மெல்லக் காதலித்தோம்

நீ தினமும் வரும்
அதே தெருவில் தான்
நானும் வருகிறேன்
நீயும் வருகிறாய்;

சற்று நேரம் முன்பாக
வந்து பார்த்தேன்
நீயும் முன்பாக வந்தாய்;

சற்று தாமதமாக வந்தேன்
நீயும் தாமதமாகவே வந்தாய்;

நீ என்னை காதலிப்பதாகவோ
நானுன்னை காதலிப்பதாகவோ
இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை;

நீ பார்க்கிறாய்
நானும் பார்கிறேன்;

நான் சிரித்தால்
நீயும் சிரிப்பாய் –
ஆனால் நாம் நம் சிரிப்பை
நம் பின்னாளுக்கென
மிச்சப் படுத்திக் கொண்டோம்;

நம்மை நாமே வாரி நுகரும்
வாசமாய் –
நானும் நீயும் தினம் தினம்
உன்னையும் என்னையும் நெருங்கிக் கொண்டிருக்க;

மெல்ல அரும்புகிறது நமக்குள்
காதலென –
இருவருமே
நினைத்துக் கொண்டே செல்கிறோம்..

நாம் கடக்கும் தெரு முழுக்க
நம்மை –
விருச்சொடித் தனமாய் பார்கிறது!
——————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக