1. ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

புறா

யாரேனும் தூது
விட்டால்
பல்லாயிரக்
கணக்கான மைல்களை
பறந்து –
கடப்பாயாமே புறாவே;

நானொரு –
ஈழ மகள்,

என் மகன்
எங்கேனும்
தொலைந்தாவது;
இறந்தாவது;
கிடக்கிறானா பார்த்து
சொல்வாயா?

அவள் கதறிவிட்டு
மீண்டுமந்த
புறாவிடம் – சொன்னாள்

“இன்னொன்றையும் கேள்
புறாவே..
ஒருவேளை அவன்
சிங்களனுக்குப் பயந்து
எங்கேனும் ஒளிந்திருந்தாலோ;

சிங்களனின் குண்டு அவன்
மார்பை துளைக்கும் முன்
தன் துப்பாக்கி முனையில் –
பல நூறு எதிரிகளை – வீழ்த்தாது
இறந்திருந்தாலோ;

தயவுசெய்து அவனைப் பற்றி
என்னிடம் சொல்லிவிடாதே”

அவள் கர்ஜித்த கர்ஜனையில் –
புறாவின் மயிர்கால்கள்
குத்திட்டு நிற்க;

சிலிர்த்துக் கொண்டு வானில்
பறந்தது.

உண்மையை
புறாவே அறியும்!!
—————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக