தூக்கம் திருடிய மிருகம்..

தூக்கத்திற்காக ஏங்கும்
இரவுகளை தெரியுமா உங்களுக்கு…?

உறங்கமுடியா இரவும்
நஞ்சு கலந்துண்ணும் உணவும் ஒன்றென்று
மூட்டைபூச்சிற்கும் தெரியவில்லை
சில மனிதர்க்கும் புரியவில்லை..

மூட்டைபூச்சிற்குப் பயந்து
இரவெல்லாம் மின்விளக்கிட்டு
உறங்காமல் அமர்ந்திருக்கும் எங்களை
சம்பளம் தரும் நிறுவனம் –
தூங்குமூஞ்சு என்றுதான் அழைக்கிறது..

கண்கள் சிவந்தப் பகலில்
மனைவி குழந்தைகளைவிட அதிகம்
மூட்டைபூச்சிகளை நினைத்துதான் போகிறது எங்களின்
வளைகுடா வாழ்நாட்கள் என்பதை
வளைகுடா வசப்பட்டவர் அறிவர்..

உண்மையில் நாங்களெல்லாம்
வாங்கும் சம்பளம் குறைவென்றோ
வீட்டு நியாபகம் வருகிறதென்றோ
வட்டிக்கடன் ஏறுதென்றோக் கூட
இத்தனை பயந்ததில்லை வருந்தியதில்லை
ஆனால் –

மூட்டைபூச்சி என்று சொன்னாலேப் போதும்; அப்பப்பா!!!
வீட்டைக்கூட கொளுத்திடலாம்
மூட்டைபூச்சியோடு வாழ யியலாது..

முதுகெல்லாம் கடிக்கும்
கால்களை சொரியச் சொரிய நமைக்கும்
புதுசட்டைப் போட்டால்கூட
மேலூருவதுபோல் உடம்பு கூசும்,
பகலையுண்ணத் துவங்கிவிட்ட இரவைத் தொடுகையில்
எதிரிகளைத் தாக்கயியலா கோழையைப்போல
படுக்கையறையைப் பார்க்கவே பயம் வரும்;

என்னசெய்வது’
ரத்தம் குடிக்கும் மிருகங்களுக்கு
மத்தியில் வாழ்கையில்
தூக்கம்திருடும் மூட்டைபூச்சியை எண்ணுவதும்
பிரிவைக் கண்டு அஞ்சுவதைப்போலவே –
ஏக்கம் சுமந்த எங்கள் வாழ்வின் இன்னொரு சாபம் தான்..
————————————————————
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எனது தெய்வத்தின் சிரிப்பு..

னக்கு அப்பாயில்லை..

எல்லோரையும் போல நான்
அப்பாவின் தோளில்
அடிக்கடி சாய்ந்துக்கொண்டதில்லை..

சாப்பிடும்போது ஒரு உருண்டை சோறூட்டவோ
சாய்ந்தத் தோளில் ஏறி விளையாடவோ நான்
அப்பாவை தேடவில்லை; மனசு வலிக்கையில்
அப்பாவையுமெண்ணித்தான் நோகிறது மனசு..

அப்பா பாசத்தில் வாசம் மிக்கவர்
பார்க்க அழகும்
பறிக்க எளிதாகவும் கிடைப்பவர்
அதனால்தானோ என்னவோ – சொற்பத்தில்
வாடியும் போனார்..

அப்பா இன்றி எழுவதும்
அப்பா இன்றி உறங்குவதும்
கண்ணீரின் மீதுறங்கும் தூக்கமென்று
என் அப்பாவைத் தேடுமென்
கனவுகளுக்கேத் தெரியும்;

யாரேனும் அடித்தால் அப்பாவிடம் சொல்லவும்,
கிழிந்தச் சட்டையை கேட்காமலே தைத்துத் தரவும்,
தின்றப் பொருளுக்கு இனிப்பு சேர்க்கவும்
அப்பாவால் தான் முடியுமென்று நம்பி – நிறைய
இனிப்பு நாட்களை –
அப்பாவிற்காகவே சேர்த்துவைத்திருக்கிறேன்..

யாரையேனும் நான் திட்டினால்
அப்பா திட்டக்கூடாது என்பார்
யாரேனும் ஏதேனும் கேட்கையில்
பாவம் கொடுத்துவிடு என்பார்
சோகத்தை சிரிப்பால் அழிக்கச் சொல்லித்தந்த அப்பா
கண்ணீரைத் தந்ததும்தான் வாழ்வின்பாடம்;

என்றாலும் நான்’
புத்தகம் புதிதாக வாங்குகையில்
நுகர்ந்துவிட்டு மூடிக்கொண்ட நாட்களுள்,
புதுச் சட்டைக்கு மஞ்சள் வைத்து போட்டுவிட்ட
நினைவினுள் –
அப்பாவை பத்திரமாக வைத்திருக்கிறேன்;

காக்கா கடி கடித்துக் கொண்டு
அப்பா வாயில் போட்ட தேன்மிட்டாயைப் போல
எனக்குள் இருக்கும்
அப்பாவின் நினைப்புகள்
அத்தனை இனிப்பானது..

காகம் குத்தும்
குயில் கூவும்
காற்று அடிக்கும்
வானொலியில் செய்தி வரும்
அவருக்குப் பிடித்த பாட்டுச் சப்தம் கேட்கும்
எது நடந்தாலும் எனக்கு
அப்பாவின் நினைவு வரும்;

அப்பாயின்றி நானில்லை
அப்பாவின் நினைவின்றி நான் இருந்ததேயில்லை..

வானத்தைக் காட்டி
மேகத்தினுள் குதிரைப் பார் என்றதும்,
தெருவில் மீன் வாங்குகையில்
பாவம் அவளுக்கு வெய்யில் நோவுமென்று
ஒரு ரூபாய் கூட கொடுத்ததும்,
அம்மாவைக் கொஞ்சுகையில் அவளென்
முதல் குழந்தையென்றுச் சொல்லியதும்,
பள்ளிக்கட்டணம் செலுத்தவேண்டி அவர்
இரவுபகல் உழைத்ததும்,
சாப்பிடுகையில் –
பிள்ளைக்குக் கொடேண்டி என்றுச்சொல்லி
அம்மா அப்புறம் திரும்புகையில்
ஒரு அப்பளமெடுத்து நான் சாப்பிடும் தட்டில் போட்டு
ம்ம்.. சாப்பிடு என்று அவர் சைகைக் காட்டியதும்,
சக்கரைப் பொங்கல் வைக்கையில்
முந்திரியை மட்டுமெடுத்து எனக்கு ஊட்டிச்
சிரித்த அவரது சிரிப்பும்
நான் உள்ளத்துள் கட்டியக் கோவிலில் எனது
தெய்வம் சிரித்தச் சிரிப்பப்பா
எனது தெய்வம் சிரித்தச் சிரிப்பு
———————————————————————————
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 1

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக “வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சகோதரி ரா. மகாலஷ்மி ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். ஆய்வுநிறைவின்போது வித்யாசாகரிடம் கேட்கப்பட்ட நேர்காணலின் கேள்விபதில்கள் பின்வருமாறு:-

1. இன்றைய குடும்ப அமைப்புகளில் பெருகிவரும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்து? தீர்வு எதுவாக இருக்க முடியும்?

வீட்டுக்கூரையில் பற்றியுள்ள சிறு தீக் குறித்து வருந்துவதன்றி வேறென்ன செய்ய. எனினும் அதில் நீரூற்றி அணைக்கும் வித்தைஎனில் அது அன்பு ஒன்றே. அன்பைப் பகிர்தல் என்பது குடும்பத்தின் ஒற்றுமைக்கான ஒட்டுதலுக்கான உயிர்நாடி போன்றது. அன்பு இல்லாத வறண்ட இல்லங்களே வெடித்துப் போகிறது. அன்பு இருப்பின் அக்கறைக் கூடும், அக்கறைக் கூடின் பரிவு பாசம் வெளிப்படும், பரிவின்பால் பரஸ்பர நெருக்கம் கூடும் நெருக்கத்தின் பொருட்டு விரிசல் குறையும். அன்பொன்றே குடும்பத்தின் உயிர்நாடி. அன்பிருக்கும் வீட்டின் பிரச்சனைகள் நீற்குமிழிகளைப் போல வரும் வேகத்திலேயே இருக்கும் இடமறியாது போய்விடுகிறது. அங்கே புரிதல் மிகுதியாகவும், சில இடங்களில் புரிதலே இன்றி கண்மூடிக் கொள்ளவும், மன்னிக்கவும் விட்டுத் தரவும் அன்பு வழியை சமைத்துத் தருகிறது. குறிப்பாக அன்புள்ள வீடுகளில் எழும் பிரச்சனைகள் தெருவிற்கு வருவதில்லை..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2

2. சமுதாய வளர்ச்சியில் முதியோர் இல்லங்கள் பெருக்கம் என்பது நன்மையா? தீமையா? முதியவர்கள் இன்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா? பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம்? நம் தலைக்கு நாமே இடும் கொல்லி எப்படி நன்மையில் சேரும் ? பெற்றோர் பிள்ளைகளை காப்பது எப்படிக் கடமையோ அப்படி பிள்ளைகள் பெற்றோரைக் காப்பதும் தாழாதொரு மனிதத்தின் உச்சபட்ச உதாரணம் தானே?

எனை வளர்த்த கைகளுக்கு நாம் போடும் சோறுமட்டுமே நாளை நமக்கும் கிடைக்கும் என்பதை மறந்தோர் செயலே முதியோரில்லத்தில் தன் பெற்றோரை விடும் செயலுமென்பதை நாம் புரிதல் வேண்டும்.

பொதுவில், முதியோர் இல்லங்கள் பெருகிவருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சமுதாயம் குறித்த பொதுநல அக்கறை பரவலாக அதிகப் பேருக்கு வந்துள்ளது;

இரண்டு, குடும்பம் பற்றிய புரிந்துணர்வு வெகுவாகக் குறைந்துப் போகிறது. உண்மையில் நமது வாழ்க்கைமுறையை நாமே வெகுவேகமாக மாற்றிக்கொண்டு நம் கண்ணில் நம் கைவைத்தே குத்திக்கொள்ளும் ஒரு குரூரம்தான் தனைப் பெற்றுவளர்த்த அம்மாவையும் அப்பாவையும் தனித்து எங்கோ ஒரு காட்டில் விடுவதற்குச் சமமாய் வேறொரு வீட்டில் விடுவதும்.

சிந்தித்துப் பாருங்கள்; இன்று அது அவருக்கான இல்லம் அனுசரணை தர மறுத்து வெறும் பெருகும்கருனையைக் காட்ட அனாதை இல்லம் கட்டிக் கொடுக்கிறோம், நாளை அது நமக்கானதாக மாறுகையில், நம் கண்களில் குத்தும் கை நமதாகத் தானே இருக்கிறது?

அதின்றி, முதியோர் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதை அத்தனை நிம்மதி என்று சொல்வதற்கில்லை. சற்று தூரம் கடந்து நம் வீட்டை விட்டு அடுத்தத் தெருவில் ஒரு வாரம் போய் நம்மால் தங்கியிருக்க முடியுமா? நிம்மதி என்பது நம் வீடு. நம் வீட்டில் எனது தோட்டத்தில் அசையும் இலைகளும், எனது வீட்டில் கேட்கும் பால்காரனின் குரலும், வாசலில் வந்துவிழும் தினசரியும் தன் பிள்ளைகள் தனக்குப் போடும் ஒரு உண்டைச் சோறும் தான் நிம்மதி.

பசியை நிறுத்த
எரியும் வயிறு சில்லிட
ஒரு குவளை மோரோ அல்லது கையளவு சோறோ போதும்தான், அதில் அன்பின்றி அது கடமைக்காய் கொடுக்கப்ப்படுமெனில் பின்பு வாழ்வதன் அவசியம் தானென்ன? அதைக் காட்டிலும் மரணம் பெரிய ருசியன்றோ(?)!!

பேருக்குவேண்டுமெனில் சொல்லலாம்; முதியோர் இல்லங்கள் அங்கு வருவோரை நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும், நேரத்திற்குச் சோறு தருவதாகவும், சுகாதாரம் காப்பதாகவும் நிறையச் சொல்லலாம், ஆனால் அவைகளால் காக்கப்படும் உடம்பினைக்கொல்லும் பிரிவின் வேதனையை யாரால் தீர்க்கமுடியும்..? பெற்ற பிள்ளைகள் தாராத அன்பைக் காட்டிலும் கொல்லும் தனிமை கொடிதில்லையா?

தான் பெற்ற பிள்ளையோடுச் சேர்த்து வேறொன்றும் பிறந்துவிட்டால் என்ன செய்திருப்போம் நாம், இரட்டைப் பிறப்பென்றுக் கொண்டாடியிருக்கமாட்டோமா? அதைவிடுத்து கழுத்தை நெரித்தா கொன்றுபோட்டிருப்போம்? அப்படி யொரு குழந்தையைப் போலெண்ணி பெற்றோரையும் காத்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை என்பதைப் புரியச் செய்ய; புரிதலோடு பேசி, பேச்சின் நடுவே அன்பு காட்டி, பரிவோடு, அக்கறையோடு, பாசத்தோடுப் பழகும் குணத்தையும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துவதன் மூலம்; வளர வளர அவர்கள் வைத்திருக்கும் தனது பெறோரின் மீதான அன்பினைக் கொண்டு நாளைய முதியோர் இல்லங்களை வெகுவாகக் குறைத்துவிடலாம். அதுமட்டில் ஆதரவற்றிருக்கும் பெரியோரைக் காக்க பொது அக்கறைக் கொள்ளும் நல்லுள்ளங்கள் மதிக்கத் தக்கவர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3

3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா? குறைந்து வருகின்றதா? மனித நேயத்தின் தேவை என்ன?

மனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று அஞ்சுவது, எதன் பொருட்டு எவ்வுயிரையும் வருத்தாது காப்போமோயென அனைவரின் நன்மையினைக் குறித்தும் சிந்திப்பதும் பின் அதன்வழி நடத்தலுமே மனிதநேயம்.

ஒரு பூனைக்கு ஒரு மீன் கிடைத்தால் அது மீனை உயிர்போக அடித்தோ அல்லது தலைகிள்ளியோ தின்னும். அது அதன் இயல்பு. மனிதனுக்குக் கிடைத்தால் அதன் துள்ளலை ரசிப்பான், வண்ணம் கண்டு வர்ணிப்பான், நீந்துவதைப் பார்த்து கப்பல் செய்வான், மேலும் அதன் நன்மைக் கருதியே தனது வாழ்வை அமைப்பான். சற்று அதன் தோள் அறுபட்டாலோ துடுப்புகள் ஓடிந்துவிட்டாலோ ஐயோ பாவமென்று வருந்துவான். வருந்துவதே மனிதநேயம். பிறர்சார்ந்து சிந்தித்தலும், பிறரின் நன்மை குறித்து தனது வாழ்க்கைதனைக் கட்டமைத்துக் கொள்பவனுமே மனிதனுமாவான்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக