எத்தனை எத்தனை
சப்தங்கள்
ஒவ்வொரு சுவருக்குள்ளும் (?)
மண் நனைந்து
பிசைந்து
இறுகி
கல்லாகி
சுவர்களுள் அடங்கியது வரை
வீடு நிறைந்த சப்தங்களே
சப்தங்களே எங்கும்..,
அத்தனைச்
சப்தங்களையும்
தனக்குள் வைத்துக்கொண்டு
மௌனத்தை மட்டுமே
நமக்குத்
தருகிறது வீடு;
நாம்
எண்ணற்ற மௌனத்தை
உள்ளே
வைத்துக்கொண்டு
வெளியே சப்தங்களாகவே
வெளிப்படுகிறோம் (?)!
சப்தங்களே
நமை சமச்சீரிலிருந்து
குறைக்கிறது –
என்பது தெரிந்தும்,
சப்தங்களாகவே
வெளிப்படுகிறோம்;
சப்தத்தை
உதறி
உதறி
கடைசியாய் மிஞ்சும் நிசப்தத்தில்
ஞானமிருப்பதாய் அறிந்தும்
சப்தத்தில் துவங்கி
சப்ததிலேயே முடிகிறது
நம் அதிகப்பேரின் நாட்கள்..
சப்தத்தோடு
வீட்டை அடைத்துக் கொண்டு
அமைதியைக் குலைக்கும்
மனிதர்களை
வீடும் மன்னிக்கிறது
சுவர்களும் மன்னிக்கிறது
வீட்டிற்கும் சுவற்றிற்கும்
நாம் அமைதியாகிவிடுவோமென்று
நம்பிக்கை;
நம்பிக்கையை
சப்தங்களை யகற்றி
மனதுள் புதைத்துக் கொண்டுப்
பார்க்கிறேன் –
இதில்
யார் மேல் ?
யார் கீழ்?
வீடா ?
அல்லது வீட்டைக் கட்டும்
மனிதர்களா?
என்னைக் கேட்டால்
வீடு மேலென்பேன்!!
—————————————————
வித்யாசாகர்