21 தெருவை கடந்த பெரியவர்; விபத்து!

தெருவில் விபத்தாம்
கூட்டம் விளக்கிப் பார்த்தேன்
உலகத்தின் மொத்த உறவையும்
அறுத்துக் கொண்டு
விடை பெரும் தருணத்தில் ஒரு
பெரியவரின் உயிர்
இழுத்துக் கொண்டிருந்தது.

அவசர அவசரமாக
ரத்தம் சொட்டும் அவர் உடலை
ஏற்றிக் கொண்டு போக
ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது.

அவரின் மூக்கு கண்ணாடி மட்டும்
தள்ளி
சற்று
தூரத்தில் நசுங்காமல் கிடந்தது.

ஒன்றுமில்லை தெருவை கடக்க
வந்தாராம் –
லாரி அடித்துவிட்டதாம்

அவரின் எத்தனை கனவுகளை
கடமைகளை
ஆசைகளை
அந்த லாரி அடித்திருக்குமோ..

யார் யாரெல்லாம் அந்த
பெரியவருக்காய் அழப் போகிறார்களோ

எத்தனை பெண்
குழந்தைகள் இருப்பார்களோ

மனைவி
தாங்கிக் கொள்ளும் மனநிலைக்கு
உடையவரா

என்ன சொல்லிவிட்டு வந்தாரோ இந்த
பெரியவர் –
இறந்துவிட்டதாய் பேசிக் கொள்கிறார்கள்

மனது
கனத்து நின்றது
எதிரே நிறைய
வேறு லாரிகள் போகின்றன,

ஏதேனும் ஒன்று
என்னை இடித்துவிட்டால் கூட
தேவலை!!
—————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to 21 தெருவை கடந்த பெரியவர்; விபத்து!

  1. மனோஜ்'s avatar மனோஜ் சொல்கிறார்:

    சில நிமிடங்களில்…கலைந்தது கால கனவு….

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் மனோஜ், மிக சரியாக சொன்னீர்கள்,
      ஒவ்வொரு மனிதனும் ஒரு காலத்தின் கனவு தான் போல்.

      என்றோ பார்த்த ஒரு பெரியவரின்
      சரிந்து வீழ்ந்து ரத்தம் பரவிய நினைவு.

      முகம் மூடி
      அம்மா உடல் சிலிர்த்து உலகின் சாமிகளை எல்லாம்
      அழைத்துக் கொண்ட பதற்றத்தில் நான் அமைதியாகி விட்ட
      அந்த குமுறல் இன்று வார்த்தைகளில் வெடிப்புற்றது.

      ஒவ்வொரு விபத்தும் ஒருவரின் உயிரை தாண்டி;
      பலரின் வாழ்தலையும் அழித்துக் கொண்டு தான்
      செய்தியாகி மட்டும் போகிறது!

      Like

  2. மனோஜ்'s avatar மனோஜ் சொல்கிறார்:

    அந்த உணர்வை…என் நண்பன் ஒருவன் விபத்தில் உயிர் விட்ட போது உணர்ந்தேன்….
    அனைவருக்கும் செய்தியான அதை …என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை இன்றளவும்..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மரணங்கள் மரணிப்பதில்லை மனோஜ். உயிர்ப்பாய் இருந்து கொள்கின்றன; வாழ்பவரை!

      நான் நிறைய இடங்களில் இறந்தவன் மனோஜ்.

      இருக்க வேண்டிய கட்டாயத்தில் மரணிக்க கிடைக்காதா சுதந்திரத்தில்; உயிர் பெற்றுள்ளேன் போல்!

      Like

  3. vetha. langathilakam.'s avatar vetha. langathilakam. சொல்கிறார்:

    ஏதேனும் ஒன்று
    என்னை இடித்துவிட்டால் கூட
    தேவலை!!
    ஏன் இப்படி எண்ண வேண்டும். இந்தச் சிந்தனை தவறானது.என்பது என கருத்து.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; தவறான கருத்து தான் சகோதரி. நானும் பிறர் இங்ஙனம் எழுதி இருப்பின் இதையே கூறி இருக்கலாம். ஆனால், அந்த கணம்; ஒரு மரணத்தை கண் முன்னாள் பார்க்கும் தருணம் மிகக் கொடியது.

      நான் அதுபோல் ஏதேனும் விபத்துகள் நிகழ்ந்தால் பார்ப்பதில்லை. பார்க்க முடிவதில்லை. ஒரு உயிரின் அருமை; ஒரு உயிர் பிரிவின் வலியை ‘அணு அணுவாய் அனுபவித்திருக்கிறோம். அதனாலோ என்னவோ,நேரும் ஒவ்வொரு மரணம் காண்கையிலும், தனக்கே நேர்ந்ததாய் ஒரு வலி ஏற்படுகிறது.

      உண்மையை சொன்னால் நீங்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பு உயர்வானது சகோதரி, அதன் பொருட்டே அந்த வார்த்தை உங்களுக்கு வலித்திருக்கிறது. எந்த தாய் வயிற்றில் பிறந்தாலென்ன மனிதம் மிக்கவன் மனிதனெனில், ‘இறப்பது ஈ எறும்பாயினும் வலிக்கவே செய்கிறது!

      Like

  4. Kajan Packianathan's avatar Kajan Packianathan சொல்கிறார்:

    மிகவும் சோதனை மிகுந்த வரலாற்றுப்பாதையில் தாங்கள் பயணித்து, உன்னத இலட்சியத்துக்காக தங்கள் வாழ்க்கைப்பாதையை வழிநடத்தி, மேன்மை மிகு செயலால் மேலான பண்பால் எண்ணத்தை செப்பனிட்டு, பொன்னான பல படைப்புக்களை தந்துள்ளிர்கள்.

    ஆயினும், இது உங்களுக்கு ஒரு புதிய அத்தியாயம். தொடர்ந்து இத்துறையில் பயணியுங்கள் வாழ்த்து!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக ஆழ்ந்து வாசித்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டதான ஒரு விமர்சனம் கஜன். எழுதுவதென்பது; இதயத்தை கீறுவது, அறுப்பது, லயிக்க செய்வது, சொக்கி விழா வைப்பது, உள்வாங்கி எழுத்தாக்கும் கலை; எதுவாகவும் சொல்லலாம்.

      என்னை பொறுத்தவரை அக்கறை. எனக்குண்டான வலி; இன்னொருவருக்கு ஏற்பட்டுவிட வேண்டாமெனும் அக்கறை.

      சொக்கிக் கிடந்ததும், லயித்து போனதும் வாழ்வின் ரசனைக்கேற்ப நிகழ்வதென்றாலும், வலி மட்டும் காணும் இடமெல்லாம் பரவிக் கிடக்கும் சமுகத்தில் வாழ்கிறேன் கஜன்.

      எனவே ரசனை தாண்டி வழிக்கு மருந்திடும் நோக்கமே இடைக்கால எழுத்தாகிறது.

      தங்களின் அன்பான விமர்சனத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் உரித்தாகட்டும் கஜன்!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி