“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்..
அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்..
அக்கினிக்குஞ்சிற்கும், உடன் பயணிக்கும் நட்புள்ளங்களுக்குமெனது நன்றியும் வணக்கமும்..
வித்யாசாகர்
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
எங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்..
தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..
கேட்போர், உணர்வோர், ரசிப்போர், பகிர்வோர், பாராட்டுவோர், கருத்துப் பகிர்வோர், குறைகாண்போர் அனைவருக்கும் நன்றி நிறைந்த வணக்கத்துடன்..
———————————————————– வித்யாசாகர்
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடியைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவுசெய்யப்பட்டது.
வளர வளர, வயசு தீர வயசு வர, வாழ்க்கைப் பற்றி; வளரும் குழந்தைக்கும் ஒரு கனவிருக்கும்.
அப்படி எல்லாக் கனவுகளையும் தீயிலிட்டு, நெருப்போடு தன் உடலையேந்திப் போராடியச் செங்கொடிக்கு மூன்று உயிருக்கான நீதி மட்டுமே கனவாக இருந்ததெனில்; அந்த உத்தமியின் பெருமயைப் பேச எனக்குக் கிடைத்த இந்த மாமன்றத்தைப் பெரிதாக மதிக்கிறேன்.. நன்றியோடு நினைக்கிறேன்..
ஒரு சின்னப்பொண்ணு அவ;
சமூக அக்கறையும் குடும்பப் பாசமும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்த திறமையான பெண்ணவள்..
ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டுறியே… பேசாம தபால்ல பட்டப்படிப்புக்கு படி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதிலென்ன தெரியுமா? நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’ என்றிருக்கிறாள்..
இசையில் அந்தப்பொண்ணுக்கு அத்தனை ஆர்வம் அதிகமாம். பறையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சாள்னா, இன்றைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்குமாம். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பாளாம்.
தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ எந்தச் சூழ்நிலைலயும் அவள் ஆதரிக்கவே கூடாதுன்றதுல உறுதியா இருந்திருக்கா. அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது…
ஒரு கூலி வேலை செய்யுற அப்பா, சின்ன வயசுலையே அம்மா இறந்துப்போறாங்க, ஒரு கட்டத்துல அப்பா இரண்டாவது திருமணம் செய்து வறாரு. வாழக் கிடைக்காத தாயன்பை அந்த அம்மா தறா, அதையும் பொறுக்காத அப்பா குடிச்சிட்டு வந்து சண்டைப் போடுறாரு, குழந்தைகளைப் போட்டு அடிக்கிறாரு. தட்டிக்கேட்ட சிற்றன்னையையும் அடித்து சண்டைக்கு இழுக்க ஒரு கட்டத்துல சண்டை முத்திப்போயி கோபத்துல மண்ணெண்ணெயை ஊற்றி அந்த இரண்டாம் தாயை எரித்தே விடுகிறான் அந்தப் படுபாவி..
எப்படியேனும் அந்த இரண்டாம் தாயை காப்பாற்றப் போராடும் செங்கொடியும் அவளுடைய தங்கச்சும் தீப்புண்ணிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அப்போது அவளுக்கு பதினோரு வயது. நேரே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது தந்தையை சிறையிலிட்டு தண்டனை வாங்கித் தருகிறாள் செங்கொடி.
கடைசியில் யாருமற்ற நிலையில் அவளுடைய சிற்றப்பா எடுத்தவளை வளர்க்கிறார். சமுதாயப் பார்வைகள் விரிகிறது செங்கொடிக்கு. மக்கள் மன்றத்துல சேர்ந்து பல தொண்டாற்றி வரும்போதுதான் ஈழத்துப் பிரச்சனைகள் அவளுடையக் கண்ணில்படவருது. முத்துக்குமார் தீக்குளிக்கிறார்.
அந்த சம்பவம் அவளுடைய மனதில் மிக ஆழமாகப் படுகிறது. எல்லா நேரத்திலும் ஆசானாக இருக்கும் தனது சிற்றப்பாவை நோக்கிக் கேட்கிறாள்; “ஏம்பா, ஏதோ ஒரு கட்டத்துல எல்லோரும் பொங்கியெழுறோம், போராடுறோம், நீதி நியாயம்னு கத்துறோம், பிறகு நாளாக ஆக அது மறந்து அந்தப் பிரச்சனைகளை அப்படியே விட்டுட்டுக் கடந்துப் போயிடுறோமே, பிறகு நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்னப்பா? என்கிறாள். அதற்கு யாராலும் பதில்சொல்ல முடியவில்லை.
அந்தச் சமயம் பார்த்துத் தான் இந்த மூவர் விடுதலைக் கோரியப் போராட்டம் எழுகிறது. தானும் கலந்துக் கொண்டு பெரும் ஆற்றலோடு களமாடுகிறாள். ஒரு கட்டத்தில் அரசியலின் அவலநிலைவெடிக்கும் ஆட்டம் துவங்க நீதி வேறாகவும் உண்மை வேறாகவும் திரிந்துவருகிறது. பொங்கி எழுகிறாள் செங்கொடி.
இதை இப்படியே விடக்கூடாது, நீதி வேண்டும். நியாயம் வெல்லனும், எனது அண்ணன்கள் அநீதியால் சாகக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். எத்தனையோ போராட்டம், எங்கெங்கோ கெஞ்சல், அழை என எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறாள். கடைசியில் எல்லாம் தோற்றுப் போக அவளுக்குக் கடைசியாக மிஞ்சியது; தனது உயிரும் உடலும் மட்டுமே…
அதை கயிலேந்துகிறாள். மண்ணெண்ணெய் ஊற்றினால் அணைத்துவிடுவார்கள் என்று பெட்ரோல் வாங்கி உடலின்மேல் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும்.. நீதி வேண்டும்.. எனது அண்ணன்கள் மூவரைக் காப்பாற்று.. காப்பாற்று.. என்றுக் கத்தி கூச்சலிட்டவாறே முனகி முனகி தீயில் வெந்துக் கருகிச் சரிகிறாள்…
இங்கே தற்கொலை சரியான தீர்ப்பென்பது வாதமில்லை. அவளை அந்நிலைக்குத் தள்ளியது யார்? அவளைக் கொன்றது யார்? சமூக அக்கறைக் கொண்ட அழுத்தமானப் பெண்ணொருத்தியை அப்படி கருகி சாம்பலாக்கியது யார்? நம் திராணி போதாத அரசியல் செயல்களும் அதைத் தட்டிக்கேட்காமல் மறைமுகமாக ஊக்குவித்த நாமுமில்லையா?
அதை நாம் சரிசெய்யவேண்டும். அரசியல் நேர்மை, நடத்தையில் கண்ணியம், செயலில் பொதுதர்மம், பேச்சில் உண்மை என்று வாழ்ந்தவர்கள் நாம்; தமிழர்கள். அந்தத் தமிழரின் பெருமை காலத்திற்கும் நன்னிலத்தில் நிலைத்தல் வேண்டும். அங்ஙனம் தமிழரின் பெருமையில் ஒன்றான நீதிக்குவேண்டி உயிர்தந்த தமிழச்சி என் செங்கொடியின் தியகாத்தையும் எனது தமிழர் பெருமையில் ஒன்றெனக் கருதி.. இந்த அஞ்சலிக் கவிதையோடு விடைகொள்கிறேன்..
மழைஒழுகும் வீடு
மல்லிகை உதிர்ந்த முற்றம்
கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு
தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம்
மண்வாசத்தோடு வீசும் காற்று
மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா
வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா
புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி
டமடமவென இடிக்கும் வானம்
இருள் அடையும் பொழுது
கறுத்துச்சூழும் மேகம்
ஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்
காற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்
பசியில் பரபரக்கும் வயிறு
பள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் படபடப்பு
மழையொழுகும் வீட்டினுள் நிரம்பிய
பாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்
மண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென
எல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..
மனதை என்னசெய்வேன்.. ?
அடுக்குமாடி கட்டிடத்தின் மேலமர்ந்துகொண்டு
மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..
——————————————————— வித்யாசாகர்
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!