கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

சிறகின்றி பறக்கும்
துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து
அழகுற்ற வான மதப்பில்..
நீண்டு வளைகிறது –
வண்ணம் நிறைந்ததொரு ஓவியம்,

தூரல் மழையின் சிலிர்ப்பில்
காது மடல்கள் அசைவுற –
சிதறும் மழைத்துளிகளின் ஓசை
இயற்கையின் ஜாலமாய்
உள்புகுகிறது இசை,

பசுமையை அள்ளிப் பருகும்
மரங்களின் அசைவுகளில் – காற்று
விளையாடி யுள்ளே –
இதமாய் எழுதும் தென்றல்
தன்னை மறந்து எழுதுகிறதொரு, ‘கால கவிதை’,

சுடும் நெருப்பென தகிக்கும்
வெய்யிலின் வெக்கையில் –
காற்றினை சூடு கொள்ளைகொண்ட – இறுமாப்பை
உடைத்தெறிய –
இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்,

முகமெல்லாம் அழுக்கு பூசி
பால்குடி வாசம் கழுகாத மழலையின்
பளிச்சென்ற வெள்ளை சிரிப்பில் – மதிமயங்கி
லயிக்கிறதொரு –
ரசனை பூத்த யதார்த்தம்,

வாசலில் முகம் சாய்த்து
வருகைக்குக் காத்திருக்கும் மனைவியின்
முகம் பார்த்த பரவசத்தில் –
லேசாய் அவளுதிர்த்த புன்னகையில் – பிறக்கிறதொரு
குடும்பத்தின்; வெற்றிப் புன்னகை,

மரக்கட்டைக்குள் எரிக்கையிலோ
மண்கொட்டி மூடும் பொழுதிலோ
மனசு மட்டும் கனவு சுமந்து –
கதறியழ இயலாதா உயிர் போன உடலின்
ஈரத்திலிருந்து நீங்கியிராத –
நீண்டதொரு நன்றிக்கான ‘அம்மா’ ‘அப்பா’ எனும்
தோற்றுப் போன அழைப்பு நிரூபிக்கிறது
அவர்கள் வளர்த்த அன்பை!
————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

  1. soundar's avatar soundar சொல்கிறார்:

    //சுடும் நெருப்பென தகிக்கும்
    வெய்யிலின் வெக்கையில் –
    காற்றினை சூடு கொள்ளைகொண்ட – இறுமாப்பை
    உடைத்தெறிய –
    இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்//

    ந்த வரிகள் அருமை…

    Like

  2. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    காற்று விளையாடி யுள்ளே –
    இதமாய் எழுதும் தென்றல்
    தன்னை மறந்து எழுதுகிறதொரு, ‘கால கவிதை’

    ஆஹா.. அழகான வரிகள் இயற்கையோடு விளையாடுகிறது…
    யாவும் மறந்து நாமும் இயற்கையின் குழந்தைகளாக ஏங்கும் மனது…:-(

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நல்ல ரசனை உள்ளோரை மன்னிக்கவும் ஒருங்கிய அல்லது ஒத்த ரசனை உள்ளோரை கவரும் போல். நான் எதிர்பார்த்து ரசித்து எழுதிய வரிகள் இவை..

      நன்றிகள் உரித்தாகட்டும்!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக