1
இரவு எனக்கு எதிரி
இரவு எனக்குத் தோழன்
இரவு எனக்கு எல்லாம்
இரவில்தான் எனக்கு வாழ்க்கை
படிக்கக் கிடைக்கிறது;
ஆனால்
பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை
பகலில் நான் தொலைந்துப் போகிறேன்
என்பதே கவலை;
பகல் தொலைவதால்
இரவு எனது மூடாவிழியில் கசிந்து
எல்லோருக்குமாய் விடிகையில்
மரணம் பற்றி எனக்கு
பயமெல்லாமிருப்பதில்லை
ஆனால் –
மரணத்தின் சொட்டு சொட்டான வலி
மாத்திரைகளின் உயிர்தின்னும் ரணம்
மருந்துக்கசப்பின் இனிக்காத வாழ்க்கை
என இதெல்லாம் வந்துவந்து போவதுதானோ (?) என்று
சிலநேரம் யோசிக்கிறேன்,
வேறு.. ?
வந்தவர்கள் செல்பவர்கள் தானே?
நான் மட்டுமென்ன (?)
வந்தவன் ஒரு நாள்
போவேன்,
அன்று எல்லாம் அற்றுப் போகும்..
மரணம் இனிக்கும் அந்தத் தருவாயிலும்
இரவு வரும்
பகல் வரும்
நான்… ?
நான் இரவாகவோ பகலாகவோ
இருப்பேன்;
எனது கவிதைகள் அன்று
யாராலோ எழுதவோ படிக்கவோப் படும்
இன்று மாத்திரை தின்னும் உடம்பை
அன்று மண் தின்று தீர்க்கலாம்
ஆயினும் நான் –
இந்தக் கவிதையாக உயிர்த்திருப்பேன்…
————————————————–
2
எனக்கு விடிகாலைச் சிட்டுக்குருவியின்
சப்தம் போல
உள்ளே குறுகுறுக்கும் வார்த்தைகளின்
உணர்வுகளும் பிடிக்கும்;
வலியோடு
வலியற்று விடியும் இரவு எனக்கு
ஒருநாள்
விடியாமலும் போகலாம்
முடியும் நாளின் துளியை மெல்லும்
எனது எழுத்துக்கள் முற்றுப்புள்ளியைப்
பெறலாம்;
ஆனாலும் நான் இரவினூடே
கவிதைத் தேடி
அன்றும்
அலைந்துக் கொண்டிருப்பேன்
நான் அலைந்துப் போன தடம்
அன்று யாருக்கும் தெரியப் போவதில்லை
ஏதோ காற்றடித்துவிட்டு நின்றதாய்
உணர்ந்தவர்கள்
நினைத்துக்கொள்வார்கள்;
அதனால் தான்
இப்போதே எழுதி வைக்கிறேன் – எனது
மரணத்தைக் குடிக்கும்
இரவுக் கோப்பையில் வழியும்
யாரோ சிலரின் சாபத்தோடு’ நான் சாகாத எனது
எழுத்தின் ரகசியத்தையும்..
————————————————–
3
வாழ்க்கை எத்தனை இனிப்பானது.. (?)
அன்பு
நட்பு
காதலென நீளும்
உறவுகளின் நேர்மையில்
வாழ்தல் ரசிப்பேறி விடுகிறது;
குழந்தை தரும் முத்தம்
தாய் கோதும் தலைமுடி
மனைவி காட்டும் நேசம்
நண்பர்களின் அரவணைப்பு
அண்ணன் தம்பிகளின் நட்பு
அக்காத் தங்கையின் கண்ணீர்
தெருவில் வரும் போகும் மனிதர்களின் நேயம்
இன்னப்பிற உயிர்களின் ஈர்ப்பு
என எல்லாமே –
இதயத்தை நிறைத்துக் கொண்டிருக்கையில்
அருகே வரும் மரணம் தான்
பிறந்ததன் காரணத்தை சாகும்வரை
தேடவைக்கிறது..
இயற்கையை அலசி அலசிப்
பார்க்கையில்
மிஞ்சுவது மரணத்தைத் தவிர
வேறில்லை;
மரணம்
நம் கையில் எரியும்
விளக்குப் போல
அது சட்டென ஒருநாள்
அணைந்துப் போகலாம்..
அணையும் முன்
வாழ்ந்துக் காட்டுங்கள்;
வாழ்வோரே
உணருங்கள்’
வாழ்க்கை மிகச் சிறிது
மரணத்தினுள் சிக்கிய ஒன்று
மரணத்திற்குப் பின் வாழ்வதன் உயிர்ப்பை
வாழும்நாளில் உண்டாக்குங்கள்;
வாழ்ந்துவிட்டுப் போகையில்
விழும் மலர்களாக
நம் நினைவுகளும் இம்மண்ணில்
விழுந்திருக்கட்டும்..
அந்த நினைவுகள்
வாழ்வோருக்கு நல்வழியை காட்டட்டும்…
————————————————–
வித்யாசாகர்
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!