1
எல்லோருக்கும் வேலை வேண்டும்
வீடு கட்டனும்
ஒய்யாரமா வாழணும்னு
நிறைய கனவுகளுண்டு
எனக்கு மட்டும்
எப்போதும்
கனவொன்று தான்
அதிலும்
நீ மட்டுமே இருப்பாய்
உன்னைப் பார்ப்பதற்காகவே
தூங்கிக் கொண்டிருப்பேன் நான்
நீயே என்னைக் கண்டாலும்
இப்போதெல்லாம்
பைத்தியமென்று தான்
சொல்லிப் போகிறாய்..
சொல் சொல்
ஒருநாள்
கனவுகள் நின்றுவிடும்
நீ தெருவில் வருவாய்
எல்லோரும் என்னை
அனாதை பிணமென்பார்கள்
உனக்கு மட்டும் உள்ளே
குறுகுறுக்கும்
பிறகு உனக்கும் கனவு வரும்
கண்ணீர் விட்டு நீயும் அழுவாய்
உன்னையும் சிலர் பைத்தியம் என்பார்கள்
நாளை உனக்கும்
கனவுகள் நிற்கலாம்
நீயும் அனாதைப் …லாம்
இப்படியான வேதனையைத் தான்
நம்மில் நிறையப்பேர்
காதலுக்கென வைத்திருக்கிறோம்..
———————————————————————-
2
பள்ளிவிடுமுறையில் தான்
நீ பார்க்க நீயாக இருப்பாய்
அந்த ரெட்டைப் பின்னல்
வெள்ளை ரிப்பன் இல்லை
முகமெல்லாம் சிரிப்பிருக்கும்
வெள்ளை ரவிக்கை
கரும்பச்சை தாவனியில்லை
கதவோரம் நின்று
ஒற்றைக் கொண்டையில் எட்டிப்பார்க்க
கிடைப்பாய்
மணி ஏழோ எட்டோ
கவலையில்லை
வாசலில்
பல் துளக்கியவாறே பேச துணிவாய்
போகும்போதும்
வரும்போதும் முறைக்கும்
அப்பா இல்லை
வீட்டிலிருந்தே மாற்றும் எப் எம் பாடலில்
மறைக்காது என் காதலைச்
சொல்வாய்..
வீட்டுப்பாடம்
என்று அமர்ந்துக்கொண்டு
புத்தகத்துள் என்
முகம் பார்த்து சிரிப்பாய்
எல்லாம்
அன்று நன்றாகத்தான் இருந்தது,
இன்று
ஏதுமில்லை
அந்த –
எப் எம் பாடல் கேட்டால்கூட வலி
படமொன்றுப் பார்க்கக்கூட
பயம்
உன்னை
நினைவுபடுத்தும்
எதையுமே நான் செய்வதில்லை
வாழ்க்கை
இப்படித்தான் போல்
நடக்கையில் இனிக்கும் நாட்களைப் போலல்லாது
பிரிவுக்குப்பின்
நினைவில்கூட உயிரைக் கொல்கிறது!!
அதனால் தான்
இதோ.. இங்குள்ளவர்களுக்கு தெரியும்
நானுன்னை –
நினைப்பதேயில்லை..
———————————————————————-
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
காதல் இரசனை சொட்டும் கவி கண்டு மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLiked by 1 person