கவனிக்கவேண்டிய காருண்யம்..

8
முருங்கைக் கீரை பறித்து
விற்கிறாள்;
அரைக்கீரை முளைக்கீரை
என்றெல்லாம் குரலெழுப்பிப்
போகிறாள்,
மாம்பழம்
முருக்கு  சுட்டுக்கூட
விற்பாளவள்;

அவளின் கூன்விழுந்த
முதுகின் மீதேறி
தலைநரைத்த மயிர்களோடு ஆடி
முதுமை வலிப்பதையும் அறியாது
தனிமை சுடுவதும் புரியாமல்
வெயில்  மழையில் தேயுமவளின்
கால்களையும் கவனிக்காது,

அவளைக் கடந்துபோய்
பிறரிடம் கைநீட்டி
பிச்சை வாங்கி
வயிற்றை  சோம்பலால் நிரப்பி
வயதை சுயநலத்தால் தீர்க்கும்
குமரிகளையும்
குழந்தைகளையும்
உழைக்க முடிந்தவர்களையும் காண்கையில் –

செருப்பெடுத்து என் தலையில்
ஆயிரம் அடி அடிக்கிறது என் மனசு..

வளரும்  சமூகம் சாய்ந்துகொண்டே
வளர்வதற்கு
நானும் காரணம் என்கிறது,

மறுக்கவே துணியாமல்
மேலேவிழும்  செருப்படிகளோடு
மிக வேகமாக நடக்கிறேன்; அந்தப்

பாட்டியிடமிருந்து
ஒரு மாம்பழத்தையோ
ஒரு கட்டு கீரையையோ
ஒருபா குறைத்து கேட்டு வாங்கிக்கலாம்..

தெருவில் நாளை நம்
பிள்ளைகள் பிச்சை எடுத்தால்
போட உதவும்..
——————————————————

வித்யாசாகர்
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

7
நாடு
பிரித்துவிட்டேன்,
மொழி
பிரித்துவிட்டேன்,
மதம்
பிரித்துவிட்டேன்,
சாதி
அட நன்றாகவே பிரித்துவைத்திருக்கிறேன்;

வீட்டில் உற்றுப் பார்த்தால்
ஐயோ; அங்கே ஆயிரம் பிரிவு..

அதைப் பற்றியெல்லாம்
எனக்கெதற்கு வெட்கம் மானம் சூடு
சொரனையெல்லாம்.. (?)

பிரிவிலும்
பிளவிலும்
விழுந்து எழுந்து எப்படியோ
சாமி கும்பிட்டு பெரியாளாகி விடலாமென்றோ,
திரைப்படம்  கண்டு
அறிவைப் பெருக்கிக் கொள்ளலாமென்றோ,
உழைக்காவிட்டாலென்ன
அம்மா உணவகம் போதுமென்றோ
சாமிக்கும் பேயிக்கும்
போலீசுக்கும் திருடனுக்கும் பயந்து பயந்து
ஒதுங்கி ஒதுங்கி,
வயிறு நிறைய சுயநலத்தையும்
மனசு நிறைய மாசுகளையும் ஏற்றிக்கொண்டு
மாடுகள் இழுத்து ஓடும்
இலக்கு தெரியாப் பயணத்தில்
மெத்தப் படித்தவனாகவும்
யாரோ விரட்ட விரட்ட
தன்னை பெரிய அறிவாளி என்று எண்ணியவாறு
ஓடும் –
எனது பிள்ளைக்கு நான் அப்பா.. அம்மா..

அவ்வளவுதான்’
வேறென்ன வேண்டும்?

ஒருவேளை –
குபீரென தீப்பற்றி ஏதேனும்
வயிற்றிற்குள்ளோ
மனதிற்குள்ளோ எரிந்தால்
காலடியில் கிடக்கும் மனசாட்சியை
போட்டு ஒரு மிதி மிதித்துக்கொண்டு
மீண்டும்  வேறொரு வழி தேடி
ஓடிக்கொண்டே யிருப்போம்..

எங்கோ யாருக்கோ
எப்போதேனும் ஞானம் வரும்
வந்தால் அப்போது வந்து அவர்
நம்மை
நம் நாட்டை
உலகையெல்லாம் திருத்திக் கொள்வார்..

நமக்கு
நம் சாதி முக்கியம்
மதம் ?
முக்கியம்
இனம் முக்கியம்
இருக்கும் உயிர் விட்டுப்பிரியாதவரை
இப்படியே வாழ்ந்து போனால் போதும்;

சூரியன் நிலா மழை
சிட்டுக்குருவி
கடல் காற்று இலை
மரம்
சன்னல்கள்
அது வழியே தெரியும் உலகம்
உலகத்துள் நாம்
நாமிருக்கிறோம்
உலகத்துள் நாமிருக்கிறோம்
உயிரோடிருக்கிறோம்
அது போதும்
அது போதும்..

………..
………..
——————————————————
வித்யாசாகர்
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

6

இரவில் நடக்கிறேன்
எத்தனைப் பூச்சிகள்
இறந்தனவோ தெரியவில்லை;

இரவில் நடக்கிறேன்
எத்தனை மலர்கள்
கசங்கினவோ தெரியவில்லை;

இரவில் நடக்கிறேன்
எத்தனைச் சுவடுகள்
கலைந்தனவோ தெரியவில்லை;

இரவில் நடக்கிறேன்
இன்னும் –
எத்தனைக் காலத்திற்கு
இருளில்  நடப்பேனோ தெரியவில்லை!!

——————————————————
வித்யாசாகர்
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

ழைக்காலம்
மரணத்தின் வாசம்
மணற்தடமெங்கும்
மரக்கட்டை சாபம்;

ழைக்காலம்
மரண ஓலம்
குளங்குட்டை தோறும்
தவளைகள் ஏலம்;

ழைக்காலம்
பூக்களெல்லாம் பாவம்
உதிர்ந்து நனைந்து
உயிரோடு சாகும்;

ழைக்காலம்
மின்கம்பி அறும்
மின்வெட்டிற்கு முன்பாக
காகத்தின் சிறகெரியும்;

ழைக்காலம்
துண்டுதுண்டாய்ப் போகும்
மண்ணுக்குச் சாமி
மண்புழு மழைநீரில் நாறும்;

ழைக்காலம்
மாடும் கன்றும் – வெளியே
கொசு கடிக்க வாழும்,
கரந்தப் பாலில் மனிதம் சர்க்கரையால் இனிக்கும்;

ழைக்காலம்
கூரைகள் ஒழுகும்
ஈரவிறகில் சிறுமியின்
பசிகூடப் புகையும்,

ழைக்காலம்
மண்ணெண்ணையில் நெருப்பு வாங்கி
அவசரமாய் உலை கொதிக்கும்,
போதாத அரிசியால் சாதம்
கேட்காமலே கஞ்சாகக் குழையும்;

ழைக்காலம்
மாடிவீட்டில் வரும்போது
வசந்தமாகவே உள்ளேவரும்,
கூரைக்குள் மட்டுந்தானோ
காய்ச்சலாகக் கொதிகொதிக்கும்;

மருந்துவாங்கக் கண்ணீர்
யாசகமும் கேட்டுநிற்கும்
கூடிப்போகும் வட்டிக்கடனில்
இருக்குமுயிரை மெல்லவிடும்;

பாரபட்சத்தால் இயற்கையின்
புனிதம்கூட பூதமாகும்,
மழை பெய்யப் பெய்ய – ஈரத்தில்
மனசாட்சி மிகநன்றாக வேகும்!!
——————————————————————–
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

4) அம்மா வரயிருக்கும் கடைசி இரவு..

ந்த இரவைக் குடிக்க
ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள்
குடித்துவிட்டு கீழே சரிகையில்
பொழுது விடியும்;
விடிந்தால் அம்மா வருவாள்,

இத்தனை நாள் –
அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம்
நெஞ்சை அடைக்கும்,

அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம்
கண்ணீராய் உயிருருக வழியும்,

கலங்கியக் கண்பார்த்து அம்மா
துடித்துப்போவாள்’
ஈரம் நனைந்தப் பார்வையால்
எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி
ம்ம்.. என்னைப் பார் என்பாள்’
நான் மீண்டும் எனை
உயிர்பித்துப் கொள்வேன்,
அவள் அழைத்து
வா என்றதும்
அதிர்ந்து எழுந்து அவள்முன் நிற்பேன்,

அவள் இல்லாதிருந்த நாட்களின்
கதையையெல்லாம்
அவளிடம் வாய்நிரையச் சொல்வேன்
அம்மா ‘என் பிள்ளையென்று’ ஆசையோடு கேட்பாள்
கன்னம் தடவி உச்சிமுகர்வாள்
என் சிரிப்பு கண்டு சிரிப்பாள்
அம்மாவின் மடியில் தலைவைத்துக் கொள்வேன்
அவளின் சேலை வாசத்தில் – உலகத்தின்
வாசம் உணர்வேன்
அவள் தொடுதலில் உடம்பெல்லாம்
நாட்களும் வருடமும் ஆயுள் ஆயுளாக
முளைத்துக் கொள்ளும்,

அவளின் தொடுதலின் ஸ்பரிசத்தில்
அவளின் கண்முன்னே
உயிர்பூத்துக் கிடப்பேன் நான்;

அதுவரை என்னைப்
போகவிடுங்கள்,

இப்போதைக்கு –
ஒரு சொட்டேனும் விஷம் கொடுங்கள்
அவளில்லாத இரவை
அந்த விசத்தோடு குடித்துவிடுகிறேன்!!
———————————————————–
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக