மனிதன் –
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ – மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி – மதம்!
கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி – மதம்!
மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் –
வளர்க்கும் சக்தி – மதம்!
இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை – மதம்!
காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் –
முடைந்துப் போன விதி – மதம்!
வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் –
‘தான்’ னின் முழு அடையாளம் – மதம்!
மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் – மதம்!
நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் –
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோடு; மூட எல்லை – மதம்!
மனிதன் –
தன்னை உணரும் முன்னே
‘இவன்’ என்று முழங்கிக் கொண்ட
மதம் – மதம்!!
————————————————————————————-
வித்யாசாகர்