தில் சுமந்திருந்த ஜானகிராமனுக்கு இறைவனை சபிக்கும் சிந்தனைக் கூட அற்றுப் போய் மனைவியின் பழைய நினைவுகளை எல்லாம் ஏனோ அசைப்போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.

வாணி வீடெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். முற்றம் வாசல் கூரை என இங்குமங்குமாய் திரிந்தாள். கூரையின் மத்தியில் தொங்கும் எரியாத மின் விளக்கு மின்சாரக் கட்டணம் கூட செலுத்தியிராததை அவளுக்கு நினைவுபடுத்தியிருக்கக் கூடும்போல், வெளிச்சம் வேறு மிக சன்னமாக இருந்தது. ஒரேயொரு விளக்கே வீட்டின் நடுமரத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்க உள்பக்கம் அண்டியிருந்த இருட்டை விரட்ட இன்னொரு சிறிய விளக்கொன்றை எடுத்து திரிநீக்கி கொளுத்தினாள். அது திரி எரிந்து உடனே அணைந்து போக, ஆட்டிப்பார்த்து அதிலும் மண்ணெண்ணெயில்லை என்பதை அறிந்தாற்போல் அப்பாவைத் திரும்பிப் பார்க்கிறாள். அப்பா “வேறு மண்ணெண்ணெய் இல்லைம்மா, இந்த வீட்டில் ஒரு விளக்கு எரிவதே எங்களுக்கு சூரியன் வீட்டில் பூத்ததுக்கு சமமில்லையா” என்கிறார்.

அவள் முற்றத்துப் பக்கம் ஓடிப்போய், கல்லடுப்பிற்கு அருகிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்துப் பார்க்கிறாள். அதில் தான் காய்கறி வாங்கும்போது வாங்கிவந்திருந்த மண்ணெண்ணெயின் மிச்சம் கொஞ்சம் இருந்தது. அதை அப்படியே அந்த விளக்கில் ஊற்றி பற்றவைத்து உள்ளே கொண்டுவர, ஜானகிராமனுக்கு தனது விட்டுப்போன வெளிச்சம் மீண்டும் வீட்டினுள் வருவதுபோல் தோன்றிற்று.

பெற்றவர்களைப் பொருத்தவரை தன் வீட்டின் எரியாமல் வெளிச்சம் தரும் விளக்கு தன் பிள்ளைகளாகதான் இருக்கிறார்கள் என்ற புரிதலை உணர்ந்த மகள் வாணி. ஜானகிராமனின் சிறந்த படைப்புக்களில் முதன்மையானவள் அவள்.

அவளின் மலர்ந்த முகமும் உயிரில் ஒட்டிக்கொள்ளும் அன்பும் அவரின் நிறையப் படைப்புக்களில் தேடினால் கிடைக்கும். எழுத்தை சமூகத்திற்கு எழுதுவதைக் காட்டிலும், தான் வாழ்ந்ததன் சிறப்புகளை தன் பின் வருவோருக்குக் கற்றுக் கொடுப்பதாகவே இருந்தது அவரின் எழுத்துக்களும். அத்தகைய எழுத்திற்கு கிடைத்த வெற்றியின் முதல் பிரதியாக வாணி அவருக்குத் தெரிந்தாள்.

எரியும் அந்த சிறிய சிமினி விளக்கை கையிலேந்தி வீட்டிற்குள் வந்தவள் நான்குபுறமும் வெளிச்சம் காட்டிக் காட்டிப் பார்க்கிறாள். மின்சாரத்திற்கே பணம் கட்டாமல், மண்ணெண்ணெய் வாங்கவே பணம் இல்லாமல் இவர்களிருக்க, தொலைபேசிக்கு எங்கு பணம் கட்டியிருக்கப் போகிறார்கள் என்றெண்ணிக் கொண்டே ஒரு ஓரத்தில் இருந்த ஜானகிராமனின் பழைய மேஜையின் மீதிருந்த தொலைபேசி எடுத்து ரிசிவரைக் காதில் வைத்துப் பார்த்தால் வெறும் தூசியின் நெடிதான் மூக்கில் ஏறியது. அதை அப்படியே வைத்துவிட்டு தன் கைப் பையை எடுத்து அதிலிருந்த தனது அலைபேசியைக் கொண்டுபோய் ஜானகிராமனை கைநீட்டச் சொல்லி அவரின் கைக்குள் வைத்து மூடுகிறாள். ஏனென்றுக் கேட்டால் ஏதும் பேச வேண்டாம் இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், நான் அங்கிருந்துக் கூட இந்த எண்ணிற்கு பணம் போட்டுக் கொள்வேன், அவசரத்திற்கு என்னைத் தொடர்புக்கொள்ள இது உதவுமென்றுச் சொல்ல ஒன்றும் பேச இல்லாமல் வாங்கி தன்னருகில் வைத்துக் கொள்கிறார் ஜானகிராமன்.

உண்மையில், மகளும் அத்தனை வசதியாயில்லை. ஆனால் அவள் பிறந்தபோதே வசதியாக இல்லாவிட்டாலும் அறிவாக இருப்பாள் என்று நம்பியிருப்பார் போல் ஜானகிராமன், அதனால்தான் அவளுக்கு ‘வாணி மற்றும் அறிவுநிறைச் செல்வி’ என்று இரண்டு பெயர் வைத்திருந்தார். மாப்பிள்ளைக்கு அந்த அறிவுநிறைச் செல்வி அத்தனைப் பிடிக்காமல்போக வெறும் வாணி என்றே அழைக்கத் துவங்கி, பின்னான பல வருடங்களுக்குப் பிறகு வாணி மட்டுமே அவளின் ஒரேப் பெயராகிப் போனது.

மாப்பிள்ளை எது பேசினாலும் மிகச் சுருக்கிப் பேசும் பழக்கமுடையவர். அவரும் இப்போதைக்கு அத்தனை வசதி வாய்ப்போடு வாழ்ந்திடவில்லை. ஒருகாலத்தில் மரம் அறுத்து வாங்கிவந்து புகைப்படங்களுக்கு சட்டமறுத்து நிலைக்கண்ணாடிபோல் சுவற்றில் மாட்டித் தரும் சொந்த தொழில் செய்தவர். அன்றெல்லாம் குடும்பத்துப் புகைப்படங்கள் வீட்டின் சுவரெல்லாம் மாட்டியிருக்கையில் லாபமாக இருந்த தொழில் அது, இன்று லேமினேசன் பெருகிப் போனதும் அத்தொழில் படுக்கத் துவங்க, அதையும் விட்டுவிட்டு வேறு கிடைக்கும் வேலையை செய்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கையில் ஜானகிராமன் குடும்பத்தையும் பார்ப்பதென்பதைபெருத்த சுமையென்றுக் கருதினார். அதோடு, தன் குடும்பத்தை ஒழுங்காகப் பார்க்க முடியாவிட்டாலும்’ புத்தகம் எழுத்து சமூகமென்று அலைவது இந்த வயதில் அவசியமற்றது என்றொரு கோபமும் ஜானகிராமன் மேல் அவரின் மாப்பிள்ளைக்கு இருந்தது.

அதைப் புரிந்த ஜானகிராமனும் மகளுக்கு உபத்திரவம் இல்லாததுபோல் சற்று விலகியே இருந்துக்கொள்வார். இந்நிலையில் மகள் அலைபேசியை தன்னிடம் தருவது அத்தனை ஏற்புடையதாக இல்லை என்றாலும், மனைவிக்கு ஏதேனும் ஒன்றென்றால் தொடர்புக் கொள்ளவேணும் வசதியாக இருக்குமேயென்று எண்ணி வாங்கிக் கொண்டார்.

“எனக்குக் கொடுக்குறியே பிறகு உனக்கு யாரைன்னா கூப்பிடனும்னா என்னமா பண்ணுவ?”

“நான் வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்து பேசிக் கொள்வேன்பா”

“மாப்பிள்ளை எதாச்சும்….”

“அதலாம் நான் பேசிக்கிறேன்பா, இதற்கெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார்”

“மருமகன் உள்ளே வந்தாராம்மா?”

“இல்லைப்பா. அவசர வேலைன்னு போயிட்டாரு”

“அம்மாவைக் கூட பார்க்கலையா?”

“அவருக்கென்னங்க தெரியும், அவர் எப்பொழுதும்போல அவளை வாசலில் விட்டுட்டுப் போயிட்டாரு” ஜானகியம்மாள் சற்று எழுந்து நகர்ந்து சுவற்றில் சாய்ந்துக்கொண்டு பேசினாள்.

“ஆமாம்பா, அவருக்கு அம்மாவின் நிலைமை பற்றியெல்லாம் தெரியாது, அவர் பிரச்சனை, அவர் வேலை, அவருக்குப் பெருசு. அவருக்குன்னு உதவ யாருப்பா இருக்கா? அவர் எங்கேனும் இப்படி போய் அலைந்தால்தானே அவர் பிழைப்பு போகும்னு ஒரு வருத்தம் அவருக்குண்டுப்பா. அதுக்குமேல அவரைப் பற்றிதான் உங்களுக்கேத் தெரியுமேப்பா”

மகள் சொல்லி நிறுத்த, ஜானகிராமனுக்கு அந்த வார்த்தை வலித்தது. அவருக்குன்னு உதவ நானும் கூட இல்லாமல் போயிட்டனே என்று ஒரு பெரிய அழுத்தம் உணர்வுகளில் அழுந்த மேலிட்டது. அதையும் வெளிக்காட்டாமல் எச்சில் விழுங்கி உள்ளே புதைத்துக் கொண்டு மகளையே பார்த்தார்.

வேறென்ன செய்ய, சமுதயம் கெட்டுப் போயிருக்கிறது என்று சொல்பவருக்கு’ அந்த கேடு தன் வீட்டிலிருந்தும்தான் துவங்கி இருக்கிறதென்று’ அறிகிறார் யார்???

புத்தகம் புத்தகம் என்று அலைந்த நேரங்களை தன் குடும்பத்திற்கு ஒதுக்கி சரிவர பார்த்திருந்தால் இந்நேரம் இவரும் பெரிய ஒரு பணக்கார வரிசையில் இருந்திருக்கலாம் தான். ஆனால் எங்கு செய்தார், அதான் எல்லாவற்றையும் ஒழித்தாரே, எழுத்து எழுத்து என்று வாழ்ந்து கடைசியில் என்ன சாதித்தார்?” எனும் கேள்வி அவரைத் தொடர்ந்துப் பார்ப்போர் முகத்திலெல்லாம் அப்பட்டமாய்த் தெரியும்.

அதையெல்லாம் கடந்த ஒரு சிகரத்தின் மேல் நின்றிருக்கிறார் ஜானகிராமன் என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். எத்தனை வாழ்வின் பாரமென்றாலும் அவைகளையெல்லாம் கடந்தும் மனிதரிடம் ஒரு அளப்பரிய பலம் இருந்தது. அந்த பலத்திற்குப் பெயரே நம்பிக்கை. அப்படியொரு நம்பிக்கையை தன் நாடி நரம்பெல்லாம் வைத்திருந்தார் ஜானகிராமன்.

சமுதாயம் திரும்பிப் பார்க்க கத்தி அழைப்பவருக்கு மத்தியில் எழுதிக் கூப்பிட்டவர்களும் ஏராளம் பேர் உண்டு. ஆயினும் அவர்களில்கூட நம்பியவரையே திரும்பிப் பார்த்ததிந்த சமுதாயம். ஜானகிராமனுக்கும் அப்படி ஒரு திடமான நம்பிக்கை உண்டு. என்றேனும் இவ்வுலகம் நம்மை மரியாதையோடு பார்க்குமென்று நம்பினார் அவர். அந்த நம்பிக்கை இன்று வீண்போகவில்லை. இன்று அது அவரின் ஓலைவீட்டுக் கதவை தானே வந்து தட்டியது.

—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4)

இதற்கு முன்..

ருந்துக் கடையின் வரிசையில் ஆட்கள் குறைய கையை அன்னாந்து நீட்டி மருந்துக் கடைக்காரரை அழைத்தார் ஜானகிராமன்.

‘இங்ஙனம் நெடுநாளாய் அவளுக்கு நெஞ்சுவலி வந்துப் போகிறதென்றும், உடம்பெல்லாம் சோர்ந்துப் போகிறதென்றும், கைகால் உடம்பிலெல்லாம் அங்காங்கே அடிக்கடி கட்டிப்போல வருகிறதென்றும், கண்பார்வை கூட மங்கிப் போகிறதாமென்றும் சொல்லி மருந்து கேட்க –

“கிழங்கு சோளம் எண்ணெய் பொருட்கள் கொடுக்க வேண்டாம், உப்பு இனிப்பு புளிப்பு கொடுக்கவேண்டாம். வயதானவர் என்பதால் ரத்த அழுத்தமோ நீரிழிவு நோயோ இருக்கலாம், அதனால் இதயத்தில் கொழுப்படைக்கும் வாய்ப்புமுண்டு. அதனால்தான் நெஞ்சிவலிகூட வந்திருக்கவேண்டும். சிலநேரம் இதுபோன்ற கட்டம் உயிருக்கே ஆபத்தான ஒரு நிலையையும் ஏற்படுத்தி விடலாம். முழுதாக மருந்து வாங்குமளவு உங்களிடம் பணமுமில்லை’ எனவே தற்காலிகமாக ஓரிரு வேலைக்கு மட்டும் போதிய மாத்திரைகளை தருகிறேன் முடிந்தவரை சீக்கிரம் மருத்துவரிடம் கொண்டுபோய் காட்டி பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர் மருந்தும் மீத பணமும் கொடுத்துவிட்டு, அரிசி உணவு, கிழங்குவகை, எண்ணெயில் தாளித்த பொறித்த பலகாரங்களெல்லாம் தரவேண்டாமென்று சொல்ல, துக்கம் ஜானகிராமனுக்கு தொண்டைவரை அடைத்தது.

வாழ்நாள் முழுவதும் தன் உடனிருப்பதை மட்டுமே வாழ்வென்று எண்ணி வாழ்ந்தவள். அவள் போனால் எனக்கென்ன இங்கு வேலையென்று நினைக்கையில் மனசு உடைந்து போனது. ஏதோ இப்படியெல்லாம் இருக்குமோயென்றொரு எண்ணம் அவருக்கும் நெடுநாளாய் இருந்தது. சென்ற மாதம் கூட அரசு மருத்துவமனைக்குக் கூட்டிப் போய் வந்திருந்தார். அவர்கள் இத்தனை விவரமாக எடுத்துச் சொல்லவில்லை, நிறைய சோதனை செய்ய வேண்டும் பணம் ஏற்பாடு செய்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்.

அரசு மருத்துவமனைக்கு பணமெதற்கு என்று கேட்டால் பதிலும் வராது. வைத்தியமும் நடக்காது. அதோடு அங்கே போகமுடியாமல் இருந்த நேரம்தான் இன்று இப்படியாகிப்போக இங்கு வந்திருந்தார்.

இங்கே மருந்துக் கடைக்காரர்வேறு பட்டதுமேலே படுவதுபோல் இப்படிச் சொல்லிவிட, அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை. மனது கசிந்துருகி கண்ணீர் வழிகிறது. அதற்குள் மருந்துக் கடைக்காரர் சற்று குனிந்து அவர் தோள் தொட்டு ‘பெரியவரே வருத்தப் படாதீங்க, மருத்துவம் பார்த்தால் எல்லாம் சரியாகும்’ மீதி சில்லறையைக் கொடுங்க ஒரு ரொட்டி பொட்டலம் தரேனென்றுக் கேட்க, கையிலிருந்த எல்லாவற்றையும் கண்ணீரோடு நனைத்துத் தருகிறார்.

அதை வங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு கருணையோடு கூட ஒரு ரொட்டிப் பொட்டலத்தையும் சேர்த்து அதோடு மருந்தையும் அந்த மருந்துக் கடைக்காரர் கொடுக்க, ஒன்று போதுமென்று வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு, கையிலிருந்த துண்டினால் கண்களைத் துடைத்தவாறு வாழ்வின் பாரங்களை மனத்திலும், போதாக்குறைக்கு புத்தகமாகவும் சுமந்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருகிறார் ஜானகிராமன்.

வரும் வழியில் எதிரே ஸ்கூட்டரில் மருமகப்பிள்ளை தன்னை கடந்துப் போவதைப் பார்க்கிறார். இவர் ஏன் இப்புறம் வரவேண்டும் மகள் வந்திருப்பாளோ என்று மனது சற்று பதட்டமடைய, அதற்கிடையில் அவரைக் கத்தி அழைத்துவிடவும் முடியாமல்’ அவர் போனவழியேப் பார்த்துநிற்க, மாப்பிள்ளை வண்டியை சற்று வேகமாக முறுக்கி தெருவின் கடைசிக்கு சென்றுவிட’ கண்ணுக்கெட்டும் தூரம்வரை பார்த்துக் கொண்டே நிற்கிறார் ஜானகிராமன். என்னானதோ ஏதானதோ எனுமொரு மகள் பற்றிய பதட்டமும் சேர்ந்து அவரைத் தொற்றிக் கொள்ள விரசாக நடந்து வீட்டை நோக்கிப் போக எத்தனிக்கிறார்.

பேரூராட்சி கடந்து, தான் வசிக்குமந்த ஒதுக்குபுறமான வீட்டை அடைவதற்குள் லேசாக இருட்டிவேறு போயிருந்தது. வியர்த்து உடம்பு சோர்வுநிலையை அடைந்தது. எனினும், வேறு வழியின்றி வேகவேகமாக நடக்கிறார். அவசர அவசரமாக நடந்து வீடு வந்து வாசலை அடைய’ உள்ளிருந்து மகள் வாணி ஓடிவந்து அப்பாயெனக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறாள். ஜான்கிராமனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று பதட்டம் பற்றிக் கொண்டது. கைகாலெல்லாம் ஆடிப் போய்விட்டார். கீழே விழுந்துப் போவேனோ என்றொரு பயத்தில் மகளின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு எட்டி உள்ளேப் பார்த்தார்’ உள்ளே மனைவி படுத்துக் கொண்டு இவர் வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரை அங்ஙனம் பார்த்தப்பிறகுதான், உயிர் மீண்டு அவருக்கே திரும்பிவந்த ஒரு ஓய்வு மனதை எட்டியது. பதற்றம் வழிந்தக் கண்களை துடைத்துக் கொண்டு தன் தாயைப் பார்ப்பதுபோல் அவளை ஏக்கமாகப் பார்த்தார். மனதிற்குள் என்னைவிட்டுப் போய்டாதடி என் ஆத்தான்னு ஒரு வலி பரவ’ மகள் அவரை ஆசுவாசப் படுத்தி உள்ளே அழைத்துவந்தாள். அவரின் உணர்வு அவளுக்குப் புரியாமலாயிருக்கும், உடல்வலியோடு அவரைப்பற்றிய மனவலியும் அவள் கண்களின் ஓரம் கண்ணீராக கரைந்து வழிந்துக் கொண்டிருந்தது.

மனைவியின் நிலைப் பற்றி மருந்துக் கடைக்காரன் சொன்னதை எண்ணி உள்ளே குமுறிக் கொண்டிருந்தாலும் மகளிடமோ மனைவியிடமோ இப்படி இருக்குமாமேயென்று சொல்லும் மனநிலையிலோ தைரியத்திலோ அவரில்லை. அதைக் கேட்கும் பக்குவத்தில் அவர்களுமில்லை. இதுவரைப் பார்க்கையில் ஏதோ உடம்புதானே சரியில்லை என்று தெரிந்த தன் மனைவி, இப்போது காண்கையில் பெரிய மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளியைப் போல் தெரிந்தாள் அவருக்கு.

வாசலின்மீது பாதியாய் தாழ்ந்திருந்த கூரையை பிடித்து நின்றிருந்த மகள் தன்னை வாசலில் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுததும் மனைவிக்குத் தான் ஏதோ கெட்டது நடந்துவிட்டதோயென்று பதறிப் போனார் ஜானகிராமன்.

மெல்ல தலைநகரத்தி மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தார். மனைவியின் திறந்த விழிகள் அவரை வலியோடு வரவேற்க’ சற்று கண்களைத் துடைத்துக்கொண்டு நிதானித்துப் பார்க்க உள்ளிருந்து தெரிந்த இருட்டிற்கு மத்தியில் அவரின் அசைவும் தெரியவர, ஒரு பெருமூச்சினை இழுத்துவிட்டுக் கொண்டார். என்றாலும், மனதளவில் முழுதாய் உடைந்தே இருந்ததால் மகள் அழுததைக் கண்டு மேலும் மடயுடைந்துப் போக வாய்ப் பொத்தியழுதார் ஜானகிராமன். மனைவி தனது வலியையும் மீறி தன் கணவர் அழுவதை காண சகியாமல், காலில் கைவைத்து தாங்கி எழுந்து நிற்க முயற்சிக்க, ஓடிப் போய் தாங்கிப் பிடித்து வேண்டாம் படுத்துக் கொள்ளம்மா எனச் சொல்லி அவரைப் படுக்கவைத்துவிட்டு தானும், அவருக்கருகில் அமர்ந்துக் கொண்டார்.

என்னதான் மனசு கலங்கிப் போயிருந்தாலும் வீட்டிற்கு வந்த மகளை என்ன ஏதென்றுக் கூட கேட்கவில்லையே என்று திடீரென ஒரு எண்ணம் வர, “எப்போமா வந்த” என்றார்.

“இப்போதாம்பா, கொஞ்சம் நேரம் முன்பு, நான் வந்து அமர்ந்தேன் நீங்களும் வந்தீர்கள்”

“அம்மாவைப் பார்த்தியா, இப்படியாயிட்டாளே, எப்படி இருக்காப் பாரேன்” அழை மீண்டும் தொண்டையை உடைத்துக் கொண்டு வந்தது. கண்கள் சிவக்க கைத்துண்டு வைத்து பொத்திக் கொள்ள..

“பார்தேன்பா. ஏன்பா நானிருக்கிறேன் தானே? இன்னும் நான் சாகவில்லைதானே? நான் உயிரோடு இன்னும் உங்கள் மகளாக இருக்கிறேன் தானே? எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாப்பா, நான் வந்தாவது இரண்டு நாள் தங்கி அம்மாவைப் பார்த்துக் கொள்ளமாட்டேனா? வேண்டவேவேண்டாமென்று ஒதுக்க எண்ணுகிறீர்களா? இது என் கடமை இல்லையாப்பா, அம்மாவையும் உங்களையும் இந்த கோளத்துல….” அவளால் அதற்குமேல் பேச இயலவில்லை, வார்த்தை உடைந்துபோனது. ஜானகிராமன் அவளை தன் தோள்மீது சாய்த்துக் கொண்டு –

“உன்னை எப்படி மா நான், நாங்களே டீயும் பண்ணும் தின்று, கிழங்கும் சோளமும் தின்று பொழுதை ஓட்டுறோம்” என்று நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க – அவளுக்கு அவரைப் புரிந்துப் போனது.

வாணிக்கு அப்பாவின் நிஜமுகம் தெரியும். தன் ஏழ்மையை, இயலாமையை மகள்மேல் திணிக்க அப்பா விரும்பமாட்டாரென்றுத் தெரியும். அதோடு, கிடைக்கும் ஒன்றோ இரண்டோ ரூபாயில் காலத்தை கழிக்கும் இவர்களால் தன்னை தொடர்புக்கொள்ள எந்த வழியிலும் முடியாதென்பதும் அவளுக்குப் புரியவந்தது. அதற்குள் மனைவி ஜானகி முன்வந்து அதலாம் தனக்கொன்றும் இல்லை நான் நன்றாகத் தான் இருக்கிறேன் யாரும் என்னை எண்ணி வருத்தப் படாதீர்கள், பாருங்கள் எனக்கு எல்லாம் சரியாகிப் போனது. அப்பாதான் மருந்து வாங்கிவந்துவிட்டாரே வாணி, பிறகு ஏன் கலங்குகிறாய்’ என்று பேசி தன் நோயும் அதன் விளைவுகளும் தெரியாமல் அவர்களைத் தேற்ற முயன்றாள்.

விளைவுகள் அத்தனையும் அறிந்த ஜானகியின் ராமனுக்கே அவளின் இந்த பேச்சும் கூட வலித்தது.

எரியும் விண்முட்டும் நெருப்பென்றாலும் ஒரு கட்டத்தில் அணைந்துதானே தீரவேண்டும்? வற்றாக் கண்ணீரின் வருத்தமென்றாலும் என்றேனும் உயிர் சுட்டாகவேனும் நிற்குமில்லையா? கொட்டும் அடைமழையென்றாலும் ஓய்ந்து மண் காயாமலாப் போகும்..? அப்படி தற்போதைக்கு ஓய்ந்துப் போனது அவர்களின் கண்ணீரும்.

சற்று நேரதிற்கு மாறிமாறி அழுது, பின் வேறு விஷயங்கள் பேசி, சுற்றத்தார் நலம் விசாரித்து, தண்ணீர் குடித்து, உணவு ஆக்கிப் பரிமாறி பேசிக் கொண்டே காலத்தை நகர்த்தினார்கள். காற்று அவர்களைப்பற்றிய கவலையினைச் சுமந்துக் கொண்டு வெகுசோகமாக வீசிக் கொண்டிருந்தது….

—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3)

இதற்குமுன்..

ந்தப் பழைய புத்தகம் விற்பவனின் மனைவி அவருடைய அந்த தாய்வீடு கவிதையைக் கேட்டு அழுதுக் கொண்டேப் போக, அவனும் மிக வருத்தமுற்றான்.

அந்த கவிதையிருந்த அந்த புத்தகத்தை தனக்கே கேட்டு வாங்கிக் கொண்டான். அவரை கையெழுத்துப் போட்டு இரண்டு வரி அதில் எழுதிக் கொடுங்கள் ஐயா என்று பணிவுடன் கேட்டும்கொண்டான்.

அவருக்கு மனது சற்று லேசானது. தன்னை பிறர் மதிப்பதென்பது ஒரு கம்பீரம். பிறர் மதிக்க நடத்தல் என்பது எப்பவுமே தனக்குள் ஓர் உயர்வான தோற்றத்தை வளர்க்கிறது. அதோடு தன்னை பலப்படுத்தும் ஒரு திட உணர்வையும், அதீத தைரியத்தையும், நம்பிக்கையையும் கூட தனக்குள் பீறிட வைக்கிறது அந்த பிறர் மெச்சும் சொல்.

ஆனால் என்னதான் பிறர் மெச்சினாலும், அதைக் கொண்டு தன்னை கர்வப் படுத்திக் கொள்ளாதளவு நமக்கான ஒரு நன்னடத்தையும் தேவையாக இருந்தது. அதை ஜானகிராமன் நிறைய வைத்திருந்தார். எல்லாம் நன்மைக்கே எனுமொரு எண்ணம் மனதில் நிறைந்து ஊறியது அவருக்கு.

ஒரு நிறைவுற்ற மனநிலையோடு அன்பாக இரண்டு வார்த்தையை அவனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு “நம் சமுகம் யாரையும் இருக்கும்போது மதிப்பாகப் பார்ப்பதில்லை என்பது தான் நம் பெருங் குறை தம்பி. நான்கு பேர் சேர்ந்து ஒரு விசயத்தை மெச்சினால்தான் அதை என்னவென்றே உள்சென்றுப் பார்ப்பேனென்றால்’ எப்படி அந்த விசயமானது மேன்மைப் பெரும்? அதுபோன்ற செயல் எப்படி ஒரு படைப்பாளிகளுக்கு ஊக்கத்தைத் தரும்? எனக்கென்ன விருது வாங்கி வீட்டில் குவிக்க ஆசையா? அதுக்காகவா நானென் ஒருவேளை சோற்றைக் கூட நிறுத்திவிட்டுக் இத்தனை வருடமாக காத்துநிற்கிறேன்? அதற்கா வருடந்தோறும் என் புத்தகங்களையெல்லாம் விருதிற்கென அனுப்பிவைக்கிறேன்? அல்லது நாலுபேர் பார்க்கையில் புகழ்ந்துப் பேசுவார்கள் என்றெண்ணி செய்கிறேனா?”

அவர் கேள்வி கேட்டுவிட்டு அவனைப் பார்க்க, அவனும் கண்ணசைத்துவிட்டு மேலே அவரே பேசட்டுமே என்று அவர் பேசக் காத்திருந்தான். அவர் அதைப் புரிந்துக் கொண்டு –

“அப்படியில்லை. அது ஒரு அங்கீகாரம். அது கிடைக்காவிடில்’ எங்கு என் எழுத்துக்கள் வெறும் குப்பைகளாகிப் போகுமோ எனும் பயம் எனக்கு. என் உழைப்பும்’ என் நம்பிக்கையும்’ என் இத்தனை வருட எண்ணங்களும், அதற்கான என் மனைவியின் இசைவும் வீண் போகக் கூடாதே எனும் தவிப்பு எனக்கதிகம் தம்பி. எதைநோக்கி இதுவரை நான் எழுதினேனோ, யாரை மனதில்கொண்டு இத்தனைப் புத்தகங்களைச் செய்தேனோ அவர்களைக் கொண்டே என் படைப்புக்களை அவர்களிடம் சேர்த்துவிட’ விருது ஒரு நுழைவுச்சீட்டுபோல் பயன்பட்டுவிடாதா, எனுமொரு ஏக்கமெனக்கு, அவ்வளவுதான்.

ஆனால், இன்று வரை எந்த நாளிதழோ, பதிப்பகமா, அரசோ என் படைப்புக்களை அத்தனை மெச்சிக் கொண்டதில்லை. காத்திருந்து காத்திருந்து காலம் போக, பின் உற்றுப் பார்த்துவிட்டு அவர்களின் அரசியல் புரிந்தபின்தான் நானே என் சம்பாதியத்தில் புத்தகம் போட ஆரம்பித்தேன். என்றேனும் என் சமுகம் எனைத் திரும்பிப் பார்க்கும் எனுமென் நம்பிக்கைக்கு இன்று இந்த நூறு ரூபாய் இத்தனைப் பெரிதாகிப் போனது வருத்தமில்லையா தம்பி?

ஒரு படைப்பாளி இறந்த பிறகே அவன் படைப்புக்களை பிரித்துப் பார்க்குமிச் சமுதாயத்தை மாற்ற எத்தனைக் காலம் இன்னும் பிடிக்குமோ தெரியலையே ராஜா…???!! உள்சென்றுப் பார்த்தால் பதிப்பகங்களையோ புத்தகக் கடைகளையோ அரசினையோக் கூட நாம் குறை சொல்வதற்கில்லை. எல்லாம் வியாபாரமாகிப் போன இச்சமுகத்தில் லாபம் மட்டுமே பிராதானமானதால் தேர்ந்த படைப்புக்களைக் கண்டதும் தன் நகர்தலை அல்லது தேடுதலை அவர்கள் நிறுத்திக் கொள்வதில் அடிப் பட்டுப் போகிறோம் எனைப் போன்றோர்.

பிறகு என்றுதான் என் உணர்வுகலெல்லாம் வெளிச்சத்திற்கு வருமோயென்று தவித்த நேரம், எங்கு பொட்டலம் கட்டி போட்டுவிடுவார்களோ என் படைப்புக்களையென வலித்த நேரம்’ நீங்கள் காட்டிய பரிவு, அக்கறை, மதிப்பு என் மனதை கரைத்துவிட்டது அய்யா” அவர் மனதை அப்பட்டமாய் திறந்துக் காட்டியழ.., அதில் உணர்ச்சிவசப் பட்டுப் போனான் அந்த கடைக்காரனும்.

“உங்களின் படைப்பில் பாதிக்குமேல் படித்தவன் ஐயா நான், அதற்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்குமென்று எனக்கு நம்பிக்கை உண்டு” என்று சொல்ல –

சிரித்துக் கொண்டார் ஜானகிராமன். வாழும்போது கிடைக்காத அங்கிகாரம், நான் புல்லாக முளைத்தப்பின் வந்து மேல் விழுந்து என்னப் பயன்? என் அன்பு மனைவிக்கு மருந்து வாங்க நூறு ரூபாய் இல்லாதயிந்த வாழ்க்கை’ அவள் இறந்தப்பின் வந்து எதையெனக்குக் கொடுத்துவிடும்??!!”

“நம் சமூக கட்டமைப்பு இந்த லட்சணத்துலதாங்கையா இருக்கு’ வேறென்னத்த சொல்ல” அவன் பேசிக் கொண்டே பக்கவாட்டில் கலைந்திருந்த புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தான். அந்நேரம் பார்த்து’ இன்னொரு ஆள் பழைய தாள்களை விற்பதற்கு அங்கே கொண்டு வர –

அவரும், எல்லாம் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி சரியாக நடக்கும். உலகின் ஒரு மூலையில் இந்த ஒருவனுக்கு தன் எழுத்து பெரிதாகப் பட்டதுபோல் நாளை எல்லோருக்கும் படும். பெரியாட்கள் நுழையாத இக்கிராமத்தில் விளம்பரமில்லா படைப்பாளி நான். நாலு பேருக்கு தெரிந்தவரின் படைப்பைப் போட்டு சம்பாதிப்பதில் தானே குறியாய் இருக்கிறார்கள் புத்தக வியாபாரிகளும். பிறகு இச்சமுதாயம் குறித்தோ எனைப் போன்றோரைக் குறித்தோ அவர்களுக்கு என்ன வருத்தமிருந்துவிடும்?

எங்கோ ஒன்றோ இரண்டோ இதழ்கள் படைப்பாளிகளுக் கொடுக்கும் மதிப்பில்’ அகப்படாமல் வெளியே நிற்கும் பலரில் ஒருவன் தானே நானும்? பிறகு, யாருக்கு வேறு என்ன வருத்தம் வேண்டுமென்னைப் பற்றி?

பிறகு ஏனோ இத்தனைப் புலம்பல்கள்..? இதுவுமென்ன என் வேதனைதானா அல்லது வேறெவரின் திணிப்பா? இல்லையில்லை, எனக்குள் எவர் திணிப்பும் இல்லை. நான் தன்னிலையாக சுயமாகச் சிந்திக்கக் கூடியவன். என்றாலும், இது நான் அமைத்துக் கொண்ட என் வாழ்க்கை தானே. நான் வாழ்ந்துவரும் என் நகர்வுதானே. நான் நினைத்ததைத் தானே நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நல்லதோ கெட்டதோ வாழ்ந்துதானேத் தீரவேண்டும், வேறென்ன செய்ய, எல்லாமென் செய்ததன் பலன்” என்றெல்லாம் எதை எதையோ யோசித்துக் கொண்டே அவன் கொடுத்த நூறு ரூபாய்க்கு மருந்து வாங்க மருந்துக் கடையில் போய் நின்றார்.

—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்