33 விழுங்கித் தொலைத்த மானுடம்!!

“எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த
மானுடம்..

இரந்து இரந்து
கொடுக்கத் திராணியின்றி
வாங்கத் துணிந்த மானுடம்..

களவு செய்து
கபடமாடி
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி
காலம் போக்கும் மானுடம்..

எடுத்து வீசத் துணியாத
விட்டு ஒழிக்க இயலாத
உடலை –
பிடுங்கியும் புலம்பும்
பிரிந்தும் பிறரை நோவும்
சுயநல மானுடம்..

பகுத்துப் பாராத கேள்புத்தி –
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும்
தனக்கு மட்டுமே ஓலமிடம் மானுடம்..

ஆறடி மிஞ்சாத மண்தின்று
காலடி பதியாத வாழ்க்கைக்கு
நோயிற்கும் பேயிற்கும் பயந்து
யாருக்கும் பயனின்றி – போகும் மானுடமே..

காலம் மென்று மென்று விழுங்கி
விதைத்த விதைப்பில் –
வாழ்ந்த அடையாளமின்றி மாளும்
மானுடமே.. மானுடமே..

எல்லாம் ஒழி;
எல்லாம் அறு;
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும்
சுயநலம் குறைத்து வாழ்”
என்று சொல்ல –
எனக்கென்ன உரிமையுண்டோ; உன்னிடத்தில் மானுடமே!!
—————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 33 விழுங்கித் தொலைத்த மானுடம்!!

  1. மதுரைசரவணன் சொல்கிறார்:

    அருமை. வாழ்த்துக்கள்

    Like

பின்னூட்டமொன்றை இடுக