20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்..

யிற்றில் யாரோ
கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும்
அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும்
வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும்
எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே
சகிக்க ஒப்பாத உணர்வு மேவும்
எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின்
கால்வீங்கும்
நீட்டினால் மடக்கினால் நின்றால்
அமர்ந்தாலும் வலிக்கும்
இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும்
அயர்ந்து அயர்ந்து கண்கள் மூடிப் போக
ஒரு மயக்க நிலை உடம்பெல்லாம் பரவி
கண்கள் சிலநேரம் சொருகி நிற்கும்
அதையும் தாங்கமறுப்பதாய் காதில் விழும் வசவுகளை
இன்னொரு வலியாக பெண்மை பொருத்தேக் கொள்ளும்

பின், மாதம் நெருங்க நெருங்க
முதுகுவலி முறித்துயெடுக்கும்,
நாட்கள் நெருங்க நெருங்க
அடிவயிறு பிய்ந்ததுபோல் வலிக்கும்,
நேரம் நெருங்கிவிடுகையில் –
உயிரோடு பச்சைசதை கிழியும்,
எலும்புகள் உடைந்ததுபோல் வலித்து வழிவிட நீங்கும்
உயிர்வழி அகற்றி இன்னொரு உயிர் ஜனிக்கும்;

கண்களின் வெளிச்சத்தை
யாரோ பிடுங்கிக் கொண்டதுபோல்
முற்றும் இருண்டு படாரென ஒரு வெளிச்சம் வரும்;

அதுவரை கூடநின்ற மரணம் –
குழந்தைப் பிறந்ததும் தனை விட்டுவிலகும்;

சோவென பெய்தமழை பட்டென நின்ற அமைதியில்
மனது ஒரு புது அமைதியை –
எதையோ உயிர்வலிக்க இறக்கிவைத்த நிம்மதியை அடையும்;

உடல் உயிர் உறவு வீடு உலகம் எதையுமே
மறந்த அந்த ஒரு நிர்வாண தருணத்தை உணர்த்திய
அந்த அடிவயிறு அறுத்த எனது வலிக்கு யார் பொறுப்பு ?

நிச்சயம் நானில்லை எனில் –
எனக்குப் பிறந்த அந்த பெண்குழந்தைக்கு மட்டும்
நானெப்படி பொறுப்பானேன் ?

காலம் வயிற்றில் தங்கி
பிச்சி உதறிப் போடுகையில் தனக்கான ஒரு பிறப்பினை
அதுவேப் பெற்றுக்கொள்ள – இடையே
கனம் தாங்கி வலி தாங்கி ஒரு மரணம் கடந்து வந்து
பின்பும் சபிக்கப் பட்டவள் நானெனில்; அது
இம்மண்ணின் குற்றமேயன்றி எனதில்லை..
———————————————————
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..

காதல்
கண்களில்
ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்..

மழை சுட்டதும்
வெயில் நமை நனைத்ததுமான
அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை..

இமைநிறைய கனவும்
உயிர் நெடிய பயமுமாய்
பதற்றமுற –
நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த
அந்த நாட்கள் அத்தனையும்
அத்தனை மரணத்திற்குச் சமமானவை..

நம்பிக்கையின் அடிவேரெடுத்து
நம் மணப்பந்தல் தைத்த இரவின் நகர்வுகள்
நம் விழித்தேயிருந்த கண்களில் –
வலியாக மட்டுமே நிரைய என்ன பாவம் செய்தோமோ..?

பிறகெப்படி உனக்கு நானும்
எனக்கு நீயும் சரி எனும் பார்வையை மட்டும்
நமக்குப் புகட்டியதோ இந்த
சதிகார உலகம்.. (?)

பார்த்தால் பார்த்துவிட்டு
சிரித்தால் சிரித்துவிட்டு
முத்தமிட்டால் கூட மறந்துப் போகும் வகையல்ல
நீயும் நானுமெனப் புரியவைக்க –
நான் மரணிக்கையில் உனை நினைத்துக் கொள்ளும் தருணங்கள்
ஒருவேளை சாட்சியாக நிற்கலாம்..

நானேனும்.. பெரிதில்லைப் போகட்டும்
ஆனால் நீ பாவம்..
நீ அழுவாய்
சிரிக்க மறுப்பாய்
வாழ்வை கசந்து வாழப் பழகியிருப்பாய்
உணவு நாக்கு சுட்டு, உன் மரணத்தின் ஒருபிடி
உனக்குள்ளே வியாபித்துப் போயிருக்கும்,

எனைத் தேடி தேடிச் சிவக்கும் விழிகளில்
உன் கடைசி நாட்களைச் சேகரித்திருப்பாய்,
யாரிடமும் பேசிடாத மௌனத்தில்
வலிகளாய் நீ உதிர்ந்துப் போயிருப்பாய்,
உயிர்வெள்ளம் உடைந்துப் பாயும் கடலென
நம் நினைவுகளில் கரைந்தே கரைந்தேயிருப்பாய்.. நீ

ச்ச..
காற்றில் அசைந்து உரசிக் கொள்ளும்
ஒரு நாணல் போல
வெறுமனே அசைந்து
உடல் நெருப்பில் பற்றியெரியும் மனசு
எப்படி வலிக்குமென்றெல்லாம் யாருக்குப் புரிகிறது?

ஒசந்த ஜாதியும்
ஒடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பும்
மனிதரை நிறம்பிரிக்கும் மதமும்
மனசு கொன்றுபோடும் மயானமொன்றில்
எந்த நாகரிகத்தைப் பிறப்பிக்கப் போகிறதோ இனி (?)

இலகுவாய் –
பெற்றதன் வரத்தில்
புதைத்துவிடும் நம் ஆசைகளை
பெற்றோரே புரியும் – நாளெந்த நாளோ.. ?

திரும்பினால் தேடி
நடந்தால் அறிந்து
பேசாமலே உனைநான் புரிந்துக் கொள்ளும்
நேசிப்பில் எதையெடுத்து இம்மக்கள்
நமக்கு எதிராய் கொள்கின்றனரோ ?

மரணம் உதறி மரணம் உதறி
இன்னும் எத்தனை நாட்கள் நாமிப்படி
பிரிந்தே
உயிர்த்தேக் கிடப்பதோ?

வலியாய் வலிக்கிறது அன்பே
பிரிவு கொடிது
அதிலும் முற்றிலும் சேராது நமைப் பிரிக்கும்
சதியின் பிரிவு மிகக் கொடிது;

உண்மையில் –
நாம் பேசிக்கொண்ட நாட்களைவிட
நீ பார்த்துச் சென்ற நொடிகள் தான்
இதயம் குத்திக் கிழிக்கும் வதை நிரம்பிய
நினைவின் வலி என்று –
இப்படி வெறும் காகிதங்களில்
மட்டுமே எழுதி கிழித்துப் போடுகிறேன்..

கிழிக்க கிழிக்கச் சேரும்
குப்பைகளின் நெரிசலில் நகரும்
பார்வைகள் –
இதோ மிதித்துச் செல்கின்றன நம் காதலை.. நினைவுகளை..
———————————————————-
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..

ரத்தம் உறையும் வேகம்போல்
என்னுள் அடர்ந்துப் போன உன் நினைவில்
வலிக்கிறது அம்மா அந்த நாட்கள்..

நான் சிரித்த முகம் மட்டுமே
பார்த்த உனக்கு
என் போர்வைக்குள் அழுத நரக இரவுகள் பற்றித்
தெரிந்திருக்க உனக்கு வாய்ப்பில்லைதான்..

தடுக்கிவிழுந்தால் அம்மா என்று மட்டுமே
கத்தத் தெரிந்த பிள்ளைக்கு –
அம்மா தவறிப் போவதென்பது
எத்தனைப் பெரிய வலி?

அந்த வலியையும் நீயிருக்கும்போதே
நானடைந்தேனென்பதே ரணம் பூத்த
அந்த நாட்களின் –
கொடூரமம்மா..

உனக்கு அப்போதெல்லாம் அடிக்கடி வருமது
வயிறு பிசைந்து
காலெட்டி உதைத்துக் கொண்டு அழுவாய்
படுக்கையில் விழுந்து துடிப்பாய்
நீ துடிக்கும் வலி பார்த்து நான் மனமொடிந்துபோவேன்
என்னம்மா என்று கேட்பேன்
ஒண்ணுமில்லை போ என்பாய்
துடிக்கிறாயே என்பேன்
அது அப்படித் தான் வயிறு வலிக்கிறதென்பாய்
ஐயோ அம்மாவிற்கு வயிறு வலிக்குதே பாவமென எண்ணி
மருந்து தேடி அலைந்தால் – ஆங்காங்கே
ரத்தம் நனைந்த துணிகள் சுருட்டி சுருட்டி கிடக்கும்
கேட்டால் அதலாம் அப்படித் தான், நீ போ
அதைத் தொடாதே என்பாய்;

ஏதோ புரியாமல்
கண்ணீர் துடைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்
ஆசிரியை அங்கே புற்றுநோய் பற்றி பாடம் நடத்துவாள்
வயிறு வலிக்கும், ரத்த வாந்தி வரும், உங்கள் வீட்டில் அம்மாவை
நேரத்திற்கு உணவுண்ணச் சொல்லுங்கள் என்பாள்,
அடிவயிறு எனக்குப் பிசையும்
அழுவேன்
அம்மா அம்மா என்று நினைத்துருகுவேன்;

உனக்கொன்று தெரியுமா அம்மா
நான் காதலித்திருக்கிறேன்
காதலிக்காக உயிர்விடவும் துணிந்திருக்கிறேன்
அவளின்றி வாழவே முடியாதெனும் வலியைச் சுமந்து
பல நாட்ககளைக் கடந்திருக்கிறேன்
இருந்துமவளைக்கூட உனக்காக விட்டேன் அம்மா;

நீ வேண்டுமா
அவள் வேண்டுமா என்று வந்தபோது
நீ போதுமென்று நின்றுகொண்டேன்..

அம்மா எனில் எனக்கு
அப்படி உயிர்,
உயிரென்ன உயிர்’ என்னம்மா எனக்கு
உயிரினும் பெரிது;

ஒரு உதிரம் சொட்டிவிடும் சடுதியில்
உனக்காக நான்
என்னை விட்டுவிடுவேன் அம்மா,
இதுவரை இறைவனிடம் கூட
இதையே அதிகம் கேட்டிருப்பேன் ‘நீயிருக்கும் வரை மட்டுமே
நானுமிருக்கவேண்டுமென்று’

பிறகு புரி
நீயில்லாமல் போவாயோ
எனும் பயம்
எனக்கு எத்தனைக் கொடிது.. ?

ஆனால் நீ இருக்க மாட்டாய் இனி’ என்று
வெகு துச்சமாய் சொல்வாய்,
கோபம வந்தால் ‘நான் செத்துப் போவேன் போ’ என்பாய்
எனக்கு உடம்பெல்லாம் அதிரும்,
உண்மையில் நீ எனைவிட்டுப் போய்விடுவாயோ என்று
பயம் வரும்,
இரவுகள் கடக்கும் முன் அவைகளை என்
கண்ணீரில் நனைத்தெடுப்பேன்,
எங்கேனும் அந்த ரத்தம் நனைந்த துணிகள்
இருக்குமா என்று மீண்டும் எழுந்துத் தேடுவேன்,
இருக்கும் –
ஓலைக் கூரையின் உள்ளே சொருகியோ
அல்லது வீட்டுக்குப் பின்
வீசியோ யிருப்பாய் நீ..,

எடுத்து வைத்து
பார்த்து பார்த்து அழுவேனம்மா நான்..,

நீ ஓடிவந்து பார்த்துவிட்டு
டேய் இதலாம் ஏன் எடுக்கிறாய் அறிவுகெட்டவனே போ அங்கே என
கடிந்துக் கொள்வாய்,

ஏம்மா உனக்கு இப்படி என்பேன்
அதலாம் அப்படித் தான் போ
பெரிய பெரிய ஆராய்ச்சி இப்பவே’ என்பாய் கோபத்தில்

மறுநாள் எழுந்து ஏம்மா நீ பாவமில்லையா என்பேன்
நீ என் முகமள்ளி ‘அதலாம் ஒன்னுமில்லைடா செல்லமே
நீ படிக்க கிளம்புன்னு சொல்லி
துரத்திவிடுவாய்,

உன் வார்த்தைகள் உனக்குச் சரி
எனக்கு சரி இல்லையே அம்மா..?

அது வெறும் தீட்டுதுணி என்று
அன்றே எனக்குச் சொல்லிக் கொடுத்தால்தானென்ன ?
மாதவிடாய் இப்படி ஆகும் என்று சொல்வதில் என்ன பெரிய தவறு..?

ஆனாலும், ஏதோ அது உனக்கான கூச்சம்
உன் வாய்க்கு அகப்பட்ட அச்சம்
நீ மறைத்துக் கொண்டாய் – ஆனால்
அது என்னை எத்தனைப் பெரிய நரகத்தில் தள்ளியதென்பதை
நீயறியமாட்டாய்,
இதைப் படிக்கும் பெண்கள் அறியட்டும் போதும்;

அவர்களின் பிள்ளைகளேனும் – நாளை
தனது அம்மாவிற்கு புற்றுநோய் போல் என்று
எதையோ ஒன்றை நினைத்து –
என்னைப் போல் இனி அழமாட்டார்கள்..
————————————————————–
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

சந்தவசந்தத்தின் படமொழிக் கவியரங்கக் கவிதை..

யிரில் உருகி உருகி ஒருதுளி விழ
விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி
அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம்!

புல் முளைத்தால் நெல்லாக்கி
நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து
பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க
கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்!!

டம் காட்டி எழில் கூட்டி மொழி வார்க்கும்
மன்னன்; பண்பிலோ அன்பிலோ குறையிலா
நன்னன்; குளிர்மழை அடைமழை படமழைப் பொழிய
ஐயா இலந்தையே பெயர்தந்த ‘படமாமணி’ வாழ்க! என வாழ்த்தி..

கவியரங்கத் தலைமை திரு. ந.உ. துரை அவர்களுக்கும்.. வணக்கம் கூறி, பெரியோர் அனைவரையும் வணங்கி இதோ இறுதியாய் எழுகிறது விடியலின் முதல்கூவல் போல, பாதி உள்ளும் வெளியுமாய்… என் படைப்பு..

தலைப்பு: விண்முட்டிய கண்களுக்குள்; மீண்டுமொரு கனவு’ முட்களுக்கும், ரோஜாவிற்குமாய்!!

டம்பெல்லாம் சிறகு முளைத்த தருணமது;

பறந்தொரு தினம் வெற்றியின் தலையிலமர்ந்த
மரணம்போல்; தனிமை தகிக்க தகிக்க நின்ற பொழுது அது;

வானம் நீண்டு விரிந்த பரந்தவெளிச் சாலையொன்றில்
மேகங்களெல்லாம் – எனை
அண்ணாந்துப் பார்த்துச் செல்ல,

நான் எட்டிய உயரத்தின் கடைவிளிம்பிற்குச் சென்று
தரை தேடி
கையில் அழுந்த மூடியிருந்த
நம்பிக்கையெனும்
ஒற்றை ஏணி பிரித்து – எனைத் தூக்கி நிறுத்திய
உயரத்திலிருந்து கீழே தலை தாழ்ந்துப் பார்க்கிறேன்
பூமி கடுகென சிறுத்துப் போயிருக்க –

சறுக்கி சறுக்கி விழுந்த நாட்களை
அடுக்கி அடுக்கிச் சேகரித்த ஏணி – இனி
கீழுள்ளவருக்காய் பயன்படுமென எண்ணி – என்
நம்பிக்கை மொத்தத்தையும்
அனுபவச் சட்டங்களால் கட்டி
தூக்கித் தரையில் வீசப் பார்கிறேன் – தரையில்

கடுகென சிறுத்த பூமியின் தலையில்
ரோஜா பூக்கள் சிரித்துக் குலுங்கிக் கொண்டிருந்தன
முட்கள் அதற்கு காவல்நின்று
காதலால் ரோஜாவை மணக்கச் செய்தன;

முட்களின் முதுகிலோ –
ஒது தேசத்தின் ஏக்கம் கொட்டிக்கிடந்தது;

இன்றைக்குள் நாளையை சேகரித்துக்கொள்ளும்
கனவு பல காத்துக் கிடந்தது;

எரியாவிளக்கின் இருட்டிலிருந்து – நெருப்பில்
கருகிய உடலின் காரணம் வரை’
அந்த முட்களின் சோம்பலில் முடங்கிக் கிடந்தன;

இலக்கியம்
இனப் பற்று
ஆராய்ச்சி
மொழியுணர்வு
புதிய கண்டுபிடிப்பு என
எந்த வெங்காயத்தின் மீதும் அக்கறையின்றி
பூத்துக் குலுங்கிய ரோஜாவின் மடியில் தலைவிரிக்கவே
முட்கள் கனவு கண்டன; காத்துக் கிடந்தன;

மொழி நம் அடையாளம்
தாய்மொழி நமை ஈன்றவளின் பெருமைக்கு நிகர்
தமிழ் நம் பிறப்பின் பேறு என்பதையெல்லாம் மறந்து
குழல் இனிது
குடி பெரிதென
லட்சியமின்றி வாழ்ந்த நாட்களையெல்லாம்
குப்பிகளில் நிரப்பி’ ரோஜாவின் பெயர் திணித்து
வெறுமனே வாழ்க்கையை கடந்துத் தீர்த்தன;

இனக்கவர்ச்சியை உயிரென்றும் –
உடல் பொருள் ஆவியென்றும் சொல்லி
ரோஜாவிற்கென முட்களும்
முட்களுக்கென ரோஜாக்களும் ஆங்காங்கே
ரயில் தண்டவாளத்தில் தலையைக் கவிழ்த்தன;

அணுப்பொழுதும் பிரிந்து வாழ
கனவில் கூட எண்ண மறுத்து –
அம்மா அப்பாக்களை மட்டும்
அனாதை விடுதியில் தள்ளின;

அக்காத் தங்கைகளின்
கட்டப்படாத தாலியை
வரதட்சணையால் அறுத்தன;

கைம்பெண்களின் கண்களில் காம
ஈட்டி வைத்துக் குத்தி –
குடித்த போதைக்கு ருசிசேர்க்க
தெரு வம்பையெல்லாம் விலைபேசி வாங்கின;

போர் போரென மாண்டலும்
அரசியல் அடி தகர்ந்து நாம் வீழ்தலும்
மனிதரின் ரத்தம் லஞ்சத்தால் குடிக்கப் படலும்
கலை மூழ்கி நம் பாரம்பரியம் மூழ்கி
கலாச்சாரமெல்லாம் ஆடம்பர ஆபரனங்களுக்குள்
அடங்கிப் போவதுமெல்லாம் –
ரோஜாவின்’ முட்களின்’ கண்களில் கொஞ்சமும்
குத்தவில்லை;

ரோஜாவிற்கு பரிசளிக்க அஞ்சரப்பெட்டி
அடகுக்குப் போனதும்,
காதலனுக்கு காத்துக் கிடக்க அப்பாவின் நம்பிக்கை
அரைநாள் விடுமுறையானதும்; அத்தனைப்பெரிய
குற்றமாக அவர்களுக்குத் தெரியவேயில்லை;

கடல்பொங்கி உடல் மிதப்பதும்
கரைதாண்டி உயிர் மரிப்பதும்
மழை வந்து மனிதம் நனைவதும்
வாடிக்கையாய் போனதில் மனம் முட்களுக்கும் ரோஜாவிற்கும்
கல்லாய் ஆயின –

சோற்றிற்கு பிள்ளைகள் தட்டேந்தி
திருடி
கொல்லையடித்து
கொலை செய்து
பொய்யும் புரட்டுமாய் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை
தடுக்க’ திருத்த’ எள்ளளவும் அவர்களுக்கு எண்ணமில்லை;

யாருக்கு இருக்கோ இல்லையோ
எனக்கு கோபம் தலைக்கேறி வந்தது
நேரே சென்று அவர்களின் கன்னம் பிடித்து
இழுத்து நான்கு அரை விட்டாலென்ன என்று கோபம்
பொங்கி பொங்கி வந்தது;

பொங்கிய கோபத்தின் பதட்டத்தில்; கை நடுங்கி
அந்த நம்பிக்கையெனும் ஏணி
திடுமென கை நழுவி தரைவழி விழ –
நான் தடுத்து பிடித்துவிடவெல்லாம் முனையவில்லை;

ஏதேனும் ஒரு ரோஜா
முட்களைச் சுமந்தேனும்
அந்த ஏணியின் வழியே ஒரு நாள்
இங்கே வராமலாப் போகும்?

வரட்டும் வரட்டும்
வரும்வரைக் காத்திருப்போமென விட்டுவிட்டேன்…

_வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில்
நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன்
நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை..

எழுந்து ஓடிவந்து நீ
என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து
விலகும் தூரத்தில் –
விடுபடுகிறேனம்மா நான்..

சுற்றி சுற்றி நீ ஓட
உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர
நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால்
நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி
கடக்கிறேன் கடக்கிறேன் மகளே..

கட்டிப்பிடித்துக் கொண்டு என்
மார்மீது நீ உறங்கிய பொழுதுகளில்
உன் தலைதடவிக் கொண்டே
இந்த நீ என்னோடிருக்க யிலாத நாட்களை எண்ணி அழுதிருக்கிறேன்
அப்படிப்பட்ட இந்த நாட்கள் –
இப்போது எப்படி வலிக்கிறது தெரியுமா.. (?)

உண்மையில் பிரிவு கனமென்று எனக்குத் தெரியும்
உன் பிரிவின்கனம் பெரிது மகளே..
ஓடிவந்து உடனே பார்க்க முடியாமல்
நினைத்தபோது உடனே பேசிடயியலாமல்
தவிக்குமுன் பிரிவு மிகக் கொடிது;

நீ நடந்த வீடு வலிக்கிறது
நீ அப்பா அப்பா என்று அழைத்த வார்த்தைகள் வலிக்கிறது
நீ தொலைபேசியில் பேசிவிட்டு நிறுத்தும் கணம்
வீட்டிற்கு வந்து நீ போனபின் நிலவும் தனிமை
எல்லாமே வேதனை; வேதனை மகளே..

மீண்டும் பேசினாலென்ன
வேண்டுமெனில் வந்து பார்த்தாலென்ன என்று
மிகச் சாதாரணமாக எண்ணத் தோணும்,
நான் நினைத்த போதெல்லாம் பேசினால்
எண்ணியபோதேல்லாம் வந்து பார்த்திருந்தால்
நான் வந்துசென்ற பொழுதுகளில் –
நம் மாப்பிள்ளையின் வீடு தேய்ந்தேப் போயிருக்காதா.. ?

உன் அம்மா பாவம்
உனக்காக என்னென்னவோ செய்வாள்
ஏதேதோ வாங்கக் கேட்பாள்
முடியாத பொழுதுதனில் எங்களின் ஓரிருவேளைப் பசியை யடக்கியேனும்
உனக்காக ஏதேனும் வாங்கி வருவோம் – நீ அதை வாங்கிக் கொண்டு
உள்ளே கொண்டுபோய் பிரித்துப் பார்ப்பாய்
அதை வாங்க நாங்கள் பட்ட கஷ்டம் உன் கண்களிலிருந்து
கண்ணீராய்ச் சொட்டும்;
உன் சொட்டிய கண்ணீரின் ஈரம் பார்த்து
எங்களுக்கு இன்னுமிரண்டுநாளின் பசி போகும்..

மாமியார் உபசரிப்பார்
மாமனார் நட்பு பரிமாறுவார்
மாப்பிள்ளையும் அன்பு செய்வாரென்று அறிந்தாலும்
எங்களின் கவனமெல்லாம் உன்மீதே யிருக்கும்,
அவர்கள்
உன்னை எப்படி நடத்துகிறார்களென்று நாங்கள்
பயந்து பயந்து பார்ப்போம்,
நீ நாங்களிருக்கும் தருணத்தை மகிழ்வாக எண்ணி
அருகே அருகே வந்து நிற்பாய்,
என்னென்னவோ கேட்க எண்ணி வார்த்தை போதாதவளாய்
உடம்பு தேவலையா உடம்பு தேவலையா என்பாய்,
நாங்கள் எல்லாம் சரியாதாம்மா இருக்கு, நீ பத்திரமென்று சொல்லிவிட்டு
புறப்படுகையில் –
உன் கண்கள் சிவக்கும்,
கண்ணீர் இமையில் நிரம்பி குவியும்,
மாப்பிள்ளை உன்னைப் பார்க்க நீயதை துடைத்து
முகத்தை முந்தானையில் மறைத்து விம்முவாய்,
நாங்கள் துடைத்துக் கொண்டதுகூட இல்லை
யாருக்கு யார் துடைக்க ?
இரண்டு பேரும் அழுதபடியே வீடு வருவோம்..

இதோ இன்று அந்த காலங்கூட கடந்துவிட்டது
அவளுமில்லா என் நாட்கள்
நீயுமில்லா நாட்களோடு இரட்டிப்பாய் உதிர்ந்து உதிர்ந்து
வீழ்கின்றன..

மரணத்தின் நெருக்கத்தில் எல்லாம்
கண்முன்னே விடுபடாது காட்சியாகிறது,
நீ நடந்தது பேசியது வளர்ந்தது எங்களைவிட்டுப் போனது
எல்லாம்
ஒன்றுவிடாமல்
நினைவினுள் வலித்து வலித்து நகர்கிறது மகளே..

உண்மையில் நீ
இருந்தும் இல்லாமலுமே எங்களைக் கொல்கிறாய்..

எவர் சட்டமோ யிது?
எப்படி சாய்ந்த தராசோ இது?
பெண்ணைப் பெற்ற வயிற்றில் யாரிட்ட நெருப்போ..யிது…….(?)
நாசமாகப் போகட்டும் நாடென்று
ஒரு சமூகத்தை அழிக்கும் கோபமொன்று
சாபமாகிப் போனதே’ யார் காரணமிதற்கு மகளே…?

நீயில்லாத பொழுதுகள்
உன் நினைவுகள் ஒன்றே’ ஒன்றே
எங்களை வாழ்விக்கவும்
உயிர்கொல்லவும் செய்வதன் கொடுமையை நீதியின் அகராதியில் எழுதாத
பிழையொன்றினை யார் செய்தார்?

எந்த அப்பாவிற்கு அம்மாவிற்கு
பெண்ணைப் பெற்றிடாத வயிறொன்றிலிருந்து முளைத்ததோ
இந்த பெண்ணை பெற்றவரிடமிருந்து பிரித்தனுப்பும் யுத்தி;

போகட்டும் மகளே – ஒரு தோசைபோல
திருப்பியாப் போட்டுவிடமுடியுமிச் சமூகத்தை ?
வலிக்கும் வலியொன்றே எனைப் போன்ற
அப்பாக்களுக்கு மிச்சம்..,

வலிக்க வலிக்க ஒழியுமிந்த பூமி
மனிதர்கள் சம மனிதர்களாக வாழாத
வேற்றுமைக் கோடுகளின் வழியே
அழியுமிந்த உலகம்,
அழியட்டும்
எல்லாமழிந்துப் போகட்டும்
பின் யாருமற்ற ஒரு பரந்தவெளியில்
மீண்டும் பிறக்குமொரு சமநிலை பூமிதனில்
நீ எங்களின் வீட்டிலும் நாங்கள் உன் வீட்டிலும்
யாரின் பிரிவுக்கு யாரும் ஆட்பட்டுக்கொள்ளாமல் வாழுமொரு வாழ்க்கை
மலரட்டும்..

அதுவரை புலம்பிக் கொண்டிருக்கும்
எனைப்போன்ற அப்பாக்களுக்கு ஆயுளில் பாதி குறைந்து
அவர்கள் சிந்தும் கண்ணீரில்
அது கரைந்துப் போகட்டும்..

உனக்கு நினைவிருக்குமா தெரியவில்லை
நீ
புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பாய்
நான் தூர உனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பேன்
நீ எழுந்துவந்து
அப்பா நான் திரும்பச் சொல்கிறேன் பாருங்கள் என்பாய்
இடையே ஓரிரு வரிகள் வார்த்தைகள் மறந்துப் போகும்
என்ன படித்தாய் நன்றாக படி போ என்பேன்
நீ எங்குநான் அடிக்கப்போகிறேனோ என்று பயந்து
வெகுநேரம் அமர்ந்து நன்றாக படித்துக்கொண்டு மீண்டும் வந்து ஒப்பிப்பாய்
உன் பார்வை எங்கு என் கைநீண்டு விடுமோ எனும்
புள்ளியிலேயே நின்றிருக்கும்
நான் விரைப்பாக அமர்ந்திருப்பேன்
உள்ளே உன்னை அடித்துவிடக் கூடாதே என்று துடித்திருப்பேன்
அந்த துடிப்பு இன்று உடம்பெல்லாம் பரவிக்கிடக்கிறது மகளே..

அப்போது அன்று நீ பாடம் ஒப்பிக்கையில்
உன் கண்களில் தெரிந்த அந்த பயத்தை எண்ணி எண்ணி
இன்று அழுகிறேன் மகளே..

காப்பி பிடிக்கும் உனக்கு
அதும் நான் குடித்துவிட்டு கடைசியாய் கொடுக்கும்
அந்த கொஞ்சந் தான் வேண்டுமென்பாய், நான்
இப்போது காப்பியே குடிப்பதில்லை, என்றேனும் குடித்தாலும்
குடித்து முடியும் முன் அருகில் நீ நிற்கிறாயா என்று
திரும்பிப் பார்ப்பேன்
மனசாறுதலுக்குப் பார்த்துவிட்டு கொஞ்சத்தை கீழே ஊற்றுவேன்
அதேப் பழக்கத்தில் நீ வீடுவந்தபோது காப்பி கலக்க
கடைசியில் கொஞ்சத்தை கீழே ஊற்ற..,
அதைப் பார்த்து நீ கலங்கிப் போக.., நானெப்படியம்மா சொல்வேன்
மறப்பேன்.. உனை மார்மீது சுமந்த பாசத்தை… (?)

அழுது அழுது கண்ணீரில் மிதக்கும்
வாழ்க்கை கொடுமை மகளே,
வீடெல்லாம் என்னவோ நீயில்லாமல்
கருப்பு பூசியது போன்ற –
ஒரு ரணம் பூத்துக் கொண்டுள்ளது தெரியுமா..

போகட்டும்..
இன்னும் கொஞ்ச நாட்கள்..

இப்படியே உன்னை நினைத்து நினைத்து
ஒரேயடியாக ஓர்நாள் விழுந்துப் போவேன்,
அன்று –
உன் நினைவால் மட்டுமே என்னுயிர் இழுத்துக் கொண்டிருக்கும்
அது தெரியாத ஊரார் ஒருவேளை மண்ணிழைத்துப் போடுவார்கள்
உயிர் நிற்கவில்லையே என சோறு கரைத்தோ
இனிப்புனு நுணுக்கியோ
உப்பு சுட்டோ
காரம் உடைத்தோ எனக்கு எதெது பிடிக்குமென்று கேட்டு
வாயில் போடுவார்கள்,
உயிர் அவைகளை வெளியில் துப்பிவிட்டு நீ என்
தோளில் அமர்ந்துச் சுற்றிய நாட்களை
அசைப் போட்டுக் கொண்டிருக்கும்..

நீ கேள்வியுற்ற உடன் வாரி முடியாமலே ஓடிவருவாய்
வழியெல்லாம் நீ கேவி கேவி யழுவாய்
ஐயோ என் மகள் அழுவாளோ என்றுபயந்து போகாமல் என்னுயிரை
இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பேன்
நீ துள்ளி ஆடிய இதே வீட்டில் வீல்.. என்று கத்திக்கொண்டு உள்நுழைவாய்
அப்பா அப்பா என்று கதறி கதறி அழுவாய்
தலைப் பிய்த்து முகம் கீறி மார்பில் அடித்துக் கொண்டு அழுவாய்
அதைக் காண சகியாமல் –
என் மூச்சு மெல்ல மெல்ல நின்றுபோகும்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்