கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2)

இதற்குமுன்..

நாளேடு விற்குமந்த கடைக்காரன் ஜானகிராமனின் படைப்பை அங்கனம் மதிப்பற்று பேச மனமுடைந்து போனார் அவர்.

யார் தான் மதித்தார் என் படைப்பை’ என்றொரு வேதனை அவருக்கு மேலிட்டது. இப்போதெல்லாம் அதனால்தான் எழுதுவதை எழுதியவாறே போட்டுவிடுகிறார். புத்தகத்தைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. குப்பைப் போல’ விரக்தியுற்று அவரைச் சுற்றிக் கிடக்கும் படைப்புக்கள் ஏராளமாகயிருந்தன. ஆனால், அவர் இருக்கிறாரா இல்லையா அல்லது என்ன செய்கிறார் என்ன ஆனாரென எந்த கவலையும் அவரைப் பற்றி இந்த சமூகத்திற்கு கிடையாது என்பதே மிக வருந்தத் தக்கது.

எழுதுவதோடு நில்லாமல், ஒரு அங்கிகாரம் குறித்த தன் எதிர்பார்ப்பை அவ்வப்பொழுது அரசின் பார்வைக்கு அனுப்பவும் அவர் தவறவில்லை. வெளிவந்துள்ள தன் படைப்புக்களை எப்பாடுபட்டாவது அரசின் பரிசுகுறித்த தேர்விற்கும் இன்னபிற பார்வைக்கும் அனுப்பிவைப்பார். இப்போதைக்கு மக்களிடம் கொண்டு செல்ல இயலாவிட்டாலும், தன் படைப்புக்கள் எதிர்காலத்தில் பெறும் விருதுகளால் மீண்டும் திசைதிருப்பப் பட்டு மக்களை தன்பக்கம் பார்க்கவைக்குமோ’ எனும் எதிர்பார்ப்பு அவருக்கு மிகையாயிருந்தது.

தன் புத்தகங்களின் மதிப்பு என்றேனும் ஓர்நாள் உலக சுவற்றில் பொறிக்கப்படுமென்று முழுமையாய் நம்பினார். ஆனால் இக் கடைக்காரன் அந்த நம்பிக்கையினை எல்லாம் தகர்த்தெறியும் வகையில் பேசியது அவருக்கு மிகுந்த வலியை தந்தது. அப்போதும் தன் மனிதப் பண்பில் தான் வழுவலாகாது என்றெண்ணி – அவனைப் பார்த்து புறப்படுவதகச் சொல்லி –

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அந்த கடையிலிருந்த புத்தகங்களையெல்லாம் சேர்த்து வாரிக்கொண்டு அவன் கைகாட்டிய அந்த பேப்பர் கடைக்குப் போக, அந்த பழைய பேப்பர் வாங்கும் கடைக்காரன் அவரைப் பார்த்ததுமே ஓடிவந்து அத்தனை மரியாதை செய்தான். அவர் வந்துவிட்டதை எண்ணி இங்குமங்குமென தவித்தான், மனதின் வலிக்கு மருந்தாக ஏக மரியாதை செய்தான். கையெடுத்துக் கும்பிட்டான். கைபிடித்து அவரை உள்ளே அழைத்துவந்து இருக்கை தட்டி அமரவைத்து, அப்படியெல்லாம் எழுதிய புத்தகங்களை இங்கே போடவேண்டாமய்யா, நூறு ரூபாய்தானே நான் தருகிறேன் ஐயா’ என்று சொல்லி ஒரு நூறு ரூபாய் புதுத் தாளினை எடுத்து அவரிடம் நீட்ட அதை கையில் வாங்குகையில் கத்தி அழுதேவிட்டார் ஜானகிராமன்.

“என்னய்யா இது எத்தனைப் பெரிய படைப்பாளி நீங்க, நீங்கபோய் இப்படி கலங்கலமா, எங்களுக்கு நம்பிக்கையை சொல்லிக்கொடுத்துவிட்டு நீங்க கலங்கினா எப்படி ஐயா” என்றான்.

அவரால் பேசமுடியவில்லை. கைதுண்டு வைத்து முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று கத்தி அழுதார். இதுவரை அடக்கியடக்கி வைத்திருந்த பட்ட அவலங்கள் அத்தனையோடும் வாழ்வின் இன்னபிற துக்கங்களும் துயரங்களும் ஒன்றுசேர்ந்துக் கொள்ள, அவை மொத்தமும் உலகைமறந்து அழையாய் உடைத்துக் கொண்டு வந்தன அவருக்குள்ளிருந்து.

அவன் மீண்டும் அவரின் அருகில் சென்று தோள்மீது கைவைத்து வெளியில் அமர்ந்துள்ளீர்களே ஐயா’ என்று வருத்தப் பட்டு, குனிந்து அவரின் கைப்பிடித்து எழுப்பி வீட்டினுள்ளே அழைத்துபோய் ஒரு நாற்காலியை காட்டி மனைவியை அதைத் துடைக்கவும் செய்து அவரை அதில் அமருங்கள் என்று சொல்லி, மிகந்த பணிவோடும் பாசத்தோடும் அமரவைத்து ஒரு குவளை தண்ணீரையும் குடிக்கத்தர, வங்கிக் குடித்துவிட்டு, மீதியை அடக்கமாட்டாமல் அடக்கி தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு நன்றியுடன் அந்த பழைய புத்தகங்களை விற்கும் கடைக்காரனைப் பார்க்க, அவன் தன் தந்தையை பார்ப்பது போல் அவரை மிகுந்த கனிவுடன் பார்த்து “என்னய்யா இது, இத்தனை வருத்தத்தை மனதில் அழுத்தி வைத்திருந்தா உடம்பு என்னத்துக்காவுறது, உங்க பிள்ளைங்க யாருமில்லையா?” என்று கேட்க –

“இருக்காங்கப்பா, ஒரு மக இருக்கா(ள்), எனக்கு ஆம்பளை பசங்க கிடையாது” என்று பாதி பேசியும் பாதி கை ஆட்டியும் சொல்ல,

“அவுங்க உங்கக் கூட இல்லையா இப்போ? வயசாயி போச்சே, யாரையாவது கூட வைத்திருக்கலாமே”

“என்னோட வாழ்க்கை அவுங்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது தம்பி, என் பசியோ பட்டினியோ அது என்னோட போவட்டுமே”

“பெத்த மகள் தானேய்யா கூட இருந்தா தப்பில்லையே”

“தப்பில்ல தம்பி ஆனா வாழ்க்கை வித்தியாசப் படும். அவர்கள் வாழ்கையை அவர்கள் முடிவு செய்து, அவர்கள் விரும்பின மாதிரி சுதந்திரமா வாழ்ந்துக் கொள்ளட்டுமேன்னு நான்தான் அவளை தூரமா கட்டிக்கொடுத்துட்டேன். பொண்ணுவேறப் பாருங்க, மாப்பிள்ளைக்கு நாம சிரமமா இருந்திடக் கூடாதே. அவள் அவருக்கு மனைவியாயிருந்தாலும், நாம அவருக்கு இரண்டாம்பட்ச மனிதர்கள் தானே”

“இருந்தாலும் இப்படி உங்களை பார்ப்பது வருத்தமாத் தாங்கையா இருக்கு”

“வாழ்க்கை இப்படியெல்லாம்தான். அதை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் ராஜா. அடுத்து நடக்கப் போவதை இதென்று தெரியாமலே ஆழக்கிணற்றில் நம்பி கால் வைப்பவர்களில்லையா நாமெல்லாம்? ஆனால் என் அழைக்கான காரணம் இந்த நூறு ரூபாய் மட்டுமல்ல, அது பல வருடத்து அழை தம்பி.

என் மகள் எங்கள் வீட்டைவிட்டு என்று போனாளோ அன்றிலிருந்தேக் கனத்துப் போன மனதின் ஏக்கமது. பிறந்ததிலிருந்து வீட்டைச் சுற்றிச் சுற்றி அப்பா அப்பா என்று வந்தவள் திடீரென ஓர்நாள் வீட்டை விட்டுப் போவதென்பது’ உயிரை பெயர்த்து அவளோடு கொண்டுபோவதற்குச் சமம்.

அவள் உடனில்லாத வாழ்க்கை எங்களுக்கு ருசிக்கவே இல்லை ராஜா. ஆனால் நம் சமூகக் கட்டமைப்பினை யாரால் ஒருநாளில் மாற்றிடமுடியும். இதையெல்லாம் எழுதினால் யாருக்குப் புரிகிறது?”

“ஒருநாள் புரியுங்கையா, உங்களைப் போன்றோரின் கண்ணீரில் நனைந்து இந்த பூமியுருண்டை ஒருநாள் வெடித்தேனும் போகும், அன்று எல்லோருக்கும் புரியும்”

“முன்பொரு புத்தகத்தில் ஒரு மகள் தன் அம்மாவை நினைத்து அழுவது பற்றி “என் தாய் வீடு” என்று ஒரு கவிதை எழுதியிருக்கேன், படித்திருக்கீங்களா?”

“இல்லை ஐயா, எந்த புத்தகமென்று சொல்லமுடியுமா”

அவர் தன் பைக்குள் கைவிட்டுத் துழாவி அடியிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்தார். சில பக்கங்களைப் புரட்டி அந்த கவிதைக்கு வந்தார். அவரின் இதழ்கள் அசைந்து அனிச்சையாய் அக்கவிதையை வாசிக்கத் துவங்கின. சோகம் நிறைந்த அவரின் குரலில் கேட்போரின் மனதை தைக்கும் ஈட்டியென இறங்கின அக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும் –

என் தாய் வீடு

முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்;

என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாத தவணையில் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்;

முடியாவிட்டாலும் எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;

உதவி செய்யப் போனால்
வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்கென்று செய்துதர யாரிருக்கா?
என்பாள்.

என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்;

இப்போது எனக்கென்று யாருமேயில்லை.

நானெப்படி இருக்கேனோ என்று
வருந்த அம்மா போல் யார் வருவா???

அம்மா இல்லாத வீடென்றாலும்
எப்பொழுதேனும் அங்கேச் சென்று
அவள் இருந்த இடத்தை, தொட்ட பொருட்களை யெல்லாம்
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
எனக்கென்று அங்கே ஏதேனும்
வாங்கி வைக்காமலாப் போயிருப்பாள், என்று நினைப்பேன்.

ஒரு சொட்டுக் கண்ணீராவது
விட்டுத் தானே போயிருப்பாள்’

இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
எனக்கென்று அவள்
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
கண்ணீரேனும் ஈரம் காயாமல் இருக்காதா? என்றுத்
தோன்றும்.

ஆனால் –
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
அம்மா இல்லாத அந்த வீட்டில்
உனக்கென்னடி வேலை யென்று!!
                        *—————-*

அவர் வாசித்து நிறுத்த, அந்த பேப்பர் கடைக்காரனின் அருகில் நின்றிருந்த அவனின் மனைவி கண்களை கசக்கிக் கொண்டு வீட்டினுள்ளேப் போனாள்.

—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)

ட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் இரவுகளில் சமூகத்தின் விடிவையெண்ணி உறக்கம் தொலைத்த எழுத்தாளர் ஜானகிராமனின் மனைவிக்கு வயது அறுபத்துமூன்று. லட்சலட்சமாய் சம்பாதித்தபோது காலம் துணைநிற்குமென்று நம்பி, சம்பாதித்த பணத்தையெல்லாம் புத்தகங்களாய் அச்சிட்டு வீடெல்லாம் நிரப்பியவருக்கு இருந்த ஒரே மகளும் திருமணமாகி மறுவீடு போக கட்டியழக் கொட்டிக்கிடந்ததெல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே.

தான் செய்துவந்த மேலாளர் பணியைக் கூட விட்டுவிட்டு, சமூகம் பற்றி எழுதுவதே தன் தலையாயக் கடமையென்று எழுத்துலகிற்கு வந்தவர். விற்றதை விற்காததாய் சொல்லி சில பதிவர்கள் தருமந்த சொற்ப பணத்தையும் இல்லையென்று வந்தோருக்குக் கொடுத்துவிட்டு, பேருக்கு சொத்தென இருந்த மணையில் முக்கால்வாசியை விற்று மகளுக்கு திருமணத்தையும் நடத்திவிட்டு, மூன்றுவயது இளையவளான தன் அன்பு மனைவிக்கு சொச்ச இடத்தில் ஒரு ஓலைக் குடிசையினையும் கட்டி’ அதில் போதிய உணவற்று உடையற்று’ இப்போதெல்லாம் வெறும் நம்பிக்கையில் நாட்களை கடப்போர் வரிசையில், தன் வாழ்வையும் சேர்த்துக் கடப்பவர் இந்த எழுத்தாளர் ஜானகிராமன்.

காலத்தின் கொடூரம் பாருங்கள், தன் மனைவியின் நோயிற்கு மருத்துவம் பார்க்கக் கூட வழியில்லாமல் போன நிலையில், இன்றவரின் மனைவிக்கு நெஞ்சிவலி அதிகாமகிவிட மருத்துவமனைக்குக் கூட்டிப்போகவும் வழியின்றி மருந்து மட்டும் வாங்கிவருவதாக சொல்லிவிட்டு, ஒரு பை நிறைய தன் புத்தகங்களை வாரிப் போட்டுக்கொண்டு சென்னையின் ஒதுக்குப்புறத்திலுள்ள அந்த கிராமத்திலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள அந்தப் பேரூரின் புத்தகக் கடையை நோக்கிச் செல்கிறார்.

எழுத ஆரம்பித்தபோது பை பையாய் தன் புத்தகங்களை தூக்கிக் கொண்டு கடை கடையாய்த் திரிந்தவருக்கு நடக்கவே கால்வலிக்குமிந்த முதிர்ந்த வயதில் ஒரு பை நிறைய புத்தகம் சுமப்பது கடினமாகயிருந்தது. காலையில் கருந்தேநீரும் மதியம் இரண்டு சோளமும் கிழங்கும் சுட்டு மனைவிக்கு தந்துவிட்டு மீதம் இருந்ததைத் தின்றவருக்கு தன் பசியை வெளியில் காட்டிக்கொள்ளக் கூட முடியாத ஓர் சூழ்நிலை இருந்தது.

சோளமும் கிழங்கும் தின்றதிலிருந்தே மனைவிக்கு நெஞ்சிவலி கூடிவிட மருந்து வாங்க தன் புத்தகத்தை சுமந்தவராய் நடந்தே அந்த கடை முன் வந்து நின்றார். புத்தகப் பையை கீழே வைத்துவிட்டு கடைக்கு வெளியேயிருந்த குடத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு கடைக்காரரைப் பார்க்கிறார், அவன் இவரைக் கண்டதும் ஏதோ கவனியாதது போல் வேறு பக்கம் திரும்பி வேறு வேலை பார்த்துக்கொண்டிருந்தான். நடுத்தர வயது தான் அவனுக்கு. ஜானகி ராமன் அவனுக்கு அப்பா வயதைக் கூட நெருங்கியிருப்பார், என்றாலும், மரியாதை நிமித்தம் சிலருக்கு யாரையுமே அண்ணா என்று அழைப்பதே அவ்வட்டாரங்களில் பழக்கமாயிருந்தது. அவனும் அம்மாதிரியே அவரை அண்ணா என்றே அழைத்திருந்தான்.

“வணக்கம் தம்பி, நலமா இருக்கீங்களா?”

“ஆங்… வணக்கொம்ணா, ஏதோ போதுணா”

“வியாபாரம்லாம் நல்லாப் போகுதா?”

“என்ன பெரிய வியாபாரம், பெங்களூர்ல கடை போட்டு நல்லா ஓடுச்சாம் அதை நம்பி நாமலும் போடுவோமேன்னு இங்கே போட்டேன்”

“அப்புறமென்ன சுத்துப்பட்டு எல்லாம் நீங்கதானே விக்கிறீங்க?”

“எண்ணத்த வித்தோம், பெங்களூரை நம்பி சென்னையில கடைப்போட்டது எங்க தப்பு. இங்க புத்தகம் விக்கிறதுக்கு நாலு கடையில போயி சுலபமா டீ ஆத்திட்டு வந்துடலாம்”

“நெசமாவா???!!”

“வேறென்னணா, நாலு நின்ன இடத்திலேயே படிச்சிட்டுப் போகும், ஒன்னு அதுலையும் கொஞ்சம் விலை குறைச்சி குடேன்னு கேட்கும், ஒன்னோ ரெண்டோ சொன்னமாதிரி பணம் கொடுத்து வாங்கும், அதுலயும் ஒரு தினுசிருக்கு மூணு எடுத்துட்டு ஆள் பார்க்கலைன்னா ஒன்ன பையில போட்டுட்டு மீதியை மட்டும் ரெண்டுன்னு கணக்கு காட்டும், நம்ம பொழப்ப சொல்லுணா, தெரியாத் தனமா வந்த தொழில்ணாயிது”

“இல்லப்பா நம்ம புது புத்தகம் ஒன்னு அப்போ வெளிவந்து பெரிய அளவுல பேசப் பட்டதா சொன்னேனில்லையா அதுல ஒரு பத்தோ இருபதோ உங்க கடைக்கும் போடலாமேன்னு கொண்டுவந்திருக்கேன்”

“அப்படியா!! பத்து வேணாம், வேணும்னா ஒரு அஞ்சு கொடுத்துட்டுப் போங்க, போட்டுவைக்கிறேன், ஒரு மூணு மாசம் கழிஞ்சிவந்து பாருங்க வித்தாக் காசுதரேன் இல்லைன்னா இல்லை”

“ஒரு அவசரம் தம்பி என் மனைவிக்கு…..”

“அய்யய்யோ.. இந்தாங்க, நீங்க சாந்திரம் வந்து அண்ணனைப் பாருங்க”

“இப்போ அவசரமா ஒரு நூறு ரூபா வேணும் ராஜா..”

“வரவங்க அவசரத்துக்கெல்லாம் உதவ நானென்ன சாமி பைனான்சா நடத்துறேன், நாலு பேப்பர் வித்தாதான் எனக்கே காசு. அதுலயும் நீங்க ஏதாவது காதல், கட்சி, அரசியல்னு திகுதிகுன்னு எழுதினாலும் பரவாயில்லை, ஏதோ விக்கும்னு ஏலம் போட்டாவது வித்துடலாம். அப்படியே படிக்கத் தெரியாதவன் வாங்கினாக் கூட, அவனுங்க கேர்ள் பிரண்டுக்கு பரிசா கொடுத்துட்டுப் போவானுங்க, நீங்க என்னாடான்னா வாழ்க்கை’ தானம்’ தர்மம்னு எழுதுறீங்களே, யார்னே வாங்குவா இதலாம்? சும்மா இங்கப் போட்டு இடத்தை அடைக்கச் சொல்றீங்களா?”

பாவம் ஜானகிராமன். சுள்ளென்று உரைத்தது அவருக்கு. அவன் சற்று கூச்சல் போட்டே பேசினான். சுற்றிமுற்றி இங்குமங்கும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துக் கொண்டார். வெட்கமாக இருந்தது. எத்தனை இரவுகளைத் தொலைத்து எழுதிய புத்தகமிது, ஒரு நாளேடு விற்பவனே இப்படி’ புத்தகத்தின் தரம் பார்க்காமல் குறைவாக எடைபோட்டுப் பேசுவது வருத்தமாக இருந்தது. ஆனால் மனைவிக்கு முடியலையே, பணம் வேணுமே, இவனை விட்டால் இன்னும் ஐந்து மைல் தூரத்திற்கு இங்கே புத்தகம் வாங்குமளவிற்கு வேறெந்த கடையுமே கிடையாதே, வேறென்ன செய்ய, பொறுத்துக்கொண்டார்.

கருணை கேட்கும் முகத்தோடு அவனைப் பார்த்து – “நீங்க சொல்வதை என்னால் எதிர்க்க முடியாது தம்பி, விக்கிறவங்க நீங்க, உங்களோட வருத்தத்தை சொல்றீங்க, வேணும்னா என் காதல் புத்தகம் இருக்கே ‘சிங்காரி”ன்னு ஒன்னு அதை கொண்டு வரவா?”

“கொண்டுவந்து????”

“ஒரு நூறு ரூபாய் கொடுங்க போதும், இருபது புத்தகங்கள் தரேன், விற்கலைன்னா பிறகு வந்து பணம் கொடுத்துட்டு புத்தத்தை திரும்ப எடுத்துக்குறேன்”

“இல்லண்ணா, அதலாம் சரிவராதுண்ணா, நீ மின்ன போட்டுப் போன புத்தகங்களே அப்படியே இருக்கு, வேணும்னா அதையும் தரேன் கொண்டுபோய் அதோ அங்க நாலு கடை தள்ளியிருக்கே அந்த பழைய பேப்பர் கடைல போடு, எடைபோட்டு உடனே காசு தருவான்”

ஜானகிராமன் வெடுக்கென அந்தக் கடைக்காரனை நிமிர்ந்துப் பார்த்தார். தன் எழுதுகோலால் தன்னைக் குத்தி இங்கேயே மாய்த்துக்கொண்டாலென்ன என்றுத் தோன்றியது. கொடுக்கும்போது சிரிப்போடு வாங்கிக்கொள்ளும் சமுகம்’ இல்லையென்று உதவிக்கு வந்தால் இப்படித்தான் நன்றிமறந்து பேசுமோ’ என வருத்தம் வந்து நெஞ்சடைக்க, கண்கள் தானே கலங்கிற்று.

—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு!!

ன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் கடந்து மூளையின் சப்தங்களுக்குள் சென்று அடைத்தா கொண்டது? இதோ அதைக் களைந்துவிடச் சொல்லிக் கேட்குமொரு வேண்டுதலை இந்தப் பாடலில் பாருங்கள். அல்லது நாளைய தலைமுறைகளுக்கும் மேலேறி நிற்க வளந்துவிட்ட நமக்கொவ்வாத அப்பண்பிற்கு ஒரு முதற்புள்ளி வைக்கும் முயற்சியாய் இப்பாடல் வருகிறது கேளுங்கள். விரைவில் அன்புறவு இசையமைப்பாளர் திரு. ஆதியின் இசையில் தரணியெங்கும் ஒலிக்கவுள்ளது. ஒலிக்கும் முன் உங்களின் விழிகளில் பூட்டி ரசனை பார்க்கக் துணிந்த இவ்வரிகள் இங்கே உங்களின் கருத்தையும் நாடி நிற்கிறது பணிவுடன்:-

னிக்க இனிக்க வாழ்த்துவோம்…
இனிக்க இனிக்க வாழ்த்துவோம்…
தமிழிலினிக்க மொழியும் சிறக்க –
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;

வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே…

கற்கண்டுச் சிதறலாய் –
சிரிக்கும் சிரிப்பு இனிக்கட்டும்,
சொட்டும் தேன் இனிமையில்
சொற்களெல்லாம் இனிக்கட்டும்;

கனுக்கரும்பின் இனிமையாய்
வாழ்க்கையது நொடிக்கட்டும்,
புகழைக் கூட கசக்காமல்
பிறர் வாயேப் பேசட்டும்;

பொற்காலம் இதுவென்று நீ
வாழும் காலம் ஆகட்டும்,
புதையல்போலுன் மனதென்று
பார்ப்போரெல்லாம் மெச்சட்டும்;

தரணி முழுக்க தமிழ்போல
உன் பேருமது சிறக்கட்டும்,
பெருமையோடு உலகம் பேச – முழுப்
பக்குவமும் கிடைக்கட்டும்;

செல்வம் பல செழிக்க – நீயும்
பெருநிறைவோடு வாழனும்
சேர்த்துவைக்கும் சுகத்தோடு
நல்ல பேரும் நிலைக்கனும்;

பெரியோரை மதிக்கணும் – பேணிப்
பிள்ளையைப்போல் காக்கனும்
மற்றோரையும் மதிக்கணும் – பெண்ணின்
மாண்பு உயர நடத்தனும்;

மகிழ்ச்சிப் பொங்கும் நாளிலும்
கர்வமின்றித் திரியனும்,
கடலளவுப் பணிவிலே –
இவ்வுலகப் பார்வை அடங்கனும்;

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் எல்லோரும்
வாழ்த்துவோம்;
சிரித்து சேர்ந்து வாழ்த்துவோம்
மனசு குளிர வாழ்த்துவோம்
மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம்
மகிழ்வுபொங்கும் நன்னாளில் –

பல்-லாண்டு வாழ வாழ்த்துவோம்;
வாழ்கவே வாழ்கவே

வாழ்க வாழ்க வாழ்கவே…

வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே..
—————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

23) என் தாய் வீடு..

ரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அந்த பெண் தன் குடும்ப மகிழ்வில் ஒளிர்கிறாள். அவள் ஒளியைப் பற்றி மார்தட்டிக் கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப் பட்டதில்லை. இதோ, அப்படி ஒருத்தி தன் இறந்த தாயை எண்ணி அழுகிறாள்..

தலைப்பு: என் தாய் வீடு..
———————————————

முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்;

என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்;

முடியாவிட்டாலும்
எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;

உதவி செய்யப் போனால் கூட
வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.

என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்;

இப்போது எனக்கென்று யாருமேயில்லை.

நானெப்படி இருக்கேனோ என்று
வருந்த அம்மா போல் யார் வருவா???

அவள் ஊட்டிவளர்த்த சோறும்
கட்டி அனைத்த அன்பையும் தர
அவளைப்போல் இனி யாரிருக்கா???

அம்மா இல்லாத வீடென்றாலும்
எப்பொழுதேனும் அங்கேச் சென்று
அவள் இருந்த இடத்தை, அவள் தொட்டப் பொருட்களை யெல்லாம்
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,

எனக்கென்று அங்கே ஏதேனும்
வாங்கி வைக்காமலாப் போயிருப்பாளென்று கூட நினைப்பேன்.

ஒரு சொட்டுக் கண்ணீராவது
விட்டுத் தானே போயிருப்பாள்’
இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
எனக்கென்று அவள்
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்
தோன்றும்.

ஆனால் –
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
அம்மா இல்லாத அந்த வீட்டில்
உனக்கென்னடி வேலை’யென்று!!
——————————————————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

22) என் பால்ய காலம்…

ண்சோறு தின்ற நாட்களது..

சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில்
அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும்

வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும்

ஒளியும் ஒலியும் மாற்றிவிட்டு
வேறு சானலில் –
வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று;

தொலைகாட்சியை நிறுத்திவிட்டால்
திருடன் போலிஸ் விளையாட
பிளாட் போடாத இடங்கள் நிறைய இருந்தன;

தும்பி பிடித்து தலைதிருகி போடுவதால்
ஒரு உயிர் போகிறதே என்று கூட
அத்தனை அறிந்ததிருக்காத நாட்களது;

ஓடும் தெருவில் கோவில் இருந்தால்
உள்ளே சாமிதான் இருக்கிறதென்று
முழுமையாக நம்பிய மனது அது;

மறைத்துவைக்கத் தெரியாத பொருட்களை
கொடுக்க மனமின்றி அழுத
அந்த நாட்கள்’ அந்த தலைதிருகிப் போட்ட
தும்பிபோல திரும்பிக் கிடைக்காமலேப் போனது; வருத்தம் தான்!

படிக்கும் புத்தகத்திற்கு நடுவே அதிரசமும்
சட்டைத் துவைக்கையில்
சட்டைப் பையினுள் ஒரு துண்டு முறுக்கோ இல்லாமலும்
நாட்கள் அப்போது போனதேயில்லை;

ஒரு காகிதம் கிழித்துக் கொடுத்து
வாங்கிக் குடித்த ஒரு மூடி தண்ணீர்
அன்று படித்த பாடத்தைவிட அதிகமாகஇன்றும் நினைவிலுண்டு;

ஒரு கையில் தம்பியும் இன்னொரு கையில்
தங்கையும், தலையில் பையும் மாட்டிக் கொண்டு
ஓடிபோய் வரிசையில் நின்று
இரண்டாம் மூன்றாம் வரியிலிருந்து பாடிய
தேசியகீதம் – தவறென்றெல்லாம் இன்றுவரை வருந்தவில்லை;

நாலுமணிக்கு பள்ளிவிட்டதும்
ஓடிவந்து பையை வீட்டில் எறிந்து விட்டு
தெருவின் நீளத்திற்கும் வெவ்வேறு விளையாட்டை இரைத்து
காலெல்லாம்  மண்ணோடு வீட்டிற்கு வந்து கால்கழுவி
சாப்பிட தட்டெடுத்துக் கொண்டு அமர்கையில்
வயிற்றில் இருந்த பசியும்
மனதில் இருந்த நிறைவும் தொலைந்து
அப்பாவாகி தாத்தாவாகி என்னதான் வளர்ந்தாலும்

அந்த மண்சோறு தின்ற நாட்கள்; நாட்கள் தான்!!
————————————————————————————-
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்