அம்மா தந்த
முத்தத்தைப்போல
அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு;
நிலவின் வெண்முகத்தில்
பூசிய வண்ணங்களாய் – உன்
இதழ் விரிந்து மூடும் அழகில்
ஆயிரமாயிரமாய் –
வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது;
நினைக்கையில்
நினைத்துக்கொண்டே இருக்கவும்,
நீ பேசி நான் கேட்கையில்
நீ பேசிக்கொண்டேயிருக்கவும்
மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு
உன்பின்னேயே அலைகிறது;
பிடிக்கும் என்று சொல்லாமலே
பார்ப்பது,
பார்க்கப் பார்க்க
பிடித்துவிடுவது,
பிடித்ததில் லயித்துக் கிடப்பது – என
எல்லாமே உன்னால் சாத்தியப்பட்டுவிடுகிறது;
உறக்கம் தொலைந்த
தவிப்பில்லை,
உணவை மறுக்கும் கனவுகளின்
தொல்லையில்லை,
உனை நினைக்க நினைக்க – எல்லாமே
அதுவாக நடக்கிறது; நினைவில்
அழகாக இனிக்கிறது;
இனி நீ எனக்கு
ஆறு பிறப்பு
எழு ஜென்மதிற்கெல்லாம்
தேவையில்லை,
நான் பார்க்கும்போதெல்லாம் – எதிரே
சிரித்துக்கொண்டேயிரு போதும்!!
—————————————————————
வித்யாசாகர்