52 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

தோ பார்; எல்லோரும் நடந்து
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!

உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் –
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி –
நாணற்றுப் போகிறேன் நான்!

உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!

உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் –
வாழ விதித்த; விதி எனலாம்!

உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி –
மௌன சோகம் கொள்ளலாம்!

உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் –
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!

உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!

நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று –
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!

நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் –
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் –
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!

உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை –
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!!
——————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

10 Responses to 52 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

  1. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    காதல்… அனுபவம் போலும்!!
    நன்று..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      வாழ்வின் அனுபவத்தில் காதலும் ஒன்றெனக் கொள்வோம். வெகு நாட்களாக காணவில்லையே ராதா.. , வேலை அழுத்தத்தில் மறுமொழிய நேரமில்லையோ.., எனினும் இந்த வருகைக்கு மிக்க நன்றியறிவிக்கிறேன்!

      Like

  2. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    கணினி உலகில் சற்று வேலை பளு …
    தற்போதுதான் கவனித்தேன் உங்களது முகப்பு Animation அர்த்தமுள்ளது. Animation நன்றாக செய்வீர்களா?

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அது வேறொரு தளத்திலிருந்து (http://www.zwani.com/graphics/hello/) பெற்றேன். அதை காண்கையில் தோன்றிய சிந்தனை தான் நம்முடையது. அதில் மேற்கூறிய இத்தளத்தின் இணைப்பே இருந்தது, ஆனால் அதை கொடுத்து வைப்பின் சொடுக்குவதின் மூலம் பக்கம் மாறி சிந்தனை திசை திரும்ப வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொண்டு நம் தளத்திற்கே வருமாறு அமைத்துள்ளோம்.. தவிர, அத்தனை அனிமேஷன் பற்றி எல்லாம் விரிவாக தெரியாது, கூர்ந்து ரசிக்க இயலும்!

      Like

  3. Babu's avatar Babu சொல்கிறார்:

    நண்பர் வித்யா சாகர் அவர்களே!

    அற்புதம்!

    அனுபவம் என்று சகோதரி ராதா சொல்லி இருக்கிறார்கள்.
    அனுபவம் அல்ல ஆழ்ந்த சிந்தனையின் அழகு காவியம்!

    ஆழ்ந்த சிந்தனைக்கு செல்ல அளவற்ற அறிவாற்றல் தேவை
    அதுதான் நண்பர் கல்வி கடல் (வித்யா= கல்வி, சாகர்=கடல்) -இன்
    இந்த அற்புத சோலை எனலாம்!

    உங்கள் காவி சோலையில் இன்னும் மலர்கள் பூக்கட்டும்,
    வண்டுகள் போல் நங்கள் உங்களை வளம் வருவோம் என்றன்றும்…

    நன்றி, வணக்கம்!

    அன்புடன்!
    பாபு

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      என்னென்னமோ சொல்றீங்களே.. பாபு. ஒரு விருது பெற்ற உணர்வு ஏற்படுகிறது. நிச்சையம் வெறும் பாராட்டு வார்த்தைகளால் அல்ல. எதை நோக்கியோ எதையும் செய்ய வில்லை; சரியாகவே கடந்துக் கொண்டிருக்கிறோம் எனும் தைரியம் கொள்ள; பெற்ற அங்கீகாரத்தில்.

      மிக்க நன்றி பாபு. முழு அன்பாய் இணைந்திருப்போம். மொழிக்காய்; கவியிலும் கதையிலும் ஆடைகள் நெய்துடுத்தி ‘எழுத்துப் பணி புரிவோம், உழைப்பில் மிளிரட்டும் தமிழ்!!

      Like

  4. Tamilparks's avatar Tamilparks சொல்கிறார்:

    மிகவும் நல்ல பழுத்த அனுபவம்

    Like

  5. தீபா சமயவேலு's avatar தீபா சமயவேலு சொல்கிறார்:

    கவிதை விரும்பி.

    Like

தீபா சமயவேலு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி