48, விமானமேறி விட்டுப்போனவனே வா..

flight

 

 

 

 

 

 

ருமாதம் தான் விடுமுறையென்று
வந்துபோனாய்,
உடம்பெல்லாம் பூசிய மஞ்சள்போல எரிக்கிறாய்..

நீ தொட்ட
இடத்திலெல்லாம் சுடுகிறாய், சொன்ன
சொல்லின் நினைவாகக்கூட வலிக்கிறாய்..

நெஞ்சில் விம்மி விம்மி
நனைகிறது உன் நினைவு, நீளும் இரவெங்கும்
நீயில்லாது சுடுகிறது கனவு..

வெப்பத்தில் தகிக்கிறது வாழ்க்கை
வெளியே நின்றாலும், உள்ளே வந்தாலும்
உனக்காகவே வாசலில் நிற்கிறது மனசு..

சமையலறையில் நீதான் தெரிகிறாய்
குளித்துமுடிக்கையில் நீதான் நனைகிறாய்
நேந்திக்கொண்டு திரும்பினாலும் நீதான் திருநீரிடுகிறாய்..

அடுப்படியில் கொதிக்கும் உலைபோல
கொதிக்கிற மனசுக்குத் தெரியவில்லை
பணம், உன் பதவியெல்லாம்..

மேலே பறக்கும் விமானத்தையும்
வீட்டினுள்கேட்கும் பாடல்களையும் வெறுத்து
இன்னும் எத்தனை வயதை நீயில்லாதுத் தீர்ப்பது..?

அடுக்குமாடி கட்டிடத்தொடும்
ஐ பேட் ஆறோடும்
நீ இல்லாத தனிமையை எப்படிக் கொண்டாடுவது ?

பிள்ளைகள் அழுகையில் தூக்கிக்கொள்ளவும்
அம்மா கேட்டால் வந்துநிற்கவும்
அன்புகாட்டி ஆயுளைக்கூட்டவும் நீ என்னோடு வேண்டாமா?

உடம்பு சுட்டால் பரவாயில்லை
தண்ணீரில் உடம்பு கலையும்
மனசு சுடுகிறதே தாங்குவதெப்படி ?

போதும்.. போதுமிந்த
கனலெனக் கடும்
பணத்திற்கான போர்; வீடு திரும்பு

விட்டு வா விண்முட்டும் கட்டிடங்களையும்
வை ஃபை வாழ்க்கையையும்,
இது நமக்கான மண்; இங்கே

இல்லாதச் சோற்றைப் பற்றி இனி
எதற்குக் கவலை ?

நீ அருகிலிருக்கும் ஆனந்தத்தில்
அடுக்கடுக்காய் சிரித்திருப்போம்; அன்பு பிசைந்தூட்டி
வறுமையை வீட்டிற்குள்ளேயே செரித்திருப்போம்;
பிரிவில்லா பிறப்பொன்றை பசியிலேனும் வாழ்ந்திடுவோம்..
——————————————————————-
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

47, இன்றும் வேண்டும் அது..

சிக்கு உணவு செய்த
மானத்திற்கு ஆடை நெய்த
வாழ்விற்கு நீதி போதித்த மானுடம்
இன்றும் பேசிவரும் சாகா தமிழுக்கு வணக்கம்..
——————————————————————————

காற்றடித்துக் கலைந்துப் போன கோலம்போல
வாக்களித்து நொடிந்துப் போகும்மனிதர்போல
தீர்ப்பெழுதி நீதி குலைக்கும்
மேலோர்; சிலர்போல
எங்கள் வாழ்வெல்லாம் அதர்மப் புண்பிடித்து வலித்தாலும்
அதற்கெல்லாம்
தமிழால்
உணர்வால்
மொழியால் மருந்திட்டு
சீர்திருத்தம் பேசும் கவிதைப் பட்டறையான
எங்களின் சந்தவசந்தத்திற்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கம்..
——————————————————————————

மிழழகைப் பேசி
தமிழழகைப் பாடி
தமிழாக வாழ்ந்து
தமிழுக்கென்றே இணையத்தில் இடம் கண்டக் கவிஞர்
சந்தவசந்தம் எனும் அமுதசுரபித் தாய்க்கு
முதலான மூத்தப் பிள்ளை
முற்றும் அழகானத் தமிழாசான்
எங்களின் கவியரங்கத் தலைமை திரு. இலந்தை சு. ராமசாமி ஐயா
அவர்களுக்கும் எனது பணிவான வணக்கம்..
——————————————————————————

தலைப்பு – இன்றும் வேண்டும் அது..

ரு இரண்டுநாள் எனதுப் பள்ளிக்கூடத்து
மரத்தடியில் அமர்ந்திருக்கவேண்டும்; கத்திப் பூ
வைத்து விளையாட வேண்டும், கருவறைக்குள்
பத்துமாதம் படுத்திருக்கவேண்டும்..

இதுதான் சாமி என்று நம்பிய பொழுதும்
மனதும் நிம்மதியும் வேண்டும், தனியேக்
கட்டிய கோவிலில் இன்றில்லாத என் தங்கையோடும்
அன்றிருந்தச் சாமியோடும் பேசிச் சிரித்திருக்கவேண்டும்..

அப்பா சொல் மறுக்காத, அம்மா முத்தம்
விடுபடாத அந்தத் தூங்கும்முன் இரவுவேண்டும்,
தம்பிகளோடுக் கேட்ட கதைகளும், வாழ்வின் கதவு
திறந்தே யிருப்பதாயும் நம்பிப்படுத்திருக்கவேண்டும்..

கனவுகளை விதைத்த, எங்களின் காலடி சுமந்துச்சிரித்த
பழையவீடு வேண்டும், அந்தக் கிணற்றடியில்
குளித்துவிட்டு – பாசாங்கு இல்லாத நிர்வாணத்தை
அம்மாவின் அன்பினால் துவட்டிக்கொள்ளவேண்டும்..

தலையில் கோடு பதிய புத்தகப்பை மாட்டிநடந்த தெருவும்
தெருவோரம் கேட்கும் “அந்திமழை பொழிகிறது” பாடலும்
பாடலோடும் படத்தோடும் ஒன்றிப்போய் – இந்த உலகை
ஒரு சுண்டுவிரலில் தூக்கிவிடமுடியுமென்று நம்பியத் துணிவும்
தன்னம்பிக்கையும், எதற்கும் அசரா அப் பொழுதுகளும்வேண்டும்..

அதே தெருவில் அவள் நடக்க, நானும் நடக்க
தொட்டுத் தொட்டுப் பேசி, உரசி உரசி மனசு கூடி
புத்தகப்பையைப்போலவே நாங்கள் நினைவுள் கனத்திருக்க,
பார்த்துப்பார்த்து வெறும் எழுதாக் கவிதையாகவே நாட்கள்’ அதுவாகத்
தீர்ந்திருக்க, மனதுள் மீண்டும் வலிக்காது அந்த காதல்வேண்டும்..

மூன்று ரூபாய்க்கு அரிசி, மூன்றோ நான்கோ பேர்
மட்டும் லஞ்சப்பேரோழி, எவனோ ஒருத்தன்சதிகாரன்
ஏதோ ஒரு கட்சி சரியில்லை, யாரோ சிலர் மட்டும்
திருடர்களாய் இருந்த அந்தப் பச்சைவயல் நாட்கள் வேண்டும்,

அங்கிருந்து அறிவோடு
அந்தச் சிலரைமட்டும் திருத்திடவேண்டும்..
——————————————————————————
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில், கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)

001_Papanasam-Movie-Stills-2

குடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் தம்பிகள் சண்டைப் போட்டது அக்கா தங்கை போராட்டம்கூட நினைக்கையில் இனிக்கச்செய்யுமெனில் அது குடும்பத்துள்தான் சாத்தியம். நட்பாகவும், கடமைக்காகவும், கட்டாயம் என்பதெல்லாமும் ஒருபக்கமிருந்தாலும், பிறப்பால் உறவென்னும் சங்கிலிக்குள் கட்டுப்பட்டு அன்பூறிய வார்த்தைகளாலும்கூட மனிதர்கள் நிறைவோடு வாழஇயலுமெனில்’ அது குடும்பத்துள் மட்டுமே யதார்த்தமாய் நிகழ்கிற ஒன்றாகவே இருக்கிறது..

எங்கே சண்டையில்லை? யாருக்கு சொற்கள் வலிக்கவில்லை? கசக்காத பொழுதின்றி யாருக்கிங்கே நாட்கள் வருவதும் போவதும் நிகழ்கிறது? அது வேறு. கருத்துக்குள் ஒத்துப்போவாது செய்கையால் முட்டிக்கொள்வது வேறு. அதற்கிடையேயும் மனதால் ஒட்டிக்கொள்ளமுடியுமெனில் அன்பினால் பார்வையுள் பூத்துக்கொள்ளமுடியுமெனில், ‘போ போகட்டும் போ எனக்கு நீ முக்கியமென்று’ எல்லாமுமாய் ஒருவரை ஏற்றுக்கொள்ள இயலுமெனில் அது உறவினால்’ ஒற்றைக் குடும்பத்துள்தான் மிகஇலகுவாய் நடந்துவிடுகிறது.

உறவேனில் எந்த உறவானாலென்ன; அது நடபுறவானாலென்ன, பிறப்பினால் வந்த உறவானாலென்ன அன்பினால் கட்டிக்கொள்ளும் அத்தனை மனதும் குடும்பத்துள் அழகுதான். நேர்மையோடு சந்தித்தல் நேர்த்தி தான். பார்க்கும்போது கண் அசையாமல், மனசு சலிக்காமல் பார்க்கமுடிகிற உறவினோடு வாழ்தல் நட்பாயினும் சரி’ உறவாயினும் சரி’ பரமசுகமில்லையா அது..(?)

நமக்கெல்லாம் உண்மைக்கு அப்பாற்ப்பட்ட நிறைய கதைகள்வழியே தர்மமும் வாழ்க்கையும் போதிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் சிலநேரம் நல்ல மனிதர்களையும், உண்மையின் ஆழம்மிகு அழகையும், அறிவின் வழி சிந்திப்பதன் நேர்த்தியையும் விட்டுவிட்டு, கைக்கெட்டா கற்பனையின் தூரத்தில் நிற்கும் எல்லாவற்றோடும் நெருங்கி நெருங்கியிருக்க முனைவதில் வாழ்வதை அப்பட்டமாய் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

வேறொன்றுமில்லை, பொய்யில்லா உறவு, பொசுக்கென கோபம் வந்தாலும் மன்னிக்கும்’ மறக்கும்’ மன்னிக்கக்கேட்கும் மனசு, இதுபோதும் என்றுணரும் இரு இதயங்களின் ஆத்மார்த்த அன்பு, அருகருகில் உயிராக ஒட்டியிருக்கும்’ தொட்டுக்கொள்ளும் இருவேறு பிறப்பின் ஸ்பரிசத்தின் சிநேகம், வா வாவென வாஞ்சையோடு உயிர்களைக் கட்டியணைத்துக்கொள்ளும் வாழ்க்கை எத்தனை வரம் தெரியுமில்லையா..?

பட்டாம்பூச்சி பார்க்கிறோம்.. பச்சை பசேலென வயல்வெளி பார்க்கிறோம்.. கிளிகள் குயில்கள் காகம் கரைவதை மற உச்சியில் நிற்பதைப் பார்க்கிறோம், மேகங்கள் அசைந்து நகர்வது, கடல் அகன்று விரிந்து கண்முன் இரகசியம் பூப்பிப்பது, ஆழ்கடல் மௌனத்தை வானமும் உணர்வினோடு முணுமுணுப்பதைக் காண்கிறோம்; இதோடெல்லாம் இணைந்த அழகாய் பிரம்மிப்பாய் நாமும் நமை கண்கள் பணிக்கப் பணிக்கத் தாங்கும் இதயங்களாய் நமை நாமே ஏந்திக்கொள்ள வேண்டாமா ?

மலை கடல் காற்றாக அனைத்தின் பிம்பமாகப் பிறந்த நமை நாம் அறிய வேறென்ன வேண்டும்? பொய்யின்றி இருப்போம் போதும். நடுநிலை தொலைக்காமல், பிறப்பின், வாழ்தலின் அனுபவ மிச்சமாய் இருப்போம் போதும். யாருடைய சிந்தனையினாலும் தள்ளிக்கொண்டுப்போயிடாத அறிவோடு, எல்லோரின் பாடத்தாலும்’ நேர்வழியில்’ யாருக்கும் வலிக்காமல் நடப்பதோடு நின்றுக்கொள்வோம். இந்த யுகமெல்லாம் வாழ்வெல்லாம் நமக்கு வரமாய் அன்பாய் பனிச்சாரல் வீசும் மனதின் குளிர்மையாய், சிலிர்ப்போடு வீசும் காற்றுப்போல மனதுள் அன்பினோடு வீசி உணர்வுகளுள் உறவுகளாய் உயிராய் பச்சை பசேலென நனைந்திருக்கட்டும்.

ஒரு தனிமனித வாழ்க்கை என்பது ஒரு விதையிலிருந்து முளைக்கும்; மரம், கிளை, இலை, பூ, காய், கனி, கணிக்குப்பின் மீண்டும் விதையென, பிறப்பிலிருந்து இறப்பிற்குள் அடங்கியுள்ள முடிவேயில்லா ஆரம்பத்தின், நிலைத்த வாழ்தலின், நித்தியப் பிரம்மாண்டமாய், இப்பேரண்டம் அழியாதிருப்பதன் ஒரேயொரு சாட்சியாக விளங்குவதை குற்றத்துள் புதைந்துப் போகும் மனிதர்களால் அறிய முடிவதில்லை.

எனவே நல்லவை என்பதன், அறம் என்பதன், நேர்மை என்பதன், உண்மை என்பதன் பாத்திரத்தை குற்றமற்ற ஒருவரால் பார்க்க எத்தனித்த மனிதப் பிறப்பு தனது சாயல்களை வைத்து’ மாதிரிகளை வைத்து’ கற்பனையினாலும், வாழ்பனுபவத்தாலும், உள்ளிருக்கும் வெளிப்படாத அதீதத் திறனாலும் வேறொரு உலகை பிறப்பை வாழ்தலை ஒத்திகைப்பார்த்துக்கொள்ள, அசைப்போட்டுக்கொள்ள, அடங்கா ஏக்கத்தை அகற்றிவிட, நிறைவேறாத பல ஆசையினைத் தீர்த்துக்கொள்ள, நடப்பதை நடந்ததை நிகழ்காலப் பதிவாய்ப் பதிந்துவைக்க செதுக்கி செதுக்கி செய்த சிற்பத்திற்கீடுதான் இன்று நம்மிடையே இருக்கும் பொக்கிஷமான இந்த திரைக்கலை வடிவம் எனலாம்.

அந்தத் திரைக்கலையின் பார்வையினுள் அவர்கள் பார்ப்பது வேறு உலகம் நமக்குக் காண்பிப்பது வேறு உலகம் என்றில்லாமல், அவர்கள் எண்ணியதை நம்மைப் பார்க்கவைக்கும் புள்ளியில்தான் வெற்றியடைந்துவிடுகிறது சில உச்சத்தில் நிற்கத்தக்கத் திரைப்படங்கள் எனில்; அதில் காக்காமுட்டைப் போன்றத் திரைப்படங்களோடுச் சேர்த்து இந்த பாபநாசத்தையும் இருமுதலாய்க் குறித்துக் கொள்ளலாம்.

படம் முழுக்க முழுக்க அழகு. ஒவ்வொரு சட்டமும் அழகு. ஒவ்வொரு காட்சியும் உள்ளே உயிரோடு நினைவாகப் பூத்துகிடக்கிறது. அங்கே படம் முடிந்ததும் விட்டுவந்த அத்தனைப் பாத்திரமும் நம்மோடு வீடுவரை வந்து, இரவினுள் உறங்கி, மறுநாள் எழுந்தப்போதும் மறதியை விலக்கிக்கொண்டு, நினைவின் மிக அருகாமையில் அமர்ந்துக்கொள்கிறது, இந்த பாபநாசம் திரைப்படம்.

கமலை மறப்பதா, கெளதமியை மறப்பதா, அந்தப் பிள்ளைகளை மறப்பதா, அந்த டீக்கடைக்கார பாய், பெருமாள், ஊர், வசனம், கேமரா, பாபநாசத்து மலைகள் மரங்கள்…. யாரை மறப்பது?

ஒரு திரைப்படம் இத்தனை மனதுள் ஒட்டிக்கொள்கிறது எனில், அது நம்மை அதனுள்ளே பிரதிபலித்துள்ளது என்று அர்த்தமில்லையா? ஒரு மகள் “அப்பா நான் இன்னைக்கு ஆய் போயிட்டேன்னு மழலை மாறாது சந்தோசமா சொல்றா, அதற்கு அப்பாடான்னு ஒரு பெருமூச்சு விடுகிறார் அப்பா எனில்; அந்த மகள்களின் அவஸ்தைகளுக்கு அப்பாலிருக்கும் சிரிப்பைத் தேடும் அப்பாக்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் பசுமையாய் மனதுள் ஒட்டிக்கொள்ளும்..

ஓரிடத்தில், மகளின் உடலை அனுபவிக்கத் துடிக்கும் ஒரு கயவனுக்குமுன் மேலாடை கீழே விழுந்ததைக் கூட அறியாமல் பிச்சைக் கேட்பதுபோல் கெளதமி தனது மகளை விட்டுவிடுப்பா, உன் அம்மா மாதிரி கேட்கிறேன்பா என்பார். கண்ணீர் மல்கும் உள்ளே, அந்நேரம் பார்த்து சரி; உன் மகளை விட்டுவிடுகிறேன், நீ வேண்டும்னா வாயேன்.. என்றுக் கண்ணைக் காட்டுவான் அந்த வெறியன். இதென்னவோ முன்பு நாம் அறிந்த பல சினிமாக்களின் அதே பழையக் காட்சிதான் என்றாலும் அதற்கு கெளதமி தனது நடிப்பால் காட்டிய பதில், திரையுலகின் அகராதியில் ஒரு துண்டுச்சீட்டாக சேர்த்துக்கொள்ளத்தக்க நடிப்பென்றால் அது மிகையாகிடாது.

அதுபோல்; கடைசியில் கமலை அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளிலெல்லாம் நடிப்பிருந்தாலும் இயக்குனரின் உத்தியும் தெரியும், ஆனால் எனது மகன் இருக்கானா இறந்துட்டானா என்பதை மட்டும் சொல்லிவிடுங்களேன் என்று மௌனத்தோடு கதறும் தாயின்முன் நின்று, கைதவறி போட்டுவிட்டோம் என்பதுபோல், இடம் தவறி அடித்துவிட்டோம் அவன் இறந்துவிட்டான் மன்னித்துவிடுங்கள் என்று தனது நடிப்பினால் திரு. கமலஹாசன் மன்றாடும் காட்சி திரையரங்கை கண்ணீரால் நனைக்கிறது. உண்மையிலேயே யாரும் இறப்பதில்லை. மாறாக இன்னொன்றாக வாழ்கிறார்கள். நம் கமலும் அப்படித்தான் நம் கண்ணெதிரே விட்டுப்பிரிந்த நடிக சக்ரவர்த்திகள் பலரின் முகமாக இன்றும் கண்முன் வாழ்கிறார். அவர் பேசும் வசனம், அவர் பார்க்கும் பார்வை, அவர் அசையும் அசைவிற்கெல்லாம் மனசு ஒரு அப்பாவாக கணவனாக மருமகனாக நல்ல நண்பனாக மிக நல்ல மனிதராக அவரோடு அசைந்துக்கொண்டே இருக்கிறது.

இன்றைய வாழ்க்கையில் நாம் தொலைத்தவை ஏராளம். ஆயினும் தொலைத்ததை நினைப்பதற்கு அவகாசமேயின்றி இருப்பதால்; மிச்சமிருப்பதையும் இல்லாததையும் எண்ணி எண்ணி பயந்துவாழும் கொடுமைபோல் வேறில்லை. முன்பெல்லாம் நிறையப் படங்களை அப்படி நாம் பார்த்துள்ளோம்; நாம் தயாரிக்கும் ரோபோ நம்மையே அழிக்கவரும், நாளைய மனிதன் படத்தில் அந்த மருத்துவர் உருவாக்கிய மனிதன் முதலில் அந்த மருத்துவரைத் தான் அழிப்பான். அதுபோல்தான் இன்று நாம் கண்டுபிடித்த அத்தனையும் சேர்ந்து நம்மைக் கொஞ்சக்கொஞ்சமாய் அழித்துக் கொண்டுள்ளது. அதில் ஒன்று நமது தலையணையின் கீழ்வரை வந்திருந்துக்கொள்ளும் கைப்பேசி. அதன் கொடூரக் கை நீளும் தூரம் நமது உயிரின் கொலைவரை போவதைத்தான் இந்த பாபநாசம் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.

பொதுவாக நமது கண்டுபிடிப்புகள் அனைத்துமே நெருப்பைக் கண்டுபிடித்ததைப் போலத்தான், அதை வைத்து வீட்டிற்கு வெளிச்சத்தையும் தரலாம், வீட்டையும் எரிக்கலாம். இதில், ஒரு வீட்டை, குடும்பத்தை ஒரு முறையற்று வளர்க்கப்பட்ட இளைஞன் காமத்தீ கொண்டு எரிக்க முயல்வதையே இந்த பாபநாசம் பரபரப்போடு காட்ட முயன்றிருக்கிறது.

பிள்ளைகளின் வளர்ப்பு என்பது அத்தனைப் பெரியக் கலையில்லை, அவர்கள் முன் வாழும் நாம் சரியெனில். நம் கண்முன் தும்பிப்போல சிறகடிக்கும் சிரித்துப் பூரிக்கும் குழந்தைகளின் சந்தோசத்தை வளர்ச்சியை சமுதாய பொதுநலங்கொண்டு திருத்திக்கொண்டே வந்தால் அவர்களும் வளர்ந்துநிற்கையில் பெரிய கற்பனையோ பாசாங்கோ பீதியோ இன்றி உயிர்களை சமமாய் மதிப்பவர்களாக வளர்வார்கள் என்பது எனது நம்பிக்கை. அதை விட்டொதுங்கும் பெற்றோர்களால் வீணே அழிந்துபோகும் இன்னொரு குடும்பத்து அழுகையோடுச் சேர்த்தே இப்படத்தை செதுக்கியுள்ளார் இயக்குனர். அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும்.

உண்மையில், நம் தமிழ்த்திரு நாட்டை அதன் பசுமையழகோடுக் காட்டிய நன்றிமிக்க படமிது. பார்க்கப் பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்தக் காட்சிகளாலே கூட இந்தப்படம் நினைவில் நீங்கா இடத்தைப் பெறுவதும் சாத்தியமே. அதுபோல், இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு எம் எஸ் பாஸ்கர் அவர்கள். எத்தனை விதமான ரசிக்கத்தக்க கலைமுகங்கள் அவருக்கு. பெரியப்பெரிய நடிகர்களை எல்லாம் நாம் மிகையாய் சிலாகித்துப் பேசிக்கொள்வதுண்டு, எண்ணிப் பார்த்தால் கதாநாயக கௌரவமோ கர்வமோ இன்றி எப்படிப்பட்ட வேடங்களைக் கொடுத்தாலும், அதுவாகவே மாறி நமது கண்முன் வாழ்ந்துக்கொள்ளும் மதிக்கத்தக்கக் கலைஞனாகத் திகழ்கிறார் திரு. எம். எஸ். பாஸ்கர் அவர்களும், அவருக்கு முன் திரு. டெல்லி கணேஷ் ஐயாவும். ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துவிடுகிறார் ஐயா திரு. டெல்லி கணேஷ் அவர்கள்.

உற்று கவனித்தால், இங்கே ஹீரோ வில்லன் எல்லாம் இல்லை, மனிதர்கள் தனைத்தானே தனது வாழ்க்கையில் தன்னை கதாநாயகனாகவும் வில்லனாகவும் பாவித்துக்கொண்டு நகரும் யதார்த்த வாழ்தலைத்தான் இந்தக் கதையின் நாயக நாயகிகளும் செய்துள்ளனர். இன்னொரு விஷயம், பாபநாசம் பிற திரைப்படங்களை முன்னெடுத்துக் கொள்ளவில்லை, தனை மட்டும் கம்பீர உணர்வோடு வெளிப்படுத்தி இருக்கிறது என்பதும் மனதுள் இப்படம் தனித்து நிற்பதை அறிவதன்மூலம் உணரமுடியும். மிக முக்கிய அம்சம், மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்க மிக ரம்யமான காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். பேச்சு கேட்க கேட்க மனதுள் ஈரமாக தேங்கிக் கொள்வதாக யதார்த்த வசனங்களும் சிந்தனையுமாய், இப்படம், பார்ப்போர் மனதில் முதல்தர இடத்தைப் பிடித்துக்கொள்வது நிச்சயம். கடைசி சில இடத்தில் சற்று நாடகப்போக்கில் இழுப்பதுபோல் இருந்தாலும் கதையோடு ஓட்டிவரும் உறவுகளின் ஈரத்தில் தவிப்பில் அதைப்பற்றியச் சிந்தனையும் தானே விலகிவிடுகிறது.

மொத்தத்தில்; காக்கமுட்டை எனும் திரைப்படம் நமது தமிழ்த் திரைப்படத்திற்கு ஒரு நல்ல உதாரணம் போல, இந்தத் திரைப்படமும் ஒரு சிறந்தப் புத்திசாலியை, சிக்கனம் மிக்க குடும்ப மனிதனை, பிள்ளை வளர்ப்பை, இடம் மாறும் இளைஞர்களின் காமத்தின் கொடூரத்தை, கைப்பேசி உபயோகத்தின் கபடதனத்தை, கடைசியாய் இங்குமங்குமாய் இன்றைய வாழ்க்கையில் நிறைய இடங்களில் பயிரைத் தின்னும் வேலியைப் போல அமைந்துள்ள காவலாளிகளின் அகந்தையையும் காழ்ப்புணர்வையும் எடுத்துக் காட்டி, அதேவேளை சரியான காவலாளிகளையும் காட்டி மனிதரின் இருவேறு முகத்தைப் பற்றிப் பேசும் அருமையானத் திரைப்படமாகத்தான் இந்த பாபநாசம் நிறைவடைகிறது.

அம்மா பிள்ளை, அப்பா மகள் உறவென்பது காதலன் காதலி உணர்வுபோல் மனசும் மனசும் சேர்ந்த உணர்வுமட்டுமல்ல சாகும் வரை நினைத்திருக்க; அது எல்லாம் கடந்தது. உயிரும் உயிரும் பிணைந்து வந்தது. வாழும்போதே சாகடிக்கவும் சாவிற்குப்பின்னும் நமை வாழவைக்கவுமான உணர்வது. அதை நாம் எவ்வளவு புரிந்துக்கொண்டு, எத்தனை அதை நன்னடத்தையினால் அணுகுகிறோம் என்பதைவைத்தே நல்ல மனிதர்களை உருவாக்கவும், நல்ல மனிதர்களை மதிக்கச் செய்யவும், நல்ல மனிதர்களோடு அன்பு காட்டி பண்பு குலையாது வாழ்ந்துக்கொள்ளவும் முடிகிறதென்பதற்கு, ‘இந்த பாபநாசம் திரைப்படமும், இயக்குனரும், நடிகர்களும் பிற அனைத்துக் கலைஞர்களும் உழைப்பாளிகளும் கூட மிக நன்றிக்குரிய சாட்சி..

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

46, அதோ அது அப்பா நட்சத்திரம்..

M31489-22 001

நிறையப்பேரைப் போலவே
எனக்கும் அப்பாயில்லை..

அப்பா இல்லாத உலகம்
வெறும் இருட்டோடு மட்டுமே விடிகிறது..

அப்பாவோடு ஊர்சுற்றிய நாட்களை
விண்மீன்களோடு விளையாடிய நாட்களாக
வானத்துள்
புதைத்துக்கொண்டது வாழ்க்கை..

இறக்கை உடைவதற்குபதில்
பறப்பதை மறந்துவிட்ட
பறவைகளாகத் தான்
மனக்கண்ணிற்குள் பார்த்துக் கொள்கிறோம்
அப்பா இல்லாத எங்களை..

அப்பாவிற்கு வலிக்குமே என்று
காலழுத்தித் தூங்கியிராத இரவெல்லாம்
அப்பா போனப்பின்
நெஞ்சுக்குள் வலித்து வலித்து
நினைவாக மட்டுமே கனக்கிறது..

நீ ஓட்டு ராஜா’ நான் –
அப்பா இருக்கேன்னுச் சொல்லி
எனக்கு ஒரு மிதிவண்டி வாங்கித்தர
ஆறுமாத வேலைக்கு அன்றெல்லாம்
நடந்தே போனஅப்பாவை
எத்தனை விமானம் ஏறினாலும்
என்னால் மறக்கமுடிவதில்லை..

கருப்பு வெள்ளை படங்களோடுப் போன
சார்லிசாப்ளினைப் போலவே
வளர வளர
அப்பாவையும் மறக்கவேண்டுமென்றுத் தெரிந்திருந்தால்
அன்றே
கருவறைக்குள்கூட கலைந்துபோயிருப்பேன்..

பார்க்கையில்
ஒரு கண்ணைமூடிக்கொண்டுப் பார்ப்பதுபோல்
பார்க்கமுடிகிற
அப்பாயில்லாத உலகு
வெறுங்காலில் மிதிக்கும் முட்பாதையைக்கு ஈடென்று
எல்லோருக்கும் புரியாது..

அம்மாயெனும் வரத்தைப் போல
அப்பாயில்லாமலே வளர்ந்த
சாபத்தைப்பெற்ற பிறப்பும்
சபிக்கப்பட்ட பிறப்புதான்..

லுங்கிக்குள் மறைத்துத் தின்பண்டம்
கொண்டுவருவதும்,
படிக்க என்றால் பகலிரவு உழைப்பதும்
அடித்ததற்குக் கூட
அடுத்தகணம் அழுவதுமான அப்பாவை
எத்தனை இரவில் அழுது மறப்பது?

நான் போயிட்டேன்னா
நான் இல்லைன்னா
எனக்கு ஏதேனும் ஆனால் என்றெல்லாம்
சொல்கையில் பதறிய மனத்தைக்கூட
அப்பாவிற்குக் காட்டியதில்லை..

அப்பா போனதும்
அழுவோம் என்று அப்பாவிற்குத் தெரியும்
ஆனால்
அப்பா போனதும் அழுவோமே என்று நினைத்து
அப்பா எத்தனை அழுதிருப்பாரோ..

தெருவில் போகும் பிணத்தைக்கண்டு
நாலு தெரு தள்ளியடிக்கும் மேளத்திற்கு அஞ்சி
சாலையெல்லாம் வீசியப் பூக்களைப் பார்த்து
யாருக்கெல்லாம்
அப்பா அப்பான்னு மனசு அழுமோ..(?) தெரியவில்லை..

எனக்கு அழுகிறது..
———————————————————
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

45 இன்றையச் செய்திகள்.. (அரசியல்.. விபத்து.. கள்ளச் சாராயம்)

8f0d089997bcbcf3128bc6b2b33248f4

 

 

 

 

 

 

கள்ளச்சாராயம்

அறுபத்தினாலு பேர்
கள்ளச்சாராயம் குடித்து மரணம்;
அறுபத்தினாலு குடும்பங்களின்
அழுகைக்கு
தீர்வில்லா
நம் கொடூர மௌனம்..

எதற்கும் வருத்தமின்றி
திறந்திருக்கும் டாஸ்மாக்;
பலரின் கொள்ளிக்கு முன்பே
முதல் தீயிட்ட அரசு..

குடிக்க விற்றுவிட்டு
குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்;
குடியினால் குடி முழுகும்
கண்ணீரில் நேரும் மரணம்..

புரியாத திட்டங்களும்
திட்டமில்லா வாழ்க்கையுமாய் நாம்;
நம் கண்முன்னே
நம்மால் அழியும் உலகு..
—————————————————————————

விபத்து

ங்கே ரயில் கவிழ்ந்தது
அங்கே பேருந்து இடித்துச் சிதறியது
நான்கு பேர் காயம்
ஆறு பேர் மரணம்

அச்சச்சோ!!
கண்களை மூடிக் கொள்கிறேன்
மனது பதறிக்கொண்டேயிருக்கிறது.,

முட்டாள்கள் என்றோ
பாவிகள் என்றோ
பாவம் என்றோ யாரைச் சொல்வது?

நாமெல்லோருமே
மாறாதவரை
மாற்றிச் சிந்திக்காதவரை
மரணங்களும் காயங்களும் தொடரும்..

ஒருநாள்
நம்மையும் அந்த பேருந்தோ
ரயிலோ
மரணமோ காயமோ தொடலாம்

தொடும்முன் யோசித்தால் அந்த
நான்கு பேரோ
ஆறு பேரோ
இனி காப்பாற்றப் படலாம்..
—————————————————————————

தகாத உறவு

கள்ளக்காதல்
அடுத்த வீட்டு மனைவி ஓட்டம்
கணவன் பிடிபட்டான்

அசிங்கமான நம்
அடையாளம்..

காதல் என்பது
அன்பென்று மட்டும் அறியப்படுகையில்
காமம் என்பது
அங்கங்கே
அதுவாக மட்டும் இருந்துக்கொள்ளும்..

உடம்பிற்கு
வாசனைதிரவியம் பூசிக்கொள்ளும் அறிவு
அதைச் சோற்றில்
போட்டுக்கொள்ளாத அறிவு
காதலையும் உரிய இடத்தில்
காட்டிக்கொள்ள வளர்தலே உயர்வு..

கண்ணியமும்
பண்பும்
உயர்ந்து நிற்கையில்
காதல் கரைபடுவதில்லை..

காதல் கசந்திடாத மனது
அதைக் கண்டவரிடத்தில்
காட்டிக்கொள்வதில்லை..

காதல் கொள்வது
மனதும் மனதும் கொள்வது
உடலும் உடலும் தொடுவதல்ல

விருப்பட்டவரிடத்திலெல்லாம்
கடைவிரிப்பதல்ல,
விரும்பியவரிடம் கண்களால் பேசி
உரியவரிடத்தில் மட்டும்
உயிரோடு பேசுகிறது காதல்..

விரும்புவதையெல்லாம்
அடைவது காதலல்ல
பேராசை

விரும்பினாலும்
அளவோடிருக்கும் அன்புதான்
காதல்..

காதல் பிசகல்ல
பிசகிக் காதலிப்பது பிசகு..
—————————————————————————

அரசியல்

அவர் கட்சி தாவினார்
இவர் விலகினார்
அவர் அவரிடம் சண்டை
இவர் அவருக்கு திடீரென ஆதரவு
மந்திரி வெளிநடப்பு
முதலமைச்சர் சொத்துக்குவிப்பு

யார் இவர்களெ ல்லாம்?

இவர்கள் யாராக
இருக்கவேண்டும்?

இவர்கள் யாராக இருந்தால்
இப்படியெல்லாம்
நடக்காது.. ?

நாம் யார்?

நமக்கு எது சரி?

நமக்கு யார் வேண்டும்?

நமது பொறுப்பு என்ன ?
நமது பலமென்ன ?

அரசியல்
நாமுண்ணும் சொறல்ல
நமை ஆளும் தீ..

வெளிச்சம் தருவதும்
வீட்டை எரிப்பதுமாய்
நிகழும் ஒன்று..

நாம் வாழுவதை
திசைமாற்றும் ஆயுதம்..

நம்மை யாராக ஆக்கவேண்டுமென
முடிவுசெய்ய
நாமாக்கிய இருக்கை; நம்மைத்
தூக்கிநிறுத்தும் இரு கை..

நாம் நேரே பயணிக்க
வழி தரும் நிலம்
நம் மண்ணின் பெருமை..

நாம் படிக்கவேண்டிய
அணுகக் கூடிய
ஆளத்தகுந்த திறன்..

வருபவருக்கு வழிவிட்டு
வழிநடத்தி
வெல்பவரை வாழ்த்தும் கம்பீரம்..

வெற்றி
தோல்வி
கருதாது
அலசி
பொதுநலன் பேணும் நடுநிலை..

நடுநிலையூரிய மண்ணிலிருந்து
முளைக்கலாம்
நமக்கான அந்த விதை..

அல்லது
இதுபோன்ற செய்திகள் விளைந்திடாத
நாளேட்டின் நிலை..
———————————————————————————-
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக