43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

வீசும் மழை போல் வீசி
அடங்கும் மழை போல் அடங்கி
காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து
உயிர் கொண்டு போனதடி போர்;
எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!!

கொஞ்சும் மழலை கொன்று
நரை எஞ்சும் பலரை தின்று
பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து
தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்;
அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!!

துயிலந்தனை இடித்து
போர்வீரர் பலரை அழித்து
எமை ஊர் ஊராய் அலைகழித்து
போர்குற்றம் புரிந்து விட்டதடிப் போர்;
சூழ்ச்சியோடு சில; நரிகள் செய்திட்ட போர்!

கடல்கோல் குடித்த மிச்சத்தை
பின் – மழைவந்தும் மூழ்காத வீரத்தை
தனித்து வெல்லத் திராணியின்றி – யெம் வீரர்களை
கோழைகள் விஷம் வீசக்; கொன்றுப் போட்டதடிப் போர்;
கொன்று; தலைவிரித்தாடியதந்த போர்!!

எம் காலத்தை பின்னால் தள்ளி
எம் சாபத்தை காலத்திற்கும் சுமந்து
ஒரு இனத்தின் உரத்த அழுகை சப்தத்திற்கிடையே
ஆட்டமாடி பாட்டுப்பாடி வெற்றிக் களிப்பு கொண்டதடிப் போர்;
பேரழிவின் – அரக்கத்தனம் பூண்டதடிப் போர்!

நான் போனாலென்ன
என் பேத்தி யாள்வாள்,

நான் போனாலென்ன
என் மகனேனும் ஆள்வான்,

நான் போனாலென்ன
என் உறவுகளாவது ஆளும்,

நாங்கள் மொத்தம் போனாலென்ன
என் – சந்ததியேனும் வாழும் வாழட்டுமே என்று
உயிர்பல தியாகித்த – என்
வீரர்களின் ரத்தம் பீய்ச்சி,

என் தமிழச்சியின் நிர்வாணத்தை
மரணத்தினால் உரித்து,

என் பிள்ளைகளின் கனவுகளை
உடலோடு எரித்து,

எம் அன்னையவள் –
இறந்துயெரித்த சாம்பலை கூட கொச்சைப்படுத்தி,

உரக்கச் சிரிக்கும் கயவர்களோடு
கூத்தாடிப் போனதடிப் போர்;

பொய்யெனச் சென்று
இன்றும் பின்னால் நின்று –
எமை மறைந்து மறைந்து தாக்குதடி போர்!
தீரா வஞ்சகத்தின் –
பொய்யெனப் போன அந்த போர்!!
———————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to 43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

  1. மன்னார் அமுதன்'s avatar மன்னார் அமுதன் சொல்கிறார்:

    மிகவும் அருமையான ஒரு படைப்பு அண்ணா…

    //கொஞ்சும் மழலை கொன்று
    நரை எஞ்சும் பலரை தின்று
    பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து
    தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்;
    அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!!//

    மிகவும் அருமையான என்னைத் தொட்ட வரிகள் … வாழ்த்துக்கள்

    Like

  2. Sathyanarayanan Sankararaman's avatar Sathyanarayanan Sankararaman சொல்கிறார்:

    ஐயா! உங்கள் மனதில் மாறாத ரணமாய் உள்ள அந்த வழியே என்னைப் போன்ற தமிழ் உணர்வாளர்களுக்கும் உள்ளதால், இது கவிதையாய் எனக்கு தோன்றவில்லை. கையறுநிலைக் காவியமாய் இவ்வுலகத்தில் நிலைக்குமென தெரிகிறது!

    பட்டுக்கோட்டை சத்யா

    Like

  3. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    நன்றி உறவுகளே.. சில உணர்வுகள் உயிர்ப்பித்தே இருத்தல் வேண்டும்.. வலிக்க வலிக்க வீரியத்தோடு உயிர்பெருகிறது விடுதலை உணர்வு..

    என்னன்பு தம்பி கவிஞர் மன்னார் அமுதனுக்குப் பிடித்ததில்; கவிதை மேலும் உண்மை நிலையினை பறைசாற்றுவதாய் அமையப் பெறுகிறது.

    வெண்பா கவிஞர் திரு. பட்டுக்கோட்டை சத்தியனின் வரவில் இன்னும் எழுச்சியுறுகிறது உள்ளே தகிக்கும் அந்த வேள்வி!!

    Like

  4. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    //துயிலந்தனை இடித்து// ………………துயிலுமிடந்தனை??

    சில நினைவுகள் இதுபோலக் கொடுமைதான் ஐயா! மறக்க நினைப்பினும் மறையா

    சங்கர் குமார்//

    அன்பு வணக்கமும் மிக்க நன்றியும் உறவே; மேலே வரிகளின் இடையே வருவது துயிலும் இடம் இல்லை, துயிலம் தான்.

    எதிரிகளால் வீழ்ந்த எம் வீர வேங்கைகள், ஒருகாலும் மடியவில்லை. அவர்கள் சுதந்திரக் கனவோடு உறங்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் உறங்குமிடம் துயில் கொள்ளுமிடம் தனிமை படுத்தப் பட்டு, பாதுகாக்கப் பட்டு, வருடத்திற்கு ஓர் முறை உறவினர்களால் சென்றங்கே மலர் வளையம் வைத்து வணங்கப் பட்டு, பரிசுத்தமாக பராமறிக்கப் பட்டு, அவ்விடம் ‘துயிலம்’ என்றறிவிக்கப் பட்டது.

    அதையும் இடித்து அவர்களின் அடையாளமே இன்றி செய்துவிட்டது இலங்கையின் தற்போதைய அரசு.

    என் மகன் இறக்கவில்லை உறங்கிக் கொண்டுள்ளான் அங்கே’ என்று நம்பி, இப்போது அதுகூட சிதிலப் படுத்தப் பட்டு ஏமாந்து நிற்கும் அந்த தாய் மனதிற்கே தெரியும் ‘துயிலம் இடிக்கப் பட்டதன் வலி!!

    (நன்றி: முத்தமிழ்)

    Like

  5. பிரபுவின்'s avatar pirabuwin சொல்கிறார்:

    அருமையிலும் அருமை.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒரு வலியின் பதிவில்லையா; அந்த வலி இருப்பவருக்கு, புரிபவருக்கு, கவிதையும் பிடிக்கிறது பிரபு. மிக்க நன்றி. எழுத்துக்களால் இணைந்திருப்போம், இதயம் வென்று சமூகம் காப்போம்!!

      Like

  6. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    என் தமிழச்சியின் நிர்வாணத்தை
    மரணத்தினால் உரித்து,

    என் பிள்ளைகளின் கனவுகளை
    உடலோடு எரித்து,

    எம் அன்னையவள் –
    இறந்துயெரித்த சாம்பலை கூட கொச்சைப்படுத்தி,

    உரக்கச் சிரிக்கும் கயவர்களோடு
    கூத்தாடிப் போனதடிப் போர்;ithil eththanai ullaththai kilththu vidum unarvu ullathu thangalin thamil pattai naan ennavenru solla???????

    Like

  7. nalayini thiyaglingam's avatar nalayini thiyaglingam சொல்கிறார்:

    கடல்கோல் குடித்த மிச்சத்தை
    பின் – மழைவந்தும் மூழ்காத வீரத்தை
    தனித்து வெல்லத் திராணியின்றி – யெம் வீரர்களை
    கோழைகள் விஷம் வீசக்; கொன்றுப் போட்டதடிப் போர்;
    கொன்று; தலைவிரித்தாடியதந்த போர்!!

    உண்மைகளை உரக்கச் சொல்கிறீர்கள் ……….மிகவும் அருமையானவரிகள்

    Like

பின்னூட்டமொன்றை இடுக