2, அறுந்த மஞ்ச கயிறு.. (சிறுகதை)

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை..

அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் பிடித்து தன்னை விழாமல் காத்துக்கொள்வதற்காக அவளின் தாலிக் கயிற்றைப் பிடித்து இழுத்துவிடுகிறான், அது அறுந்து அவன் கையோடு போய்விடுகிறது.

கலைக்கு தாலி அறுந்ததும் பதற்றம் தாங்கமுடியவில்லை. ஐயோ கடவுளே ஈஸ்வரா என்று அலறுகிறாள். சாமியறைக்கு ஓடிப்போய் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு கொஞ்சம் தாளியிலும் கண்ணீர்மல்க அப்பி வைக்கிறாள்.

தாஜ் ஓடிவந்து தாலிக் கயிற்றை வாங்கி அவளுடைய கழுற்றில் மீண்டும் கட்டிவிட்டு, அசடு இதற்கெல்லாம் போயா இப்படி அழுவாய் என்று சொல்லி அவளுடைய நெற்றியில் ஒரு முத்தமிடுகிறான்.

“வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி அறுந்துப் போச்சே தாஜ்”

“அதனாலென்ன அதலாம் ஒன்னும் ஆகாது, இனி அறுந்துவிடாமப் பார்த்துக்கோ”

“இல்லை தாஜ்., தாலி அறுந்தாலே கெட்ட சகுனம்னுவாங்க, அதிலும் வெள்ளிக்கிழமைன்னு பார்த்து அருந்திருக்கே, இப்படி ஆச்சின்னா புருஷனுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க தாஜ்”

“அம்மா அம்மா.. இதப்பாறேன்..”

“ஹேய்… சும்மா இரு சனியன்.., குழந்தையா நீ, உன்னால தான் இதெல்லாம்”

“ச்ச குழந்தையைப் போயி சனியன் அது இதுன்னு.. நீ வாடா செல்லம்”

அவன் தன் குழந்தை விமலைத் தூக்கி ஒரு முத்தமிட, கலையும் வந்து அவன் மார்மீது சாய்ந்துக் கொண்டாள். கலையும் தாஜும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். பெற்றோர் அவர்களை வீட்டைவிட்டே விரட்டிவிட்டதால் ஒதுங்கி தன் ஒரே மகனான விமலோடு வாழ்க்கையை வாழும் அன்பு இதயங்களுக்கிடையே இப்படி ஒரு மஞ்சக் கயிறு உயிரை அறுக்கும் கத்தியாக வந்துநிற்குமென்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கலைக்கு மட்டும் அந்த கவலை மிகையாக இருந்தது. இப்படி தாலி அறுந்து புருஷன் இறந்த நிறைய கதைகளை அவளின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தார் சொல்ல அவள் முன்பே கேட்டிருக்கிறாள். அதும் வெள்ளிக்கிழமையன்று கண்ணாடியே உடையக் கூடாது என்பார்கள் இன்றென்னடான்னா தாலியே அறுந்துவிட்டதே என்றொரு பெரிய கவலை அவளைத் தொற்றிக்கொள்ள வருத்தத்தில் தாஜைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்க முயற்சிக்கிறாள்.

கடிகார முட்களின் சப்தத்திற்கு இடையிலும் மின்விசிறியின் காற்று உரசும் பொழுதிற்கு நடுவேயும் எப்படியோ அவளுக்கு தூக்கம் வந்து தூங்கிதான் போகிறாள்.

அவள் தூங்கினாலென்ன சும்மா விடுமா அந்த தாலியறுந்த சகுணம் அவளை? என்று கேட்டாற்போல் இதோ அவளின் தூக்கத்தில் புகுந்து கண்திரை கிழித்து கனவாகப் படர்கிறது அந்த மரணபயம்..

கனவை விரட்டி கைகளை அசைத்து போ.. போவென்று தள்ளிவிடுகிறாள் கலை. அவளின் கைபட்டு தாஜ் கண்விழிக்க, தூங்கிக் கொண்டிருந்த கலை எழுந்து தாஜ்.. தாஜ்.. என்று கத்துகிறாள். தலையிலடித்துக் கொண்டு அழுகிறாள். யாரையுமே கன் திறந்துப் பார்க்காமலே அவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதுபோல் துடிதுடித்துப்போகிறாள் கலை.

தாஜ் அவளைக் கட்டி தன் மார்போடு அணைத்துக் கொண்டு சமாதானப் படுத்த முயல கலை அவனை தொட்டு தொட்டு பார்த்து அழுதாள், உடம்பெல்லாம் தடவி உண்மையாகவே அவன் உயிரோடுதான் இருக்கிறானா என்று சரிபார்த்துக் கொண்டாள். ஒரு ஆபத்து நிறைந்த கனவு கண்டதாகவும், வெள்ளிக்கிழமையில் தாலி அறுந்ததன் காரணமே இப்படியெல்லாம் வருகிறதென்றும், கட்டாயமாக ஏதோ கெட்டது நடப்பதற்கான சகுணம்தான் இதலாமென்றும் அழுதுப் புலம்பினாள் கலை.

தாஜ் ஏதோ வேகமாக காரோட்டிப் போனதாகவும், திடீரென கார் பிரேக் பழுதாகி வண்டி நேரே போய் வேறு நிறைய கார்களின்மீது மோதி; பிறகு ஒரு பாலத்தில்மீது முட்டி நசுங்கிவிட்டதாககவும், இவளுக்கு மட்டும் ஒன்றுமே ஆகாமல் பின்னால் நன்றாக அமர்ந்திருந்ததாகவும், பின் பயந்து எட்டியுள்ளே பார்த்தால் தாஜ் நசுங்கிய காரினுடைய பாகத்திலிருந்து தவறி அந்த பாலத்தின் கீழிருந்த ஆற்றினுள் விழுந்து இறந்துவிட்டதாகவும் சொல்லி அவள் கதற – அதைக்கேட்ட தாஜுக்கே கூட கொஞ்சம் பயம் வந்தது.

அதற்குள் தூங்கிக் கொண்டிருந்த விமல் வேறு இவள் செய்த அட்டகாசத்தில் அலறி எழுந்து அவனொரு பக்கம் அழுதுக் கொண்டிருந்தான். தாஜூக்கு யாரை சமாதானப் படுத்துவதென்பதேப் புரியாமல் தவிக்க அருகாமை வீட்டு ஆட்கள் வந்து அதற்குள் கதவைத் தட்டினார்கள்.

பார்த்தியா நீ கத்தி செய்த ஆர்பாட்டம்தான் அக்கம்பக்கம் கூட எழுந்து வந்த விட்டார்கள், ஏன் கலை இப்படி பண்ற, எனக்கு அதலாம் ஒன்றும் ஆயிடாது, சகுனம் ஜோசியமெல்லாம் அத்தனை முழுமையான உண்மையொன்றுமில்லை. அப்படிச் சொல்லத் தக்க ஆட்கள் இப்போதெல்லாம் மிகக் குறைந்துப்போய்விட்டார்கள். இந்த காலத்தில்போய் ஒரு மஞ்சக் கயிறு அறுந்ததுக்கு நீ இப்படி அவஸ்தைப் படுறியே கலை (?). அதலாம் ஒரு கணிப்பு’ எச்சரிக்கை’ அவ்வளவு தான். அதற்காக இப்படி பயந்து நடுங்கி ச்சே..” என்று தலையில் அடித்துக்கொள்ள அவள் மன்னித்துவிடக் கேட்டு அழுதாள். மனசெல்லாம் படபடன்னு இருப்பதாகவும் ஏதோ நடந்துவிடுமோ என்று பயமாகவே இருப்பதாகவும் சொல்லி தவித்தாள் கலை. தாஜூக்கு அவள் படும் அவஸ்தையைக் காண வலிப்பதாக உணர்ந்தான். அதற்குள் மீண்டும் படப்படவென கதவு வேகமாக தட்டப்பட்டது.

ஓடிப்போய் கதவு திறந்தால், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பட்ட தன் குழந்தையை தூக்கிக் கொண்டு நின்றிருந்த பக்கத்துவீட்டுக் காராரின் மனைவி வந்து அவன் காலில் விழுந்து ஓவென்று கத்தினாள்.

ரத்தம் வழிய குழந்தையைப் பார்த்ததும் ‘ஆ அல்லா..’ வென வாய்பொத்திக் கொண்டு தாஜ் அவர்களிடம் என்ன ஆனதென்று கேட்க, திருடன் யாரோ திடீரென வீட்டிற்குள் வந்ததாகவும், அவன் குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும், கடைசியில் பொருட்களைத் தூக்கிக் கொண்டு ஓடுகையில் மகளை தூக்கி தூரே எரிந்துவிட்டதாகவும், இந்த இரவு நேரத்தில் யாரும் உதவ வரமாட்டார்கள் நீங்கள் தான் மருத்துவமனை வரை வந்து உதவவேண்டும் என்றும் கேட்க, தாஜ் சற்று கவலையோடு கலையைப் பார்க்க ‘ஐயோ வென கலை பதறினாள்’ அழத் துவங்கினாள், அவர்களுக்கு இதலாம் ஒன்றும் புரியவில்லை என்பதைவிட புரிந்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லாதிருக்க, தாஜ் ஒன்னுமாகாது நீ போவென்று சொல்லி அவளை உள்ளே அனுப்பி கதவைச் சாற்றிவிட்டு கார்சாவி எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

ரத்தம் போக போக குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக கண்களை இறுக்கி மூடலானாள். அதற்குள் அந்த குழந்தையின் தாய் ஐயோ என் குழந்தை கண்மூடுதே என்று கத்த, தாஜ் பதறியடித்து அவளைத் தூக்கி தன் காரில் படுக்கவைத்துக்கொண்டு அவர்களோடு மருத்துவமனைக்கு விரைந்தான்.

குழந்தை என்பதால் எல்லோருமே மிகுந்த கவனம் காட்டினார்கள். ஆளாளுக்கு ஒருபுறம் ஓடி, ஒரு தனியறையை உடனடியாக சுத்தம் செய்து குழந்தையை அங்கே கிடத்தி ரத்தமெல்லாம் துடைக்க, அவசரமாக அங்கு வந்த மருத்துவர் குழந்தையை நன்றாக பறிசோதித்து, ரத்தமேற்றி மருந்திட்டு வலிபொருக்க மயக்கமருந்தும் கொடுக்க குழந்தை கண்ணயர்ந்து மூடிக் கொண்டது.

பொழுது மெல்ல சாய்ந்து விடிகாலைப் புலர, காகங்கள் இதற்கெல்லாம் சம்மந்தமே இல்லாததாய் தன் மொழியில் கத்திக் கொண்டிருக்க, தாஜ் அருகிலிருந்த ஒரு தேநீர் விடுதிக்கு அந்த குழந்தையின் பெற்றோரை அழைத்துச்சென்று குடிக்க தேநீர் வாங்கிக்கொடுத்து அவனும் ஒரு தேநீர் வாங்கிக்கொள்ள கலை மீண்டும் அவனை அலைபேசியின் வழியே அழைத்தாள்.

இரவெல்லாம் இப்படித் தான் நிமிஷத்திற்கோர் முறை அவள் அவனை இடை இடையே அழைத்து நடப்பதைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள், அவளுக்கு நடப்பதெல்லாமே ஒவ்வொன்றும் விபரீதமானதாகவே இருக்க அது மேலும் பயத்தைக் கூட்டியது.

ஏனோ எல்லாம் நிகழ்வுகக்ளையுயம் வைத்துப்பார்த்தால் ஒவ்வொன்றாக நகர்ந்து கடைசியில் அது தாஜின் மரணம்வரைதான் வந்துவிட யிருக்கிறதோ, அந்த தாலி அறுந்த சகுணம் சங்கதியெல்லாம் சரிதானோ எனுமொரு அச்சம் உள்ளுக்குள்ளே அவளுக்கு மிகுதியாகிக் கொண்டேயிருக்க, அதைப் புரிந்துக்கொண்ட தாஜ் அதைப்பற்றியெஎல்லாம அவளிடம் காட்டிக்கொள்ளாமல் இங்கு மருத்துவமனனயில் நடந்த விவரத்தையெல்லாம் அவ்வப்பொழுது சொல்லிவிட்டு ‘இதோ புறப்பட்டுவிட்டேன், இனி நீ அழைப்பதை விடு கவலையெல்லாம் படாதே நானின்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன்’ என்று சொல்ல, அவளுக்கு பயமாக இருப்பதாகவும், அவனின்றி அவள் ஒரு நொடி கூட உயிரோடிருக்கமாட்டாளென்றும் சொல்லி அழுகிறாள்.

‘வாழ்க்கையின்னா இப்படித் தானே, எல்லாம் தானிருக்கும், நீ கலவரமில்லாமல் இரு, நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் அங்கே வந்துவிடுவேன்’ என்று சமாதானமாகச் சொல்லி அலைபேசியை மடக்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தேனீருக்குப் பணம் தர தன் பணத்தை எடுத்து நீட்ட, அவர்கள் தாம் தருவதாக முன்வர பரவாயில்லை குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

நேரே அங்கிருந்து கார் பார்க்கிங் போய், பார்கிங்கிலிருந்து காரெடுத்து வெளிப்புறம் திரும்பி, பின் வாசலுக்கு வந்து வாசலிலிருந்த அந்த தேநீர் கடை அருகே வர, அங்கே சோகமாய் அமர்ந்திருந்த அந்த பெற்றோர்களைப் பார்த்து மனம் நொந்தான், இப்படி தனியே விட்டுச் சொல்கிறோமே என்றொரு வருத்தம் அவனை மேவிக்கொள்ள, வண்டியை நிறுத்தி இறங்க எண்ணுவதற்குள் மீண்டும் கலை அவனை விடாமல் அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள்.

அழைப்பைத் துண்டித்து அலைபேசியை கார் டேஷ்போர்டின் மேல் வைத்துவிட்டு, அங்கிருந்தே ஜன்னல் கண்ணாடியை கீழிறக்கி அந்த பெற்றோரை ஒரு ஆர்ன் அடித்து அழைத்து ‘சரி நான் சென்று வருகிறேன் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், ஏதேனும் அவசியமெனில் அழையுங்கள்’ என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து புறப்படுகிறான்.

அங்கிருந்து புறப்பட்டு வேகமாக திரும்பி, நான்கைந்து தெரு தாண்டி தன் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடைப்பட்டதொரு தூரத்தில் வருமந்த பாலத்தில் ஏற, கலை மீண்டும் அவனுடைய அலைபேசிக்கு விடாமல் மாறி மாறி அழைக்கிறாள்.

அவனுக்கு கோபமே வந்துவிட்டது. அலைபேசியில் வரும் அழைப்பை ஏற்று அவளிடம் பேசுவதா இல்லை திருப்பத்தில் வண்டி பாலத்தின் மீதேறுகிறதே அதைப் பார்ப்பதா என்று இரண்டிற்கும் மத்தியில் தடுமாறி நிதானிப்பதற்குள் தலையெழுத்தென அந்த கனவுவேறு நினைவில் வந்துத் தொலைக்கிறது.

அவளும் விடாமல் அழைக்கிறாள், மணி அடித்துக் கொண்டேயிருக்கிறது, தாஜ் பாலத்தைப் பார்க்கிறான், அலைபேசி கையில் அலறுகிறது, பின்னால் வந்துகொண்டிருந்த வண்டிகள் வேறு இவனின் வேகக்குறைவினை கண்டித்து வீல் என்று அலறுவதுபோல் மாறி மாறி ஆர்ன் அடிக்கிறார்கள், எதிரே வேகமாக ஒரு லாரி வந்து திரும்பி இடித்துவிடாமல் விலகிவிடும் இடைவெளிக்குள் குப்பென இவனுக்கு வியர்த்து கைகால் ஆடி கண்திரை மூடப்பட்டு இதயம் வெடிப்பதுபோல் ஒரு அதிர்வு மூளைக்குள் அதிர, எட்டிமுறித்து எப்படியேனும் இந்த விபத்தை உதறிவிட்டு தப்பித்துவிடுவதாக எண்ணி ஓங்கி ஒரு உதையை காலால் பிரேக் மீது எட்டிவிட, அது இடம் தவறி ஆக்சிலேட்டர் மீது பட்டு, அடுத்த வினாடியே வண்டி பாய்ந்துபோய் நான்கைந்து வண்டிகளைத் தாண்டி பாலத்தின் மறுமுனையில் விழுந்து சீறிக்கொண்டுபோய் வேறொரு எதிரே வந்த காரின்மீது முட்டி டயர்கள் இளகி கண்ணாடிகள் உடைந்து ஆடி கலகலத்து பின்பும் முன்நகர்ந்துபோய் நிற்க –

எதிரே எதிர்பாராமல் வந்த வண்டிகளின் மீதெல்லாம் மோதி, ஒன்றன் மீது ஒன்றாக நான்கைந்து வண்டிகள் முட்டி ஒருவழியாக நின்றுவிட, வண்டி மொத்தமும் புகை பரவி, மக்கள் கூட்டம் கூடி உள்ளேயிருந்த தாஜை எடுத்து வெளியே கிடத்துகிறார்கள் தெருப் பயணிகள். அதற்குள் விவரம் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சொல்லப்பட்டு ஐந்தாறு மணித்துளிகள் நகர்வதற்குள் ஆம்புலன்ஸும் தீயணைப்பு வண்டிகளும் சீறிக் கொண்டுவருகிறது.

தாஜினுடைய கதை இப்படியெனில் கலைக்கு நடந்த இன்னொரு கொடுமையைப் பாருங்கள். கலை மீண்டும் மீண்டும் தாஜ் மருத்துவமனையில் நின்றிருந்தபோதே விடாமல் அழைத்துக்கொண்டிருந்தாள் இல்லையா (?)

தாஜ் அதை எடுக்காமல் விட்டதால் அவள் பயந்து பதறி அப்போதே வீட்டிலிருந்துப் புறப்பட்டு மருத்துவமனை வரத் தொடங்கிவிட்டாள். அதைச் சொல்லத் தான் மீண்டும் மீண்டும் அவனை அழைத்து அவன் எடுக்காமல்போக என்னவோ அபாயம் தான் நேர்ந்து விட்டதோ என்று பதறி வேகமாக வந்து பாலம் நெருங்கி தாஜினுடைய காரில் முதன்முதலாய் முட்டியதே இவள் தான்.

சிலநேரம் இப்படித் தான், விதி எல்லாவற்றையும் வென்று விடுகிறது. என்றாலும், அதையும் மதியை பயன்படுத்தி அன்பினால் வெல்ல இயலும் என்பதை இங்கே கலை புரியவைத்துவிடுகிறாள்.

ஆம்புலன்சில் தாஜைத் தூக்கிக் கிடத்தி, அவனோடு முட்டி மோதி தலையில் கைகாளில் அடிப்பட்டு வீழ்ந்த வேறு இரண்டு மூன்று பேரையுமென எல்லோரோடும் சேர்த்து கலையையும் ஏற்றி ஆம்புலன்சிற்குள் படுக்க வைக்கிறார்கள் அவசரப் பிரிவினர்.

அதோடு ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனை நோக்கிப் புறப்பட, அந்த வண்டிக்குள்ளேயே அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் மூலம் எல்லோருக்கும் உடனடி உயிர்காப்பு மருத்துவம் பார்க்கப் படுகிறது. இரண்டு மூன்று பேர் வலியால் துடிக்கின்றனர். தாஜ்க்கு உடம்பெல்லாம் சிராய்ப்பும் மண்டையில் பலத்த அடியும் பட்டிருப்பதாகவும் கலைக்கு அத்தனை அடியில்லை பயத்தில் மயங்கித் தான் கிடக்கிறாள் என்றும் மருத்துவர் சொல்ல, கலை மெல்ல முயன்று கண்களை லேசாக திறக்கப் பார்க்கிறாள்

எதிரே இருப்பவர்கள் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறார்கள். சற்று உற்று இமைப் பிரித்துப் நன்றாக ஆழ்ந்துப் பார்க்கிறாள் தாஜ் எதிரே படுத்திருப்பதுபோல் லேசாகத் தெரிகிறது அவளுக்கு. தாஜுக்கு சீ.பி.ஆர் கொடுத்து வேகமாக மூச்சு வாங்கியதும் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தி ரத்தம் பரிசோதித்தவரிடம் என்ன வகை ரத்தமென்று கேட்டு அதை எடுத்து அவனுக்கு ஏற்ற, அருகிலிருந்தவர் வந்து மானிடர் பார்த்துவிட்டு உயர்த குரலில் இப்போ ஹார்ட் பீட் ஓகே, இனி பயப்படவேண்டாம் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று சொல்ல..,

கலைக்கு கண்களின் ஓரம் ஒரு சொட்டு கண்ணீர் உயிரில் கரைந்து வழிந்தது. முழுதாக கண்திறந்துப் பார்த்து அவன் பிழைத்துவிட்ட சந்தோசத்தில் அவனைக் கட்டிக்கொண்டு அழ இயலாவிட்டாலும் அவளால் அந்த தருணத்தின் உயிர்ப்பினை நன்றாக உணர முடிந்தது.

மனதின் தாளா சந்தோஷம் உடலெங்கும் பரவிநிற்க, கையைத் தூக்கி தன் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ள மார்பில் தடவுகிறாள். அதற்குள் அருகிலிருந்த மருத்துவர் வெடுக்கென கையைப் பிடித்துக்கொண்டு நோ நோ கையையசைக்கக் கூடாது என்று சொல்லி அவள் கையை கீழே அழுத்தி கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, லேசாக உதடு கோணி சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தவாறே மகிழ்வாக கண்மூடி ஆனந்தப் பட்டுக் கொள்கிறாள் கலை.

அவளுக்கெப்படித் தெரியும் அவள் கழுத்திலந்த மஞ்சள் கயிறு இல்லையென்று, அது அப்போதே அந்த பாலத்தில் தாஜினுடைய கார்மீது வந்து அவள் இடித்தபோதே அவளின் கழுற்றிலிருந்து அறுந்து தூர எறியப்பட்டு பாலத்தின் ஓரமிருந்த ஒரு கம்பியில் மாட்டிக் கொண்டிருந்ததை யார்தான் கண்டார்.., அது இப்போதும் காற்று சற்று வேகமாய் வீச அப்போது விழுந்த அதே கம்பியிலிருந்து ஆடிக் கொண்டேயிருந்தது..

தாஜும் கலையும் விதியின் வாசல்களை உடைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மனதால் எண்ணி எண்ணி இனி வாழப்போகும் நாட்களுக்காய் ஏங்கி படுத்துக் கொண்டிருந்தனர். விமல் வெளியேச் சென்ற அப்பாவும் அம்மாவும் எப்போது வருவார்களோ என்று ஜன்னல் வழியே வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தான்..

———–*———–*———–
முற்றும்

வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஒழுக்கம் விழுப்பம் தரும்..

ரு காலதவத்தின் வரம்
கடவுள் கற்பிக்கும்
கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும்
காரணம்  புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்!

உண்மை நேர்மை கண்ணியத்தின்
வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும்
மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை
மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்!

விலங்கின்
ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும்
உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித
பிறப்பின் அடையாளம்; ஒழுக்கம்!

கல்லின் உயிரையும்
கடவுளின் உண்மையையும் அகக்கண்ணில்
அறிவிக்கும் ஞான திடம்; உயிருள்ள
இடம்நோக்கி மனிதம் பாய்ச்சும் ரதம்; ஒழுக்கம்!

அறிவின் வெளிச்சத்தை அதிகமாக்கி
அடுத்தவர் நலன்குறித்தும் அனைத்துலக
நன்மை குறித்தும் நடுநிலையோடு சிந்திக்கவைக்கும்,
நல்லது கெட்டதை இது இதுவென்று காட்டும்; ஒழுக்கம்!

மிருகத்து புத்தி மாற்றி மனித அறிவின்
தெளிவில் மிளிறி, மேலேறி
கடவுளின் அவசியத்தையும் கைவிட்டு வெல்லும்,
மனிதன் மனிதனாக வாழ்வதையே உயர்வென்று சொல்லும்; ஒழுக்கம்!

கொலை கொள்ளை காமவெறிகளுக்கு
சவப்பெட்டி பூட்டி, நன்னடத்தையின் மூலம்
நாகரீகம் வளர்த்து, உண்மையின் ஆழத்தில்
உலகின் சந்தோசங்களை வெல்லுமாயுதம்: ஒழுக்கம்!

பொறாமை அகன்று கோபத்தை ஆளக் கற்று
உடையும் மனங்களை அன்பினால் ஈர்த்துவைக்க
சீர்மிகு  குணமிது உதவும், பொய்யின் தடமது ஒழிய – ஞாலத்தின்
பெருமைதனை மனிதனைக்கொண்டு உயர்த்தும்; ஒழுக்கம்!
——————————————————–
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)

மிழ் வணக்கம்
அ ஆ’ வில் உயிரூட்டி
அமுது தமிழை உரமாக்கி
இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி
அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே;
மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க
வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்!!
———————————————————————

வை வணக்கம்
பசிக்கு தமிழ்தந்து படிக்க மனிதர் தந்து
கடிக்க சோறு போட்டு வயிற்றில் இனத்தின் அக்கறை நிரப்பி
கதைக்குக் கதை கவிதைக்குக் கவிதையென மொழியின் வளமைக்கு
மாதம் தவறாமல் கூட்டமிட்டு –
இனி பிறக்கும் தலைமுறைக்கு என் அறிவை விட்டுச்செல்ல மேடைகட்டி,
அன்பில் குடும்பத்தை அடக்கி ஆற்றலில் அகிலத்தையும் வெல்லப் பயிற்சியூட்டி,
தேவைபடும்போதெல்லாம் படைப்பாளிகளைப் பிரசவித்து
பாவரங்கு பாட்டரங்கு பட்டிமன்றமென நடைதளராமல் தமிழோட்டங் காணும் தா(ய்)யிடத்திற்கு, என் தமிழோசை உறவுகளுக்கு – என் அவை வணக்கம்!!
———————————————————————

லைமை வணக்கம்
பொருளீட்ட மாளுமுலகில் தமிழ்தேடும் அரிய மனிதர்
தேன் சொட்டும் தமிழ்த்தன்னில் கவிபாடும் பற்றாளர்
பெரியோர் சிறியோர் மதித்து பண்பை வளர்க்கும் படைப்பாளி
தமிழுக்கும் தமிழருக்கும் துயரென்றால்’ இதய தசையெல்லாம் –
தீ பற்றி வாடும் நல்லுள்ளம்;
இன்று கைகூப்பி அழைத்தாலும்’ ஓடிவந்து உதவ நிற்கும் கொடையாளி
ஐயா கவிஞர் சாதிக்பாட்சா அவர்களுக்கு என் கவியரங்கத் தலைமையின் மரியாதை நிறைந்த வணக்கம்!!
———————————————————————————————————–

இக்கவியரங்கத்தில் எனக்கான தலைப்பு: விவேகானந்தர்
விவேகானந்தர் பற்றிய என் கவிதைக்கு நானிட்ட தலைப்பு: தென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்..

ன் நெற்றிப்பொட்டில் நெருப்பு மூட்டி
என் சமூக அக்கறையின் தேடல் கூட்டி
மூண்ட தமிழ்த் தீ தனில் எனை எழுத்துக்களாய் சுட்டெடுத்து
மொழி ஆளுமையின் ஆழம் பகிர்ந்துக் கொண்டவன்;

மத பார்வையை உலக நீளஅகலத்திற்கு விரித்து
இறைபற்றிய புரிந்துணர்வை யாருக்கும் வலிக்காமல் வளர்த்துக் கொடுத்து
மனிதம் நிறைந்து வாழ்தலே போதிய ஞானமெனும் அறிவூட்டி
தன் மானசீக எழுத்துப் பட்டறையில் எனையும் மாணவனாக்கிக் கொண்டவன்;

உலகின் கண்களை மதங்கொண்டு திறந்து
கடவுளைப் பார்க்கையில் களங்கமுதறி
மனிதர் வாழ்க்கையின் மேன்மைக்கு சிந்தித்து
சூழ்ந்தோர் சூழ்ச்சியை அறிவினால் வெல்லும் திறனூட்டிய படைப்பாளன்;

ஆன்மிகக் கடலில் ஆத்ம முத்தெடுத்து
அதை உலகவீதிகளில் பார்வையினால் வீசி
ஞான வார்த்தைகளால் நாளுமிறைப் புகழ்பரப்பி
நம் நாட்டு பெருமைதனை மிலேச்ச நாடுவரை பரப்பிய பேச்சாளன்;

அடுக்கடுக்காய் நீதி சொல்லி
கதைகதையாய் மனிதம் போதித்து
கடவுள் வாழும் விலாசத்தை
ஏழை மனிதர் முன்னேற்றத்தில் பதிந்த மாவீரன்;

உயிர்களின் வதைக்கு அஞ்சி
உரிமையது மீறாத அன்பை அளந்து
பிறரைத் தாழ்த்திடாத அறிவே அறிவென்றுப் போதித்து
சமத்துவ சிந்தனையில் உலகின் நாகரிகத்தை வளர்த்த பேரறிவாளன்;

நடுங்கிய நரம்புதனில் தன்னம்பிக்கைத் தீரமூட்டி
ஒடுங்கிய மக்களுக்கு விழித்தெழும் வீரமூட்டி
அஞ்ஞானத்தில் கடவுள் தனித்துத் தெரிவதாகவும்; ஞானத்திலே கடவுளை
கடைந்தெழும் ஆழத்தில் கண்டதாகவும் சொல்லி
எளியோருக்கும் இறைபயம் அறுத்துப் போட்ட இலக்கியச் சித்தன்!

எட்டுதிக்கும் பரந்த உலகின் ஞானத்தை – தன்
சொடுக்கும் விரலிலடுக்கும் நினைவாற்றலும்
சொல்லித் தர வேண்டிய பாடத்தை சொல்லாமலே
உணர்வினால் புகட்டும் மனஓசை தெரிந்த ஆசான்!

இடுப்பில் தங்கம் உடுத்தி – உதட்டில் காமம் பூசி
அறைக்கு அறை – குறையாய் கிடக்கும்
அரசியல் வியாபாரம் நடத்தும்
காம கத்தியானந்தாக்களுக்கு மத்தியில்
பரிசுத்த பிரம்மமாய் தெரிந்த இறைநெறியாளன்!

இத்தனையிருந்தும்,
இப்படி நான் வார்த்தைக்கு வார்த்தை அவரை
அவன் அவன் என்று உச்சரித்தும்
என் நாவுக்கு அளவற்ற பலம் கூட்டும் குரு
சுவாமி விவேகானந்தருக்கே புகழனைத்தும்..” என முடித்து
இருகரம் கூப்பி எல்லோரையும் வணங்கி விடைகொள்கிறேன்; நன்றி; வணக்கம்!!
———————————————————————————————————–
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

 

நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே
பின் வராமலும் கொல்கிறா யென்னை
கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம்
நீ பார்க்காத இடந்தனில் நோகும்;

பூப்பூத்த ஒரு கணம் போலே
உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே
உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க
வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே;

ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம்
தொலைத்து வீழ்ந்தேன், இனி
வரம் ஒன்று வேண்டி – அதில்
உனக்கே உனக்கே பிறப்பேன் பெண்ணே!!

முகமதில் தங்கம் பூசி – பள பளக்கும்
கண்கள் சிரிக்கும், கனவிலும் ஒளியின் வெள்ளம்
உன் தேன்துளி இதழசைய சிந்தும், சொல்லாமல்
சொல்லுமுன் காதல் என் காலத்தை கண்மூடி வெல்லும்;

கதைகதையாய் நீ சொல்லக் கேட்க
என் நொடிப் பொழுதின் ஆயுள் நீளும்
நீ நகம் கடித்து வீசும் தருணம் – காதல்
தீ பிடித்து ஜென்மமது தீரும்;

கிட்டவந்து வந்து நீ போகும் வாசம்
எனை எரித்தாலும் போகாது பெண்ணே
இவன் அர்த்தம் ஒன்றென்று ஆயின் – அது
நீயே நீயே – நீயன்றி வேறிலையே!

 

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில்
பளிச்செனத் தெரிகிறதந்த
வெளிச்சம்;

வெளிச்சத்தை
உதறிப் போட்டு எழுந்தேன்
கடவுள் கீழே கிடந்தார்!!

பாவம் கடவுளென தூக்க
நினைத்தேன் –
விழுந்தவர்கள் பலர் நினைவில் வர
விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன்

உன் கோபம் நியாயம் தான்
உன்னை இப்படி படைத்தது
என் குற்றம் தானே என்றார் கடவுள்

உளறாதே நிறுத்து
உன்னை
இல்லையென்று எண்ணிதான் வணங்கினேன்
இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் என்
உறவுகளைப் புதைத்த குழியில் உன்னையும் புதைத்திருப்பேனென்றேன்

கடவுள் வருத்தப் பட்டார்
அந்த குழிகளிலிருந்து நிறைய பேர் பிறப்பர்
உறுதி என்றார்

அப்படியா
பெரிய ஞானவாக்கு தருவதாக நினைப்பா
எழுந்து போ’ அதலாம் எங்களுக்குத் தெரியுமென்றேன்

உண்மையாகவே எழுந்துப் போய்விடவா
பிறகு வருத்தப்பட மாட்டாயே என்றார்

நிறைய பட்டுவிட்டோம்
அதில்
இதுவும் ஒன்றாக இருக்கும் போ என்றேன்

உடம்பு சற்று குலுங்கி
கீழே சரிந்துப் போனேன்

ஐயோ என்னாச்சு என்று என்
மனைவி வந்து தூக்கி அமர்த்துகிறார்
கத்தி பதறி எல்லோரையும் அழைக்கிறாள்
குடும்பமே சூழ்ந்து நின்று
கத்தி அலறியது கீழே சரிந்த எனைப் பார்த்து

நன்றாகத் தான் இருந்தார் என்கிறார்கள்
தியானம் செய்து கொண்டிருந்தேன்
அப்படியே சரிந்துவிட்டேன் என்கிறார்கள்
கைகால் ஆட்டிப் பார்த்து கண்ணிமை நீக்கிப் பார்த்து
இறந்துவிட்டேன் என்கிறார்கள்
என் பிள்ளைகள் கத்தி கதறி
அப்பா அப்பா எங்களைப் பாருப்பா என்று
அழுகிறது –
நான் கடவுளே என்னைக் காப்பாத்திவிடேன் என்றேன்

கடவுள் தெரிந்தார் எதிரே
சட்டென –
உடல் துடித்து அசைந்து
கண்களைத் திறக்க’ அப்பா அப்பா உங்களைப் பார்க்க
யாரோ வந்திருக்காங்க என்றான் என் மகன்
மனைவி ஆமாங்க எப்போதோ வந்தார் பாவம்
அதோ வாசல் ல அமரவைத்திருக்கேன் பாருங்க’ என்றாள்

சுற்றி சுற்றி பார்த்தேன் நான்
யாரும் என்னைச் சுற்றி அழவோ
கத்தவோ கதறவோ யில்லை
அத்தனைக் கூட்டமும் வீட்டிலில்லை

எழுந்து சென்று
வாசலில் எதிரேப் பார்த்து அமர்ந்திருந்தவரை வணங்கி
ஐயா வாங்க
வணக்கம் என்றேன்
அவர் வணக்கம் சொல்லிவிட்டு
தன்னை ஒரு கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராக
அறிமுகப் படுத்திக் கொண்டார்

இன்று மாலை இந்த ஊரில் ஒரு கூட்டம் வைத்துள்ளோம்
தாங்களும் கலந்துக் கொள்ளவேண்டும்
கடவுள் பற்றி பேசவேண்டும் என்றார்

நான் புன்னகைத்து விடை தந்தேன்
கடவுளைப் பற்றிப் பேச வேகமாக
மாலைக்கு முன்நேரமே புறப்பட்டுப் போனேன்
அங்கே எனைத்தாக்கும் எதிர்வினைகள்
நிறைய இருந்தன

எல்லோரும் கடவுள் பற்றி நிறைய இழிவாகப் பேசினர்
கடவுள் ஒரு மூலையில் நின்றுக்கொண்டு
நீ போய் பேசு என்றார்
நான் மேடையேறி கடவுள்களுக்கு வணக்கம் என்றேன்

எல்லோரும் கைதட்டினார்கள்

எல்லாம் குற்றம் குறைகளுக்கும்
காரணம் நாம் தான் பிறகு எதற்கு
கடவுளையே குறை சொல்லிக் காலத்தைப் போக்குவானேன்
மனிதரைப் பற்றி பேசுவோம்
மனிதர் புரிந்தால் கடவுளும் புரியுமென்றேன்

இல்லாத கடவுள் ஏன் புரியவேண்டும்?
மேலும் கடவுளை உண்டென்று பேசினால் முட்டைப் பறக்குமென்றார்
கூட்டத்தில் ஒருவர் எழுந்து

நான் திரும்பி கடவுளைப் பார்க்க
கடவுள் எனைப் பார்த்து பேசு பேசு தயங்காதே என்றார்

எத்தனை முட்டை அடிப்பீர்கள்?
இன்னும் எத்தனை கொலை விழும்?
எவ்வளவு நாளிற்கு இன்னுமிந்த இருக்கு இல்லை போராட்டம்,
இதற்கு முற்றுப் புள்ளியே கிடையாதா?

ஏனில்லை கோவிலையும் சிலைகளையும் உடைத்துப் போடுங்கள்
போராட்டம் முற்றுபெரும்,

தங்கத்தையும் வைரத்தையும் எடுத்து
தாலி செய்யுங்கள்
முதிர்கன்னிகள் எண்ணிக்கை குறையும்,

கோவிலிடத்தில் வீடும் பள்ளிக்கூடமும் கட்டுங்கள்
ஏழையின் கண்ணீர் காயும்,

இறைஞ்சி நின்ற நேரத்தில்
இன்னும் நல்லது கெட்டதைப் படியுங்கள் அறிவு வளரும்,

அதைவிட்டுவிட்டு மனிதராய் பிறந்து கடவுளில் தொலைவதா? மிக
நன்றாக கேட்டார் என்னை அழைக்க வீடுவந்த
அந்த பெரியவர்

என் கவலை கடவுள் பெயரில்
மனிதரைக் கொள்வதில் மட்டுமே இருந்தது

சரி கடவுள் போகட்டும்

கடவுள் இல்லை என்போர் கையை உயர்த்துங்கள் என்றேன்
அந்த அக்கூட்டத்தில் பாதிக்கும் மேல்
கையுயர்த்தினர்;

சரி இப்போ கடவுள் இருக்கு என்பவர்கள்
கை தூக்குங்கள் என்றேன்

அந்த கூட்டம் கடந்து
அந்த ஊரில் இருந்த அத்தனைப் பெரும் கை தூக்கினர்

பார்த்தீர்களா?
நீங்கள் உடைப்பது வெறும் கோவில் அல்ல
இத்தனைப் பேரின் மனசு
நீங்கள் எதிர்ப்பது வெறும் கடவுளின் சிலைகளையல்ல
இவர்களின் நம்பிக்கையை’

கடவுள் தூர நின்று வெகு ஜோராக கைதட்டினார்

எல்லோரும் திரும்பி
சப்தம் வரும் திசை நோக்கிப் பார்க்க
கடவுள் நின்றிருந்த இடம் அவர்களுக்கு வெற்றிடமாகவே தெரிந்தது

நானாகப் பேசத் துவங்கினேன்
கடவுள் நமக்கு ஒரு பொருட்டல்ல
நன்மை தீமைகளை ஆராய்வோம்
அதை யார் மனதும் நோகாமல் எடுத்துச் சொல்வோம்
இருக்கு என்பவர்களுக்கு தெரியும் கடவுள் தெரிந்துப் போகட்டுமே

இல்லை என்போருக்கு தெரியாத கடவுள்
எங்கேனும் மறைந்து நின்றுக் கொள்ளட்டுமே என்றேன்

கடவுள் மீண்டும் கைதட்டினார்

நான் கடவுளிருக்கும் திசை நோக்கி
வணங்கிக் கொண்டேன்

என்ன என்ன நடக்கிறது ஏய் வீசுடா முட்டையை
என்றொரு கும்பல் எழுந்திருக்க

நான் உங்களைத் தான் வணங்கினேன்
என்றேன்

எங்களையா?

ஆம் உங்களுக்குள் இருக்கும் கடவுளை என்றேன்

இல்லை இவன் ஏதோ குழப்புறான்
நீ கீழிறங்கு
பேசினது போதும் போ’ என்றார்கள்

ஆம் இறங்கத் தான் போகிறேன்
இறங்கும் முன் ஒன்றைக் கேளுங்கள்; உங்கள் கோபம் கடவுளின்
மீது வேண்டாம்,
கடவுள் உண்டென்று நம்பியே வளர்ந்துவிட்ட
மனிதர்களின் மனதை நசுக்குவதில் வேண்டாம்,
அவர்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு குறைகளை
இதுவன்று மட்டும்
அக்கறை உண்டெனில் எடுத்துக் காட்டுங்கள்,
மூடபழக்கவழக்கத்தின் கொடூர தீவினையை
முன்வைத்து
மறுக்கக் கோருங்கள்’ நான் பேசிக்கொண்டிருக்கும் போதே
ஒருத்தர் எழுந்தார்

வேறென்ன செய்கிறோம் நாங்கள் ?
இல்லாத கடவுளை உண்டென்று நம்புவது
மூடத்தனம் இல்லையா?
அதைத் தானே வேண்டாம் என்கிறோம்?

மிகக் கோபமாக
கேள்வி எழுப்பினார் அவர்

பொறுங்கள் பொறுங்கள்
கடவுளே இல்லை என்று எண்ணிக் கொண்ட
உங்கள் மனசு
இருக்கு என்று நம்பி வாழ்வோருக்கு வேண்டாமா?

முதலில் கடவுளை நம்புவோர்
மூடர் என்பதை விடுங்கள்
முட்டாளை கூட முட்டாள் என்றால் வலிக்கும்
அது முதலில் அவரவர் உணர்வென்று உணருங்கள்
இதிலென்ன பெரிய உலக சீர்திருத்தம் வேண்டும்?

சீர்திருத்தம் செய்யத் தக்க இடங்கள் நிறைய உண்டு
அதை செய்வோம்,
நமது கோபத்தை
அப்பாவி மக்களின் நம்பிக்கையின் மீது செலுத்தி
மனவருத்தத்தை உண்டாக்குவதை விட
கடவுள் உண்டென்றும் இல்லை என்றும் செய்யும்
அரசியலின்மீது தொடுப்போம்,
மூடதனத்தின் மூலதனமே சுயநலம் தான் இல்லையா?
அந்த சுயநலம் அறுங்கள்

சரி தவறு புரிந்து நன்மைக்கு தோள் கொடுங்கள்
கடவுள் எங்கேனும் இருந்துவிட்டுப் போகட்டும்..
நாம் மனிதராக மட்டும் வாழ முயற்சிப்போம் என்று சொல்லிவிட்டு

இறங்கி கீழே நடந்தேன்
கடவுள் என் பின்னாலேயே வந்தார்
நான் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை

நில் எங்கேப் போகிறாய்
நானும் வரேன் நில் என்றார்

நான் இல்லையில்லை
எனக்கு வேறு வேலையுண்டு நான் போகிறேனென்றேன்
எங்கேப் போகிறாய் இத்தனை அவசரமாக
சற்று நில் என்றார் கடவுள்

வேறெங்கு போவது, இது என் தியானிக்கும் நேரம்
என் மனைவிவேறு இன்றைக்கு முழுக்க விரதம்
எனக்கு ஏக வேலை உண்டு
உன்னைமாதிரியா நீ தான் வெறுமனே
கண்மூடிக் கிடக்கிறாய் நானில்லை என்று சொல்லிவிட்டு
அங்கிருந்து வேகமாக நடந்தேன்

கடவுள் சிரித்துக் கொண்டே அங்கேயே
நின்றுக் கொண்டார்..

கடவுள் கூப்பிடுந் தூரத்தில் இருந்தும்
என் பயணம் அவரைவிட்டு விலகி
கல்லுக்கு பூஜை செய்வதிலேயே இருந்தது..
——————————————————
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்