35, அது வேறு காலம்..


KSF-TVM-2013 089

 

 

 

 

 

 

1
ப்போதெல்லாம்
குழாயடியில் அமர்ந்திருப்போம்

பகலெல்லாம்
பெண்களைப் பார்த்ததை
பெண்கள் சிரித்ததை
ரசித்துப் பேசிய காலமது,

பெண்களைக் காதலியாகவும்
காதலியை தெய்வமாகவும்
தெய்வத்தை அன்பால்மட்டுமே யறிந்த
நாட்களவை;

இப்போது
குழாயடி இல்லை
கூடி நண்பர்கள் தெருவில் அமர்ந்துப்
பேசுவதில்லை

இப்போதும் பெண்களின் பெயரில்
குறுந்தகவல் வருகிறது
ஆனாலும் பெண்தானா? தெரியாது

அது வேறு காலம்..
——————————————————-

msm03

 

 

 

 

 

 

 

2
ழைவந்த மறுநாள்
இலைகளின்வழியே
மழைநீர் சொட்டிக்கொண்டிருக்கும்,

மரங்களெல்லாம்
கிளைஒடிந்து வீழ்ந்திருக்கும்

தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு
வெயில்சுடச் சுட மரம் வெட்டுவோம்
முள்மரம் வெட்டி படல் படலாய்ச் செய்து
வேலியடைப்போம்

கூரைகள் பிய்ந்த ஓட்டைகளையும்
ஓடுகளுடைந்த விரிசல்களையும்
நட்பினால் மூடுவோம்,

நண்பர்கள் சேர்ந்து
நான்கு வீட்டிற்கும் வேலை செய்வோம்,
உன் வீடு என் வீடு என்றெல்லாமில்லை
காலையில் பல்துலக்கும் பற்பொடி
வேப்பங்குச்சி முதல்
எல்லோருக்குமே எல்லாமே பொது,

இப்போது
அதுபோன்ற வேலைகளெல்லாம் இல்லை
வாட்சப் இருக்கிறது
இமோ இருக்கிறது
முகநூல் இருக்கிறது

அது வேறு காலம்..
——————————————————-

kp (41)

 

 

 

 

 

 

 

3
தி
ருவிழாக்கள் வரும்
ஊரெல்லாம் மின்விளக்குகள் கட்டுவோம்
வானவேடிக்கையில் வேறுஊர்களுக்கு
எங்களூர் சேதிசொல்லுவோம்,
இரவு வரும் சாமிஊர்வலம்
எங்களுக்கு தேவஊர்வமாய்த் தெரியும்
அன்றைக்கொருநாள் தான் வீட்டைவிட்டு வெளியேவந்து
ஊரெல்லாம் சாமி திரியும்,
நடுவீட்டில் உடைத்த தேங்காய்
தெருவிற்கு தெரு
வீட்டிற்கு வீடு வாசலில் உடையும்

இரவு பனி பொழியும்
நகர்வலம் முடியும்
கூத்து ஆரம்பமாகும்
போர்வை விரித்து
போர்வைப் போர்த்திக்கொண்டு
குடும்பம் குடும்பமாய் அமர்ந்திருப்போம்,
ஆளுக்கொரு இஞ்சி தேநீர்
இரவு குல்பி
பஞ்சுமிட்டாய்
சுடச் சுட பலகாரமெல்லாம்
நெஞ்சு கசக்காமல் நொறுக்குத் தீனியாகும்,
எதிர்வீடு பக்கதுவீடெல்லாம்
அத்தை மாமா
பெரியம்மா
தாத்தாப் பாட்டி உறவாகும்..,

காலையில் உரியடிப்போம்
குழந்தைகளுக்கு பந்தயைம் வைப்போம்
மைக் பிடித்து கதைகள் சொல்வோம்
சாமி பகலிலும் ஊர்வலம் வரும்
பொதுவாய் அடைந்திருக்கும் கதவுகளெல்லாம்கூட
அன்று திறந்திருக்கும்,
சாமிக்கே சாமி தரிசனம் கிடைக்கும்,
சுண்டல் சர்க்கரைப்பொங்கல்
சிரிப்பெல்லாம்
போகும்வீடுதோறும் பாகுபாடின்றி கிடைக்கும்

மதியச்சோறு
அன்னதானத்தில் முடியும்
தானம் செய்தவர் பெயர்
பலகையில் வரும்
பேச்சுக்கு இடையிடையே
அன்னாரின் பெயரை காற்றிடை
கலந்துவிடுவோம்
பாட்டிடைப் புகழ்ந்துச் சொல்வோம்

வயிறார உண்ண மனசு
மனதார எல்லோரையும் வாழ்த்தும்

மாலையில் சோர்ந்துப் போயிருப்போம்
மறுநாள் விடியும் வரை
அசராமல் தூங்கிக்கிடப்போம்

கனவில் நிறைய சாமிகள்
வந்துபோகும்..

அது வேறு காலம்..
——————————————————-

oldhome

 

 

 

 

 

 

 

 

 

 

4
கூ
ரைவீடு
மாடிவீடு
இரண்டிற்கும் நடுவே நிறைய
ஓட்டுவீடுகள் அன்று
வெயில் சுட்டிருக்கும்..

மாடிவீட்டிற்கு
முந்தையப் படியும்
கூரை வீட்டிற்கு அடுத்தப் படியும்
இந்த ஓட்டுவீடுகள் தான்,

காலையில் பனிபடர
ஓடுகளில் இருந்து வரும் குழம்பு வாசமும்
வெள்ளைப் புகையும்
தாழ்வாரத்தில் ஒழுகும் மழைத்தேங்கிய நீரும்
அதிகாலையின் வானொலிச் செய்தியும்
உடல்சுடாது கண்கூசும் மஞ்சைவெயிலும்
இன்று நினைத்துக்கொண்டால்கூட
தேநீர் கடையின் தகரப்பந்தலின் மேல்நின்றுக் கத்திய
காகத்தின் நினைவோடு
கலையாமலே இருக்கிறது..

முருங்கைமரம் பூ உதிர்த்தும்
வேப்பம்பழம் கொட்டைக் காய்ந்தும்
ஓட்டு வீட்டிற்குள் வாழ்ந்த
அந்த வாழ்கை வேறு..

மின்விசிறியின் சப்தம்
இசையானது
இந்த ஓட்டுவீடுகளில்தான்,

விண்முட்டும் கனவுகளுக்கு கைகோர்க்க
வானத்துநிலா வீட்டிற்குள் வந்ததுமிந்த
ஓட்டுவீட்டின் ஓட்டைவழிதான்..

செம்பருத்திப் பூத்ததும்
சில ஓட்டுவீடுகளின் மேல்
பூசணிக்காய் கொடிபடர்ந்ததும்
மைனா முட்டையிட்டதும்
எலி வேட்டை பூனை ஆட்சி
ரயில்பூச்சிகள் கூட வாழ்ந்ததுமென
அங்கே நிறைய வாழ்க்கை அன்று
ஒற்றைவீட்டிற்குள் இருந்தது..

இன்று நமக்கு ஓட்டுவீடுகள்
சிட்டுக்குருவியின்
சத்தத்தோடுச் சேர்ந்து குறைந்துக்கொண்டே
வந்தாலும் –

ஒற்றைவரியில் அதன் நினைவுகளையெல்லாம்
வாரி இரைத்துவிடலாம்
“அது வேறு காலம்..”
——————————————————-

TamilDailyNews_5535503625870

 

 

 

 

 

5
லைகள் துளிர்ப்பதும்
செடிகள் மரமாவதும் வேறு,
மழைக்கு குடைபிடிப்பதும்
வெய்யிலுக்கு கூடாரம் அமைத்ததும்கூட வேறு,

குழந்தைகள் கண்ணாடியணிவதும்
இளைஞர்கள் மருந்தோடு வாழ்வதும்
முதியோர் தனித்துச் சாவதும் – எங்கோ நம்
வாழ்வின் பிசகென்று தெரியல்லையா ?

வளர்ச்சியில்
கண்கள் குத்தப்படுவதில்லை;
கண்குத்தி வளர்வதே நெஞ்சைக் கிழிக்கிறது..

மரங்களை வெட்டுவதும்
வாடாமலர்கள் வீட்டில் நுழைவதும்,
வீட்டை மனதால் மூடுவதும்
வெளியை குளுமைக்காய் எரிப்பதும்,

விதைப்பதை மறப்பதும்
ரசாயனத்தில் விளைவதும்,
குளிர்ந்ததை ஒழித்ததும்
குடித்து குடித்து அழிவதும்,

கோடாரி மண்வெட்டி கடப்பாரைகளை
வீசிவிட்டு’
அம்மி உரல்களை
கிணற்றோடு வீசி மூடிவிட்டு’
கணினி கைப்பேசி
புகழுக்குப் புரட்சியென
கதிரலைக் கற்றைகளுக்கு நடுவே
வண்ணக்கனவுகளை விற்றுத்திரிவதும்,

மண்தோண்டி நட்ட மரத்தை
அறிவியலால் வெட்டிச் சாய்ப்பதும்,
கட்டடங்களால் நிமிர்ந்து நிமிர்ந்து
கையூட்டால் சரிவதும்,
பிறரை நம்பி, புறம்பேசி, அறம் விட்டு விலகி
அளவோடு நில்லாமல் ஓடி ஓடி
எங்கோ எதையோ தேடி தேடி
நம் அடையாளங்களைத் தொலைத்து
தொலைத்து
பணத்துள் புதைவதும்
நரைக்குமுன் பழிக்குள் விழுவதும்
பதற்றத்தில் மூச்சு நின்றுஓய்வதும்
ஏதோ.. நாம் வாழ்வதன் தவறென்று தெரியவில்லையா ?

தெரியும்
எல்லாம் தெரியும் நமக்கு
எல்லாம் மாறும்
ஏதோ இதெல்லாம் அதன்போக்கில் நடக்கிறது
அதன்போக்கில் மாறும்
அதனாலென்ன –
இது வேறு காலம்

வீட்டிற்குள் உறவுகள் கூடிச் சிரிக்க
சிட்டுக்குருவிகள்
சன்னலில் கத்தியதும்
உறவுகள் வீட்டிற்கு வருவதை
கூரைக்குமேல் நின்று காகம்
ரக்கை யடித்து அடித்துச் சொன்னதும்
கோழிக்கு கறுப்பி
நாயிக்கு செவளை
ஆட்டுக்கு டேய் ஆயிரம்னு பெயர்சூட்டி
மண்ணோடு வாழ்ந்ததெல்லாம் வேறு –
அது வேறு காலம்..
———————————————————————
வித்யாசாகர்

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30, மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை)

Flamenco - poetry in motion

 

 

 

 

 

 

 

 

 

1
நா
ன் சிறுவயதாயிருக்கையில்
சிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள்
என் அப்பா ‘மகள்தானே
பரவாயில்லை’ என்பார்..

உடம்பிற்கு முடியாதென்றால்
இருக்குமிடத்தில் அப்படியே வாந்தியெடுப்பேன்
அய்ய; அசிங்கம் என்பார்கள்
என் அப்பா ‘மகள்தானே
பரவாயில்லை’ என்பார்..

இப்போதெனக்கு திருமணமாகியும்
அடிக்கடி போய்
அப்பாவிடம் நிற்பேன், எல்லோரும்
இவள் எப்பவுமே தொல்லை என்பார்கள்
என் அப்பா ‘மகள்தானே
பரவாயில்லை’ என்பார்..

எல்லோருக்குமே நான் எப்போதும்
இன்னொருத்தியாகவே தெரிகிறேன்
அவருக்கு மட்டும்தான் நான்
அவராக தெரிகிறேன்..
———————————————————

2
ங்களுக்கு அப்போது ஒழுகும்
கூரைவீடு இருந்தது,
வீடு ஒழுகுவதற்கு அப்பா
கவலைப்பட்டதேயில்லை,
என் பிள்ளை நனைவாளோ என்று பதறி எழுந்து
கூரைக்கு தார்பாயிடுவார்!

கருவேல மரம் நெடுகயிருக்கும்
அதை வெட்டி வேலி கட்டுவோம்
மரம் வெட்டுகையில் அப்பாவிற்கு
கையெல்லாம் புண்ணாகி நீர் கோர்த்துக்கொள்ளும்
மறுநாள் நான் சென்று வெட்டுவேன்
என் அப்பாவிற்கு வலிச்ச மரம் வலிச்ச மரம்னு
ஓயாது வெட்டிச் சாய்ப்பேன்
கையெல்லாம் எனக்கும் புண்ணாகும்
மாலையில் அப்பா வந்துப் பார்த்துவிட்டு
தாளாது துடிப்பார்,
அவருக்கு அதிகம் வலிக்குமென்று தெரிந்ததும்
நான் மரமே வெட்டுவதில்லை!
———————————————————

3
ட்டிலிக்கு மாவரைக்க
ஒரு பாட்டி கடைக்குப் போவோம்
அப்பாவின் மிதிவண்டியில் அப்போது
பின்சீட்டு கிடையாது
முன்னால்தான் அமர்ந்திருப்பேன்
அப்பா வலிக்குதாடா என்பார்
இல்லைப்பா என்பேன்
ஆனால் வலிக்கும்
நெளிவதைக் கண்டு என்னம்மா வலிக்குதா என்பார்
இல்லைப்பா, வலிக்கலையே என்பேன்
அதற்குப் பிறகு நிறைய கடைக்கு
அப்படித்தான் போவோம்,
அப்பாவிற்கு நான் சொன்னதேயில்லை
எனக்கு வலிக்கிறதென்று,
சொல்லியிருந்தால் அப்பா
அதற்கும் கவலைப்பட்டிருப்பார்,
அது எனக்கு அதைவிட அதிகமாக
இன்றும் வலித்திருக்கும்!!
———————————————————

4
னக்கு நடைபழகிய சமயமது
அறைக்குள் போனவள்
விளையாட்டாக சாவியை திருக
சாவி உள்ளுக்குள் அறையைப் பூட்டிக்கொண்டது

அம்மா ஓடிவந்து
பதட்டமாகத் தட்டுகிறாள்
மகளே மகளே என்று அலறுகிறாள்

எனக்கோ உயிர்போகும் பயம்
உள்ளே என்ன ஆகுமோ
யார் வருவார்களோ
அம்மா ஏன் அழுகிறாள்
எதையோ கொடிதாய்ச் செய்துவிட்டேனோ என
ஏக பயமெனக்கு,

அப்பாவை அழைக்கிறாள் அம்மா
ஐயோ மகள் உள்ளே பூட்டிக்கொண்டாள்
என்று கதறுகிறாள்

நடந்ததத்தனையும்
நடந்ததைப்போலவே யெனக்கு அத்தனை
நினைவிலில்லை யென்றாலும்
பின்னாளில் நான் வளர்ந்துவந்ததும்
தெரியவந்ததது –
‘என் அப்பா’ என் அழை நின்றுவிட்டதை
அறிந்ததும்
மகளின் –
குரலே வரவில்லை என்றுக் கேட்டதும்
அதிர்ந்து
பேருந்தைவிட்டுக் கீழிறங்கி
ஓடியே வீட்டிற்கு வந்தாராம்
கதவை உடைத்தாராம்
எனைக் கட்டிப்பிடித்து அழுதாராம்
நான் கட்டிலில் ஒரு ஓரத்தில்
கெட்டியாய் அமர்ந்திருந்தேனாம்

பேருந்திலிருந்து இறங்கி ஓடிவந்த
அப்பாவை
இன்றும் தேடிக்கொண்டேயிருக்கிறது
இரு கண்களும்
மனசும்..
———————————————————–

5
ஒரு
முறை
வெளிஊர் சென்றுவிட்டு
மாநகரப் பேருந்தில் ஏறி
எங்களூர் தெருமுனை வந்து இறங்கினோம்,

அங்கே ஏனோ ஒரு ஆள்
இன்னொரு பெண்ணைப் போட்டு
அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தான்

அப்பா ஓடிப்போய்
அவனைச் சட்டையை பிடித்திழுத்து
ஒரு அரை விட்டார்
அவன் அதற்கெல்லாம் அடங்கவில்லை
போயா என்றுத் தள்ளி
அப்பாவை உதறி சாய்த்துவிட்டு வேகமாகப் போனான்
நான் ஓட
அருகே இருந்தோரெல்லாம் ஓடி
அப்பாவைத் தூக்கி நிறுத்துவதற்குள்
‘உனக்கு ஏன் பெருசு இதலாம்’ என்றார்கள்
அப்பா சொன்னார் “என் மக மாதிரி இருக்காங்க..” என்றார்
எனக்கு அதை நினைக்க நினைக்க
இப்போதும் அழை வரும்
நான்தான் என் அப்பாவின் உலகம்
நான்தான் என் அப்பாவின் இலக்கு
நான் தான் என் அப்பாவிற்கு எல்லாம்..

அப்பா பாவம்
இன்று நானில்லாத என் பிறந்தவீட்டில்
இப்போதுகூட என்னைத்தான் நினைத்துப்
படுத்திருப்பார்..

அப்பாவிடம் ஒருமுறை
அழைத்துப் பேசத்தோணும்
அவரைப் பார்க்கத் தோணும்
அவர்கூட ஒரு நடை அதுபோலவே நடக்கத் தோணும்

இப்படி எது தோன்றினாலும்
அதையெல்லாம் மறைத்துக்கொண்டு
‘அப்பா வறேன்பா’ என்று அப்பாவிற்கு வலிக்காமல் நானும்
எனக்கு வலிக்காமல் அப்பாவும்
இத்தனை லேசாகச் சொல்லவைத்தச் சொல்லில்
எத்தனை ஆழ அன்பிருக்கென்று
எங்களின் கண்ணீருக்கே தெரியும்..
———————————————————
வித்யாசாகர்

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, மகளெனும் கடல்..

மெரினா_கடற்கரை_படம்_21
நா
னும் மகளும் கடலுக்கு
போகிறோம்,
முன்னே ஓடியவள்
கரையில் தடுக்கி சடாரென
தண்ணீருள் விழுகிறாள்,
அலை மூடிக்கொள்கிறது

மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது
மகளைக் காணோம்
மகளையெங்கே காணவில்லையே
ஐயோ மகளென்று பதறி
ஓடி கடலில் குதிக்கிறேன்;

மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி
அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள்,
கையை ஆட்டி ஆட்டி ஏமாத்திட்டேனே என்கிறாள்,

தண்ணீரில் கூட வியர்த்தது
எனக்கு
உடம்பெல்லாம் பதறுகிறது..

அவள் சிரிக்கிறாள் சிரிக்கிறாள்
அப்படிச் சிரிக்கிறாள்
என்னம்மா என்கிறேன்
ஐயோ அப்பா அப்பா என்கிறாள்

பயந்தே போனேன்மா என்றுச்
சொல்லவில்லை
அவளதைக் கேட்கவுமில்லை
அவளுக்கு சிரிப்பே சோறு
சிரிப்பிற்கே விளையாட்டு

எங்கே காணினும்
கடலெங்கும் அவள் சிரிப்பு
அவள் சிரிப்பு
என் உயிரெங்கும் அவள் சிரிப்பு..
அவள் சிரிப்பு..

சிரித்து சிரித்து சிரித்து
அவளுள் இருக்கும் நான்
மெல்ல மெல்ல அடங்கியதற்கும்
அவளோடு சேர்ந்து நான்
வாய்விட்டு சிரித்ததற்கும்
இந்த கடலின்று சாட்சி..
———————————————————

2
ப்பா
மகள்
இரண்டுமுறை எழுதவேண்டாம் போல்
ஒரேயொருமுறை எழுதுகிறேன்
கடல்..
———————————————————

3
ப்பா நான் தண்ணீரில் இறங்கி
விளையாடப் போகிறேன்
இதலாம் பிடிங்க என்று
முதலில் ஒன்றை கொடுத்தாள்
வாங்கிக்கொண்டேன்

சரி இந்தாங்க
இதையும் பிடித்துக்கொள்ளுங்க ளென்று
இரண்டாவது கைக்குட்டையையும்
பணப்பையையும் கொடுத்தாள்
வாங்கி வைத்துக்கொண்டேன்

மூன்றாவதாய் மீண்டும் ஓடிவந்து
சரிங்கப்பா இந்தாங்க இதையும்
வைத்துக்கொள்ளுங்கள் என்றாள்

வாங்கியதும்
அப்பா பிரிக்காதீங்க என்றாள்
சரிம்மா என்றுச் சொல்லிவிட்டு
பிரித்துப் பார்த்தேன்
அது ஏதோ
புத்தகத்தில் வந்த எனது
பழைய புகைப்படம் போல இருந்தது..

கேள்வியோடு திரும்பி
அவளைப் பார்க்கிறேன்
வானத்திற்கும் பூமிக்குமாய் அவளே பெரிதாகத்
தெரிந்தாள்..
———————————————————

4
ட்டு உனக்கு
அப்பா பிடிக்குமா என்றேன்

ம்ம் பிடிக்கு மென்றால்
எவ்வளவு பிடிக்கும் என்றேன்
ரொம்ப பிடிக்கு மென்றாள்

எவ்வளோ இந்த கடலளவு
பிடிக்குமா என்றேன்
ம்ம் இதுபோல் இன்னும்
நிறையக் கடலினளவு பிடிக்குமென்றாள்

அவளுக்கு மனசு
கடலைத் தாண்டி இருந்தது
எனக்கு அவள்தான் கரையாக இருந்தாள்..
———————————————————
வித்யாசாகர்

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்..

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை..
26farm4
வெள்ளிமுளைக்கும் தலையில்
மரணம் சொல்லாமல் அமரும் நிலம்
இந்த வேனல் நிலம்..

வெளிச்சம் தந்தப் பகலவன்
படுசுடும் விழிச் சுடர்களால்
எரித்த
ஆடைக் கிழிந்தோருக்கு
ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்..

கல்லுசுமக்கும் தலைவழி
இரத்தம் உறிஞ்சி
மூளை சுட்டு
நரம்பறுத்து
இயற்கை கூட பழிகேட்கும்
பாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்..

உறிஞ்சும் தாய்ப்பாலில்
உப்பு கரிக்கும் வியர்வையாய் ஒழுகுமென்
கருப்புத்தோல் தாயிக்கு
நிழலையும்
கொஞ்சம் நிம்மதியையும் தந்திடாத
வெடிப்பூரிய நிலமிது, இந்த வேனல் நிலம்..

வயிற்றுப்பசிக் காரிக்கு
மயக்கத்தையும்,
வெடிப்புக்கால் கிழவனுக்கு
ஒருகூடை பாரத்தையும்,
டவுசர் முடிபோட்டப் பொடியன்களுக்கு விளையாட
சுடுமணலும் தந்த நிலம்,
பெரிய மனிதரெல்லாம் குளிரூட்டியக் காரில்
பயணிக்கும்
சமநிலை சரிந்த நிலமிது;
நாங்கள் எல்லோரும் வாழுமிந்த வேனல் நிலம்..

மாடு குடிக்க தொட்டிகட்டி
நாய் குடிக்க நீர்நிலை அமைத்து
கோழி காகம் அருந்த சட்டி வைத்து
நாளும் வாழ்ந்த என் பாட்டன் மண்ணை
கட்டிடங்களால் நிரப்பி
மேலே தனக்கான பெயர்களை
தங்கத்தில் பொறித்துக்கொண்ட முதலாளிகளின்
இரக்கமொழிந்த நிலமிது, இந்த வேனல் நிலம்..

ஒரு பக்கம் குளிரூட்டி
மறுபக்கம் சூடு தெறிக்க
வெப்பத்தை வெளியே உமிழும் எந்திரத்துச்
சாலைகளில்
சோற்றுத்தட்டை வயிற்றுப்பசியோடு மறைத்து
கால்சூட்டோடு நடக்கும் ஏழைகளின்
வறுமைக் கோட்டின் மீதேறி –
போராடாதத்தெரியாத நிலமிது, இந்த வேனல் நிலம்..

வளர்ந்துவிட்டோமென்று மார்தட்ட
உயர்ந்துநிற்பதாக வெறும் –
கண்ணாடி மாளிகைகள்பேச
குளிர்ந்த திரையரங்குகளில் வசனம்
வசனமாக நீள
நீள
புதையுண்டுப் போகும் விவசாயி பற்றி
மழையினளவிற்குக் கூட
வருத்தம் எழாத நாம்
மாத்திரைகளோடு வாழும் நிலமிது, இந்த
வயல்கள் வெடித்த
மனம் வறண்ட வேனல் நிலம்!!
——————————————————————————————
வித்யாசாகர்

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

7, பேச்சாட்டன்.. (சிறுகதை)

vidhya mmaa

“செல்லம்.. நதினி.. அப்பா வந்துட்டேன்..”

“ஹே.. ஜாலி.. அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு..”

உள்ளறையிலிருந்து ஓடிவந்து வேலையிலிருந்துவந்த செழியனை வாசலிலேயே கட்டிக்கொண்டாள் முதல்வகுப்பு படிக்கும் மகள் நதினி. செழியன் தனது மடிக்கணினியை ஓரம்போட்டுவிட்டு மகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சினார்.

அதற்குள் மனைவி கலையும் தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து அருகில் அமர நீர் வாங்கி அருந்திவிட்டு கொஞ்சநேரம் நிறுவனம் வீடு என பகல்நேரப் பொழுதின் கதைகளை இருவரும் ஒருவர்மாற்றி யொருவர் பேச ஆரம்பித்தார்கள்.

அதற்குள் நதினி வீட்டிற்குள் ஓடிப்போய் தனது புத்தகங்கள், வண்ணமடித்த ஓவியம், இன்று எழுதிய இன்னபிற என ஆசிரியை நட்சத்திரம் போட்டதுவரை பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவந்த அத்தனையையும் ஒன்றுவிடாது எடுத்துவந்து மாறி மாறி ஒவ்வொன்றாய்க் காட்டி செழியனை தொல்லைசெய்தாள்.

செழியனோ முக்கியமானதொரு நிறுவனத்தின் தொழில்குறித்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். நதினிக்கு அப்பாமேல் ஏக கோபம். என்னடா இது அப்பா கொஞ்சம்கூட என்னை கண்டுக்கொள்ள கூட இல்லையே என எண்ணி கையிலிருந்தப் புத்தகங்களையெல்லாம் தூக்கி தூர வீசினாள்.

அதற்குக் கோபமான செழியன் வேகமாக எழுந்துப்போய் அதே போனவேகத்தில் பளாரென ஒரு அரை கன்னத்திலேயே விட்டார். நதினி பாவம் பே………………ன்னு கத்த ஆரம்பிக்க, வீடு இரண்டாகி, ஒரு கட்டத்தில் அமைதியாகி, ஆளுக்கொரு மூலையில் அமர்ந்துக் கொண்டார்கள்.

சற்றுநேரம் பொறுத்து கலை சமையலறைக்குள் சென்று தேநீர் இடுகிறாள். தேநீர் கொண்டுபோக மகள் நதினியை அழைக்கிறாள். அவளெங்கு வர, நதினி ஏதோ வரைவதில் ரொம்ப ஆழ்ந்திருந்தாள். கண்களில் பயங்கரக் கோபம் வேறு.

செழியனுக்கு கலையே தேநீர் கொண்டுவந்து தர, செழியன் மெல்லப் புன்முறுவல் செய்தவாறு நதினி செல்லம் எங்க….? என்கிறான்.

பக்கத்துக்கு மேஜையில் ஏதோ வரைந்துக்கொண்டு இருக்கும் நதினி மிக அவசரமாக கோபமாக “பேச்சாட்டன்…..” என்றாள்.

இல்லையே எங்க நதினி செல்லத்தைக் காணோமே..(?) எங்கப் போச்சு நதினி செல்லம்..?

“பேச்சாட்டன்..”

“எங்கத் தங்கம்ல..”

“பேச்சாட்டன்..” தலையை இடதும் வலதுமாக ஆட்டிக்கொண்டே மேலே நிமிராமல் சொல்கிறாள்.. தலைமுடி இங்கும் அங்கும் அழகாக ஆடுகிறது..

“எங்கப் பட்டுல்ல..?”

“பேச்சாட்டன்.. பேச்சாட்டன்..”

செழியன் அவளை நிமிர்ந்துப் பார்க்கிறான். கண்கள் புத்தகத்தில் சொருகி கிடக்கிறது. அத்தனைக் கோபமாம் மகளுக்கு அப்பாமேல். அவனும் சில வினாடிகள் கண் அசையாது அவளையேப் பார்கிறான். திரும்பினால் சிரித்துவிடும் குழந்தை என்று அவனுக்கு எண்ணம். அதெங்கு திரும்ப.. சிரிக்க… ? அசர கூட இல்லை நதினி.

செழியன் எழுந்துப் பக்கத்தில் போனார், நதினியைக் கூண்டாகத் தூக்கி “அப்படியேக் கடிச்சிடட்டா…?” என்றார்..

அவள் அப்போதும் ஓயவில்லை.

“பேச்சாட்டன்.. பேச்சாட்டன்.. பேச்சாட்டன்.. என்றாள் அழுத்தமாக.

செழியனுக்கு கோபம் வந்துவிட்டது. “ச்சீ போ.. பெரிய இவ நீ.. ஆளையும் மூஞ்சியும் பாரு.. நல்ல கொரங்கு மாதிரி..” என்று கடிக்க; அவ்வளதான் நதினிக்கு கோபம் பொங்கி பொங்கி வருகிறது.

“கிட்ட வராத இனிமே அப்பா கிப்பான்னு..” என்கிறான் செழியன். நதினி குனிந்த தலை நிமிரவில்லை, அவள் எதையோ வரைந்துக்கொண்டே இருந்தாள்.

செழியன் விருட்டென உள்ளேப் போய்விட்டார். உள்ளே மனைவியிடம். “அதுக்கு எவ்வளோ ஒட்டாரம் பார்த்தியா? அசைய மாட்டேன்னுது கலை”

“எல்லாம் உங்களால.. அதுக்கு திமிர் ஜாஸ்தி..” பேசிக்கொண்டே வெளியே போனாள்.

வெளியே அம்மா வந்ததும் “அம்மா அம்மா இங்க வாயேன் நான் ஒன்னு வரைஞ்சிருக்கேன்..” என்றாள் நதினி.

“ச்சீ போ.. அப்பா கிட்ட பேசமாட்டேன்னுட்டு அப்புறம் என்கிட்டே ஏன் பேசுற? நீ நல்லப்பொண்ணே இல்ல.. பேசாதா யார்கிட்டயுமென்றுச் சொல்லிக்கொண்டே உள்ளேப் போனாள்.

செழியனுக்கு பகீரென்றது. அவன் அவளுக்குப் பின்னாலேயே உள்ளறைக்குள் சென்று “ஏம்மா.. உனக்கேனிந்த கொலைவெறி..?”

“விடுங்க.. அப்பதான் அவளுக்கு தெரியும்.. கொஞ்சம் உணரனும்..”

“அடிப்போடி..”

“என்ன போடி..? என்ன போடின்றேன்..?”

“பின்ன செல்லத்தைப் போய்.. அப்படி..”

வெளியே நதினிக்குக் கேட்கிறது அவர்கள் பேசிக்கொள்வது.

“செல்லத்தைப்போய் அப்படி பேசுறியே குழந்தை மனசு நோகாது..”

“நோகட்டும் நோகட்டும்.. அதுக்குன்னா இப்பவே இவ்வளோ திமிர்? உங்களையே மதிக்கமாட்டுறா..”

“ச்சே.. பாவம்மா குழந்தை.. அதுக்கென்ன தெரியும்.. மதிக்கறது மதிக்காததெல்லாம்.. போ போய் குழந்தையைத் தூக்கு, குழந்தைக்கு மனசு வலிக்கப்போது.. போம்மா” என்கிறான்.

அவ்வளவுதான்… அதைக்கேட்ட நதினி ஓடிவந்து அப்பாவைக் கட்டிக்கொண்டாள். இருவரும் ஒரு வினாடி இங்குமங்குமாய் கட்டிப் புரண்டார்கள்..

அதற்குள் கலை மேஜையின் மீது நதினி வரைந்ததை எட்டிப் பார்க்கிறாள். மேஜையில் ஒரு வெள்ளைக் காகிதத்தில் அப்பாவும் அம்மாவும் போல வரைந்து ஏதோ கிறுக்கி இருந்தது.

அதைக்கொண்டுவந்து நதினியிடம் இது என்ன என்கிறாள். அதற்கு நதினி அதைப் பார்க்காமலே “நான் அப்பாகிட்டப் பேச்சுவேன் அம்மாகிட்ட பேச்சாட்டன்..” என்கிறாள். கலை ஒடியவளை மவளை என்றுத் தூக்கிக் கட்டியணைத்து ஒரு முத்தமிட செழியனும் முத்தம்தர இருவரின் அன்பிலும் அந்தப் பேச்சாட்டன் எனும் சொல் மிட்டாயைப்போல கரைந்துபோனது..

பாசமென்பது வேறென்ன? புரிந்துக்கொள்வதன்றி..
——————XXX—————–XXX——————–
முற்றும்

வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக