காவியங்களாய்
பல காதல் –
காலங்காலமாய் உண்டு!
கால்கொலுசின்
சப்தம் கேட்டு
காதல் வந்த நம்
உள்ளூர் கதைகளும்
உண்டு!
ஜாதி எரிந்து
உயிர் கொளுத்திய
அரக்கத் தன –
சம்பவங்களும் உண்டு!
மதம் தனக்கு
இரையாக்கிக் கொண்ட
காதலர்களின் கதறலில்
பெற்றோர் –
தனக்கான மானத்தை
மட்டும் வென்று
மனிதம் கொன்ற அவலமும் உண்டு!
ஒருதலைக் காதலென்றும்
தோற்றுப் போன –
அர்த்தம் புரிந்தும்,
பிரிவில் மீளாத இதயங்கள்
தன்னை தானே கொன்று
விஷ குப்பிகளை விநியோகம் செய்த
அறியாமைகளும் ஏராளமுண்டு!
தோழமை வஞ்சம் தீட்டி
விதைத்த நஞ்சால்
பிரிந்த இதயம் பிளந்து
உயிர் துறந்த துரோகங்கள்
ஒவ்வோர் ஊரின் எல்லையிலும்
நினைவுகளாய் –
ஒட்டிக் கொள்ளாமலில்லை!
பெற்ற பிள்ளையின்
மனசு நோகுமோ,
பாடம் கெடுமோ;
நம் சந்தேகத்தில் குழந்தை
மனம் வெந்து சாகுமோ
என்றெல்லாம் நம்பிய பெற்றோரின்
மூச்சை அடக்கி –
ஊர்விட்டோடி சுயநல சொர்க்கம் பூண்ட
காதல் கசப்பில் கதகதத்த
அசிங்க பிழைப்புகள் ஆங்காங்கே
தென்படாமலில்லை!
இதெல்லாம் தாண்டி
யார் மனமும் நலுங்காத
மீளாக் காதலாய்
காலம் வென்ற
ஏதோ ஒருசில
நொடிப் பொழுதுகளை எண்ணி
இதயம் திறந்து வாழும்
என்னை போன்றவனுக்காய் – வா;
காதலி –
காதலின் மொத்த அர்த்தத்திற்கும்
அன்பொன்றே தீர்வென –
வென்று காட்டுவோம்,
காதலை வென்று தீர்ந்ததில்
காலம்காலமாய் முரசு கொட்டாமல்
மூட்டை பையில் முடைந்து போன
பெண்ணியத்தால் –
தலைகுனிந்து – நடக்கும்
ஏதோ ஓர் பெண்ணின்
சுதந்திரத்தையாவது –
நம் காதலின் கற்பித்தல்
மீட்டுத் தரட்டும்; வா!
























