நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!

இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் –
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!

தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் –
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!

யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில் நெருப்பெய்தி அறிவித்தவன்!

தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ், வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் – திரும்பிப் பார்க்க வைத்தவன்!

குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை –
ஈழம் வரையென எரிந்து கருகி கர்ஜித்தவன்!

தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில் அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள – உயிர் மை கொடுத்தவன்!

ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று –
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு – நினைவு கொள்வோம்!
———————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

2 Responses to நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

  1. munusivasankaran's avatar munusivasankaran சொல்கிறார்:

    //தன் உயிர் சுட்ட
    நெருப்பின் அனலில் அவன் முகம் பொசுக்கி
    நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
    படம் வரைந்துக் கொள்ள – உயிர் மை கொடுத்தவன்!//

    இனி… அவன் படத்தை பார்க்கும்போதெல்லாம் அவன் பற்றியெரிந்த வாசம் நினைவில் வரும்….

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நினைவில் வரணும். அவனின்; உயிர் விட்டதற்கான அவசர அவசியம் இன்னும் நிறைய பேருக்கு புரியத் தான் வேண்டியுள்ளது. எல்லோருக்கும் புரிந்துவிடுமெனின், இனி உயிர்விட இருக்கும் முத்துக் குமாரர்களையும் உறவுகளையுமாவது காத்துவிடலாம்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக