சொல்லிக் கொள்ளலாம் ‘நாம் சரியாகத் தானிருக்கிறோம்’

தார்த்தமாக சுயம்புவாக சுழலும்
உலகமிதை
தனக்கு வசியப்படவேண்டி
மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்;

கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற
ஓட்டைகளையிட்டே
நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும்
அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்;

சரி தவறு சிக்கல்களிலிருந்தே
மாறுபடும் மனிதனுக்கு
விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல்
சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை;

சாட்சிக்கு நான்கு புத்தகமும் –
சாலையெல்லாம் பல சட்டங்களும்
புதிது புதிதாய் பிறப்பித்துப் பிறப்பித்தே
தனது சுயத்தைத் தொலைத்து, யாரோவின் நகலாக வாழ்வதில்
எப்படி மார்தட்டிக்கொள்ளமுடிகிறதோ மனிதனுக்கு;

வாழ்வும் புரியாமல் சாவும் தெரியாமல்
இடையே பயந்து பயந்து பாதைமாறி
சரியை தவறென்றும் தவறைச் சரியென்றும் சொல்லி
கண்மூடித்தனமாக வாழும் காலம்’ காற்றில் வந்துவிழும்
மனிதனின் ஒரு துளி எச்சில்போல கரைந்துவிடுகிறது;

உலகைச் சொட்டை தட்டுவதாக எண்ணி
அதன் நேர்த்தியை தனக்குத் தெரிந்தப் பக்கமெல்லாம் தட்டி தட்டி
குலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லக் கூட
நாம் அருகதையற்றவர்கள் – ஆனால்
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வோம்;

மனிதன் என்பவன்
(தன்னைத்) தானே – பிறக்கக் காரணமாவதும்
இறக்கக் காரணமாவதும் சரியெனில்
இரண்டுப் புள்ளியிலும் சந்திக்கும் இடைப்புள்ளியில் அவன்
தவறென்றுதானே அர்த்தம் ?

ஒரு சர்க்கரையின் அளவில்கூட ஒத்துப்போகாத
மனித உணர்வின் தராசு
வாழ்வின் ஆதராங்களை எடை நிறுத்திப் பார்க்க
துணியும் போராட்டங்களில்தானே வலுக்கிறது யதார்த்தத்தின் சமமின்மை(?)

நெல் விதைப்பதும் நெல் அறுப்பதும் போல
ஆடுமாடுகளை வளர்ப்பதும் கொல்வதும் போல
தன்னையும் வளர்த்து வளர்த்து துண்டித்துக்கொள்வதும்
தண்டித்துக் கொள்வதும்
மானுடத்தின் இயல்பு குணம் எனில்;

அது சரியா எனில் –

கேள்விகளோடு திரியும் வாழ்க்கைதான் இது
கேள்விகளை கேட்டுக்கொண்டேயிருப்போம்!!
—————————————————————————
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

42, உடல்நெய்யும் சாபக்காரி..

வள் பாவம்..

அவளின் உடம்புதான்
அவளுக்கு சோறுபோடும் எந்திரம்
அவளின் உடம்பு தான்
அவளின் உயிர்குடிக்கும் சாபமும்.,

உடம்பை உடம்போடு எரித்துதான் சோறு சமைக்கிறாள்
உடல்நெய்துதான் ஆடை அணிகிறாள்
குழந்தை வளர்க்கவும் கணவன் குடிக்கவும்
உடல்தான் அவளுக்குப் பணமாகிறது.,

இரவின் அழகை உடுத்தி
உடம்பின் வெளிச்சத்தில் மயக்கி
குவியும் பணத்தில் சோகந் தாங்கி
சொர்கத்தின் வாசலைத் திறந்து சுடுகாடுகளைச் சேகரிக்கிறாள்.,

இல்லா வாழ்க்கையை கண்ணீரால் முடிந்து
இருக்கும் தருணத்தை முந்தானையில் விரித்து
கசக்கும் மனதில் காசுக்குப்பூக்கும் சிரிப்பினை வாங்கி
உடம்பெல்லாம் வலியோடு தைத்துக் கொள்கிறாள்.,

பணத்துக்குப் படுத்து
பணத்துக்குச் சிரித்து
பணத்தால் சாகும் அவள்’களை
அரி(றி)ந்துப் பார்த்தால்தான் தெரியும் வாழும்போது அவளை
சாகடித்தவர் யார் யாரென்று.,

சோற்றுக் கவளத்தை பசியள்ளித் தின்ன
உறங்காக் கண்களில் நிர்வாணம் மூடி
உடம்பை மினுக்கி உடம்பை மினுக்கி
அவள் விற்றதெல்லாம் வாழ்க்கை வாழ்க்கை –
அவள் வாழாததும் வாழ்க்கை வாழ்க்கை.,

எதுவானாலென்ன வேசிதானே (?)
இறந்தால்கூட அவளுக்கு இதயமா இருக்கு ?
எடுத்து ஓரம் வீசுவோம் – அவளின் உடம்போடு சேர்ந்து
நம் சமூகமும் நாறும்;
நாற்றமடித்தால் போகும் பாதைமாற்றுவோம்!!
—————————————————————————-
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41, என் தோழிக்கும் எனக்குமொரு காதலிருந்தது..

விதைகள் உரசிக்கொள்ளும் இரவின்
மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான
சிநேகம்..

இருட்டை உடைத்துப் பிறக்கும்
கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான
வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்..

கொட்டித் தீர்க்கும் ஆசைகளை
வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில்
பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்..

எழுதிக் கரையாத உணர்வுகளாய்
ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில்
உள்புகுந்த தேவதையாய் நீயே நிறைகிறாயென் அகமெங்கும்..

உன் உயிர் குடிக்க மூச்சிரைத்து
உனைத் தொடாத தூரத்தில் ஓடிவரும் என் உணர்வுகளும்
உயிர் நிறைய அன்பும் பல முன்ஜென்மத்து மீதங்களாயுனை விரட்டுகிறது..

மனதில் பதுங்கும் உன் நினைவுகளை
காதல் திரையினை விலக்கியவாறு பார்க்கிறேன்
சப்பாத்திக் கள்ளியாய் நாளை தைத்துவிடும்போல் காதல்

ஒரு சின்ன முத்தத்தின் வேண்டுகோளும்
பெரிய ஆசைகளின் எதிர்பார்ப்புமின்றி
பார்வையின் ரசனைக்குக் காத்திருந்ததில் கட்டுண்டிருக்கலாம் காதல்..

காதல்;
காதலென்றதும்
“காதலென்னச் செய்யும் ?
உடம்போடு உடம்பைத் தேய்த்து காமத்தில் எரித்து
கரியாக்கும் நமது நட்புதனை” என்று அலறி விரிகிறது நம் கண்களிரண்டும்..

நட்பு;
“நட்பு உயிர்குடிக்கும்
உனக்கும் எனக்குமான வாழ்க்கையொன்றை வசந்தமாக்கித் தரும்
கூடலின் தொலைதூரத்தில் கரையொதுங்கும் நம் கனவுகளை
சந்தோஷம் மலரும் விதைகளாக்கித் தூவும் வாழ்வில்” என்று
நட்பிற்கான கற்பிதங்கள் மொத்தமும் மழைநீர் காளானைப் போல
மனதில் முளைத்துவிடுகிற கணமொன்றில் –

காதலைக் கையுதறும் நெருக்கத்தில்
பதறிய நீயும் நானும் சுதாரிக்கிறோம்
உடல்சிலிர்க்கிறோம்
மனதிற்குள் நட்பு காதலுக்கும் மேலென்றுத் தெரிகிறது

சட்டென எல்லாம் உதறிவிட்டு
நட்பு நட்பாகவே நீளும் தெருவொன்றில்
நீயும் நானும் கைவீசி நடக்கிறோம்

காதல் வேண்டாத மனசு தெருவில்போகும் யாரையும் கண்டு
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

னக்கொரு வீடு இருந்தது..

அங்கே எனக்கொரு போர்வை
எனக்கென ஒரு தலையணை
எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது..

என் தலையணையிடம் நான் நிறைய
பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன்
தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்..

வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும்
நான்கு கைகொண்டு வீடு எனை
அணைத்துக் கொள்ளும்..

எட்டி வெளியே பார்த்தால்
வாசலில் மல்லிகைத் தெரியும்
மல்லிகை வீடெல்லாம் எனக்காக மணக்கும்..

மல்லிகை எனக்கெனப் பூத்திராவிட்டாலும்
தினமும் பூக்கும் மல்லிகைச் செடியொன்று எனக்கென
அந்த வீட்டில் இருந்தது..

அந்த வீட்டில் அப்பா எனக்கு
முத்தமிட்டிருக்கிறார்
அம்மா என் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சியிருக்கிறாள்..

நான் எடுத்த முதல்மதிப்பெண்ணின் அங்கீகாரம்
சந்தோசங்களெல்லாம்
அந்த வீட்டில்தான் புதைந்திருக்கின்றன..

என் தோழி என்னருகிலமர்ந்துப் பேசிய மாலைநேரம்
அவளென் மடியில் சாய்ந்துக் கொண்டு
எனைப் பார்த்த பார்வையின் தருணசுகம்

அவள் புரட்டிப் புரட்டிக் காட்டிய புத்தகத்தின் வாசத்தில்
கலந்திருந்த அந்நாட்களின் ரசனைகள் என
எல்லாமே அந்த வீட்டின் திறந்த கதவுகளைத் தாண்டி
காலத்தால் மூடப்பட்டுக் கிடக்கிறது..

நான் கண்ட முதல் கனவு
ஒவ்வொரு முடிச்சாக கழன்று விழுந்த
எனக்கும் அந்த வீட்டிற்கான நெருக்கம்
இனி கிடைக்குமா என நான் ஏங்கி நழுவவிட்ட எல்லாமே
அந்த வீட்டிலிருக்கிறது..

அந்த வீட்டில் நான் பிறந்த நொடியின்
கனம் இன்றும்
சந்தோசத்தால் நிறைந்தேயிருக்கிறது..

நான் சத்தமிட்டு சிரித்த சிரிப்புகளையும்
அந்த வீடுவிட்டு வருகையில் அழுத கண்ணீரையும்
இன்னும் பத்திரப்படுத்திக்கொண்டேயிருக்கிறது அந்த வீடு..

எனக்கென இன்னும் ரெண்டு மனசு அங்கே
ஏங்கி அழுது என் கால்மிதிபடும் நாளெதிர்பார்த்து
என் நிம்மதியை இரைஞ்சிய படியே வாழ்கிறது..

என் உயிர் எனக்குத் தெரியாமலே
புதைபட்ட அவ் வீட்டின் இணக்கத்தை இடைவெளிப் படுத்திய
இச்சமூகத்தை மனம்விட்டு சபித்தால் தானென்ன?

போகட்டும்,
போகட்டும்தான் ஆனால்
அந்த வீடு ?

அந்த வீடு ஒரு ஏக்கத்தின் பெருமூச்சு
எனக்கென அப்பா அம்மா அண்ணன்
அவர்களுக்கென நான் என ஒரு ஒட்டுமொத்தப் பேரின்
பெருமூச்சில் தான் உயிகொண்டிருக்கிறது அந்த வீடு..

இப்போதும் வருடங்கழித்து அங்கே செல்கையில்
மண்தரையில் கைவைத்து அந்த வீட்டின் நினைவுகளை
களைத்துப் பார்த்துக் கொள்கிறேன்..

ஒரு தேம்பிய அழையின் கண்ணீர்சிந்தி
அந் நினைவுகளையெல்லாம்
அங்கேயே புதைத்துவிடுகிறேன்..

அந்த வீட்டை நினைவுபடுத்தும் பாடல்
திரைப்படம் தொலைக்காட்சியைக் கூட
இங்கு வந்தால் பார்க்கமறுக்கிறேன்..

ஏதோ கலங்கிய உணர்வினைக் கண்டு
என் குழந்தைகள் கணவர் அத்தையிங்கே விசாரிக்கையில்
ச்ச ச்ச ஒன்றுமில்லையே என சற்றே உதறி விடுகிறேன் அந்நாட்களின்
அவ்வீட்டின் நினைவுதனை

அது கண்ணீராய் அடைபட்டு
என்றேனும் கத்தியழுதுவிடும் ஒரு நாளிற்குள் புதையுண்டுக்
கிடக்கிறது; உள்ளிருக்கும் மரணம்போல்!!
——————————————————————-
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

விதை வெளிவராததொரு வலி தெரியுமா?

பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல
அமரும் மௌனத்தின் கணம்
கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி
கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு.,

ஒவ்வொரு வார இதழ்களின்
பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப்
புரட்டுகையில்
தனது கவிதை வெளிவராத இதழ்
தீயைப் போலே உள்ளே
இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது.,

பசிக்கும் குழந்தை ஓடிச் சென்று
சமையலறைப் புகுந்து
ஒவ்வொரு சட்டியாக இதில் சோறிருக்கா
இதில் சோறிருக்கா யெனத் தேடுமொரு
வலி நிறைந்தப் பசியது.,

என்றாலும், தன்னை புதைத்துக் கொள்ளாமலும்
எரித்துக் கொள்ளாமலும்
வாரவாரம் சாகும் பல இதயங்களின் மரணத்தை
மிதித்துக் கொண்டு யாரோ ஒருசிலரின் கவிதைகள்
எங்கோ ஒரு சில இதழ்களில்
எப்படியோ வந்துதான் விடுகிறது.,.

வெளிவராத கவிதைகளெல்லாம்
வெறுமனே யாரோ படிக்காத அல்லது
பிரித்துக் கூடப் பார்த்திடாத தபால்களிலோ
மின்னஞ்சல் வந்துவிழும் இன்பாக்ஸ்களிலோ
யாருக்கும் அனுப்பப் படாமலே பெருகிக்கிடக்கும்
டிராப்டாகவோ நிறைந்து நாட்களை மட்டுமே தின்கிறது.,

பின் நாளொன்றில்
மொத்தமாக ஒரு கிளிக் அடித்து
எழுதியக் கவிஞர்கள் குப்பைகளாய் வந்துக் குவிந்திருக்கும்
மின்னஞ்சல்களின் பெயரோடு சேர்த்து
டிலிட் செய்யப்பட்டதில் –
நானும் பலமுறை இறந்துதான்போனேன்…

வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்