கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோனி” க்கு வாழ்த்து!!

 

ஈழத்துப் பா'வீரன் கவிஞர் மன்னார் அமுதன்

ன்றோ எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும் – பிச்சைக்காரி

“பாவம்,
தின்னட்டும்”

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டு வைத்ததை தின்று
மீந்ததை ஈந்து –
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் அவள் பின்செல்லும்
இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில் –
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள்  செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிழிந்த உடைகளுள்

எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும்,
குரல் கொடுத்தவனும்!!

ரு பானை சோற்றிற்கு ஒரு பானை சோறு பதம் என்பார்கள். அதற்கு தகுந்தாற்போல் சமூகப் பற்றும், மொழிப் பற்றும், இனப் பற்றும், உறவுகளின் பரிவும் ஒருங்கே நிறைந்த கவிஞர் மன்னார் அமுதனின் வர இருக்கும் ‘அக்குரோனி’ எனும் கவிதைத் தொகுப்பின் ஒரு ஒற்றைக் கவிதை தான் இது.

அமிழ்தங்கள் கொஞ்சமே தரப்படுகின்றன
வாழ்வின் ரசனைகளும்
வெள்ளை சிரிப்பும்
விழா நாட்களும்
உண்மை அன்பும்
ஓட்டத்திற்கும் உழைப்பிற்கும் கிடைக்கும் அங்கீகாரமும்
கலைஞனின் கவிஞனின் வெற்றியும் போல் –
இவரின் இக் கவிதையினை படிக்கையில், இங்கே பகிர்கையில்
எண்ணிக் கொண்டேன் –
அமிழ்தங்கள் கொஞ்சமே கொடுக்கப் படுகின்றன!

உண்மையில், ஒரு சக மனிதனுக்கு இந்த கவிதைக்கான கோபம் வந்துவிடுமெனில்; அந்த இலை வீசுபவனும், குரல் கொடுப்பவனும் – பின்னாளிலாவது; இல்லாமல் போவான்.

அதிலும், கவிதைகள் தான் அர்த்தத்திலும், சமூக அக்கரையிலும் மின்னுகிறதெனில்; புத்தகத்தின் வடிவமைப்பு கூட ‘பார்க்கையில் கண்களை கொள்ளை கொண்டு போவதோடு நில்லாமல்; கவிதைக்கான அர்த்தத்திற்கும் சாட்சியாகி நிற்கிறது.

ஒரு புத்தகம் பிரசுரிப்பதென்பது ஒரு மலர் மலர்வதற்கு சமம். அந்த மலர் மலர்வதற்கு நட்பு, உழைப்பு, அறிவு, சிந்தனை, மொழி ஆளுமை அல்லது மொழியுணர்வு, முயற்சி, நம்பிக்கை, பணம் என நிறைய இதழ்கள் தேவை படுகின்றன. அத்தனையும் கிடைக்கப் பெற்று –

எழில்மிகு படைப்பாகவும், அருமை சொல்வளம் கையாளப் பட்டும்,  இலக்கிய சாரம் நிறைந்தும், சமுகச் சீர்முறை சார்ந்த, பல பயன் நிறைந்த படைப்புக்களின் தொகுப்பு இந்த ‘அக்குரோனி’ என்பதை சொல்லி, தமிழுலகின் தரமான இடத்தை, அங்கீகாரத்தை அடையட்டும் கவிஞர் மன்னார் அமுதன் என்று வாழ்த்தியும் பாராட்டியும் இச் சிறு பா’மாலையால் போற்றுகிறேன்!

ளிமை முகம் கொண்டு உலகை ஆளும் கவி
நடையில் ரசனை கூட்டி சமுகம் திருத்தும் கவி
தமிழின் காதல் கோடி வார்த்தையில் வார்த்த கவி
தரணி புகழை தள்ளி; தரணி வாழ எழுதும் கவி!

அன்பு பண்பு அடக்கம் எல்லாம் உள்ள கவி
ஆணி அடித்தாற் போல் வரியை செதுக்கும் கவி
நல்லதை சொல்லி சொல்லி நாளும் எழுதும் கவி
உள்ளத்து உணர்வுகளுக்கு எழுத்தில்; ஆபரனமிட்ட கவி!

பல பெருமை மிகுந்த கவி; புலமை நிறைந்த கவி;
மண்ணின் மணக்கும் கவி; மன்னார் அமுதனின்
‘அக்குரோனி’ எனும் இப்படைப்பு தமிழுலகின் தரமான
அங்கிகாரம் பெற உளமாற வாழ்த்துகிறேன்!!
——————————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அணிந்துரை, வாழ்த்துக்கள்! and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோனி” க்கு வாழ்த்து!!

  1. மன்னார் அமுதன்'s avatar மன்னார் அமுதன் சொல்கிறார்:

    நன்றிகள் வித்யா அண்ணா

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒரு வளரும் சமூக அக்கறை மிகுந்த நல்ல படைப்பாளியை என் உடன் பிறவா உறவை இச் சமூகத்திற்காய் சமைக்கும் முயற்சியின்றி வேறில்லை.

      தன் படைப்பிற்கு வாழ்த்துரை கேட்டபோது, படிக்க உங்களின் புத்தகம் கிடைக்காமல் உங்களின் வாழ்தலை அறிந்த வண்ணம் கொடுத்தேன்.

      அத…்தனை போதாதே என ‘உங்களின் கவிதை தொகுப்பு காணொளியில் இருப்பதை நினைவு கூர்ந்து’ அங்கு சென்று இதுபோன்ற கவிதையினை வாசித்ததும்; கொடுத்த வாழ்த்துரை போதாதே என்று இப்பதிவையும் இட்டேன் அமுதன். மிக்க வாழ்த்துக்கள்பா..

      வாழ்க; பல நன்னூல்களை இயற்றி இலக்கிய செறிவோடு வளர்க!!

      Like

  2. நிலா - லண்டன்'s avatar நிலா - லண்டன் சொல்கிறார்:

    தம்பி அமுதன்

    தரமான கவிதை கண்டு
    தத்தையிவள் பூரித்தாள்.
    வரமாக வள வாழ்வு
    வரட்டும் உன் வாசல் தேடி!

    வாழ்த்துவது நிலா

    Like

மன்னார் அமுதன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி