பிரிவுக்குப் பின் – 71

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான்
வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்;
உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும்
வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்!

தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும்
நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்;
பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’
உனக்கும் எனக்கும் இடையே உள்ள பிரிவுக்குத் தெரியும்!

உனைவிட்டு பிரிந்து வாழ்ந்ததில் – இளமை..
அதோ.. எங்கோ போனது யாருக்குத் தெரியும்;
என் தொலைத்த இளமைக்கு- முதுமை –
வலியான பரிசென..எனக்குமட்டும்தானே தெரியும்!

வாழ்க்கையை எண்ணி எண்ணி வாழ்ந்ததில் –
மீந்த பணங்கள் பணக்கார பட்டத்துடன் சிரிக்கின்றன..
எல்லோருக்கும் தெரியும்;
பணத்தில் பொதிந்த வலிகள் ஆயிரமென
உனக்கும் எனக்கும் தானே புரியும்…!

கேட்குமொரு பாட்டில்கூட அழுத கணங்கள்
எத்தனை எத்தனையோ எல்லோருக்கும் தெரியும்;
பாட்டிற்கு ஏனழுதேனென – ஏக்கங்களை
சுமந்து சுமந்து வாழும் எனக்குத்தானே தெரியும்!

ஊரெல்லாம் சுற்றித்திரிந்தும்; காற்றாய் இங்கே
பறந்துவந்ததும் ஏதோ விதியென யாருக்குத்தெரியும்;
இரவின் நீளங்களில் நான் இறக்கும் கொடுமை
காலையில் பார்க்கும் கண்ணாடிக்குத் தெரியும்!

தொட்டதெற்கெல்லாம் ஆசைவந்தும்; பார்த்ததெல்லாம்
வாங்க நினைத்தும்; ஒரு தேனீரருந்தக்கூட
யோசித்த வாழ்க்கை யாருக்குத் தெரியும்;
இன்று ஆசைகளெல்லாம் மிச்சமாய்..மிச்சமாய்..மிச்சமாய்…
என் காலத்தை கடந்துவிட்டதென யாருக்குத் தெரியும்???

காலை பணிக்குச்செல்லும் பேருந்து நகர்வில்
ஜன்னலோரம் தொலைத்த கனவுகளாயிரம் யாருக்குத் தெரியும்;
தொலைபேசியில் கேட்ட உன் குரலை நினைத்து நினைத்தே
வருடங்களை இரண்டிரண்டாய் இழந்தோமென யாருக்குத்தெரியும்???

காதோரம் பிள்ளைகளின் சப்தமும்,
விழிமுழுதும் – பாசத்தை கடிதத்தில் மட்டும் கண்டு வளர்ந்த
பிள்ளைகளின் சோகமும்,
வாயார அழைக்கும் ஆசையில் கூட பஞ்சம் வைத்த இந்த வாழ்க்கை
கொடுமை – கொடுமையென்று யாருக்குத்தெரியும்;

ஊரில் விட்டுவந்த என் வீடு வாசல் மரம்கூட
வந்தென்னை ஏன்..? ஏன்..? ஏனிந்த பிரிவென்று
கேட்கும் கேள்விகளாகத் தான் வருடங்களிங்கே
நகர்கிறதென எனக்குமட்டும்தானே தெரியும்!!
————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 71

  1. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    “கேட்குமொரு பாட்டில்கூட அழுத கணங்கள்
    எத்தனை எத்தனையோ எல்லோருக்கும் தெரியும்;
    பாட்டிற்கு ஏனழுதேனென – ஏக்கங்களை
    சுமந்து சுமந்து வாழும் எனக்குத்தானே தெரியும்!”

    வரிகள் அழகு!

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி