6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

ந்த மின்னலின் வேகத்தில்
இதய சொந்தமானவளே,
சொக்கும் விழிப் பார்வையின்றி
மனதால் சொக்குப் பொடி போட்டவளே;
 
மிச்சமுள்ள ஆசைகளில்
மொத்தமாய் பூத்தவளே,
மூன்று கடல் தாண்டி நின்றும்
காதலால்; இதயத்தில் அறைந்தவளே; 
 
காலதவம் பூண்டெழுந்து
பரிசிட்ட பெண்விளக்கே,
கவிதை நெருப்பென பொங்கி 
இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;
 
மூச்சிக்கு முன்னொரு முறையேனும் 
சுவாசத்தில் வசிப்பவளே, 
எனக்கு இதய வாசல் கதவு திறக்க
இணையத்தில் வந்தவளே;
 
நட்புக்கு சக்கரை போட்டு
காதலாய் திரித்தவளே,
கெட்டுப் போகாத உன் குணத்தால
மனசெல்லாம் கெடுத்தவளே;
 
குண்டு குண்டு கண்ணாலே
மின்னஞ்சலில் மிரட்டியவளே,
யாரும் விரட்டாத அன்பெடுத்து
கைகோர்க்க துடிப்பவளே;
 
கற்கண்டு  தேனாட்டம்
கனவு கூட இனிக்குதடி,
நீ கூடி வாழும் நாளுக்குத் தான்
வாழ்க்கை சொர்க்கமாய் கனக்குதடி;
 
மாலை மாத்தும் நாளு இதோ
இப்போ கூட போகுதேடி,
இனிமேலும் தயக்கமென்ன
ஓடிவந்து கட்டிக்கடி!! உயிரெல்லாம் பூத்துக்கடி!
———————————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , . Bookmark the permalink.

13 Responses to 6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

  1. தமிழ் மதுரம்..!'s avatar தமிழ் மதுரம்..! சொல்கிறார்:

    சந்த கவி. கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. அருமை.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி கமல். இன்றலவில் நிறைய காதல்கள் பூக்கும் ஈர நிலமாக இணையம் உருவாகிக் கொண்டிருக்க; அங்ஙனம் இதயம் தொட்ட நினைவுகளை எழுதி வைக்காமல் திரியும் நிறைய பேரை இங்கு நினைவு கூற, யாரோ கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதிய கவிதை இது. பிடித்துள்ளமையை, ‘எழுதிய நேரம் வீணல்ல என்றறிவிக்கும் ஒரு அறிவிப்பாக எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

      Like

  2. uumm's avatar uumm சொல்கிறார்:

    மிக அருமை வித்யாசாகர்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      *மிக்க நன்றி உமா.* ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பு, கலாச்சாரம் நமக்குத் தந்த விகிதாச்சாரம். நம்மால் மறுக்கவோ தாண்டி விடவோ; மனைவியின் கணவனின் அன்பும், துரோகம் இழைக்கக் கூடாது என்று இட்டுக் கொண்ட குடும்ப வட்டமும், வழி தராவிட்டாலும், ஆங்காங்கே சந்திக்கும் நபர் ‘மனதில் எப்படியோ முண்டியடித்து, நட்பு அன்பு உயர்வு திறமை அழகு அதிசயம் என எதன் ஒன்றன் வழியோ மனதை ஆட்கொண்டு விடுவதும், தீவிரமாய் வெளியே தள்ளி நம் கற்பை நாம் நிரூபணம் செய்வதும், எத்தனை சரியோ என்பதை காட்டிலும் ‘குடும்பத்தில் குழப்பமின்றி ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வழி ஏற்படுத்துகிறது தான்.

      ஆனால், அந்த நல்ல வாழ்க்கையில் எப்படியோ சில இதயங்கள் நசுக்கப் படுகின்றன என்பது மட்டுமே வெளியில் தெரியாத உண்மையாகிறது. எப்படியாயினும், நினைப்பதை நினைத்தவாறு ஆட்கொள்ளும் விலங்கின் மனோபாவத்திலிருந்து தள்ளி நிற்க, இப்படி நம்மை நாம் மனிதராய் சொல்லி மெச்சிக் கொள்ள, அடையாளப் படுத்த, ‘குடும்பம், கலாச்சாரம், ஒருவனுக்கு ஒருத்தி எனும் வட்டங்கள் தேவையாகவே, ‘சிந்திக்க வைக்கிறது இதுவரை பெற்றுள்ள அனுபவங்களெல்லாம்.

      ஆனால், அந்த இத்தனை தூர இடைவெளிகளில் மனம் படும் பாட்டை, வெறுமனே கட்டுப் பாடில்லா மனசென்று குற்றம் புகுத்தி விட முடிவதில்லை. மனதை கவர ஒரு வார்த்தை வலிதாகி விடுகிறது. எப்படியோ எல்லாவற்றையும் மனதில் போட்டு மறைத்து ஒளித்து அல்லது வலுக் கட்டாயமாக நான் இப்படி தான், என மாற்றிக் கொண்டு நல்லவர்களாக அடையாளப் படுத்திக் கொள்பவர்களை மெச்சுவோம், இடையே தொலைந்த மனதுகளின் சுவடுகளை சற்று கவிதைகளாகவாவது புனைவோமென்று என்ன தோன்றுகிறது.

      சில தருணங்கள், தீர்வினை தேட வேண்டாத அல்லது தேட இயலாத தூரத்தில் தள்ளி நின்று கொள்கையில்; உணர்வுகளை உணர்வது போல் பதிவோம். சரி, தவறை காலம் தன் பயனத்திற்கேற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ளும். இல்லையா உமா???

      Like

  3. thamilarasi's avatar thamilarasi சொல்கிறார்:

    //நட்புக்கு சக்கரை போட்டு
    காதலாய் திரித்தவளே,
    கெட்டுப் போகாத உன் குணத்தால
    மனசெல்லாம் கெடுத்தவளே//

    இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அது ஒரு உன்னதமான அன்பினை வெளிப்படுத்தத் துடிப்பவனின் வெளிப்பாடு தமிழ். நல்லவளை கண்டதின் பேரில் காதலுற்று காத்திருப்பதையும், காத்திருப்பதால் கடமைகள் விடுபட்டதையும் கூட எண்ணி, தான் கெட்டுப் போனதாய் வருந்தும் ஒரு மனநிலையை காதலிக்கு புரிய வைக்க முனைந்த ஒரு நல்லவனின் வலி!

      நட்பெல்லாமே, காதலாய் திரிந்துக் கொள்வதில்லை. சில நட்பால் கூடும் இதயங்கள், கூடிய பின் ‘இதுவே தனக்குறிய துணை’ என்று உணர்ந்துக் கொள்ளுதலில், சற்றுக் கூடுதல் நெருக்கமெனும் சர்க்கரை இடப் பட்டு இணைந்து போதலின் தடம் பதிந்த வரிகள். வலிகள்.

      மிக்க நன்றி தமிழரசி..

      Like

  4. sarala's avatar sarala சொல்கிறார்:

    வித்யா ஒவொரு மனிதனுக்குள்ளும் இப்படி ஒரு ஆதங்கமும் ஆழமான ஆத்மாவும் இருக்கத்தான் செய்கிறது.

    சமூகம் என்னும் சல்லடை
    சிலவற்றை சலித்து காட்ட சொல்வதால்
    அதிகமான அன்புகள் அப்படியே
    மனதிற்குள் தங்கிவிடுகிறது.

    உங்களின் இந்த உணர்வுபூர்வமான, ஆழமான, அன்பான மனது கிடைக்காதா என்ற ஏக்கம் எனகுள்ளும் இருக்கு. அது காதலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை, நட்பு என்னும் வலிமையான பாலமாக இருந்தால் வாழ்வின் எல்லைவரை பயணிக்கலாம்.

    உங்கள் பதிவுகள் என்னை கொஞ்சம் பாதிக்கிறது. அன்பிற்கு இல்லையே அடைக்கும் தாழ்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு சரளாவிற்கு, மனது மனதிற்கு புரிந்து விடுகிறது. அன்பிருக்கும் இடத்தில் மட்டுமே பிறருக்கான அன்பும் சுரக்கும். தங்கள் அன்பில் தங்களின் கண்ணியமும் நேர்மையும் புரிந்து விடும் உண்மை இருக்கிறது.

      வெகு தீர்வாக உணர்கிறேன் சரளா, அன்பினை காதலாக தான் பிரதிபலிக்க வேண்டும் என்றில்லை. இந்த கவிதை வேறு ஒரு உணர்வின் பதிவு. அது ஓர் பார்வை. ஒரு சிலர் மீது இயல்பாக ஏற்பட்டு மனது உடனே ‘அடேய்’ என மிரட்டும் மிரட்டலில் மூச்சிழுத்து, சுதாரித்து, தன்னை சற்றும் கூடுதல்; நெறிப் படுத்திக் கொள்ளும் இடைவெளியில், வீழ்ந்திருந்த கண நேர காதல் வலியினால் ஏற்பட்ட உணர்வின் கவிதை பூத்துக் கொண்ட கணம் அது.

      காதல் எல்லோரின் மீதும் ஏற்பட்டுவிடுவதில்லை, அதே நேரம் எல்லோரின் மீதும் ஏற்படல் எல்லோராலும் ஏற்கத் தக்கதும் இலல். எனின், அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்? என்ற கேள்விக்கு பிறந்த பதில்; நட்பென்று கொள்வோம் சரளா. வாழ்வின் கடை எல்லை வரை அன்பினால் பயணிப்போம். காத்திருப்போம், தவிப்போம், பகிர்வோம், புரிதல் கொள்வோம், நட்பாயிருப்போம்!

      மிக்க நன்றியானேன்… அன்பில் உறைந்து போனேன்மா…

      Like

  5. செல்லா's avatar செல்லா சொல்கிறார்:

    சில நினைவுகள் அப்படியே எம்மை உள்ளிழுக்கும், அதுபோலவே இந்த கவிதையும், என் அன்புக்குரியவரை நான் முதலில் சந்தித்ததும் வலைதளத்திலேயே, இன்னமும் அவரை நேரில் காணவில்லை, அனால் எம்மை போல அன்பு கொண்டவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று எமக்கும் நம்பிக்கை, மிக்க நன்றி கவிஞரே..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க உயர்வான அன்பு வைத்துள்ளீர்கள் போல். கடவுள் உங்கள் அன்பை மேன்மையுற செய்து நல்ல படியாக சேர்த்து நலமாக வாழ வைக்கட்டும் செல்லா. என் மனமார்ந்த வாழ்த்தினை உங்கள் அன்பர்க்கும் தெரியக் கொடுங்கள். அன்பு எல்லாம் கடந்தது ஆயினும் கவனமும் விழிப்பும் தேவை. எதுவாயினும் புரிந்த மனமாய் இருங்கள். எதை உங்களால் நாளையும் உங்களில் பிறருக்காய் விட்டுத் தர இயலுமோ அதை மட்டுமே இன்றும் விட்டுக் கொடுங்கள். நாளை உங்களால் மாற்றிக் கொள்ள இயலாததை ஒளிவு மறைவின்றி இன்றே பகிர்ந்துக்கொள்ளுங்கள். நல்ல புரிதல் இருந்தால் அன்பு இன்னும் ஆழப் படும்! என் மனமார்ந்த வாழ்த்துக்களும் உங்களுக்கு எப்போழுதிற்குமாய் இருக்கும் செல்லா!

      வாழ்க; இருவரும் நீடு வாழ்க!

      Like

  6. xavier's avatar xavier சொல்கிறார்:

    மிக அருமையான கவிதை அண்ணா

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி பா.., முகம் பார்க்காமலே இதயம் பகிரும் வித்தை இணையத்தில் இலகுவாய் சாத்தியப் படுவதில் புலப்படுகிறது எல்லோருக்குள்ளும் இருக்கும் மகத்தான காதல். அதை பதிவாக்கும் பொருட்டே இக்கவிதையும்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக