23, தொலைந்துப்போன தெய்வீகம்..

குறிப்பு: இந்தக் கவிதைகள் தெய்வீக மருத்துவர்களைப் பற்றியதல்ல; தெய்வீகத்தை தொலைத்தவர்களுக்குச் சமர்ப்பணம்..

பிரசவத்தின்போது
இரண்டேகால் கிலோதானிருக்கு குழந்தை
ஆனாலும் மூச்சடைச்சிபோகும்
அறுவைசிகிச்சை செய்யவேண்டும்
செய்யட்டுமா என்றார்கள்,
‘மருத்துவர் சொல்கிறாரே
சரி செய்யுங்கள்’ என்றேன்

ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ஆகும்
இப்போதே கட்டு என்றபோது
கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது;

என்றாலும்
இரண்டாவது குழந்தை
சுகப்பிரசவத்தில் பிறந்ததெல்லாம் வேறுகதை;

ல் ஓட்டை
எது சாப்பிட்டாலும் அடைத்துக் கொள்கிறது
ஒரே தொல்லை என்றேன்,

உற்று உற்று பார்த்துவிட்டு
எங்கே வேலை எவ்வளவு சம்பளம்
எல்லாம் கேட்டுவிட்டு
உள்ளே சொத்தை இருக்கு
உடனே ரூட் கேணல் செய்யனும்
என்றார்,

சரி
செய்யுங்கள் என்றேன்

ரெண்டு பல்லு சேர்ந்தாப்புல
இருக்கு
ரெண்டும் செய்துட்டேன் என்றார்,

மயக்க ஊசியில
ஒண்ணும் தெரியலை டாக்டர்
எவ்வளவு ஆச்சு என்றேன்,

ரூட்கேனல்
வெள்ளி அடைப்பு எல்லாம் சேர்த்து
ரெண்டு பல்லுக்கு பத்தாயிரம்
ஆகுமென்றார்,

பல்வலி போய் எனக்கு
நெஞ்சு வலியே வந்தது;

நிமோனியா காய்ச்சல்
மூக்கில் ரத்தம் வருது
பயப்படத்தான் வேண்டுமோ’ என்றேன்,

ஆமாமா இது கேன்சர்போல இருக்கு
நிறைய சோதனை செய்யனும்
இங்கு பத்துநாள் தங்கனும்
அநேகம் பெரிய மருத்துவரைக்கூட
பார்க்கவேண்டி வரும் என்றார்கள்,
மருத்துவர்மேலெனக்கு சந்தேகமெல்லாமில்லை
செய்யுங்கள் என்றேன்,

ஆனால் ஒரு எட்டு லட்சம்
பத்து லட்சம் வரை ஆகும்
பரவாயில்லையா என்றார்,

பத்து லட்சம்
கேன்சரைவிட பெரிதாகத் தெரிந்ததெனக்கு;

தோழி கையறுத்துக் கொண்டால்
ஆழமா இருக்கே
ஒரு ஊசி போட்டா நல்லதோன்னு
மருத்துவமணை போனோம்

தோண்டிப் பார்க்கணும்
நரம்பு கட்டாயிருக்கலாம்’ என்றார் மருத்துவர்

சரி என்றேன்
மொத்தமாய் அறுவை சிகிச்சையே
செய்துவிட்டு
நல்லவேளை அறுத்துப் பார்த்ததும்தான் தெரிந்தது
உள்ளே சவ்வு லேசா அறுபட்டிருந்தது
தையல் போட்டுவிட்டிருக்கோம்’ என்றார்

விரல்தான்
மடக்கியதும் மடங்கியதே என்றேன்,

அதலாம் மடங்கும்
ஆனால் உள்ளே காயமிருந்தது என்றார்,

சரி மருத்துவர்
சரியாகத் தானே செய்வார்,
எவ்வளவு ஆச்சு என்றேன்

மொத்தத்தில் ஒரு
அறுபதாயிரத்திற்கும் மேலாச்சு
உங்களுக்காக
ஒரு ஐம்பத்தி ஐந்தாயிரம் கொடுங்க போதும்’ என்றார்..

இருநூறோ முன்னூறோ
கேட்டுவிடுவாரோ என்று
பயந்திருந்த எனக்கு
இதயமே நின்றுப்போனது போலாச்சு..

ஆனால்
இப்போதும் எனக்கு
மருத்துவர்மேல் சந்தேகமெல்லாமில்லை,
தோழிக்காக நகையைவைத்து
பணத்தை கட்டினோம்..

மறுநாள் தோழி அழைத்தாள்
சவ்வு என்ன
விரல் போனால் போதுன்னு
விட்டிருக்கலாம்டி
வீட்டில் வசவு தாங்கலை’ என்றாள்

அச்சோ..
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மருத்துவர் காதில் கேட்டால்
அறுவைசிகிச்சை செய்துவிடுவார்’ என்றேன்

அவளுக்கு வலிதான் என்றாலும்
கலுக்கென்று சிரித்துவிட்டாள்..,

வேறென்ன செய்ய
இந்த மானங்கெட்ட சமுதாயத்தை யெண்ணி
எங்களால்
சிரிக்கத்தானே முடிந்தது (?)

காரி அவர்கள் முகத்தில்
உமிழ்ந்துவிடவா முடிந்தது.. ??
—————————————————-
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்!!

மிலேச்ச நாடுகளுள்
கோலோச்சிய நாயகன்,
சுழல்மாடிப் பள்ளிகளுள்
சுடரொளிக்கும் சூரியன்;

பகலிரவு பொழுதெங்கும்
விழித்திருக்கும் வீரியன்,
அதர்மமென்று அழைத்தாலோ –
நழுவி தர்மத்தில் வீழ்பவன்;

கடல்போல் விரிந்த மனதை
கேட்காமலே தருபவன்,
உழைக்கும் பணத்தில் பாதியை
உதவிக்கென்றுத் தந்தவன்;

இளைஞர் பட்டாளத்திற்கு
முதுகெலும்பாய் தேய்பவன்,
இனியோர் விதிசெய்ய
இயந்திரவியல் கற்றவன்;

பணத்தைச் சம்பாதிப்பதில்
பழைய குபேரனுக்கே வழிசொல்பவன்,
இருப்பதை அனுபவிக்க –
எளிமையை கையாள்பவன்!

எண்ணிலடங்கா சொல்லுள் இப்படி
பேறு பல வாய்த்தவன் – இன்று
மனையாள் கைகோர்த்து நடந்து
இல்லறத்தைச் சேர்பவன்;

செல்வங்கள் பதினாறும் – அவன்
மனம்போலச் சேரட்டும்,
பெற்ற வயிறு நிறைய – இருவர்
சொந்தங்கள் மகிழட்டும்;

சொர்க்கம் இதுவென்று – இதயக்
கூடுதன்னை அறியட்டும், அதில்
அன்பு அன்பொன்றே நிறைய – வாழ்க்கை
முழுதாய் இவர்க்கு அர்த்தப்படட்டும்!!

வாழ்க தம்பி மணி,
வளர்ந்து –
நலமோடும் வளமோடும் பெருகட்டும்
அவரின் நல்லறம் மிக்க இல்லறமும்!!

பேரன்புடன்..

அண்ணன்
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 19

இறுகப்பிடித்துக்கொண்டால் இனிக்கும் உறவுகள்..

கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர் உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும் அடுத்தடுத்து உயிருள்ள கடைசி நொடியிலும் கொட்டும் முரசொலி சப்தம் காதுகளை எட்டித் தொடுவதைப்போல், உறவுகளின் பங்கில் ஒரு புள்ளியேனும் நம் மனதை எட்டி தொட்டுக்கொண்டேதானிருக்கிறது. பச்சைவயலின் ஈரமும் பரந்த வானின் நீளமும் கொண்டு அகன்றிருக்கும் மனசு உறவுகள் சிலரிடத்தில் வெகுவாக இருப்பது நமக்கான நம்பிக்கை கூடுவதன் உச்சமன்றி வேறில்லை.

எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வது; இலை வேருக்கு வெளிச்சம் பாய்ச்சுவதும், வேர் இலைக்கு நீர் பாய்ச்சுவதும்போன்ற இயல்பின் நிறைவன்றி வேறென்ன? காற்றிற்குப் பாகுபாடில்லை, நதி யாரைக் கண்டும் கோபத்தில் நின்றுக்கொள்ளப் போவதில்லை, அலைகள் உதைப்பவரின் காலைக் கூட நனைத்துத் தான் விலகிச் செல்கிறது; பின் மனிதன் மட்டும் தனக்கென வாழ்ந்து தனக்கென்று சாகையில், எந்த புதிய புல்முளைத்து மனிதரைநீ மேலானவனாக வாழ்ந்தாயடா என்றுக் காட்டிவிடப் போகிறது?

சார்ந்திருத்தல், சாய்ந்துக்கொள்ளல், தாங்கிப்பிடித்தல், வாகைசேர்த்தல், வாலிபத் திமிரையும் வாஞ்சை மனதையும் விதைகளாக்கி வருங்காலத்திற்கு விட்டுச் செல்லல்போன்ற நிறைவுகளை மனிதன் வாழையடி வாழையாகப்பெற மனிதருக்கு அன்பின் நெருக்கமும் அதைப் பெருக்கும் உறவுகளின் ஈர்ப்பும் ஒருவருக்கு ஒருவரென அனைவருக்குமே வேண்டும்.

தனித்து அழும் கண்ணீரைப்போல சேர்ந்துமகிழும் கனமும் மனதிற்கு இனிப்பானதென உணர உறவுகளுடன் செர்ந்திருந்துப் பார்த்தல்வேண்டும். நெருங்கி நிற்கையில் சிலவேளை குழப்பங்கள் நேரிடலாம், பிடித்தங்கள் மாறுபடலாம், முரண்படுகையில் கோபம் வரும் சண்டை மூளலாம், உனக்கா எனக்கா என்று சுயநலத்தில் மார்புதட்டி இருவேறாகக் குடும்பம் வெட்டி முறியலாம், முறியட்டுமே. முறிந்து, பின் புரிந்து, அன்பின் ஏக்கத்தில் மீண்டும் சேர்ந்து அணைக்கையில் கூடும் சுகம் பிரிந்திருப்பதில் இல்லையே.

பிறருக்குக் காட்டாத பூரிப்பு, பகிர்ந்துகொள்ளாத வெற்றி, வெளியில் தெரியாத வீரம் ஒருவருக்குள் ஒருவருக்காக மட்டும் வலுத்தென்ன பயன்? இருக்கும் உணர்வை சலிப்பு காட்டி, சிரிப்பு கூட்டி, மலிய மலியகொடுத்துக் கொடுத்து மீளும்ஆனந்தக் கண்ணீர் ததும்ப தெரியும் முகம்மானுட நீதியை மனிதத்துள் பொத்திக்காக்க ஒற்றுமையின் வழிநின்று முயற்சிக்கும் இக்காலத் தேவையறிந்த முகமன்றி வேறென்ன..?

வெவ்வேறு  பக்கமாக மாறி மாறி வேறு பக்கம் திருப்புகையிலும் வாழ்க்கை வேறுவேறாகத் தெரிகிறது. வெவ்வேறு வண்ணமும் எண்ணமுமாக நாளும் பொழுதும் நொடிக்குநொடி மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் தனியே நின்று செய்துமுடித்தவை செய்தவையாகவே முடிகிறது, சுற்றத்தோடு அறிந்துச் செய்யப்பட்டவையே சாதித்ததாகிறது. காரணம், மகிழ்ச்சி என்பது பகிர்தலில் இருக்கிறது. சிரியோருக்கு கொடுப்பதிலும், பெரியவரிடமிருந்து பெறுவதிலும் இருக்கிறது மகிழ்ச்சி.

நண்பரொருவர் கார் வாங்கினார். வீட்டிற்குப் போனதும் எப்போதும் போல தனது அறைக்குப் போனார் உடை மாற்றிக்கொண்டு படுக்கச் சென்றுவிட்டார். யாரோ ஒருவர் விவரமறிந்து தொலைபேசியில் அழைத்து என்னப்பா கார் வாங்கியிருக்கியாம், சொல்லவேயில்லையேஎன்கிறார் இமைகள் விரிய. அதற்கந்த நண்பன், இதில் உன்னிடம் சொல்வதற்கு என்ன இருக்கு, எனக்கு லோன் கிடைத்தது அதில் வாங்கினேன். நீயா பணத்தைக் கட்டப்போற மாசம் மாசம்” என்று கடுப்படிக்க அவர் எதிர்முனையில் டப்பென இணைப்பை துண்டித்தார்.

இன்னொரு நண்பருக்கு, கார் கிடைக்கிறது. வேலைசெய்யும் நிறுவனத்தில் கார் தருகிறார்கள். உபயோகித்த கார். அவர் வேகவேகமாக வீட்டிற்கு வருகிறார், வரும் வழியிலேயே தொலைபேசியில் அழைத்து தனது அம்மா அப்பா மனைவி குடும்பத்திற்கு சொல்லிவிடுகிறார். கார் வாசலில் வந்து நின்றதும் அம்மா ஓடிவந்து ஆரத்தி எடுக்கிறாள். நம் வீட்டிற்கு முதல் கார் வந்துவிட்டது என்று அண்ணன் தம்பிகள் எல்லாம் அவனை கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் காரில் ஏறி அமர்ந்து எட்டி எட்டி குதித்து ஆரவாரப் படுத்துகிறார்கள். அந்த நண்பன் உடனே குளித்துவிட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறான். வரும் வழியில் நல்ல உணவகம் பார்த்து அரிய உணவுகளை வாங்கித்தந்து உண்டு மகிழ்சியை எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்கிறான். அவனுடைய நண்பர்களில் ஓரிருவரும் உடன் கலந்துக்கொண்டு அவனோடு மகிழ்ச்சியில் பூரிக்கிறார்கள். வீட்டிடம் வண்டி வந்து நின்று எல்லோரும் இறங்கியதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகிழ்ச்சியோடு விசாரிக்கிறார்கள். இடையே “அவர் என்ஜினியரா இருக்காறா(?) நான் ஏதோ சாதாரண வேலை செயறாரோன்னு நினச்சேன்என்று பக்கத்து வீட்டுக் காரரின் மனைவி பேசி உசுப்பேத்திவிட, நண்பனின் மனைவி பெருமையோடு அவனைப் பார்க்கிறார்கள். அவன் அன்று படித்து பட்டம் வாங்கியதற்கான அத்தனை மதிப்பும் மகிழ்ச்சியும் இந்த ஒரு காரில் இன்று அவனுக்குக் கிடைக்கிறது.

இரண்டுப்பேருமே கார் வாங்கினார்கள். முதல் நண்பன் புதிதாக வாங்கினான். இரண்டாம் நண்பனுக்கு கம்பனி முன்பு பயனப்டுத்திய பழையக் காரையே தருகிறது. இதில் மகிழ்ச்சி யாருக்கு கிடைத்தது பார்த்தீர்களா? இது ஒரு மாயையான உலகம். மகிழ்ச்சியையும் வெற்றியையும் ஆடம்பரத்திலும் அடுத்தவரின் தோல்வியிலுமே வைத்திருக்கிறது இவ்வுலகம். தான் ஜெயிப்பது, தான் அடைவது மட்டுமே இங்கே கொண்டாடப் படுகிறது.

கொண்டாட்டம் என்பது ஒரு கை ஓசையல்ல, இரு கை நான்காகி நான்கு எட்டாக கொக்கரிக்கும் உறவுகளின் ஆர்ப்பரிப்போடு வருகிறது கொண்டாட்டம். தான் உண்டு உறங்கி எழுவதைவிட, உண்டோமா உறங்கினோமா என்று பார்த்து கவனித்து அன்பு செய்து அக்கறையோடு பரிமாறும் உணவிலும் உறக்கத்திலும் ஒரு இனிப்புண்டு. அந்த இனிப்பை அடைய உறவுகளோடு கூடி வாழுங்கள்.

தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசும் பொங்கலுக்கு மெல்லும் கரும்பும் தனியே இருப்போருக்கு வீண்செலவாகவே கருதப்படுகிறது. உறவுகள் நெருங்கி இருக்கையில் தான், பண்டிகையும் விழாக்களும் கோலாகலப் படுகிறது. குழந்தைச் சிரிப்பதும், கிழவர் வாழ்த்தும், அம்மாப்பா ஆசிர்வதிப்பும், அக்கா தங்கை அண்ணன் தம்பிகளின் மகிழ்வும் மனதிற்கு நிறைவை தருவது முழ உண்மை. என்றாலும் உறவுகளைப் பிரிவது என்பது பெறு வலிஅன்றி வேறில்லை. எனக்கு ஊர் விட்டு வருகையில் எனது எதிர்வீட்டு மரத்தைப் பிரிந்துவந்தால் கூட வலிக்கும்.

ஒவ்வொரு முறை ஊர் போகையிலும், வழியே நெடுகிலும் இருக்கும் மரம், மரத்திற்குமேல் தெரியும் வானம், வானத்தில் நகரும் மேகம், மேகமுரசிப் பெய்யும் மழை, மழையோடு ஆடும் மலர்கள், மலரில் சிறகடிக்கும் தேனீ, தேனீக்கள் தாண்டிப்போகும் காக்கை, காக்கையோடு சுற்றும், குருவி தலை அமர்ந்திருக்கும் கன்னுக்குட்டி என எல்லாமே ஊரில் பார்க்கையில் எத்தனை அழகோ அத்தனைக் கொடுமை அவைகளை விட்டு விலகிவருவதும்.

தோல் இறுக்கிக் கட்டிக்கொண்டு முத்தமிடும் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு விமானம் ஏறுவது அத்தனை சுலபமல்ல. போகும் வழியெல்லாம் உயிரருக்கும் குழந்தையின் நினைவை பிரிந்துச்செல்லும் பெற்றோர் மட்டுமே அறிவர் அதை. எனவே ஒரு இதயத்தையும் பிரிவால் அறுக்காதீர்கள். உறவுகளோடு கூடி மகிழ்ந்திருங்கள். உறவுகளின் நெருக்கத்தில் வாழ்க்கை பலவாக மகிழ்வாக சிறகடிக்கட்டும். சின்ன இதயம் முழுதும் சிரிப்பு நல்லுறவுகளால் நிறையட்டும். உறவுகள் சிரித்துக்குலுங்கும் வீடு சொர்கமாகவே எல்லோருக்கும் வாய்க்கட்டும்..

வெற்றியின் அர்த்தம்; ஒருவர் தோற்பதென்பது மாறி, திறமையை அறிவதும் பகிர்வதுமாய் ஒரு சகோதரத்துவ பூமி எல்லோருக்குமாய் சமதர்மத்தில் உருவாகட்டும்..

வித்யாசாகர்
Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8, நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

1
நீ
காற்றில் அசைபவள்
கிளையுரசி உடைபவள்
விழுந்ததும் பறப்பவள்
பயணித்துக் கொண்டேயிருப்பவள்;

நான் நின்று
நீ வருவதையும்
போவதையுமே பார்த்திருக்கிறேன்;

கணினி வழி தெரியும்
கண்களிலேயே
உயிர்திருக்கிறேன்;

வாழ்வதை அசைபோட்ட படி
உன்னையும்
நினைத்துச் சிரித்திருக்கிறேன்;

வாசலை
பசியோடு திறக்கக் கேட்காமல்
சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன்

நீயும் சம்மதித்தாய்
பேசினாய்
பார்க்கிறாய்
இருக்கிறாய்

நீ
இருக்கிறாய் என்பதில் மட்டுமே
உயிர்த்திருக்கிறேன்..
————————————————————

2
கைதொடும்
உனதுணர்வு
மின்சாரம் கொண்டது;

பார்க்கும் தருணங்கள்
யாவும்
தவத்தை உடையது;

பேசும்
அவகாசமெல்லாம்
பாக்கியத்தைப் பொறுத்தது;

உனக்கான எல்லாமே
எனக்குத் தலைமேல்
கிரீடம் இருப்பதற்குச் சமம்!
————————————————————

3
பேச்சில்
பாதி மறைக்கிறாய்,
பேசாமலே
உயிர்த்தீ அணைக்கிறாய்,

நேசத்தின்
எல்லை விரிக்கிறாய்,
நெருங்கி என்
நிஜத்தை தொலைக்கிறாய்;

காற்றில்
பொம்மையும் பூவும்
பரிசென்கிறாய்
கடவுச்சொல்லினும் இரகசியமாகிறாய்;

பேஸ்புக்
டிவிட்டர்
ஜி-பிலஸ்
எங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும்,
தெரியாத நாளிலென் உயிர்பிரியும்..
————————————————————

4
னக்கானச்
சொற்கள்
மௌனத்தை அணிந்தவை;

வார்த்தைகளைக் களைந்து
இதயத்தை
பார்வையால் அறுப்பவை;

காத்திருப்பிலும்
தவிப்பிலும்
நினைவுகளால் வலிப்பவை;

என்ன செய்ய
உனக்கானச் சொற்களை?

இதோ –
எழுதாமலே விட்டுவிடுகிறேன் போ..
————————————————————
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத்தில் மண்ணிசை கலைஞர்கள் நடத்திய ‘தெம்மாங்குத் தென்றல்’ அறிமுக விழா..

2014-11-17 09.54.50

ருகால தவத்தின் மூச்சு வெடித்து
வானசைக்கும் காற்று பரப்பி
பூமியின் கீழ்மேல் நகர்கையில் – அசையும்
இலைகளால் கிளைகளால் மரம் விலகி
மரமிடித்து
மணல் நகர்ந்தோடி
மேகங்கள் அசைந்து அலைந்து இடித்து
மழை கொட்டி
மலர்கள் பூத்து
உயிர்கள் முளைத்து
விதம் பல உருமாறி
விடும் மூச்சுக்கு எடுத்தக் காற்றை
ஒன்றாய் இரண்டாய் சுவாசிக்கையில்
இங்குமங்குமாய் அசைந்த நகர்வில் –
இயற்கையின் முதல் ஓசை எழுகிறது..

அந்த முதல் ஓசைக்கும் எனது மூத்த மொழி
தமிழுக்கும் எனது வணக்கம்..

ஓசைக்கு காது கொடுத்து
உள்ளிருக்கும் சாமி பார்த்ததும்
ஓசை இசையாகி எல்லாம் வசமாகும்
ஆசை பிறக்கிறது..

ஆசையில் நிற்காத மனம்
கண்ணீரில் நனைந்து
கண்டதை நினைத்து
கண்டதும் சிரித்து – கணம் பல உள்ளூறி
காற்றின் அசைவையெல்லாம் இசையாக்க
ஒரு ஜீவன் பிறக்கிறது
அது ஆராரோ படித்துமுடிகிறது..

ஆராரோ பாட்டுச்சத்தம்
பள்ளியில் நடந்து
வயலில் ஆடி
வேலையோடு புழங்கி
பின்னும்
புதுப் பாட்டைத் தேடி தேடி ஆயிரமாயிரம் மொழியாய்
உணர்வாய் புதிதாய் புதிதாய்
பரவி
இன்று புவியெங்கும் – எமது முதல் மூச்சு
முதல் காற்றின் தடம்
முதல் ஒலி புரண்ட சப்தம்
எமது உணர்வை முதன்முதலாய் பாட்டாக்கிக்கொண்ட
மண்ணிசையை
மறப்போர் எவரேனுமுண்டோ ? என சளைக்காமல் சவால்விட – “தெம்மாங்கு தென்றல்” எனும் பெயரில் துவங்கிய
குவைத்தின் முதல் மண்ணிசை கலைவிழா மன்றம்
எந்நாளும் வெற்றி வெற்றி என்று
முழு வெற்றியோடு நிற்க வாழ்த்தி –

நாமே இக்குவைத் நாட்டை விட்டுப் போனாலும்
இந்தப் பாலை மணல்வெளியெங்கும்
போகாத ஒலியாக
இசையாக
பாடல்களாக நம் மண்ணிசை இங்கே
நிலைத்திருக்க இவர்கள் மட்டுமல்ல
நாமெல்லோரும் கூட
உடனிருக்கவேண்டும் என்று வேண்டி
வாழ்த்துமன்போடு மகிழ்கிறேன். நன்றி..

பேரன்புடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்