கடைத் தெருவோரம் சில கண்ணீர் துளிகள்
‘ஒரு வாகன நெரிசல் உள்ள பகுதி – அங்கே பக்கத்து வீட்டுக் காரரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி?’
அந்நேரம் பார்த்து – அங்கு வந்த அவளின் குழந்தை ‘தாய் மடியை முட்டி..முட்டி.. பால் குடிக்கும் கன்றினைப் போல் புடவைத் தலைப்பை – இழுத்து – சுழற்றி கெஞ்சி அழுது – ஒரு இருபதைந்து பைசா நாணயத்தை வாங்கிக் கொண்டு – தெரு மூளையிலிருக்கும் பெட்டிக் கடைக்கு ஓடுகிறது.
கடையில் – தேன் மிட்டாய் பார்த்தவுடன் அந்த குழந்தைக்கு நாக்கில் இனித்தது. கடலை உருண்டை கண்டவுடன் – வாயில் எச்சில் ஊறியது. அச்சுமுறுக்கு டப்பாவோ..’என்னை எடு…. என்னை எடு என்றது. அதுமட்டுமா-
அருகில் கைவிரல் அப்பளம், கமர்கட்டு மிட்டாய், தேங்காய் பார்பி – இவைகளுக்கு மத்தியில் பலூன் போன்ற இதர விளையாட்டுப் பொருட்களும் இருக்க – அந்த குழந்தையின் கையிலிருந்ததோ வெறும் இருபந்தைந்து பைசா நாணயம்!
சுற்றிமுற்றி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு விலையையும் கேட்டுவிட்டு – இருபந்தைந்து பைசாவிற்கு என்னென்ன எத்தனை கிடைக்குமென்று அறிந்துக் கொண்டு, கடைசியாய் ஒரு சிகப்புநிற – தேன்மிட்டாயை வாங்கியது.
அதையும் உடனே தின்றுவிட்டதா என்றால், அதுவும் இல்லை. வாங்கிக் கொண்டு வெளியே வந்தது தெருவோரம் நின்று கொண்டு – அந்த தேன்மிட்டாயை எடுத்துப் பார்த்து.
‘தின்று விடலாமா..(?)’ வேண்டாம்..வேண்டாம்…’ ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு எடுத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டது. தெருவின் இரண்டு புறமும் வாகனங்கள் வந்துக் கொண்டுருக்க ஒரு அசட்டுத் தனமாக ஓடி… தெருவின் அடுத்த முனையில் நின்றது.
மீண்டும் மிட்டாயை எடுத்து ‘ஒரு சின்ன கடி – கடிக்கப் போக’ கீழே தன் காலுக்கருகில் சற்று தள்ளி ஒரு ஐம்பது பைசா நாணயமொன்று இருக்க, அதை எடுத்துக் கொண்டு – ஆர்வமாக ஓடி இரண்டு கைவிரல் அப்பளமும், இன்னுமிரண்டு கடலை – உருண்டையும் வாங்கிக் கொண்டு——— தெருவினைக் ————— கடக்கையில் சடாரென திரும்பிய லாரி ஒன்று; தூக்கி வீசியது அந்த குழந்தையை!
ஐயோவென்று எல்லோரும் ஓடி வருகிறார்கள். கூட்டம் கூடுகிறது. யாராலுமே காப்பாற்ற முடியாமல் பாவமாக அந்தக் குழந்தை சிதறிக் கிடக்க; அருகே அந்த தேன்மிட்டாயும், கடலை உருண்டையும், கைவிரல் அப்பளமும் துளிகூட நசுங்காமல், சிதறி நின்று கண்ணீர் வடித்தது!
அந்த கொடூர காட்சியை காணும்; கேட்கும்; குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்திடாத பெற்றோர்களின் கண்களில் ரத்தமே வந்து கூட என்ன பயன்? அந்த குழந்தை ஆசைப் பட்ட தேன்மிட்டாயையும் கைவிரல் அப்பளத்தையும் அது தின்னவேயில்லையே!!
——————————————————————————————–
வித்யாசாகர்
























